வெள்ளி, 22 டிசம்பர், 2017

திருவூடல்

                                      திரு ஊடல்

  திருவிளையாடல்  தலைவனின் மற்றொரு விளையாடல் .
                                                                                                                                 

       எம்பெருமானிடம் ஊடல் கொண்டு ,தனியே தன்கோயில் சென்றுவிட்ட
அம்மையைத்  தன்கோயில் அழைத்து வருமாறு,சுந்தர மூர்த்தி நாயனாரைச்
சிவபெருமான் தூது விடல் .

    மார்கழித்    திருவாதிரை    நாளில் நடைபெறும் இந்நிகழ்ச்சி.

ஓதுவா மூர்த்திகளுக்குப் பரிவட்டம் கட்டி,திருவூடல் பாக்களைப் படிக்கச் செய்ய  வேண்டும்.
 
அருள்மிகு நடராசப்  பெருமான் கோயில் கோபுர வாயிலில் நிற்கவும்,கதவம்
சாத்திய கோயிலுக்குள் அன்னை அருள்மிகு சிவகாமசுந்தரி நிற்கவும்,நடுவே
போய்வருமாறு அருள்மிகு சுந்தரர் பல்லக்கும் அமைத்தல் வேண்டும்.
    இங்கும் அங்கும் சென்று  ஓதுவா  மூர்த்திகள் பாடவேண்டும்.
                                                                                                                                                        

                                   காப்பு
உலகம்  நிலைக்க, உயிர்கள்  தழைக்கக்
கலைகள் சிறக்கக்  கருணை-----அளிக்கும்
குணத்தால்  உயர்ந்த  கணபதி! உன்தாள்
பணிந்தோம்  பழந்தமிழ்  கா.

                                சுந்தரர்  வருகை

 ஆரூர்   அரசன்  அருந்தமிழ்த்  தொண்டன்
               அழகிய  நாவலூர்   அடியவன்  வந்தான்:
பேரூர்   பெருமை  பேசும்  பெரியோன் ,
              பெருமான்   தோழன்  போற்றிட  வந்தான்:
கார்மால்  கலைமகள்  கணவன்   காணாக்
               கழலினைக்  கண்டு,கலந்தோன்  வந்தான்:
சேரமான்  பெருமாள்   சிவகதி  அடையச்
               சிவவழி  காட்டிய  சுந்தரன்   வந்தான்.

                           எம்பெருமானைப் போற்றுதல்

வந்தவன்  கண்டான்  வளமார்  மூர்த்தி.
            வணங்கிட  விழுந்தான்:வளத்தமிழ்   வாயால்
எந்தையே  போற்றி! ஏந்தலே  போற்றி!
              என்னை   ஆளும்   மன்னனே   போற்றி!
விந்தையே   போற்றி!   வேதமுதலே  போற்றி!
              விரிசுடரே  போற்றி!  வியனழகே     போற்றி!
அந்தம்   ஆதி    இல்லாய்   போற்றி!
               ஆனந்தக்    கூத்தனே  போற்றி!போற்றி.

பொன்னார்   மேனியனே!புலித்தோல்  அணிந்தவா!
               பூக்கொன்றைச்  சடையனே! பொழிகங்கைத்  தலையனே!
பண்ணறி    பாவலனே!   பைந்தமிழ்க்   காவலனே!
              பதமளி   பரம்பொருளே!  இதந்தரு  கழலானே!
விண்ணக   வேந்தனே!  விளையாடல்    அருட்கடலே!
            விடமுண்ட   கண்டனே!  விரிஞான    வேதியனே!
மண்ணக    மாமணியே!  மாமுதலே   போற்றி!
          மனமெலாம்    நிறைந்தோய்!  போற்றி! போற்றி..

                                         அழைத்த காரணம் கேட்டல்

மன்றல்   கூத்தனை, நன்றே  போற்றி,
       மலர்க்கால்  வணங்கி,மறைபோற்றும்   மதிசூடி.1
 கன்றை   அழைக்கும்   காராம்  பசுபோல்
          கற்றோர்   அழைக்கும்   கல்லால்   மரம்போல்
மன்றல்   வாவென   மகேசன்   அழைத்த
          மனத்துள்   மயங்கும்  மாபெரும்   காரணம்
என்றெனக்     கருளி,எந்தன்   மயக்கம்
          இனிதே    களைவாய்!   இறைவா! என்றார்.

                              அழைத்த  காரணம்

சுந்தர!   சொல்லால் அடித்த    வன்தொண்ட!
          சுந்தரத்   தோற்றம்    தந்தோம்  உனக்கு:
அந்தம்     ஆதி     அனைத்தும்   அளித்தோம்:
          அடிமை   என்றே  அருமணம்   தடுத்தோம்:
பந்தம்   கொண்டோம்,  பலப்பல  அருளிப்
          பாரிடை  பற்றுடைத்  தோழன்  என்றோம் :
வந்தது  நமக்கிடர்:  வாவென்றே   அழைத்தோம்:
          வந்தனை  நீயும்.உரைப்போம்  காரணம்.

மனத்திலே    சினந்தாள் , மதிமுக   மலைமகள்.
        மணியும்,பொன்னும்,மகிழணி    நகையும்,
தனமும்,பெட்டியும்   தவழொளி   வைரமும்,
       தண்குடை,பல்லக்குப்  பரிவாரம் புடைசூழ,
கனத்த  மனத்துடன்   கடமை  வெறுத்து,
        காரிகை  தனியே  தன்கோயில்  புக்காள்:
அனைத்தும்   அறிந்தவன்  அடைவழி   அறியேன்:
       அனைத்தும்  வெறுத்தே  அவளும்   ஏகினாள்.

அன்னை  சென்ற   அருமனை  நாடி.
         அவளிடம்  அன்பொடு ,அறமும்   பணிவும்,
முன்னை   முறையும் ,முதுநூல்   வழியும்,
         முறையுடன்   பேசி,  மும்முறை  வணங்கி,
என்நிலை    சொல்லி,   ஏற்றிட  வேண்டி,
         என்மனை   வருகென   இதமாய்ச்    சொல்லி,
பின்னும்   வணங்கிப்     பேதை மனத்தில்
        பின்னிடும்   பற்றுடன்   பேசி  வருவாய்.


   அத்தா! உனக்கே    ஆளானேன்:அம்மையின்
               அடிபணிந்    தையனின்    அன்பினை    விளக்கி
  புத்தியில்    புன்முறுவல்   பூக்க,  புனைமலர்
               புத்தாடை அழகுடன்   பொன்னடி   மின்னிட
நித்திய   நைமித்திக    நீள்பரன்   கோயிலில்
              நிலவென  ஒளிர்வாள்: நானும்   வருகிறேன்.

சுந்தரர்  சிவகாம சுந்தரி அம்மன் சன்னதிக்குச்செல்லல்

அன்னை     கோயில்   அடைத்த   கதவம்
            அதனைத்   திறக்க,அன்னையை     அன்புடன்,
முன்னைப்   பழம்பொருளே! மூவர்க்கும்   முதல்வி!
          முத்துக்     கதவம்   திறக்க   அருள்வாய்.
பன்னரும்    மறைநூல்    போற்றும்   புனிதமே!
          பரிவுடன்    கதவம்    திறக்க    அருள்வாய்.
பண்ணறி  பாலகன்   அமுதளி    அன்னையே!
         படிமறைக்  கதவம் திறக்க அருள்வாய்.

நாவலூர்க்   குரலின்   நளினம்  உணர்ந்து
          நாயகி,நல்லருள்      கதவம்  திறந்திட,
ஆவல்  மேலிட,அன்னையைப்  போற்றிட,
         அம்பிகைக்    கழலடி, பணிந்து,வீழ்ந்து.
பூவின்   மணமே!புண்ணிய   நதியே!
          புன்னகை    அருளே!  போற்றி!  போற்றி.
தேவியே     போற்றி.  தெய்வமே    போற்றி.
          தமிழே     போற்றி!தலைவியே   போற்றி.

பாகம்   பிரியாள்     பார்வதி     தேவி:
             பாவம்   பிரிந்தனை!  பாசம்  மறந்தனை!
தேகம்    இடத்தில்,தேய்வு    முறையோ?
            தீரா     ஊடல்    தேவியே!தேவையோ?
வேகம்    விடுத்து,  வீண்சினம்     விடுத்து,
           விரைவாய்     வருக:  விவேகன்    சார்க :
 யோக     நாயகன்     தேகம்      இணைக:
            யோகத்    தனிமை   தவிர்த்து   வருக.

மேலும்  பன்முறை   காலடி   வணங்கி,
        மேதினி    தழைக்க,  மேலோன்   சார்க ,
நாலூர்   அடியான்      நவின்ற    சொல்லால் ,
       நான்மறை     நல்லாள் தேன்மொழி    தவிர்த்து,
மேலோர்    அவையில்   மேன்மை   தவிர்த்து.
       மனதால்   திரிந்த   பித்தா"    என்றே
ஆல    காலனை      அழைத்தாய்     நீயே.

அதனால்  மகிழ்ந்தோன்   தோழன்  ஆனாய்.
      அற்புதன்   என்றே  பொற்பதம்   புகழ்ந்தாய்:
அதனால்    அவன்புகழ்    அரற்ற   வந்தாய்:
      அன்னான்   அற்புதம்    அறியாய்    நீயே.
அதனை  அறிந்தபின்   எதனைக்   கூறுவாய்?
        அரனின்   கூத்தை  அடுத்துக்  கேட்பாய்.

முனிவர்    வானவர்   தானவர்   கந்தர்வர்
            முக்திக்   சான்றோர்   முதிர்ந்தோர்   முன்னர்
கனிந்த    அருளுடன்   ஆடிய    கடவுள்
          காலம் போற்றிய     கருணைக்    கடவுள்
கணிகைக்   கூட்டம்    அணியெனச்    சூழக்
         கால்தூக்கி   ஆடிய    காட்சி   கண்டபின்
தணியுமோ    என்மனம்! தகிக்குமே   பெருஞ்சினம்:
        தனிமை   கொண்டேன்:தவிர்ப்பேன்   பதியை .

தனிமை  என்தவம்:தனிமை    என்பலம்:
            தத்துவம்    சக்தி:  முத்தியே    மௌனம்:
இனியும்   பேசிட   எழில்தமிழ்   முயலுமோ?
         இறைவன்    கண்டே   இதெல்லாம்   கூறு.
புனிதத்     தாயின்   புதுச்சொல்    கேட்டவன்
         புந்தி    நடுங்கிப்   புனைகழல்    வணங்கி,
நனிசிவன்   நாடி     நலிவுடன்    ஓடினான்.
         நற்றாய்ச்   செய்தி   நலமுடன்   நவின்றிட.

(சுந்தரர் நடராசர் சன்னதி  முன் வருதல்)

அண்ணலே!  அண்ணா     மலையானே!  அருளரசே!
         அப்பனே!   ஐயனே!    போற்றி!   போற்றி.
கண்ணுதற்     கடவுளே!    கருணை     வடிவமே!
         கயிலை    மணியே!      போற்றி!    போற்றி.
பெண்ணுரு      பாகம்       கொண்டோய்     போற்றி!
        புன்னாகக்      கங்கணா!    போற்றி!    போற்றி.
பண்சுமந்த    பாடலின்      பதியே!    போற்றி.
       பக்திக்கு     வித்தான      முத்தியே    போற்றி.


பிறைமதிச்     சடையனே!   பித்தனே!    போற்றி!
            பிறவாப்    பெரியோனே!   பெருமானே!   போற்றி!
கறையுடைக்     கண்டனே!    காக்கும்     கடவுளே!
            கலைநிறைக்    கூத்தனே !     போற்றி!   போற்றி.
மறையுணர்      மாமுதலே!   மகேசனே!    போற்றி.
            மத்தமலர்     சூடியே!     போற்றி!    போற்றி.
நிறைமொழி     மாந்தர்      போற்றும்      நிமலனே!
            நின்னடி     பணிந்தேன்:   பின்னரும்      சொல்லுவேன்.

கணிகையர்     நடுவே     அணியென    நின்றநீவிர்
          கதிஜதி      காட்சியாகிக்     கலைநடம்   ஆடியே,
நனிமகிழ்வு     நாடியதால்      நாணமுற்ற     நற்றலைவி.
          நாடமாட்டேன்    நாதனைநான்:நவின்றிட்டாள்    வருத்தமுடன்.
இனிநானும்    இறைவனுடன்    இணையவே    இதமில்லை:
          என்றுரைத்த     எழிலரசி,    இடர்ப்பாட்டை     என்சொல்ல?
பணிந்துரைத்த     சுந்தரனைப்    பரிவோடு    பார்த்த,
          பரமன்     படர் இடர்   நெஞ்சமுடன்    பகர்வான்.

சங்கிலி     நாச்சியார்      சந்தித்த    ஒற்றியூர்
      சங்கடம்    போக்கிநான்     சாதித்த     காதலை,
மங்களமாய்   ஏற்றுநீ    மகிழ்ந்ததை மனம்கொள்.
     மந்தர     மொழியாலே   மணவினை   கூடிய,
பொங்குமனம்    புரிந்து,   பக்குவமாய்    மறுபடியும்
      பொறுமை      காட்டிப்    பேசிடுக.  பொன்மகளை
இங்கு நீ    அழைத்து    வந்தே    என்மனம்
       இனிப்படையச்     சேர்த்திடுக .என்றதும்,சுந்தரன்....

       (சுந்தரர்  அன்னை சன்னதி முன் செல்லல்)

 அன்னையே!   அன்பின்    அறத்தின்     துணையே!
           அறிவுசால்    விளக்கமே!   அடியேன்    வணங்குகிறேன்.
பொன்னிநதி    சூழ்கரை    புனையணி    கணிகையர்
           பொங்குவெள்ளைப்   புதுக்கூட்டம்     பேசியாடிக்    கூடியநாள்
மன்னவராம்      முன்னவராம்      மகேசர்    முன்செல்ல,
           மதிசூடி,    நடனத்தில்    மகிமை   இல்லையே,
பின்னெதற்குப்     பெரும்பேறு?    பித்தசடு   எனப்பேச,
            புன்னாக    கங்கணரும்   புதுச்சதுர்     ஆடினாரே .

தனியாகத்      தானாடித்     தத்துவ    வித்தகராய்த்
           தலைகர்வக்    கணிகையர்   செருக்கினை   அடக்கினார்.
இனியேனும்    உணர்வாய்:   இறைவன்    புகழை:
          இறைவியே!    எழுந்தருள்க,  இறைவன்   கோயில்.
நுனிமூக்கு    நனிசினத்தாள்     சுந்தரத்     தூதுவனே!
         நும்தலைவன்    அணிபாம்பு    மணிவண்ணன்   குணம்பற்றி,
அணிஅணியாய்க்    கூறுகின்றேன்:கேட்டபின்னர்    விடையளி.
          அன்னையவள்    அடுக்கிட்டாள்    அண்ணலின்    கன்னல்பழி.

சுந்தரனாய்ப்      பிச்சாண்டி,    ஏந்தினான்   திருவோடு.
              சுந்தரனின்     சந்ததம்     என்னே!     என்னே!!
பந்தமுடன்     அமுதூட்டப்     பக்கத்தில்    நானிருக்க,
             பிட்டுவாங்கி    வந்தியிடம்   தின்றதுவும்   என்னே!
சொந்தபந்தம்     சூழ்ந்துநின்று     பணிசெய்யப் பலரிருக்க,
             கந்தைகட்டி   மண்சுமந்த    தென்னே!     என்னே!!
சந்ததியாய்   சாம்ராஜ்ய      சர்வேசர்   என்கணவர்
             சவுக்கடியைப்    பாண்டியனிடம்   பெற்றதும்    என்னே!!

பொல்லாச்      சாக்கியர்     புதுபக்தித்    திறம்காட்டக்
              கல்லாலே    அடிபட்டதும்       என்னே!      என்னே!!
அல்லும்    பகலும்      அயராது   போரிட்டு
             வில்லாலே     விசயனிடம்   அடிபட்டதும்     என்னே!!
பொல்லாத     யானையைப்   புறம்தள்ளிப்    போர்வைபோல்
         போர்த்தியுறு     பொலிகாட்சி      என்னே!    என்னே!!
கல்லாத   பாமரனாய்க்     களவேள்விச்    சவம்தாங்கிக்
          காலால்   நடந்ததும்    என்னே!   என்னே!!

கண்ணறியக்     காலாலே    கண்தேடி    உதைத்திட்ட,
          கண்ணப்பன்    கதைதான்    என்னே!   என்னே!!
மங்கை நான்   மகிழுணவு    மனமுடன்  வழங்குகையில்,
           மண்காக்க   மாவிடம்   உண்டதும்    என்னே!!
பண்பாடிப்    பவள    வளையல்   விற்ற ,
          பரமனின்  புகழ்தான்    என்னே!  என்னே!!
திண்ணமாய்   மன்னரோடு   வாழ நான்   வரமாட்டேன்:
         தில்லையார்   குற்றங்கள்   தொல்லையே   தந்திடும்.

     (சுந்தரர்   நடராசர்  முன் வருதல்)


அம்மை   அளித்த   அன்பிலாக்  கடுஞ்சொல்
        அத்தனை   வருத்தும்  என்பதால் வருந்தினார்
நம்மை  ஆட்கொண்ட  நாதனைக்   காண்போம்,
        நான்மறை போற்றும்    நாதனைக்  கண்டார்.
அம்மையே!  அப்பா!    ஒப்பிலா    மணியே!
        அறையும்    மறையின்   ஆதிப்     பொருளே!
தம்மையே    தனித்துத்    தவவழி    கொண்டோய்!
         தருமத்     தலைவ !    தண்ண டி    போற்றி.


அழகா      போற்றி!    அந்தண!   போற்றி.
       அறிவே    போற்றி!   அருளே     போற்றி!
குழகா      போற்றி!   குணமே   போற்றி!
            குவலயம்    காக்கக்     கொடுவிடம்   உண்டவ!
தழற்கண்    தண்கங்கை   தரித்தவா    போற்றி!
          தருமவிடை   வாகனா!   போற்றி!  போற்றி.
 உழல்துயர்  அடியவர்     உறுதுணை    போற்றி!
       உலகெலாம்   உணர்ந்த  பரம்பொருளே   போற்றி.

பலப்பல   துதித்து,   நிலம்புக    விழுந்தெழுந்து,
            பரமனே!   தாங்கள்     பழங்கால்   புரிந்த
பலப்பல      ஆடல்கள்      பலப்பல    அருள்செயல்
          பார்வதி     தேவியின்    பார்வையில்    தவறாம்.
பலப்பல     செயலால்      பிறந்தது      பெருஞ்சினம்:
          பரமனை    நாடேன்   :பகர்ந்தனர்        தேவியார் .
 இளைத்தேன்   இதற்குப்    பின்னரும்     அடியேன்
          இயற்றிடச்    செயலிலை :ஏகுகிறேன்     என்வழி.

என்றனன்    சுந்தரன்:   என்னன்பு     வன்தொண்ட!
         எண்ணிப்பார்    பழமை:எழில்மிகு    ஆரூர்
மன்றுசூழ்     வீதியில்  மங்கை    பரவை
       மதிலுடை    இல்லம்       மாறுகொள்      மனத்தை
உன்மேல்     கொண்ட    ஊடல்   நோக்கை,
         உறுசின   மனத்தை     மாற்ற     வேண்டி,
முன்னிரவு,    பின்னிரவு   நடந்தேன்     நானும்.
        முனைந்தேன்    தூதாய்.     மனத்தில்      நினைத்துப்பார்.

அன்றுநான்    கொண்ட   அனைத்து    முறைகளும்,
           அறிந்தவன்     நீயே.    ஆற்றுவாய்       அதுபோல்.
அன்புடன்    பேசு:  அறமதைக்      கூறு:
           அழைத்து     வந்தே    அகமதில்      சேர்ப்பி.
இன்னன    பகர்ந்த     ஈசன்    திருவடியை
          இறைஞ்சி,வணங்கி,     ஏகினான்    சுந்தரன்.
பொன்னிலவு    நன்மேகப்     புத்தொளிர்     பூக்கும்,
          பொன்னியாள்   கோயில்   புதுத்தூது     படைத்திட,

            (சுந்தரர்  அம்மையின்   சன்னதி முன்  நிற்றல்)

தேவியே    போற்றி!    தீபமே      போற்றி!
          தேவர்கள்   தொழுதிடும்    தலைவியே    போற்றி!
பாவியன்      என்னைக்    காத்திடுவாய்       போற்றி!
          பாமகள்     பணமகள்       போற்றிடும்     பாவையே!
கூவிடும்     குயிலின்     குரல்வளமே         போற்றி!
        கூத்தனின்    ஆடலில்   பங்குற்றாய்     போற்றி!
ஆவிபோல்    ஆண்டவன்      அழைக்கிறார்:    ஆதலின்
        ஆனந்தம்   காட்டியே    எழுந்தருள்க     அம்மையே.


சினத்தோடு   செந்தீ     சிவக்கும்    கண்ணுடன் ,
      செந்தமிழ்ச்     சுந்தர!  செம்பாகம்     தந்தவன்
மனத்தொடு      மங்கை   கங்கையைத்    தலையில்
      மறைத்தனன் மகிழ்ந்தே    ஆடிய     ஆட்டம்
சினத்தைத்   தந்தது:  செல்க  நீ ,சினந்த,
        செம்பவள    நாயகியை    வணங்கி,அம்மையே!
தனம்மிகு     தக்கன்    மகளாய்த்    தோன்றித்
        தன்பதி   சிவனெனத்  தண்மனம்  கொண்டாயே!

மணத்தால்    இணைந்தோர்    மகிழ்வாய்    ஆடலின் ,
         மறைந்தே   மகேசன்   கண்களை  மலர்க்கையால்
அணைத்தே    பொத்திட   அகில    உலகமும்,
       அமிழ்ந்தது    இருளில்:அஞ்சிய  உன்னுடல்
நனைந்தது     வியர்வையால்:வழிந்த      வியர்வை
        நடந்தது    ஆறாய் :அதனை   அப்படியே
வினையெனத்   தடுத்து,கரத்தால்     சடைக்குள்
        வெளியேறா   நிலையில் வரித்தனன்     தேவதேவன்.

கங்கை   தோன்றக்   காரணம்  ஆகி,
      கங்கை    மறைக்கக்   காரணம்   ஆகி,
கங்கை   பற்றிக்   குற்றம்   கூறல்,
      கண்ணுதற்   கடவுள்  வெறுத்து   ஒதுக்குதல்
மங்கை   தமக்கே   மாண்பும்    ஆகுமோ?
     மற்றது   உரைப்பின்    மனமது     மாறி,
அங்கே    வராவிடின்     அண்ணல்   அன்றுபோல்
     அமைதித்   தவத்தில்   ஆழ்ந்திடக்    கூடும்.


ஆதலின்   அன்னையே!   அகமதில்     மகிழ்வுடன்
        ஆதவப்     பேரொளிக்     கோயில்   புகுக.
சீதச்     சுந்தரன்    சொன்னதைக்   கேட்டு,
         சீர்மிகு   முகத்தில்   சிரிப்பு   போங்க,
நாதன்    கோயில்   நலமே   காண்போம்.
        நற்றவச்   சுந்தர!  நலந்தரு   சொல்லால்
வேதனை   விரட்டி,    வேத      முழக்கம்
        விண்தொட    வேந்தன்  பணிந்தாள்    வீரசக்தி .

                                நூற்பயன்
ஆதிரை   நாதனின்   அற்புதத்    தூது,
சோதி    அண்ணா    மலையின்   தூது
காதினில்    கேட்போர்,கண்ணுறப்  படிப்போர்,
மேதினி  உயர்ந்து  மேன்மை  பெறுவரே .
         






2 கருத்துகள்: