14. கூழ் அடுதல்
(பேய்கள் காளி தேவிக்குக் கூழிட்டுப் படைக்கக் கூழ் சமைத்தல்)
கூழ் சமைப்போம்
தேவா சுரப்போர்க் களத்தைக் காண்டலே
மூவாயிர வாண்டும் ஆகலாம்; அதனால்
காவாயே காளியெனக் காலடி வணங்கிக்
கூவியே கூழடுவோம் ; கொற்றவைப் படையல். 763.
பொருள்
தேவர்களுக்கும் அரக்கர்களுக்கும் நடந்த இப்போர்க்களத்தைக்
காணவே மூவாயிரத்திற்கு மேற்பட்ட ஆண்டுகள் ஆகலாம்; அதனால்
காளியன்னையே! எங்களைக் காப்பாய்! என்று அவளது பாதகமலங்களை
வணங்கிப் போற்றிவிட்டு, நாம் அன்னைக்குப் படைக்கக் கூழ் அடுவோம்.
கொற்றவைக்குப் படைப்போம், என்று மூத்த பேய் கூறியது.
பேய்களை அழைத்தல்
குட்டைக்கைத் திட்டையே! தட்டைக்கைப் மொட்டையே!
பெட்டையே! பெண்ணே! பேதையே ! பெரியவளே !
நெட்டை, நீலி, வாலீ , சூலி,
அட்டிடுவோம் அருங்கூழ் ; எட்டியெட்டி வந்திடுக. 764
பொருள்
திட்டையே! மொட்டையே! பெட்டையே! பெண்ணே!பேதையே!
பெரியவளே !நெட்டை, நீலி,வாலி,சூலி! எல்லோரும் விரைவாய் வாருங்கள்!
நாம் அன்னைக்குக் கூழ் ஆக்கிப்படைப்போம் . என்று மூத்தப்பேய்
எல்லோரையும் கூப்பிட்டது.
பல்துலக்குங்கள்
கூரிய கோடுகள் சீரிய பற்குச்சி,
வீரிய வெண்ணிறம் வீசுபல் வெளுத்திடும்;
சீரிய சில்லாம் என்பைக் கொண்டு,
ஊரிய நாக்கின் கோழையை எடுங்கள். 765
பொருள்
முதலில் பல்லை நன்றாகத் துலக்குங்கள்;கூர்மை வாய்ந்த யானையின்
தந்தங்களின் உடைந்த சில்லுகள் பற்குச்சிகள் ஆகும்; அது பல்லை
வெண்மை நிறமாகும்;விலா எலும்புகளிக் கொண்டு நாக்கை
வழித்தெடுங்கள்; கோழை போகும்.
நகம்வெட்டு;முடி திருத்து; குளிக்க.
அம்பினை உகிரறு கருவி ஆக்கிச்
செம்பு மதநீரைத் தலையெலாம் தேய்த்தே
முடியை அப்பி வளர்க்க; தெளிந்த
முப்புடைக் குருதி நீரில் குளிக்கவே. 766
பொருள்
அம்பின் நுனியைக் கொண்டு, நகத்தினை வெட்டிக் கொள்க ;
யானையின் மதநீர் ஒருசெம்பு பிடித்துத் தலையில் ஊற்றித்
தேய்த்து,அப்பி,முடியை வளர்க்க; மூன்றுபடைகளின் குருதி ஓடும்
நீரில் நன்கு குளிக்க.
ஆடை
குருதிக் குளமோ இறுதியில் ஆழம்;
விரைந்து குளித்து, வெளியே வந்து,
படைகள் மடுவில் விட்ட நல் ஆடைகள்
தடையாய் மறைத்து அணிந்தே வருக. 767
பொருள்
குருதிக்குளம் மிகுந்த ஆழம் உடையது; அதனால் விரைவாய்க்குளித்து
முடித்து வெளியே வந்து, மடுவில் படைகள் விட்டுச்சென்ற ஆடைகளை
அணிந்துகொண்டு வாருங்கள்!
அணிகள்
குருதிக் குளத்தில் அழுகும்,
குதிரை நரம்புக் குழுமம்
திருத்திச் சுற்றி, அழகுடன்
திருக்கை வளையல் அணிவீர் ! 768
பொருள்
குருதிக்குளத்தில் நெடுநாட்களாக ஊறிக்கிடக்கும் குதிரை நரம்புகளை
ஒழுங்குபடுத்தி,வளைந்து வளைந்து சுற்றி அழகோடு அதனைக் கையில்
வளையலாக அணிவீர் !
காலணி
யானை மத்தக முத்துக்கள்
யானைக் காதில் பதித்து
யானை போன்று நடந்திட
ஊனக் காலணி ஆக்கிடுவீர்! 769
பொருள்
இறந்துபட்ட யானையின் மத்தக முத்துக்களை, யானைக்காதின்
தோலில் பதித்து, யானைபோன்ற பீடுநடை பயில, அருவமான காலில்
அணிந்துகொள்வீர்!
காதணி
விடுவிடு சூலம், வேலம்பு ,
படுபடு வீரர் மார்பினில்
தொட்டே எடுத்துத் தூயதாக்கி,
வட்டக் காதினில் அணிவீர் ! 770
பொருள்
போரிலே பட்ட வீரர்களின் மார்பிலே பதிந்து கிடக்கும் சூலம்,வேல்,
அம்பு இவைகளை எடுத்துத் தூய்மை செய்து, அதனை வட்டம் வாட்டம்
ஆக்கிக் காதுகளில் அணிந்துகொள்வீர்!
காப்பணி
கரிந்த யானை வால்நுனி
குவிந்த முடிகளைக் கூட்டிப்
புவிதனில் தோஷம் நீங்கிடவே
நவிநாண் கயிறாய் க் காப்பணிவீர் ! 771
பொருள்
கருமை யானையின் வாலின் நுனியில் வளர்ந்து குவிந்துள்ள முடிகளை
ஒன்றாகக்கூட்டி,உலகோர் தோஷம் நீங்கக் கயிறு கட்டிக்கொளவதைப்போல
நன்கு திரித்துக் கைகளில் காப்பாய்க் கட்டிக்கொள்வீர்!
பல்லணிகள்
பற்பல யானை, குதிரை
பற்பல உறுப்பு கூட்டி,
நற்பல நல்லணி புனைந்தே
பொற்புற முறையே அணிவீர் ! 772
பொருள்
போரில் இறந்துபட்ட யானைகள்,குதிரைகள் உடைய பற்பல
உறுப்புகளை ஒழுங்குபடுத்தி,வெட்டி, அழகுடன் அணிகளாக மாற்றி
அவைகளை அழகுற அணிந்துகொள்வீர் !
கூழுண்போம்
பலகால் கிடந்தோம் பட்டினி;
நலக்காளி அளித்தாள் நமக்கே;
உலை,களம் உணவுகள் எல்லாம்;
இலைக்கை ஏந்தியே உண்போம். 773
பொருள்
நாமோ பலகாலம் பட்டினி கிடந்தோம்; நம்முடைய அன்னை காளி
மாதேவி நமக்கு நலமெல்லாம் அளித்தாள் ;உலை,போர்க்களம், உணவுகள்
எல்லாம் அளித்தாள் ; கையிலே இலைபோட்டு உணவுகளை அதிலேந்தி
நன்கு உண்போம். என்று மகிழ்ச்சி கொண்டாடின பேய்கள்.
பொருட்களைச் சேமியுங்கள்
அடுப்பு, பாத்திரம், அண்டா,
துடுப்பு, விறகு, தூயநீர்,
கொழுப்பு, குருதி, கொத்தெலும்பு
செழிப்புடை உடல்கள் சேமிப்பீர்! 774
பொருள்
கூழ் காய்ச்சுவதற்குத் தேவையான பொருட்களைச்சேமிப்பீர்!
அடுப்பு,பாத்திரம், அண்டா ,துடுப்பு,விறகு,நல்லநீர்,கொழுப்பு,குருதி,
சிறுசிறு எலும்புகள்,வாளிப்பான உடல்கள்,ஆகியவற்றைச் சேகரியுங்கள்!
பிறவும் சேகரிப்பீர்
வீரர் விடுத்த வேலம்பு,
வீரர் தொடுத்த வில்சூலம் ,
போர்க்களம் குவிந்த வீர்ப்படை,
சேர்த்துக் குவித்தால் செல்வமாகும். 775
பொருள்
களத்திலே வீரர்கள் விட்டுவிட்டுச் சென்ற வேல்கள்,அம்புகள்,
அவர்கள் பயன்படுத்திய விற்கள் ,சூலங்கள், இவைதவிர நிறைந்து களத்தில்
கிடக்கும் படைகள், இவைகளைச் சேர்த்துக் குவித்து வைத்துக் கொண்டால்
வளம் மிக்க செல்வங்கள் ஆகும்.
மேலும்பலபொருட்கள்
எரித்திடக் குதிரைக் கால்கள்;
எரியவே எண்ணெய் கயமதநீர் ;
பரியுடைப் பற்களான பச்சரிசி;
கரியின் காதுத்தோல் கீழ்விரிப்பு; 776
பொருள்
அடுப்பில் விறகாக எரித்திடக் குதிரைக்கால்கள், விளக்கெரிக்கவும்,
சமைக்கவும் எண்ணெய்யாக யானையின் மதநீர், பச்சரிசிக்குக் குதிரைப்
பற்கள்,தரையில் விரிப்பாகப்போட யானைக்காதின் தோல்;
இவைகளைச்சேகரிக்கவும்.
அண்டாதான் ஆனையின் வயிறு;
குண்டாதான் குதிரையின் வயிறு;
உண்டால் உயர்வுதரும் உரகத்தின்
மண்டை ஓட்டுக் கொழுப்பு; 777
பொருள்
அண்டா எனப்படும் பாத்திரம் யானையின் வயிறு; குண்டான எனப்படும்
பாத்திரம் குதிரையின் வயிறு;சாப்பிட்டால் மனநிறைவைத்தரும்
குதிரையின் மண்டையோட்டுக்கொழுப்பு இவைகளைச்சேகரிக்கவும்.
செயல்
புனிதமாய்க் குருதி மொண்டு,
இனிய குதிக்கால் முண்டு,
தனியே தசைகளை விண்டு ,
கனியும் உணவை உண்போம். 778
பொருள்
புனிதமான தீர்த்தம்போலக் குருதியைப் பாத்திரத்தில்
முகக்கவேண்டும்; இனிய சுவைநல்கும் குதிரையின் குதிக்கால் முண்டு
அத்தனையும் சமைக்கவும்; தனித்தனியே விலங்குகளின்
தசைகளையெல்லாம் விரித்தும்,வெட்டியும் வைக்கவேண்டும்; இப்படிக்
கனிந்த உணவை நன்கு உண்ணவேண்டும்.
சமையல்
பொருட்கள் புதியன சேர்த்து,
விருப்புடன் விரைவுடன் செயலாற்றிப்
பொறுப்புடன் பெருவாய் அடைத்துச்
சிறப்புடன் சமையல் படைப்போம். 779
பொருள்
சமையல் பொருட்கள் எல்லாம் புதியனவாகச்சேர்க்கவேண்டும்;
விருப்பமும்,விரைவும் செயலில் இருக்கவேண்டும்; தின்றுகொண்டே
இருக்கும் பெரியவாயை அடைக்கவேண்டும்; சிறப்பான சமையல்
அமைய இதுவே நல்வழியாகும்.
சமையலறை
வில்வேல் முச்சூலம் வடிக்கம்புகள்
முட்செடி, புள்ளிறகு , மூடுகூரை;
உள் உரக் கொழுப்பு தரைதளம் ;
கல் பல் பரப்பினால் நடைபாதை. 780
பொருள்
வில்,வேல்,சூலம்,கம்புகள் ஆகியனவற்றால் கூரை வேய்ந்து, அதன்மேல்
முட்செடி,பறவைகளின் இறகு போன்றவற்றைப் பரப்பினால் அது மூடுகூரை ;
நல்ல குதிரையின் கொழுப்பே தரையின்மேல் அமைக்கும் தளம் ஆகும்;
நடக்கின்ற பாதையாக, கல்லாகப் பற்களை பரப்பிடவேண்டும்.
கோலமிடல்
குதிரையின் வால்கொண்டு பெருக்கித்
துதிக்கை வடிநீர் தெளித்து,
அதியுடல் மசையால் மெழுகிப்
புதுநகப் புள்ளிக் கோலமிடு ! 781
பொருள்
சமையலறை, சாப்பிடும் இடங்கள் ஆகியவைகளைக் குதிரையின்
வால்மயிர் கொண்டு கூட்டுங்கள்! யானையின் துதிக்கையில் வடிகின்ற
நீரினால் நன்கு தெளியுங்கள்;நன்கு கொழுத்த அதன் தசையினால்
மெழுகுங்கள்; நகங்களைப் பொருக்கி வரிசையாகப் புள்ளிவைத்துக்
கோலமிடுங்கள்!
அடுப்பு
யானைக்கால் முறைமூன்று அடுக்கி,
ஊனை உருக்கி, ஒட்டிப்
பானைகள் வைத்திடப் பக்குவமாய்க்
கானவெளிக் கழுத்து பதியுங்கள் ! 782
பொருள்
ஒன்றின்மேல் ஒன்றாக.யானைக்காலை மூன்று சேர்ந்தாற்போல்
அடுக்கி, யானையின் சதையை உருக்கி, ஒட்டு ! அடுப்பின்மேல் பானைகள்
வைக்க ஏற்றபடித் திறந்து விளங்கும் கழுத்தை அமை!
பானை
என்புநீக்கிக் கொழுப்புநீக்கி வெளிக்கூடு
வண்தோலில் வட்டமான குடுவைபோல்
தண்வயிற்று சோறாக்கும் மண்பானை
எண் பேராய்ச் சுமந்துவந்து ஏற்றுகவே. 783
பொருள்
யானையின் வயிற்றில் உள்ள, என்பு,கொழுப்பு ஆகியவற்றை
நீக்கிவிட்டு, வெறும் தோலால் ஆன குடுவையை சோறாக்கும் பானையாக
மாற்றி,அதனை எட்டுபேர்கள் தூக்கிவாருங்கள்! அப்படியே அடுப்பின்மீது
மெதுவாக வையுங்கள் !
உணவுப்பொருள்கள்
கற்றா நற்பசுவின் பால்தயிர்கல !
முற்றுணவு உலைநீர், செற்றவீரன்
புற்றுமூளைக் கொழுப்பும், புத்திறைச்சியும்
உற்றநீரில் மணமுறக் கலக்குக! 784
பொருள்
அப்பொழுதுதான் ஈன்றுள்ள காராம்பசுவின் பால்,தயிர், இவைகளை,
உலைநீரில் கலந்து, வெற்றியில் உயிரிழந்த வீரனது தலைக்கொழுப்பையும்,
புது இறைச்சியையும் உழைநீரில் மணமுறக் கலந்திடு!
உலைநீர்
போரில் பாய்ந்து, பேருயிரை
வீரமுடன் விட்டபல குதிரைகளளின்
சீருடைக் குருதி சேமித்தே
ஊரும் உணவின் உலைநீரென்க . 785
பொருள்
போரிலே பகைவர் மீது, பாய்ந்தோடி, வீரமுடன் போரிட்டு மடிந்த
குதிரைகளின் உடலிலிருந்து வழிந்தோடும் குருதியைச் சேகரித்து, அதனை
உணவுகள் சமைக்கும் உலை நீராகப் பயன்படுத்துவீர் !
உப்பிடுக
பகைத்திறனழி பலகுதிரை
தகவுபுகழ் பெற்றிறந்தபின்
வகையெனவாள் நகமுடைதூள்
சுவைகருதியே உப்பெனவிடு ! 786
பொருள்
பகைவர்களை அழிக்கின்ற திறன்படைத்த பல குதிரைகள் களத்திலே
போராற்றிப் போரிலே இறந்தபின், அக்குதிரையின் கால்களிலே வாள்
போல வளர்ந்திருக்கும் கணுநகங்களை வெட்டிப்பொடியாக்கி அத்தூளை
உணவின் சுவைகருதி உப்பாகச் சேர்த்து உணவு உருவாக்குங்கள்!
அடுப்புத்தீ
வடவைத்தீ வயிற்றில் தீ
அடவும் தீ அகலாத் தீ
தொடவுமே பற்றிடும்தீ
கடவுளருள் போற்றிப்பெறு ! 787
பொருள்
கடவுளை வணங்கிப்போற்றி அடுப்பைப் பற்றவைத்தால் அத்தீ
வடவைத்தீயைப்போல் எரியும்; வயிற்றிலோ பசி என்னும் தீ; தீயெங்கும்
பரவவும் செய்யும்;அடுப்பைவிட்டு அகலாமல் எரியும்; தொட்டாலே [பற்றிக்
கொள்ளும் தீயும் உண்டு. அவைகளைப் பார்த்துப் பற்றவைக்கவும்!
அடுப்பெரிக்க விறகு
வீசியெறி வேலம்புகள் ,
வீரத்தடி , வில்லொடிநாண்,
காசில்களக் கணக்கற்றவை,
கனவிலே அடுக்கிடுக! 788
பொருள்
அடுப்பைப் பற்றவைத்ததும் அது நன்கு எறிந்திட, எரிதுரும்புகளாக
களத்தில் வீசியெறியப்பட்ட வேலம்புகள் , தடிகள் ,வில்லும் ஓதிந்த நாணும் ,
இப்படிக் களத்தில் கிடக்கும் எண்ணிலா துரும்புகளைச் சேகரித்துக்
கனலில் மேலும் மேலும் அடுக்கினால் தீ நன்கு எரியும்.
பற்றவைத்தல்
பார்வையால் பற்றிடும் தீ
பழையகதை, பற்பலவாம்;
ஆர்வமேவிய அருங்கடமை
அரவணைப்பில் பற்றிடும்காண் ! 789
பொருள்
நேராக உற்றுப் பார்த்தாலே தீ பற்றுவது என்பது பழைய கதைகளாகும்;
ஆர்வத்தோடு கடமையாற்றுபவர்கள் தீயைப் பற்றவைக்கும் முயல்வில்
விறகினில் தீ பற்றிக்கொள்ளூம் .
பழைய அரிசி
சூரவழிப் பேரரக்கர்
வீரவழி மாண்டுபோக,
ஈரவழி ஈறுபற்கள்
சீரகமாம் செவ்வரிசியாம். 790
பொருள்
போரிலே சூரனைச்சார்ந்து போரிட்ட அரக்கர்கள் மாண்டுபோயினர்;
அவர்களது ஈரமுற்ற வாயில் உள்ள பற்கள் உடைபட்டுக் குவிந்து கிடக்கும்;
அவைகளை நன்கு உடைத்தால் சீரகச்சம்பா அரிசிபோல் விளங்கும்.
புதிய அரிசி
இரக்கமிலாக் கடும்போரிலே
இறந்துபட்டன உரகங்கள் ;
சிரிக்கின்ற குதிரையின்
சீர்ப்பற்களே காரரிசி. 791
பொருள்
போரிலே பலப்பல குதிரைகள் இறந்துபட்டன; அவைகளின்
வெண்ணிறப் பற்களை,உடைத்துப் பொடியாக்கி,அதனை நல்லுணவு
அரிசியாக அமைத்துக்கொள்ளுங்கள் !
அரிசி குற்றிட ..உரல் ,உலக்கை
கொல் "எனக் குற்றிடவே உரல்வேண்டும் ;
வெல்முரசு வீழ்ந்தபின் வெவ்வுரலாம் ;
கொல்கரி கூர்மைமிகு தந்தங்கள்,
கொல் "எனக் குற்றிடும் உலக்கையாம் . 792
பொருள்
அரிசி குற்றிட ,உரல் வேண்டும்; போர்முரசு பழுதடைந்தால் அதனை
உரலாகப் பயன்படுத்தலாம். உரலில் இடிக்க உலக்கை வேண்டும்; பெரிய
யானையின் நீண்ட கூர்மையான தந்தங்களே குற்றும் உலக்கையாம் .
அரிசி குற்றல்
குலுக் "எனக் கொட்டுக உரலுள் ;
கொலுக் "என ஏற்றிடும் உரல்தான் ;
கொலுக்கு சலுக்கு என்றொலியுடன்
ஒலிக்கும் உலக்கை ; உடைந்தனபல். 793
பொருள்
உரலினுள்ளே பற்களைக் குலுக்" எனக்கொட்டுக; அதனை "கொலுக் "
என ஏற்றிடும் உரல்; உரலில் உலக்கை கொண்டு இடிக்கையில் கொலுக்கு"
சலுக்கு" என்று ஒலி ஏற்படும்;அவ்வொலியில் பற்கள் உடைந்து சிறிய
அரிசிகளாக வெளிவரும்.
கடவுள் போற்றல்
அரிசியோ நெல்லோ அதைக்குற்றல்
நெறியில் நீள்தமிழ் வழக்கம்.
செறிவுடைச் செயலின் செம்மையால்,
அரிசிவன் போற்றல் பண்பாடே. 794
பொருள்
அரிசி,அல்லது நெல் இதனைப்போட்டு உரலில் உலக்கை கொண்டு
குற்றுதல் நீண்ட தமிழ்ப்பழக்கம் ஆகும். நெறிமிக்க இந்தப்பழக்கத்தால்
தாங்கள் ஆற்றும் செயலில் செம்மை கண்டார்கள். அரிசியென்பதால் அரி,
சிவன் என்ற கடவுட்பெயரைக் கூறி மகிழ்தல் பண்பாடாக அமைந்தது.
காளியைப்போற்றினர்
எம்பசி தீர்த்திடும் இளநெஞ்சே!
வெம்பசி விலக்கிய விரிநெஞ்சே!
அம்புவியில் ஆருடல் அளித்தவளை,
அன்புகொண்டு பாடீரோ ! பாடுவோம். 795
பொருள்
எங்களது பசிப்பிணியை நீக்கிய கருணை உள்ளம் கொண்டவளே!
கொடுமைமிக்க பசியைப் போக்கிய பரந்த உள்ளம் கொண்டவளே!
இந்நிலவுலகில் வாழவும் நமக்கு நல்லுடல் அளித்த காளியைப் பணிந்து,
போற்றிப் பாடீரோ ! நாம் பாடுவோம். என்று போற்றியபடியே அரிசியைக்
குற்றினர்.
செஞ்சிவனைப் போற்றினர்
மாறரக்கர் கூறுபட நீறணிந்தவர்;
வேறுபடு வெவ்வரக்கர் வீழ்த்தியவர்;
பேரறத்துப் பெரியோனைப் பாடீரோ !
சீரறத்துச் சிவனையே பாடீரோ ! 796
பொருள்
மாறுபட்ட சிந்தனை உடையவர்கள் மனம் மாறுபடவேண்டும் என
எண்ணித் திருநீறை அணிந்து அருள் வழங்குபவர்; மாறாத பேரரக்கர்களை
வீழ்த்தி அழித்தவர்; பெருமைமிக்க அறம்வளர்க்கும் பெரியோனைப்
போற்றிப் பாடுவீராக! நேர்மையான அறம் கொண்ட சிவபெருமானைப்
போற்றி வாழ்த்தீரோ ! எனச்சிவனாரைப் போற்றினார்கள்.
முருகனைப்பாடுங்கள்
வரத்தால் குறைமேவிய நிறத்தானைத்
திறத்தால் ஆணவம் கொண்டவனைக்
கரத்தால் காத்தழி கந்ததேவனைக்
கரம்குவித்துப் பாடீரோ ! பாடுவோம். 797
பொருள்
கடுந்தவம் புரிந்து பெற்ற வரமகிமையினால் குறைநிறைந்த குணமும்,
ஆணவம் நிறைந்த திறனும் கொண்ட சூரபன்மனைத் தமது கரத்தினால்
அழித்துக் காத்தும், அருளிய காந்தக்கடவுளை நீவிர் கரம்குவித்துப்
போற்றிப் பாடுங்கள்! நாமெல்லாம் போற்றிப்பாடுவோம்.
வீரவாகு
தூதனாய்ச் சூதனழி வேதமகன்,
நாதனாம் முருகனையே நாடிநிற்பவன்;
சீதனின் சீர்வெற்றி பாடீரோ !
ஆதவனின் செம்மையைப் பாடீரோ ! 798
பொருள்
முருகனின் ஆணைப்படி,மகேந்திரத்திற்குத் தூதனாகச்சென்றவன்;
சூரனை அழித்த வேதனாம் மறைமுருகனின் இளையவன்; எப்பொழுதும்
முருகனையே நாடிநிற்பவன்; அந்த வீரவாகுவின் வெற்றியைப் போற்றிப்
பாடுங்கள்! ஆதவன்போன்ற வீரனின் செம்மையைப் பாடுங்கள்!
மும்மலம் அழித்தவன்
ஆணவச் சூரனை அழித்தவா!
கன்மவினைச் சிங்கமுகனை வீழ்த்தியவா!
மாயையாம் தாரகனையும் மடித்தவா!
மும்மலங்களை அழித்தவனைப் பாடீரோ ! 799
பொருள்
ஆணவமலமாகிய சூரனையும், கன்ம மலமாகிய சிங்கமுகனையும்,
மாயாமலமாகிய தாரகனையும் அழித்த முருகா! என்று
முருகனைப்பாடுங்கள்!
பகைவனுக்கு அருள்வாய்!
வரபலம் படைபலம் உடல்பலம்
கரபலம் கொண்டதால் கர்வமலை;
இறையருள் இணைந்தபோதும் மாறாத
குறைச்சூரன் அருள்பெற்றத்தைப் பாடீரோ ! 800
பொருள்
இறைவன் அளித்த வரங்களாலும், கடல்போன்ற படைகளாலும் ,
வளம்மிக்க உடலாலும் ,வலிமைமிக்க வீரக்கைகளாலும், கர்வம் கொண்டவன்
சூரன்; முருகனே காட்சி கொடுத்தபோதும் மாறாதவன்; குறைகளின்
நிறையாக விளங்கிய அவனையும் மன்னித்து,
ஏற்றுக்கொண்டார் முருகன் பகை வனுக்கும் அருளிய பண்பாட்டைப்
பாடுங்கள்!
அருட்குணம்
வேலது வீழ்த்திய போதிலும்,
தாளது போற்றிடவே தண்ணருள்
நீள்மயிலும் சேவலுமாய், நிதம்புகழும்
வேளருளைப் போற்றியே பாடீரோ ! 801
பொருள்
சூரனைப்போரிலே வேலாயுதம் வீழ்த்தியபோதும், வெட்டுபட்ட மரத்தின்
ஒரு கூறை மயிலாகவும், மற்றதைச் சேவலாகவும். மாற்றித் தனது சேவடியில்
வாழவைத்த அருட்பெருமையைப் பாடுங்கள்!
பாடியபடிக் குற்றுங்கடி
குற்றுங்கடி அரிசி குற்றுங்கடி!
நற்றுணை நாதனெனக் குற்றுங்கடி!
பற்றற்றோன் புகழ்பாடிக் குற்றுங்கடி!
நற்றவனைப் போற்றிக் குற்றுங்கடி! 802
பொருள்
பாடியபடியே அரிசி குற்றுகிறார்கள்; அரிசி குற்றுங்கள்'
நமக்குத்துணை நல்முருகன் என்று பாடிக் குற்றுங்கள்; பற்றற்றவனாகிய
சிவனின் பெருமை பாடிக் குற்றுங்கள்; நமக்கெனத் தவம் செய்யும்
முருகனைப்பாடிக் குற்றுங்கள்.
நமது நாயகன்
குமரக் கோட்டத்தான் பாடீரோ !
அமரர் காத்தவன் பாடீரோ !
சமரில் வென்றவன் பாடீரோ !
நமவெனும் நாயகனைப் பாடீரோ ! 803
பொருள்
குமரக் கோட்டத்தில் கோயில் கொண்டுள்ள முருகனைப்பாடுங்கள்!
தேவர்களைக் காத்தவனைப் பாடுங்கள்; போரில் சூரனை வென்றவனைப்
பாடுங்கள்' வணக்கம் என வாயாரக் கூறிப் போற்றுகின்ற தலைவனைப்
பாடுங்கள்!
அரிசி புடைத்தல்
புத்தரிசி புடைத்திடுக;
முத்துப்போல் படைத்திடுக;
வித்தகச் சல்லடத்தால்
விரைவாகச் சலித்திடுக. 804
பொருள்
உரலிலே குத்திய அரிசியைக் கல்,மண், இன்றி,முத்துப்போல் முறம்
கொண்டு புடைக்க; சல்லடையால் நன்கு சலித்திடுக; விரைவாக
இப்பணியைச் செய்க.
அரிசியை அளக்கவும்
நலங்காட்டும் இல்லிடத்திலே
வளச்சூரன் பொன்முடியால்
கலம்கலமாய் அளந்திடுவீர்!
குலம் குலமாய் வாழ்ந்திடுவோம். 805
பொருள்
சேகரித்த நல்ல அரிசியை இல்லத்தில் நன்கு அளக்க. சூரனின் கிரீடம்
போல் உள்ள மரக்காலால் கலம் கலமாய் அளந்து மூட்டை கட்டுக
அதனை வைத்துக்கொண்டு நமது குலம் வாழ்ந்திடும்.
அரிசி களைதல்
வில்போற்றும் விரிகளத்துப்
பல்லரிசியை நீரினாலே
கல்நீக்கிக் களைந்திடுவீர் !
கழிநீரை நீக்கிடுக. 806
பொருள்
வில்லாற்றல் மிக்கப் போர்க்களத்தே விளைந்த குதிரைப்பல்லரிசியை
கல்,மண், நீங்கிட நன்கு நீரூற்றிக் கலைந்திடுக; கழிநீரைக்கீழே
கொட்டிவிடுக.
உலை போடுதல்
களைந்தெடுத்த வெள்ளரிசியை
உலைதோறும் இட்டிடுக ;
நிலைத்தெரியும் நீளடுப்பு ,
உலைகொதித்து உணவாகும். 807
பொருள்
களைந்த அரிசியை அடுப்பில் வைக்கப்பட்டுள்ள பானைகள் தோறும்
கொதிக்கும் உலையில் போடுக; நன்கு எரியும் அடுப்புத்தீயினால் அரிசி
வெந்து,உணவாகும்.
கிளறுதல்
பரணிக்களம் பவித்திரமே ;
பழித்தீயால் வழியாமல்
துரகக்கால் துடுப்பினால்
தொட்டுதொட்டுக் கிளறிவிடுக . 808
பொருள்
பரணிப்போர் நடந்த இவ்விடம் தூய்மையானது; இங்கு உருவாகும்
கூழும் தூய்மையானது; எரிகின்ற அடுப்பின் பெருந்தீயால் வெளியே
வழியும்; அவ்வாறு வழியாமல் அடிக்கடிக் குதிரைக்காலால் உருவான
துடுப்பால் கிளறிவிடுக;
சுவை பார் !
வெந்துவரும் பந்தக்கூழ்
முத்துசுவை பார்த்திடவே,
உந்தியெழும் உள்ளங்கை
ஒருசொட்டு, விட்டுச்சுவை! 809
பொருள்
பானையில் வெந்து, பதத்தில் வந்துள்ள கூழை,நல்லசுவையுடன்
இருக்கிறதா? எனப் பார்த்திட, உண்ணும் ஆசையைத்தூண்டும் அக்கூழின்
ஒருசொட்டை,உனது உள்ளங்கையில் விடு; அப்படியே நாவால் நக்கிச்சுவை
பார்!
மீண்டும் கிளறுக
அடுப்பைச் சற்றே அணைத்துவிட்டுத்
துடுப்பால் கிளறித் துழாவுவீர்!
அடுப்புத் தீயால் அடிபிடிக்காமல்,
அடிக்கடித் துழாவிக் கிளறுவீர்! 810
பொருள்
அடுப்பை அணை ; மீண்டும் நன்கு கிளறு; துடுப்பால் பாத்திரத்தின்
அடிபிடிக்காமல் கிளறிக்கொண்டே இரு;
பதம்பார்த்து இறக்கு
பாரீர்! பாரீர்! இக்கூழைப்
பதமும், சுவையும், பக்குவமும்,
வாரீர்! வாரீர்! வலிந்திறக்க.
வானவர் வண்சுவை வளமுடைக்கூழ். 811
பொருள்
இக்கூழைப்பாருங்கள்! பார்க்க வாருங்கள்! நல்லபதம், நல்லசுவை,
நல்ல பக்குவம். வாருங்கள்!எல்லோரும் சேர்ந்து இப்பானையைக் கீழே
இறக்கிவைப்போம். விண்ணகத்துச்சுவை போன்றது; வளமான கூழ்.
பானையிறக்கல்
வலிந்து நிறைந்த வடமாக்கடம்
நிலைத்து நின்றே நீக்கமின்றிக்
கனிந்து பிடித்துக் கைகாப்புடன்
குனிந்து தூக்கி இறக்குவீர் ! 812
பொருள்
வலிமையுடையது;நிறைந்துள்ளது; ஆலமரம்போன்ற பெரும்பானை ;
அடுப்பின்மேல் நிலைத்து நிற்கிறது; அதனைக் கனிவோடு பிடியுங்கள் ;
கையால் பாதுகாப்போடு குனிந்து தூக்குங்கள்;மெதுவாக இறக்குங்கள்.
நிறைவுடைய கூழ்
பரணிக் கூழே தரணியெல்லாம்;
வருகவே! வருகவே! வருவோர்க்குடி;
மறவேன்; மறவேன்; மலைபோல் கூழ்;
நிறைவே! நிறைவே! நிறைகாணீர் ! 813
பொருள்
மகேந்திரபுர பரணிக் கூழே உலகமெல்லாம் விரும்பப்படுவது; வாரீர்!
வாரீர்! வருவோர் எல்லோரும் குடியுங்கள்! மலைபோல் காட்சி அளிக்கும்
கூழை மறக்கவே மாட்டேன்; இது எனக்கும், உலகோருக்கும் மன
நிறைவைத் தருகிறது.
இது போதுமோ?
இருண்ட நாக்கில் இனியகூழே !
மருண்ட பசியில் திரண்டகூழே !
உருண்ட வயிற்றில் உணவுக்கூழ்;
சுருண்ட வயிற்றிற் கிதுபோதுமோ? 814
பொருள்
சோறில்லாமல் துன்பப்பட்ட நாவிற்கு இனிமையாக வந்த கூழே!
பசியால் வாடிய காலத்துத் திரண்டுவந்த கூழே! பசியால் உருண்டு
கிடந்த வயிற்றிற்கு உணவாய் வந்த கூழே! எங்களது சுருண்ட
வயிற்றிற்கு இது போதுமோ ? போதாது.
குடிக்க நீர்
வெகுநாள் பசியால் விக்கல்வரும் ;
தகுதியான தண்ணீரை சேமியுங்கள்!
மிகுதியான பானைக் குடங்களிலே
முகந்தே வைத்துக் கொள்வீரே! 815
பொருள்
நீண்ட நாட்களாக உணவு கிடைக்காமல் பசியால் வாடிய நமக்கு
இன்று கூழ் கிடைக்கப்போகிறது ; சாப்பிடத்தொடங்கியதும் விக்கல் வரும்;
அதனால் தண்ணீரை அருகிலேயே வைத்திருங்கள்! பானை, குடங்கள்
முதலியவற்றில் பிடித்து வைத்துக்கொள்ளுங்கள்;
அமரும் இடம்
கொழுப்பில் மெழுகிடு! கொலைக்கய,வால்
விழுப்பால் பெருக்கிடு! செழுங்குருதித்
தழுநீர் தெளித்திடு ! மழுமழுவென
முழுகலம் அமர்ந்திடச் செய்வீரே ! 816
பொருள்
விளங்குக கொழுப்பால் தரையை மெழுகு! யானை வாலில் வளர்ந்துள்ள
அடர்த்தியான முடியால் பெருக்கு! குருதியும்,நீரும் கலந்து தெளி! அவ்விடம்
மழு மழு வென மாறிவிடும்; உண்கலம் வைத்துச்சாப்பிடும் தரையில்
அழகுற எல்லோரையும் அமர்த்து !
உண்கலம்
பட்டோர் தொட்ட கேடகங்கள்
அட்டில் அளிக்கும் தட்டாகும்;
பட்டகள மங்கள பெருவீரர்
மண்டை ஓடு மட்கலமாகும். 817
பொருள்
களத்திலே மாண்ட வீரர்கள் விட்டுச்சென்ற கேடகங்கள் உணவு
அளிக்கும் தட்டுகள் ஆகும். பட்ட வீரர்களின் மண்டையோடு மட்கலன்
ஆகும்.
பொன்வெள்ளிக்கலன்கள்
அழிந்த வரக்கர் கேடகங்கள்
அழகியப் பொன்மயப் பாத்திரங்கள்;
விழுந்த படைத்தலைவரின் குடைகள்
முழுகும் வெள்ளி விளக்கத்திலே . 818
பொருள்
போரிலே விழுந்துபட்ட அரக்கர்களின் கேடகங்கள் பொன்மயமான
கலன்கள் ஆகும்; களத்திலே மாண்ட வீரத்தளபதிகளின் வெண்குடைகள்
வெள்ளிப்பாத்திரங்களாக மிளிரும்.
உணவு வழங்கும் அகப்பை
தரையில் பதித்த கூழ்க்கலன்கள்
விரைவில் வழங்க, நீள்குழிக்கலம்
வரைகயத் துதிக்கை நிறைவுடையது;
நிறைகூழ் வழியா ; நிம்மதிதரும். 819
பொருள்
கூழ்ப்பானைகள் தரையில் பதிக்கப்பட்டுள்ளன; அதிலிருந்து எடுத்து
வழங்க நீண்ட கையுடைய குழிக்கலம் தேவை; அதற்கு யானையின்
வெட்டுண்ட துதிக்கையை ஏற்புடைத்து; கூழும் வழியாது; விரைவாய்
வழங்கவும் செய்யலாம்.
விளக்கு; விரிப்பு;
மடிந்தும் மாறா மறவர்விழி
நடைப்புறம் பதிப்பின் கலைவிளக்கு;
மடிந்தோர் கொழுப்பு மண்டபத்து
நெடுநாள் அமரவே நீள்விரிப்பாம் . 820
பொருள்
இறந்துபட்ட வீரர்களின் கண்கள் மூடாநிலையில் விழி வெறித்துப்
பார்த்துக்கொண்டே காட்சி தரும்; அவ்விழியை, நடக்கும் நடைபாதை
பக்கத்தில் பதித்துவிட்டால் அழகிய விளக்கு எரியும்; இறந்துபட்டவர்களின்
கொழுப்பை நன்கு சேகரித்து, அதுகொண்டு மண்டபத்தை மெழுகிவிட்டால்
தரைவிரிப்பு போல அது விளங்கும்.
அழைப்பு
பட்டினி கிடந்தது பழங்கதையே;
இட்டமாய் உணவுண்ண இதோவரிசை!
கட்டம் தீர்ந்தது; கருணையுடன்
அழைக்கின்றோம்; வாரீர்! வாரீரே ! 821
பொருள்
நாம் எல்லாம் பட்டினி கிடந்தது அந்தக்காலம்; இன்று இட்டமாய்க் கூழ்
உண்ணலாம் ;இதோ வரிசை; இங்கு அமருங்கள்! தாயின் கருணையினால்
கட்டம் தீர்ந்தது' அழைக்கின்றோம் வாரீர்!வாரீர்!
உணவுண்ண அகப்பைகள்
கோயில் புறத்தே அரக்கர்தலை
வாயில் கவ்விய வேலம்புகள்
வாயில் கூழினை உண்டிடவே
வாயுடை அகப்பை