நாலாம் நாள் போர்
அக்கினிமுகன் போர்
அக்கினிமுகன்
கருவுறுகால் செருவழல்சொரி
பெருமாயவள் பெற்றெடுத்தாள் ;
எரிமாமுகன் எனும்பெயரை
உரிசூர்மகன் விரைந்தனனே. 672
பொருள்
அக்கினிமுகனின் தாய் அவனைக்கருவுறும் காலத்தில் தீயழல் கருவில்
வழிந்தோடியதால் அவனுக்கு அக்கினிமுகன் என்னும்பெயரை வைத்தாள் .
அந்த அக்கினிமுகன் தந்தையாகிய சூரனுக்கு உதவுவதற்காகப் போர்க்
களம் காணப்புறப்பட்டான்.
சூளுரைத்தல்
மன்னர்க்கிறை துன்னும்துயர்
முன்னொடுபின் இன்னுமெலாம்
பின்னரும்போர் பெற்றியறி
மன்னன்மகன் சூளுரைப்பான். 673
பொருள்
மாமன்னனாகிய சூரமாமன்னன் படும்துயரெல்லாம் நன்கு
அறிந்தவனாகையால் மீண்டும் துவங்கும் போர் பற்றியும் நன்கு
அறிந்த அக்கினிமுகன் சூளுரைத்துச்சொல்வான்.
சூளும் ,விடையும்
படைகொள்மன் பகையறுக்க;
அடல்தூதனை திடமழித்துச்
சுடர்முகனேனக் கடனாற்றுவன் ;
விடைதருகென விளம்பினானே. 674
பொருள்
பகைவர்களை அழித்திடவே படைகளைக் கைக்கொள்வேன்;அந்தத்
தூதன் வீரவாகுவை அழித்தொழிப்பேன்;அப்பொழுதுதான் எனக்குச்
அக்கினிச்சுடர் முகன் 'எனும்பெயர். எனது கடனாற்ற இதோ களத்திற்குப்
புறப்பட்டேன்;விடை தருக தந்தையே! என வேண்டினான்.
எழுவர் வருகை
விடமாகிய எரிமாமுகன்
விறலர்மேல் கணைபொழிந்தான் ;
இடிகாலுறு முகிலாமென
எழுவீரரும் எதிர்த்தனரே . 675
பொருள்
நஞ்சுபோன்ற அக்கினிமுகன் பூதப்படைமீது கணைகளைப்
பொழிந்தான்; இடிநிறைந்த கருமுகில் போன்ற ஏழு வீரரும்
ஒன்றாகஇணைந்து களத்துள் நுழைந்து, எதிர்த்தனர்.
சிவப்படை
அடலெரிமுகன் ஆதிநாயகன்
படைதொடவும் படர்வானம்
வடவைத்தீ வடிவாய்வர,
கடனெழுவர் கலங்கினரே . 676
பொருள்
எழுவரையும் வீழ்த்துவதற்காக அக்கினிமுகன் சிவப்படையைத்
தொட்டான்; விட்டான்; அதைப்பார்த்த எழுவரும் வானத்தே வடவை
என்னும் தீ போல் வருவதைப்பார்த்துக் கலங்கினர் .
அனல் படையோ
அனல்படையே ; அதற்குமாற்று
புனல்படையே ; என்றெண்ணி
புனல்வாருணப் படைவிடலும்,
முனிபோலவே உண்டதுசிவம் .. 677
பொருள்
அரக்கன் ஏவியது அனல்படையே என எண்ணிய எழுவரும் அதற்கு
மாற்றாக,வாருணப்படையை விட்டனர்; சிவப்படையோ
முனிவரைப்போலவே வாருணப் படையை விழுங்கியது சிவம்.
பேறு பெற்றோர்
வாருணப்படை வாயில்பொடி;
திருவெழுவர் பேருயிரும்
திருசிவப்படை போக்கிற்றே ;
பேறுற்றனர்; பதம்பெற்றனர். 678
பொருள்
சிவப்படையின் வாயில் வாருணப்படை பொடியாயிற்று; எழுவரது
உயிரைப் போக்கியது சிவப்படை; பேறும் ,பதமும் பெற்றனர் எழுவரும்.
வாகுவிற்கு அறைகூவல்
விம்மிநின்ற வீரவாகு
செம்மல்மனச் சீரறியா,
மும்மதாக்கினி முகன்கூறுவான்
முனைவேன்நான் நின்னோடுபோர் . 679
பொருள்
மனத்தில் எதோ சஞ்சலம்! விம்மிநின்றார் வீரர் .அம்மனத்தைப்
புரிந்துகொள்ளாத அக்கினிமுகன் வீரவாகுவே! உன்னோடு நான்
போர் புரிய விரும்புகிறேன்,என்றான்.
வீரவாகு அக்கினிமுகன் போர்
அறத்துவழித் திறத்தவாகு
உரத்திலும், உயிர்த்தடத்திலும்
முறைப்படும்முறைச் சரச்சரம்விட ,
கறைப்படுசூர் களைப்புற்றனன். 680
பொருள்
அறவழியில் போராற்றும் வீரவாகு பகைவனது உரத்திலும், உயிர்
காக்கும் தடத்திலும் சரங்களை மாறிமாறிவிட,ஈதிர்க்க இயலாது
களைப்புற்ற அரக்கன் கறையுற்று வீழ்ந்தனன்.
மனத்தில் தோன்றிய எண்ணம்
விழுந்தனன் அழுமனத்தே
எழுந்ததொரு முழுவெற்றி ;
விழுபோர்தனில் அழிபட்டிடின்
தழுவியெனைக் காத்திடுவாய்! 681
பொருள்
அடிபட்டு விழுந்த அரக்கன் மனத்திலே எழுந்தது ஒரு வெற்றி எண்ணம்.
தனக்கு ஆள்பட்ட காளியிடம் ஒருவாரம் வாங்கியிருந்தான்; போரிலே
தோற்று அழிவுறும் வேளை அக்காளி வந்து காக்கவேண்டும்" அதை
இப்பொழுது நினைத்தான்;காளியே!என்னைக்காக்க வருவாய்! என்று
வேண்டினான்,
காளிவந்தாள்
தொழுதவுடன் தூயகாளி
பழுதின்றி வந்திடுக
செழுங்குரலால் அழைத்திடவும்,
மழுவேந்திய காளிவந்தாள் . 682
பொருள்
அக்கினிமுகன் காளியைத் துணைக்கு வணங்கி அழைத்தான்
மழுவேந்திய காளியும் அவனுக்காகப்போரிட வந்தாள் .
காளி
எரிமுகனருள் அரிமுகத்தாள்
அரிகரிபரி திறம்புறம்சிரம்
தரிமறிவிரி குறைமறையறு
தெரித்தனள்கனல் பொறித்தனள் தீ. 683
பொருள்
அக்கினிமுகனுக்கு அருள்புரிவதற்காக வந்த சிங்கமுகத்தாள் ,
சிங்கத்தின்மீது அமர்ந்து,யானைக்குதிரைப்படைகளுடன் திறன்கொண்டு,
வெளியில் விளங்கும் மற்றொரு தலையுடன்,தரித்த சூலமும், ஆட்டுக்கிடாய்
வாகனத்தில் விரித்த கூந்தலுடன் குறைகளையும், போக்கி, மறைகளையும்
உச்சரித்தபடி,ப் பகைவர்களது தலையை அறுத்தெடுக்கும் குணத்தோடு,
கனல் போன்ற கண்பார்வை வெறித்துப்பார்க்க, தீயால் பொசுக்கி
எடுப்பவளாகவும் விளங்கினாள்.
காளி போரிடல்
ஆர்த்திடு காளியவள்
கூர்த்திடு வாட்படையுடன்
தார்த்தடத்தேர் மேலதேறி
வீரனோடு போரிட்டாள் . 684
பொருள்
ஆரவாரம் மிக்கவளாகிய காளி கூர்மைமிக்க வாட்படையுடன்
தேரின்மீது ஏறியமர்ந்து வீரவாகுவோடு போரிட்டாள் .
காளி வீழ்ந்தாள்
வெறியோடு விரைந்தவளின்
பொறியெட்டுக் கரங்களையும்
ஒருகையால் உறப்பிடித்தான் ;
மறுகையால் உரத்தடித்தான் . 685
பொருள்
வாகுவை வீழ்த்த வெறியோடு வேகமாக வருபவளின் எட்டுக்
கரங்களையும் தனது ஒருகரத்தால் திமிற முடியாமல் பிடித்த வாகு,
மற்றொரு கரத்தால் அவளின் மார்பினிலே பலமாக அடித்தான்.
காளியின்துயர்
எண்கரமும் , இற்றிடவே,
வண்மார்பும் வலியிழந்து,
புண்குருதியாய் மண்ணில்விழு
விண்ணவளும் விசனமுற்றாள். 686
பொருள்
எட்டுக்கரங்களும் வலியால் துடிதுடிக்க, வலிமையான மார்பும்
வலிமையிழந்துபோக, உடலெல்லாம் புண்பட்டுக் குருதி கொப்பளிப்ப,
மண்ணில் விழுந்தாள்; விண்ணவளாகிய காளி மிகுந்த துயருற்றாள்.
காளி கூறியது
அக்கினிமுகன் அருச்சனையால்
அடிமையாய்க் கடன்கழித்தேன்;
முக்கண்ணன் முகத்தோன்றல்
தக்கவனே வாழ்க நீ. 687
பொருள்
அக்கினிமுகனாம் அரக்கன் என்னைப்பூஜித்து வரம் பெற்றான்;
அவனுக்கு அடிமையான நான் அவனுக்கு உதவ வரவேண்டும்; அப்படி
வந்தவள் நான்;இனி எனக்கு விடுதலை;விண்ணகம் சென்றிடுவேன்;
முக்கண்ணன் நெற்றிக்கண் பொறியிலே தோன்றிய முருகனே வெற்றி
கொள்வான்;அவனுக்குத் துணையான நீயும் வாழ்க! என்று வாழ்த்திவிட்டு
நீங்கினாள் காளி .
அக்கினிமுகன் அழிதல்
வியர்த்தெழுந்த கயக்கனல்முகன்
வயப்படையொடு சயப்பேரிகை
புயத்திறனால் புரிந்துநின்றான் ;
அய ,மால் படை அடுத்தேவினான் . 688
பொருள்
அக்கினிமுகன் நடந்த தைக்கண்டு வியர்த்து, நின்றவன் மீண்டும்
போருக்கு ஆயத்தமானான். அயன்படை விட்டவன், மால்படையையும்
விட்டான்;
வீரபத்திரப்படை
வீரவாகு வீரபத்திரப்
பேர்வலிமிகு படையேவி
கார்மால்படை கவிழ்த்தபின்னர்
கனல் முகன் உயிர்குடித்ததே. 689
பொருள்
வீரவாகு வீரபத்திரப்படையை ஏவினார். அது மால்படையை
அழித்தபின்னர் அக்கினிமுகன் உயிரையும் குடித்தது.
எழுவர் உயிர்
எழுவராயினர் என்னவாயினர்?
தழுதழுத்த வீரவாகு
விழுசிவப் படை விழுங்கியது;
அழுகையுடன் ஆய்வுசெய்தான். 690
பொருள்
வீரவாகுவின் தம்பியர் எழுவர் நிலை என்ன? சிவப் படை
விழுங்கிற்றோ? அழுகையுடன் வாகு ஆய்வு செய்தான்.
யமன் செய்த செயலோ
எய்தியவன் அக்கினிமுகன்
எய்தியது ஆதியான்படை ;
மெய்தீரூயிர் மேவினான் யமன்;
செய்செயலோ? செயிர்த்தவாகு . 691
பொருள்
சிவப்படையை எய்தியவன் அக்கினிமுகன் ; எய்தியது சிவப் படை;
உயிரைக்கவ்வியவன் யமன்; விடுவானா?வீரவாகு.
யமன்பணி
ஏவினான் கணை தாவினான் யமன்
கூவினான் குரல் மேவினான் சிவம்;
ஆவி பற்றி, உடல்பற்றிப்
பாவினான் பசு; தேவமகிழ்வு. 692
பொருள்
யமனை வெல்வதற்காக வாகு கணை ஏவினான்;யமனோ அஞ்சி நடுங்கி
ஓடோடி வந்தான்;காப்பேன் உயிர்;கூவிய யமன் சிவலோகம் அடைந்தான்;
உயிரேழையும் பற்றினான்; உடலேழையும் பற்றினான்; உயிருடல்
சேர்ந்தது; தேவபூமியெங்கும் மகிழ்ச்சி.
நான்காம் நாள் பகல்
மூவாயிரவர் (சூரனின்மகன்கள் )
சூளுரைத்த மகன்கள்
சூரமன்னனை வாழ்த்தியவர்
வீரபூதரை, வேல்கந்தனை,
வீரம்விளை வியன்களத்தில்
வென்றிடுவோம், இன்றுகாண்நீ . 693
பொருள்
தந்தையை வணங்கிய மூவாயிரம் புதல்வர்களும் தந்தையே!
அந்தப்பூதப்படையை ,வேலுடைய கந்தனை, இன்றே போர்க்களத்தில்
கொண்றுகுவித்து.வென்றிடுவோம்; அவ்வெற்றியை இன்று நேரில்
தங்கள் பார்க்கப்போகிறீர்கள் ",என்றனர்.
படைசெல்லல்
நவவழித்தேர் எண்ணிலவே;
கவளக்கரி எண்ணிலவே;
இவுளித்தொகை எண்ணிலவே;
அவுணப்படை எண்ணிலவே. 694
பொருள்
நால்வகைப் படைகளும் ஆயிரம் ஆயிரம் அணிவகுத்துச்சென்றன;
மூவாயிரவரும் முன்சென்றனர்.
வெற்றிப்படை
மூவாயிரவர் முந்திநின்று,
தேவானவப் படையையெலாம்
சீவனற்ற நிலைவிரட்ட,
மூவாயிரவர் முதலாயினர். 697
பொருள்
வலிமைமிக்க அரக்கப்படை பூதர்களை களத்தின் முன்னே
சென்று தாக்கியது; தேவப்படையோ எதிர்கொள்ளமுடியாமல் வீழ்ந்தது;
மூவாயிரவர்ப் படையே வெற்றியில் முதல் நின்றது.
விசய பூதன்
இசையுறு தமரெல்லாம்
இரிந்துபோனபின் விசயனே ,தனி
வசையெனும்பகைக் கூற்றுவனாகித்
திசையெல்லாம் நசைகூட்டுவான். 698
பொருள்
புகழ்மிக்க பூதப்படையினர் அரக்கப்படையை எதிர்கொள்ள
முடியாமல் நலிந்துபோகக்கண்ட விசயன் என்னும் பூதத் தலைவன்
அரக்கப்படைகளைத் தான் ஒருவனாகவே எதிர்த்தான்; அவனது
போராற்றலுக்கு முன் நிற்கமுடியாமல் அரக்கப் படை பின்வாங்கியது.
வெறிப்போர்
கரங்களை அறுத்தான்;
கழல்களை வெட்டினான்;
உரத்திலே மிதித்தனன் ;
சிரங்களையும் அறுத்தான். 699
பொருள்
விசயனாகிய ஒருவனே அரக்கப்படைகளைக் கொன்று குவித்தான்;
கைகள்,கால்கள், வெட்டி வீழ்த்தப்பட்டன; மார்பிலே மிதித்தே மாண்டனர்
அரக்கர்;தலைகளை வெட்டிவீழ்த்தினான் அவன்.
தவமேன்மை
வீழ்ந்தவர் எழுந்தார்;
வெட்டுண்ட கரம்வளர்ந்தது ;
தாழ்ந்தமேனி தளிருற்றது;
தவத்தின் மேன்மை காண் . 700
பொருள்
விசயனால் வீழ்த்தப்பட்ட மூவாயிரவர்கள் இறந்து பட்டபின்னரும்
உயிர்பெற்று எழுந்தனர்; வெட்டப்பட்ட கை ,கால்கள் வளர்ந்தன; இது
அவர்கள் ஆற்றிய கடுந்தவத்தின் மேன்மையாகும் .
முருகனே தீர்வு
ஆறுமாமுகப் பிரானன்றி
ஆக்கம்தரும் துணையில்லை;
தேறினானே தீரவிசயன் ;
திருவடியை உன்னினானே. 701
பொருள்
இந்த நிலையில் நல்வழி காட்டக்கூடிய பெருந்தகை முருகனே ஆவார்;
அவரே துணை செய்வார்; என நினைந்த விசயன் மாமுருகனை மனத்தில்
நிறுத்திப் போற்றினான்.
படை அளித்தல்
மீளமீளத் தோன்றினானரோ!
மேவலர்தாம்; மீட்டது வரம்;
கேளிது நீ ! தளரேல்மனம்;
நீளாற்றல் நெடும்படைஇதோ ! 702
பொருள்
படப்பட மீண்டும்,மீண்டும் தோன்றுகிறார்களோ ! பகைவர்கள்.
அவர்கள் பெற்ற வரம் அவ்வாறு உதவுகிறது.விசய! கேள்! மனம் தளராதே.
ஆற்றல்மிக்க படையை உனக்கு நான் தருகிறேன்;பெற்றுக்கொள்! என்று
முருகன் அருளினார்.
அருள்முருகன்
வென்றிகொள்படை விசயனுக்குப்
பொன்றிடவே படையைவிடு!
என்றிவைபல உரைத்தேக,
ஒன்றினானே உலகமெலாம். 703
பொருள்
வெற்றியைத்தரும் படையை விசயனுக்கு அளித்து, இப்படையை
ஏவுக . என்று கூறி மறைந்தவர் உலகெல்லாம் உறைந்தார்.
மூவாயிரவர் அழிதல்
மாயவன்படை மற்றுமொருவன்
மாயிருள்படை