வெள்ளி, 23 ஆகஸ்ட், 2024

மகேந்திரபுரப்பரணி - 3

 சூரன் நிலை

எடுத்தனன் சிலை     ஏனைப்படை 

    கொடுத்தருளிய    தெய்வப்படை 

அடுத்த பல    தூக்கினான் 

    மடுத்தவாயெலாம்    மாப்பகடன்.                                                                                     551


பொருள்

எடுத்தான் சூரன்  சிலையை;  எனைப்படைகளையும்  தெய்வங்கள் கொடுத்து 

அருளிய  படைகளையும்  செலுத்துவதற்கு   முயற்சித்தான்.பலப்பல 

தூக்கினான்;செல்லும் வழியெல்லாம்  வெற்றி பெறும் சூரன்  இங்ஙனம்  

செய்தான்.


 அதிசூரன் போராற்றல் 

அதி சூரன்    அசுரேந்திரன்

    விதி கூவப்    பதி போற்றி 

மதி சூர    வதிபதிவழி 

    நீதி பலசேர்    கடல்படையுடன்.                                                                                     552

பொருள் 

...அதிசூரன் அசுரேந்திரன்  இருவரையும்   விதி  அழைப்பதால் பதியாகிய 

சூரனைப்போற்றி  அறிவுமிக்க சூரன்வழியிலே  நீதியை  நிலை நாட்டப்பெரும் 

படையுடன்  


உடனேகினர் 

இருள் கண்ணவர்    மருள் விண்ணன் 

    உருள் நன்னலம்     தெருள் மண்முறை 

அருள் விடுமனம்     பொருள் விடுகவி 

    உருவமென    உடனேகினர்.                                                                                             553


பொருள் 

அறியாமையே கண்ணாகக்கொண்டும், மருட்சியுடைய  விண்ணவர் 

போலவும், உருள்கின்ற  நிலை யடையவராயும்,உலகமுறையை  

மீறுபவராயும்,கருணையுள்ள மனமுடையவராயும் பொருளுக்கே  பாடும்  

கவிபோலவும் உருவம்பெற்ற கூட்டம்  உடனே  கிளர்ந்தெழுந்தனர் .

                                        சூரன்  வருகை 

அஞ்சுவேந்தன்    அரக்கன் படை

    வஞ்சுசூரன்    வடிவில் வரும் 

தஞ்சமெனத்    தாள் போற்றிடக்  

    குஞ்சரக்கழல்     குமரன் தான். .....                                                                                      554.

                                                                                     பொருள் 

களத்தில் உள்ளவர்கள்   கண்டு,அஞ்சுகின்ற   வேந்தன்,அரக்கன்,படையோடு 

வரும்,வஞ்ச எண்ணம் கொண்ட சூரன் ,  எதிர்த்தாற்போல் தன்னை  

ஆட்கொள்ள வரும்  முருகனின் தாளினை  மனதால்  போற்றினான். குமரனோ 

பாகுவைப்பார்த்தான்.

                                        முருகன்  தேரேறல் 

பாகுதனைப்     பார்த்தனனே 

    பார்வையால்         பரிகொள்தேர 

வாகையுடன்     வந்துநிற்கத்

    தோகையன்    தொட்டனனே.                                                                                                555.

                                        பொருள் 

மாமுருகன்  பாகுவை  நோக்கினான்; பாகுவோ, பார்வையின்   பொருளை 

உணர்ந்துகொண்டு, வெற்றி  பற்பலத்  தேடித்தரும்  முத்துமணித்தேரை 

முன்  கொணர்ந்து  நிறுத்தினான். அத்தேரில்  ஏறினான் மாமுருகன்.

                                            கடல்படை 

தேவர் பலர் ;   பூதர் பலர் 

    ஆவல் மால்    அயன் எண்மர் 

தூவல் மழை     மேவு கடல் 

    தாவலை போல்     தாவினரே.                                                                                                556

                                        பொருள் 

  பூதப்படை  கடல்போல்  காட்சியளித்தது.தேவர்களின்  கூட்டம்; பூதங்களின் 

கூட்டம்; ஆவலோடு  முதலில் நின்ற திருமால், பிரமன்,  எட்டுத்திசையின் 

காவலர்கள், இவர்கள்  அனைவரும் ஒருங்குநின்றனர்; காற்றில்  மோதும் 

கடலலை  போல்  பகைவர்  மீது  பாயத்  தயார்  ஆயினர்.

                                        போர்  துவங்கிற்று 

விளைந்தது சமர்    விண்ட தண்டம்

    வளைந்தன வில்    வடித்தன சரம் 

கிளர்ந்தன படை     மலர்ந்தன முகம் 

    தளர்ந்தே அடர்     தாக்கி மகிழ்!                                                                                            557

                                        பொருள் 

போர்  துவங்கியது.  கதைகள்  மோதிக்கொண்டன;வளைந்தது    வில்;

சரங்கள்  காற்றாய்ப்பறந்தன;எழுச்சியுடன்   முன்னேறிற்று  காலாட்படை'

வீரமரணம்  அடைந்தவர்களின்   முகம்  மலர்ந்தபடிக்   காட்சி அளித்தது.

காத்திருந்து  தாக்கு; தாக்கியே  மகிழ்வடை ; என்ற  நிலையில்  களம் 

காட்சியளித்தது.

                                        யானை ,குதிரைப்படைகள் 

 களி றாயிரம்    பிளி றொலியுடன்

    கரங்களிலே    திறம் அகற்றுவர் 

உளி விரல்நுனி    உடனடக்கிடும் 

    வளி பரி முரண்    வலியுடலரே.                                                                                            558

                                        பொருள் 

  மோதவரும்    ஆயிரக்கணக்கான  யானைகள்   பிளிறிக்கொண்டு  வரும்;

அவைகளைத்  தமது  வலிமைமிக்க   கரங்கைளினாலே  திமிரை  அடக்கி,

வலிமை  குறைத்து மறவர்  வெற்றிகாண்பர். காற்றுபோல்   பாய்ந்துவரும் 

முரண்கொண்ட  குதிரைகளின்   வலிமையைத்    தமது   உளி போன்ற 

விரல்நுனியால்  தாக்கி,அழித்து மறவர்கள்  வேற்று  காண்பர்.

                                        பூதப்படையின் வலிமை

மலைவீசி    நிலைகுலையச் 

    சிலை யெய்து    தலை யெடுத்துக் 

கொலைதனை    இயற்றியற்றிச்  

    சிலையரக்கரை    அலைக்கழித்தனர்.                                                                             559 

                                        பொருள் 

            பூதப்படையினர்   அரக்கர்கள்  மீது   மலைகளை  எடுத்து  

 வீசித்தாக்கினார். நிலைகுலைந்து  ஓடினர்  அவர்கள். அம்பெய்து 

அரக்கர்களின்  தலையைச்சீவி எடுத்தனர்; பகைவர்களை விடாது 

விரட்டி விரட்டி வீழ்த்தினார்;இவ்வாறு  அரக்கர் படையை  அலைக்கழித்தன 

பூதப்படை . 

                                        அதிசூரன் 

பூதப்படை     பெற்றவெற்றி 

    வேதனையால்     வெய்துயர்த்த

சூதத்தலை     அதிசூரன் 

    சேதப்படு     பூதப்படை .                                                                                                        560. 

                                        பொருள் 

பூதப்படை   பெற்றுவரும்   வெற்றியைப்  பார்த்து  வெறுப்பும்,வேதனையும் 

பெற்ற  அதிசூரன்  தனது  கவனத்தைப்   பூதப்படையினர்   மீது  செலுத்தினான்.

தேவப்படையைச் சின்னாபின்னம் ஆக்கினான்.

                                        அழி கள பலி 

அழித்தயர்வோன்     அதிவிரைவாய்ப்  

    பழிதனை     நீக்கிடவே 

செழுகள முனை    செலுத்தினான் தேர்

    அழிகள பலி     ஆக்கினான் சூர்.                                                                                           561

                                        பொருள் 

  பூதத்தேவப்படைகளை   அழித்தவன், அவர்களை  அயரவைத்தவன்,

அரக்கப்படை  மீது  வந்துள்ள   பழியை  நீக்குவதற்காகப்   போர்முனைக்குச் 

சென்றான்.அவனது  தேர்  அந்த  இடத்தை  அடைந்ததும்  அங்கே   அவ்விடத்தை 

ஆயிரக்கணக்கில்   பலி கொடுக்கும்  அழிகளமாக   அசுரேந்திரன்  ஆக்கினான்.

                                        உக்கிரன் போர் 

உக்கிரனெனும்     உயர்ந்த பல 

    சக்திகளைப்      பெற்ற பூதன் 

உக்கிரப்போர்    வக்கிரனுடன்; 

    அக்கிரமம்    அடி பணிந்தது.                                                                                                562

                                        பொருள் 

   அதிசூரனை  உக்கிரன்  என்னும் பூதப்படைத் தலைவன் எதிர்த்தான்.தெய்வ 

சக்திகள்  நிறைந்து விளங்கும்  பூதன் அந்த  தீயன்   அசுரேந்திரனுடன்  நீண்ட 

நேரம்  கடுமையாகப்  போர் புரிந்தான். முடிவில் அசுரேந்திரன்  அயர்ந்தான்.

                                        கதைப்போர் 

பலப்பல கணை    விடவிட மறை 

    நலச் சில படை     நலுங் எனக்குடி

பலச்சிவப்படை    பதிஅருள் சிவம் 

    இலை இனி வழி     எடு கதைப்போர்.                                                                                563

                                        பொருள் 

            இருவரும்  ஆயிரக்கணக்கான  கணைகளை  எய்து  அயர்ந்தனர்;

நலமிகு  தெய்வப்படைகளை  எய்திட   அவைகளும்  மறைந்தன;சிவப்படை 

வரை  சென்ற   அவ்விருவர் முடிவு  யார் பக்கமும்  வராததால்  முடிவாகக் 

கதைப்போருக்கு ஆயத்தமாயினர்.

                                        அதிசூரன் விழுந்தான் 

அதி சூரன்    அடித்த கதை; 

    அதைப்பற்றி     அவனை அடி 

விதி முடியவே,     விழுந்தனன் சூர் 

    அதி வீரன்.     உக்கிரன் தான்.                                                                                                 564

                                            பொருள் 

        அதிசூரன்  கதை   கொண்டு  உக்கிரனை த்  தாக்கினான்; அதே  கதையைப் 

பற்றிய  உக்கிரன் அரக்கனை  அடித்தான்;  விதியும்  கூடிற்று. அதிசூரன்  கீழே 

விழுந்து  மாண்டுபோயினன்.

                                        அசுரேந்திரன் 


தாரகன் மகன்     அசுரேந்திரன் 

    கோரச் சிலை     கொண்டு வந்தான் 

ஏரகத் தடி     இழிவ போல 

    வீர பூதர்     விரைந்தழிந்தனர்.                                                                                               565

                                        பொருள் 

            தாரகனின்    மகனாகிய   அசுரேந்திரன் கடுங்கோபத்துடன்  வில்லேந்தி 

வந்தான்; அவன்  களத்தில்   நுழைந்ததும்   ஏர்க்கலப்பை    அடியே  சிக்குண்ட 

புழு பூச்சிகள்  போல  வீரம் மிக்க  பூதப்படைகள்  யாவும் அழிந்துமாண்டனர்.

                                        அழிந்தனர்  பூதர்கள் 

கனக சிங்கன்     விசய தாண்டகன்

    கணக்கில்லா பூதப்படை 

தனதாற்றலால்     தாழ்த்தியவன்

    கனகப்பொடி     வீரமொய்ம்பால்.                                                                                        566

                                        பொருள் 

            அசுரேந்திரனால்  பூதப்படையே  அழிந்தது. கனகசிங்கன்

விசயதாண்டவன்  போன்றவர்களையும்  தனது  ஆற்றலால்  அழித்தான் 

அரக்கன்.  தங்கத்தின்  தூள்போன்ற  வீர  எண்மருள்   கடைசித்  தம்பி 

வீரமொய்ம்பன்  அசுரேந்திரனை  அழித்தான்.

                                        விரைந்தான்  சூரமன்னன் 

இருமகன்கள்     இறந்தநிலை 

    இருண்டமன     விருளரக்கன் 

அருங்களத்தே     அனைவரையும்

    அழித்திடவே     விரைந்தான் சூர்.                                                                                        567

                                        பொருள் 

  போர்க்களத்திலே  தனது  இருமகன்களையும்   இழந்த  இருண்டமனம் 

கொண்ட  காரரக்கன்  களத்தே    காண்பவரை எல்லாம்    அழிக்கும் 

நோக்கத்துடன்  விரைந்து  வந்தான்.

                                        சூரனோடு போர் 

வஞ்சகனது     வார்சிலையொலி  

    அஞ்சவைத்தது     அகிலமதை ;

விஞ்சு பூதர்     விரைந்துவந்தே 

    மஞ்சு நீரெனப்     பொழிந்தனர் சரம்.                                                                            568

                                        பொருள் 

வஞ்சகனாகிய   சூரனின்  வில்லொலி  மூவுலகத்தையும்  அஞ்சவைத்தது;

காலத்தே  நிலைத்த  பூதப்படை  விரைந்துவந்து  சூரன் மீது  மழை  நீரெனக் 

கணைகளைப்  பொழிந்தது.

                                        நூற்றெட்டு  பூதர்  தோற்றனர் 


பத்ர பதுமன்     மந்தவ்யாக்ரன்

        சித்ராங்கன்     சிங்க சோமன்

முத்ரத்தலை     நூற்றெண்மர் 

    வித்தகனிடம்     வலி யிழந்தனர்.                                                                                          569

                                        பொருள் 

பாத்ரபதுமன், மந்தன் ,வ்யாக்ரன், சித்ராங்கன், சிங்கசோமன்  முதலிய 

நூற்றெட்டு  பூதத்தலைவர்கள்  சூரனிடம்   தோற்றோடினர்.

                                        எண்மரும் வீழ்ந்தார் 

நவவீரரருள்             தவஎண்மர் 

            சிவவரத்தான்             சிலையினடியே 

அவமெனவே             அடங்கிநின்றனர்;

            சிவமகனருள்             மயங்கிவீழ்ந்தனர்.                                                                 570.

                                        பொருள் சூரனை  ஒன்பது  வீரருள்  எட்டு  வீரர்கள் 

எதிர்த்தனர். சிவா வரம் பெற்ற  சூரனது   வில்லாற்றல்  அவர்களை  அடக்கிக் 

கிடத்தியது.முருகன்  அருளால்  மயங்கி  வீழ்ந்தனர்;உயிர் நின்றது.

                                        வீரவாகு  சூரன்   போர் 

வீரவாகு             வீரஒலி 

            வீரத்தேர்             சூரனெதிர் ;

தீரவொற்றனோ             தீர்ந்தாயினி ;

            தீராச்சினம்             சூரசொல்லில் .                                                                             571.

                                        பொருள் 

            தனது  வீரத்தேரோடும்,வீர   ஒலியோடும் சூரனுக்கு  முன்னால் சென்றார்.

ஓ ! தீரத்தூதுவனோ !இன்றே   அழிந்தாய்!குறையாத  சினத்தோடு  சூரன் 

கத்தினான்.

                                        சினவழுகைச்சூரன் 

மாகேந்திரம்             தூமமாக்கினை !

            மாநாற்படை             வீணழித்தனை !

மாசில்தமர்             மாளவைத்தனை !

            மாண்புதல்வன்             மண்ணாக்கினை!                                                             572.

                                        பொருள் 

            எமது   மகேந்திர நகரை  எரித்தாய்! நால்வகைப்  படைகளையும்  

 அழித்தாய்!  குற்றமற்ற  உறவினர்களை  வீழ்த்தினாய்! எனது   புதல்வனையும் 

அழித்தாய்!

                                        சூரனின்  சீற்றமொழி 

நினதுயிரைப்             யமனதாக்கி,

            நினதுவீரம்             எனதடிவிழ 

நினதுதூது             நிலத்தடியே 

            நினதெதுவும்            நில்லாவே.                                                                                  573.

                                        பொருள் 

தூதனே!உன்னுடைய   உயிரை  யமனுக்களிப்பேன்; உனது  வீரத்தை எனது 

கால்களில்  பணியவைப்பேன்; உனது  தூதினை மண்ணுக்குள்  புதைப்பேன் ;

உன்னுடையது  என  எதுவும்   இவ்வுலகில்   இனி  இருக்காது. 

                                        இன்றே  இறுதிநாள் 

வந்திடுவாய்,            தூதனாய்;

            தந்திடுவேன்             தண்ணுயிர்தான் ;

முந்திப்போர் அந்திமாண்டாய்;

            இந்தநாளோ             இறுதிகாண்பாய் !                                                                 574.

                                        பொருள் 

        எந்நாட்டிற்குத்     தூதனாய்  வந்தாய்; அதனால்  உன்னைக்கொல்லாமல் 

உன்னுயிர்  தந்தேன்; முந்தைய  போரிலோ  மகனிடம்  சற்றே   மாண்டாய்;

இந்தநாள்  உனது  இறுதி  நாள்; என்றான் சூரன்.

                                        வீரவாகு  விடை 

சினவுரைக்குச்             செவிசாய்க்காச் 

            சீரிளையோன்            செவ்வேளின் 

மனமறிந்த             மாவடிநான் .

            மனநிறைபோர்          ஆற்றுக நீ .                                                                                575.

                                        பொருள் 

            சூரனின்  சினம்கலந்த  பேச்சிற்குச்  செவி சாய்க்காத  வீரவாகு, 

மாமுருகனின்   மனமறிந்து   பேரடிமை   நான். அவரெண்ணப்படியே 

நடக்குவன்.உனது   மனமகிழ்வில்  செம்போர்   ஆற்றுக   நீயே,  என்றான்.

                                        படைஇயக்கல் 

கோடிகோடியாய்த்             தொல்லம்பு;

            தேடிதேடித்             திளைத்தவிருவர் 

நாடிநாடித்             தெய்வப்படை,

            சாடிசாடிச்             சொல்படையுமே.                                                                         576.

                                        பொருள் 

        கொல்கின்ற   அம்புக்கூட்டங்களைக்   கோடிகோடியாயெய்தனர்.

சரங்களைத்  தேடித்தேடி  விடுத்தனர்;தெய்வப்படைகளை  நாடி வணங்கிச் 

செலுத்தினர்;இடைஇடையே   சொல்லாலும்  சாடி க்கொண்டனர். 

                                        சூரன்மேல்  படும் படைகள் 

கொடுந்தீயோன்             மேல்படும்சரம் 

            படும்படும்தொறும்             பொடிபட்டன;

முடிந்திட்டன;            முறிந்திட்டன;

            மடிந்திட்டன;            சரிந்திட்டன.                                                                              577.

                                        பொருள் 

            சூரனின்  மேல்  வீரவாகு  எய்யும்  அம்புகள்  சரங்கள், தெய்வப்படைகள் 

எல்லாம்  பட்டவுடன்  பொடியாயின;முடிவைப்பெற்றன; முறிந்திட்டன;

இற்றுப்போயின;சரிந்து விழுந்து நொறுங்கின.

                                        சிவப்படை 

வரவலிமை             எனவுணர்ந்த 

            வீரவாகு             சூரன்மேல் 

அரன்படைதனை             வழிபட்டே 

            அருங்கூற்றை             ஏவினானே .                                                                             578.

                                        பொருள் 

            சூரனின்  வரத்தால்  பெற்ற   வலிமையை  உணர்ந்த   வீரர் ,அவன்மேல் 

சிவப்படையை வணங்கி,வழிபட்டு அருங்கூற்றென   ஏவினார்.

                                        எதிரெதிர் சிவப்படை 

அருஞ்சிவப்படை             வருவதுகாண் 

            அரக்கனுமே             அடல்மாப்படையை 

அருச்சித்தே             தொடுத்தனனே ;

            இருபடைகளும்             எதிரெதிரே .                                                                           579.

                                        பொருள் 

        வீரவாகு  விட்ட  சிவப்படையைக்கண்டு  சூரனும்,அந்த  உயரிய சிவப் 

படையை வழிபட்டு விடுத்தான்;  இரு படைகளும்  எதிரெதிர்  நின்றன.

                                        கதித்தவர்  கரமடைதல் 

எதிர்க்கவியலா             முதுபடைதாம் 

            எதிரெதிராய்             முதிர்முதிராய் 

புதிர்ப்புதிராய்             ஆடியபின்னர் 

            கதித்தவரின்             கரமடைந்தன.                                                                         580.

                                        பொருள் 

        தம்மையே  தாம்  எதிர்க்க  இயலாத  தன்மையில்  இரண்டும்  எதிரெதிரே 

நின்றபடி, முதிர்ச்சி பெற்றும், புதிராய்   நின்றும், ஆடியபின்னர்  எய்தவர் 

கரத்தையே   அடைந்தன.

                                        அவுணச்சரம் 

வெகுண்டவுணன்             வேறோர் சரம் 

            வெகுளியாக்கை             பல்துளியாய்ப் 

பகுபாடு             படுத்தும்நிலை 

            தொகுத்தவன்             விட்டிட்டான் .                                                                         581.

                                        பொருள் 

        மிகுந்த  சினம் கொண்ட  அவுணன்  யாக்கையைப்   பல கூறாக்கிப் 

பாடுபடுத்தும்  நிலையற்ற  சரத்தைத்    தொகுத்து  விட்டான். 

                                        கதைப்போர் 

விட்டசரம்                தடுத்தவனை,

            வெறிகொண்ட             சூரனவன் 

மட்டில்லா              மாக்கதையை 

            மார்புநோக்கி              அடித்தானே .                                                                        582.

                                        பொருள் '        பலமுறையும்  தன்விட்ட சரங்களையெல்லாம் 

தடுத்து  நிறுத்திய  வாகுவின்மீது   வெறிகொண்ட   சூரன்  வலிமிக்க 

பலம்மிக்க  கதை  ஒன்றால்  வீரனின்   மார்பில்  அடித்தான்.

                                        தடுப்பினும்.... 

வெங்கதையை             வீழ்த்திடவே 

            செங்கதையைச்             செலுத்தினாலும்,

அங்கதை யதை             நீறுசெய்தே 

            அவன்மார்பில்             அடித்ததம்மா!                                                                         583.

                                        பொருள் 

        சூரன் எறிந்த  கதையைத்  தடுத்திட,வீரன்  நல்ல  மற்றொரு கதையை 

வீசினான் ;ஆயினும்  சூரனின்கதை  அதைப்  பொடியாக்கிவிட்டு, வாகுவின் 

மார்பில்  அடித்தது. 

                                        வாகு வீழ்ந்தான் 

தாழ்ந்தவீரன்             தளரியாக்கை 

            வீழ்ந்தனனே             வீரியல்புடன்;

ஆழ்ந்தமனம்             ஆறுமுகம் 

            தாழ்ந்தமணி             வீழ்ந்ததம்மா!                                                                             584.

                                        பொருள் 

        வீரவாகுவின்  யாக்கை  தளர்ந்தது; தாழ்ந்து  வீழ்ந்தான்; 

வீரத்தன்மையுடனே  வீழ்ந்தான்; ஆறுமுகத்தை  மனமெல்லாம்  நிறைத்து 

வைத்திருந்த மணி  நிலத்தில்  சாய்ந்தது.  அந்தோ!

                                        மனமாற்றம் 

ஆறுமுகனோ             அறிந்தநிலை 

            சூரன்முன்                தேர்செல்க!

வீறுற்றதேர்             விரைந்ததுகளம்  ;

            மாறுற்றான்             மனமாற்றம்.                                                                                 585

                                        பொருள் 

            வீரவாகுவின்  நிலையை உணர்ந்த  ஆறுமுகன்  தேரைச்சூரன்முன்  விடுக 

விரைந்தது   தேர். களமும்  மாறிற்று;பகைவனும்  மனம்  மாறியவனானான் .

                                        புது ஞாயிறு 

வேண்டியோ?            வேண்டாவோ?

            பூணொளிப்             புதுஞாயிறு 

வீணிருளை             விலக்கியபடி,

            மாண்புற்றது             மதிமுகம்.                                                                                     586.

                                        பொருள் 

            மாற்றான்  வேண்டினானோ?வேண்டவில்லையோ? தேரிலே   நின்ற 

நீளொளியும்  புதுஞாயிற்றின்   தோற்றமும், தேவையற்று  இருந்த   இருளை 

நீங்கியதால்  முருகனின்  மதிமுகம்  மாண்புற்றது.

                                        சூரன்  காணல் 

கண்டானே             கந்தமுகம்;

            உண்டானே             உயிரோவியம்;

குண்டலமணிக்             காதுகண்டான்;

            தண்டையொலிச்             சேவடியும்தான்.                                                            587.

                                        பொருள் 

            சூரன்  களத்தில்    தன்னை நோக்கி  வரும்  கந்தனின்  திருமுகத்தைக் 

கண்டானே . ஓவியம்  உயிரோடு    வருவதுபோன்ற  காட்சியை  மனதில் 

உண்டானே .குண்டலமணிகள்  ஆடும்   காதைக்கண்டான்;தண்டையில் 

ஒலிக்கும்  ஒளிகொண்ட  சேவடியையும்  கண்டான். 

                                        கசடு  மாறா 

கண்டகண்கள்             கசடாற்றா ;

            பண்டுபெருமை             நின்றுபோற்றும் ;

கண்மாயம்             காட்டினானோ?

            கண்டவனோ             மாறவில்லை.                                                                         588.

                                        பொருள் 

        கருணை  பொழியும்  கண்களைக்  கண்டுவிட்டால்  தீய நோக்கே  வராது.

தொன்மை  வாய்ந்த  பெருமையைக்    காலமெல்லாம்  போற்றும். இவன் 

என்னை  மாற்றக்   கண் மாயம்  செய்தானோ? குரங்குமனம்.  கண்டவன்  

மாறவில்லை.

                                        மாறான் சூரன் 

மாயத்தால்             மயங்குவேனோ?

            தேயத்தார்             தெற்கடைய ,

ஆயதூது             ஆவிவிட்டிட ,

            நேயமாக             நெறிமாற்றமோ?                                                                             589

                                        பொருள் 

            சூரன்  நான்   மாயத்தால்  மயங்குவேனோ? என்னைச்சார்ந்தவர்கள்  

போரில்   இறந்துபட்டது     யாரால்? நான்மறப்பேனோ?  தூதுவந்தவனும்  

ஆவியை விட்டுவிட்டானே ;இனி  நேயம்  தேவையோ? நான்  நெறி  

மாறமாட்டேன். என்று  மனதுள்  நினைத்தான் சூரன்.

                                        சூரன்  சீறல் 

என்னோடு             இகல்புரிய 

            உன்தந்தை,            நான்முகன்,மால் 

எந்நாளும்             ஏற்கமாட்டார்;

            சின்னவன் நீ             சீரறியாய்!                                                                                    590

                                        பொருள் 

            என்னுடனே   போராற்றிட  உன்  தந்தை,நான்முகன்,  திருமால்  

ஆகியோர்  ஒருபோதும்   விரும்பமாட்டார்; நீ  மிகச்சிறியவன்; நன்மை தீமை 

அறியமாட்டாய் .என்று சீறினான்.

                                        சின்னவன்  உன்னலை 

உன்னலை நீ             என்வரத்தியல் ;

            உன்னலை நீ             என்யாக்கை;

உன்னலை  நீ             என்படைத்திறன் ;

            சின்னவன்   நீ               சமர்வந்தாய் ?                                                                        591.

                                        பொருள் 

            சின்னவனே!  இத்தன்மையால்   என்னோடு   போருக்கு   வந்தாயே!

எனது   வரப்பெருமைகளை  எண்ணிப்பார்த்தாயா?  எனதுவலிமை  மிக்க 

அழியா  யாக்கை பற்றி  எண்ணினாயா?எனது  பரந்துபட்ட   படைகளின் 

திறனைப்பற்றிச்   சிந்தித்தாயா? என்றும்  கூறினான்.

                                        சூரன் அறைகூவல் 

விண்ணார்ந்த             வியன்கடவுளர் 

            பண்ணார்ந்த             பார்வதியாள் 

கண்ணார்ந்து             இரங்கிநிற்க ,

            என்னொருசிலை             உன்னுயிருணும்                                                                 592

                                        பொருள் 

        வானத்தே   வாழும்  தேவர்களும்,  கடவுளரும்,  பண்ணால்   போற்றப்படும் 

பார்வதி  தேவியாரும், கண்கலங்கி  அழுதுபுலம்பிட  என்னுடைய    ஒரு 

கணையே   உனது  உயிரை  உண்டுவிடும். பார்க்கிறாயா?  என்று  அறைகூவல் 

விடுத்தான்.  

                                        குரு  உபதேசம் 

அருவுருவாய்               ஆறுமுகன் 

            ஆணவமாம்             சூரனுக்கே ,

திருவாயால்             தெய்வமொழி 

            குருவடிவாய்             மொழிந்தனனே.                                                                        593.

                                        பொருள் 

            அருவமாயும்,  உருவமாயும்,  அருவுருவமாயும்   விளங்கும்    ஆறுமுகன் 

ஆணவம் கொண்ட  சூரனுக்கே   தமது   திருவாயால்  தெய்வமொழியாகக்  

குருவடிவாய்  நின்று   உபதேசம்  மொழிந்தார்.

                                        நெற்றிக்கண்  சுடர் 

முக்கண்ணனின்             முதுசிறுபொறி 

            மூவுலகும்             அழிக்கவல்லது;

அக்கண்ணின்             அடுசுடர்ப்பொறி 

            எக்கணமும்             உனையழிக்கும்.                                                                         594.

                                        பொருள் 

            மூன்றுகண்களை  உடைய  சிவபெருமானின்  நெற்றிக்கண்ணில் 

தோன்றும்  சிறுபொறி   மூன்று  உலகத்தையும் அழிக்கவல்லது. அக்கண்ணில் 

தோன்றிய அதே  சுடர்ப்பொறி  உன்னை  எந்தநேரமும்  அழிக்கும்.  இதை நீ 

மறந்துவிடாதே. என்கிறார்  முருகன்.

                                        சிறியோர்  எல்லாம்  சிறியர்   அல்லர் 

வெஞ்சமரை             விளைவிக்க,

            விறல்வலிமை             வழிவகுக்கும் ;

அஞ்சுபெரியர்             மஞ்சுசிறுவர் 

            விஞ்சவேண்டா             வேறுபாடு.                                                                            595.

                                        பொருள் 

        பெரும்போரை  விளைவிக்க   வீரமே வலிமையே   வழி  வகுப்பன;

அவ்வீரத்தில்  சிறியவர்,பெரியவர்  என்ற  வயதிற்கு  வேறுபாடு தருவது  

இல்லை;அவ்வேறுபாடும் வேண்டாம். அவரவர்  ஆற்றலே  வீரத்தை  வழி 

வகுப்பது ஆகும்.  இதை  நீ    உணர்ந்துகொள்! என்றும்  கூறினார்.

                                        நாமே  அழிப்போம் 

நூற்றெட்டு             யுகம்தாண்டிப் 

            பேற்றுடனே             வாழும்வலி 

தேற்றமுறாச்             சிறியநாமே 

            தெற்றெனவே             அழிப்போம்காண் .                                                             596.

                                        பொருள் 

            நூற்றெட்டு  யுகங்கள் தாண்டி  வாழும்  ஆற்றல்   கொண்டவன்  நான்;

என்று  பேறு ,வலிமை என்றெல்லாம்  பேசும் பேறு பெற்ற   உன்னை, உன்னால் 

சிறியன் என்று  சொல்லப்படும்  நாமே  விரைவில்  அழிப்போம், அதையும் 

பார்க்கப்போகிறாய்  நீ, என்றார்.

                                        கூறுபடு 

நூறுநூறு             மாறுமாறு 

            சீறுசீறு             வேறுவேறு 

ஆறுஆறு             தேறு தேறு 

            கூறுபடு             அறுமுகக்கரம் .                                                                                597.

                                        பொருள் 

        நூறு  யுகவாழ்வு   என்பது  நொருங்கிப் போய்விடும். உன்குணத்திலிருந்து 

நீ   உடனே மாறிவிடு. (மற்றொருபொருள்) நீ  மாறாவிடின்  உன்னை  மாற்றும் 

ஆறுமுகம். வீரத்தில்  வேகம்  காட்டு; சிறுமை  கண்டவிடத்தில்   சீறுவாய்.

வேறுபடவைக்கும்  நிகழ்வுகளில்  நீ    வேறுபடு,   ஆறுமுகம்   கண்டு  ஆறுதல் 

அதை. ஆறுமுகம்  உனக்கு   வழியாகும். ஆய்வு செய்!  ஆய்ந்தபின்  முருகேனே 

வழி  எனத்  தேர்வுசெய். முருகப்பணிக்கு  அடிமை  ஆகு. இவை   யாவையும் 

விளக்கி  நல்வழி  காட்டுவது   ஆறுமுகக்கடவுளின்   அஞ்சேல்   என்னும் 

அழகுக்கரங்களே   ஆகும்.

                                        போர் 

வீரனவன்             விட்டிட்ட 

            வீறுசரம்             வெவ்வுடல்படச் 

சூரமலை             மேலுற்ற 

            ஊறூசி             போன்றதம்மா!                                                                                    598.

                                        பொருள் 

            இந்தநிலையில்  இருவருக்கும்  போர்  துவங்குகிறது.  வீர முருகன் 

ஏவுகின்ற  கணைகள்  எல்லாம்  சூரன்மீது   பட்டுப்பட்டு  இருந்து விழுகின்றன;

மலையின்  மீது  பட்டு  ஒடிந்து,சிதைந்து  விழும்  ஊசி  போல்  அம்புகள் 

பயனற்று  விழுந்தன.

                                        தெய்வப்படைகள் 

ஈசன்படை             மாசில்படை 

            காசில்படை             பூசிமாற்றும்;

கூசுகதிர்             தேசுபுகழ் 

            வீசுவெற்றி             ஆசிநல்கும் .                                                                                   599.

                                        பொருள் 

            யாராலும்  எதிர்கொள்ளமுடியாத    சிவப்படையை   ஏவியகாலை 

அது  அக்குற்றமற்ற   படை,  தூய்மையான  படை   சென்றது; அவனுடல்   பட்டுத் 

தடவி  அவனது உடலை  மேம்படுத்தும்; அதனுடைய   ஒளிமிகுந்த  சுடரும்,

மிகவுயர்ந்த புகழும் ,அதனுடைய  மாறாத  வெற்றியும்  ஒன்றாக  இணைந்து 

அவனுக்கு  ஆசிகளை  வழங்கும். என்னே!  வியப்பு!

                                        வேறு படைகள் 

காற்றின்படை             கனலின்படை 

            கூற்றின்படை             கதிரின்படை 

சீற்றமுடன்             சூரன்மேவி,

            ஏற்றமின்றி            இறந்துபட்டன.                                                                             600.

                                        பொருள் 

            சூரன்  மீது  ஏவப்பட்ட  காற்று,கனல்,கூற்று,கதிர்    ஆகிய  தெய்வப் 

படைகள்  எல்லாம்  வலுவிழந்து, விழுந்து,பயனற்றுப் போயின. 

                                        சூரனது   இயலாமை 

தேரிழந்தான்;            வில்லிழந்தான்;

            ஊரிழந்தான்;            பேரிழந்தான்;

தாரிழந்தான்;            எரிழந்தான்;

            சீர்மாமுடி             இழந்தான்சூர் .                                                                                  601.

                                        பொருள் 

            நீண்ட  காலை  போர்புரிந்த  சூரன்   கொஞ்சம்  கொஞ்சமாக  தனது 

வலுவை  இழக்கத்  தொடங்கினான்.தேரை  இழந்தவன்,வில்லையும் 

இழந்தான்;+

                                        நித்திலன் புகழ் 

பாரிழந்திடு             மன்னன்போல் 

            படிமீது             நின்றவன்தான் 

சீருடைவேல்             செம்மல்புகழ் 

            சீர்தூக்கிப்             போற்றினானரோ .                                                                        602.

                                        பொருள்  

எல்லாம்  இழந்த  சூரன்   உலகையே  இழந்துவிட்ட    மன்னன் போல் 

தரையிலே  நின்றுகொண்டு நிமிர்ந்து   பார்த்து   மாமுருகனைப்    

புகழத்தொடங்கினான். 

                                        நஞ்சுகுணம் 

நஞ்சுகுணம்             நான்முகப்படை 

            நலிந்தே              எறிந்ததுவே;

கஞ்சக்கர             வேற்படையோ 

            கண்டத்தால்             விழுங்கியதே.                                                                            603.

                                        பொருள் 

            வேலன்   புகழ்  போற்றிய   மனம்  மாறியது;நஞ்சுகுணம்    

தலைதூக்கியது . முருகன்  மீது  பிரும்மாஸ்திரம்    என்னும்    நான்முகப் 

படையை  ஏவியது.முருகனின்   தாமரைபோன்ற  கரத்திலே  இருந்த  

 வேற்படை    அதனை   அப்படியே   விழுங்கியது.

                                        திருமால்படை 

விழுங்கிடவே,            வெய்துயிர்த்துச் 

            செழுங்கடல்மா             தவப்படையை 

வழுத்தினானே;            வடிவேலும் 

            வாய்க்குள்ளே             அடக்கியததை .                                                                        604

                                        பொருள் 

            வேல்  விழுங்கியதைக்  கண்ட  சூரன்   வியப்பும்  துயரும்  அடைந்து,

திருமால்  படையை  வணங்கி  ஏவினான்;வடிவேலா     அதையும்  தன்வாயால் 

கவ்வி  வாய்க்குள்  அடக்கியது.

                                        சிவப்படை 

வரமருள்சிவ             வரமிகுபடை 

            பரமெனவே             பணிந்துபோற்றிச் 

சிரமதையே             கொய்யவேண்டி 

            விரைந்தே             விடுத்தனன் .                                                                                    605.

                                        பொருள் 

            தனக்கு  மனம்  நிறைந்த  வரங்கள்   வழங்கிய   சிவனின்  மாப்படையை 

இறைவனாகக்  கருதி,  அருச்சித்துப் போற்றி,பகைவன்  தலையைக்   கொய்து 

வருக என விடுத்தனன்  .

                                        சிவகுகன் 

எந்தைப்படை             எனைநோக்கிச் 

            சிந்தைமகிழ்             செங்கரத்தால் 

முந்தைமுதிர்             முதல்படையைத் 

            தந்தருள்போல்             பற்றிபோற்றினான்.                                                             606                                                                     

                                        பொருள் 

            விரைந்துவரும்   சிவப்படையைப் பார்த்த  முருகன்    எனது  தந்தையின் 

படை,   என்னை   நோக்கி   வருகிறது;  என  நினைந்து மகிழ்ந்து   வணங்கி 

அதனைத்  தனது செங்கரத்தால் பணிவோடு  பற்றினான்.சிவனே  குகனானான் 

                                        நல்லுரை 

தானெனும்சூர்             தனி நின்றது;

            வானெனும்வேல்             தேனுரைத்தது ;

வானவர்சிறை             வளமகன்குறை 

            பாநல ,வீர்             மொழியேற்கலை !                                                                    607.

                                        பொருள் 

ஆணவச்சூரன்     மட்டும்  தனியே நின்றான்; வான்போல்   பெருமையுற்ற  

வேலவன்  தேனன்ன  மொழியில்  கூறினான்; வானவர் சிறை விடு   !    

இந்திரன்.அவன்மகன்  குறை போக்கு! வீரவாகுவின்   மொழியைக் 

கேட்கவில்லை.  

                                        சிவன்  ஆணை 

சிறைமீட்கச்             சிவனாணை ;

            படையெடுத்தோம்             கடைஇளவல் 

அறைபடுமுறை ;            அம்முறைப்படி 

            அழித்திடவே             அணுகினோம் .                                                                         608.

                                        பொருள் 

        தேவர்களைச்சிறை     மீட்குமாறு  சிவனாரின்  ஆணை; அதனால்   படை 

எடுத்தோம். தாரகனாம்  இளவலை அழித்த  முறையிலேயே  அழித்திட 

நினைத்தே   மகேந்திரம்  அணுகினோம்.   

                                        அழித்திடுவோம் 

ஆணவமாம்             அத்தனையும் 

            அறவிழந்து             வறியனானாய் !

போனதாரகன்             போலுன்னை 

            போக்கிடத்தடை             ஏதுமில்லை.                                                                        609

                                        பொருள் 

            ஆணவத்தால்   அத்தனையும்   இழந்து    வறியன்   ஆகிவிட்டாய்;

தாரகனைப்   போலவே  உன்னையும்   அழித்திடத்   தடை  எதுவுமில்லை.  

                                        இறுதி  ஆணை 

தேவர்சிறை             விட்டிடுதி!

            ஆவிபெற்றே             மேவிடலாம்;

காவாக்கொளின்             காலன்வழி 

            நோவாதே             நினையடையும்.                                                                            610

                                        பொருள் 

  இறுதியாக  இதனைக்கேள்!    தேவர்களைச்     சிறையிலிருந்து  விடுவிப்பாய்!

நீயும்  உயிர்பெற்று வாழலாம் . இல்லெனின்    காலன்   உன்னைத்    தேடி 

வருவான் .என்றார்   முருகன்.  

                                        மாய  உருவம் கொண்டான் 

மாற்றினுமே             மாறாத 

            கூற்றத்தான்             கொண்டிட்டான் 

மாயவுருவம் ;            மறைந்திட்டான்;

            மற்றுமொரு             போர்வேண்டி .                                                                             611

                                        பொருள் 

        அன்பருள்   காட்டி  மாற்றினாலும்  மாறாத  கூற்றம்போன்ற    அரக்கன் 

மாயவுருவம்  தரித்துக்கொண்டு    மறைந்துவிட்டான். மீண்டும்   ஒருபோரை 

விரும்பிச்  சென்றிருப்பானோ!  

                                        அருட்குணம் 

மறைமுயல்வை             மன்னுயிரில் 

            உறைநாயகன்             உணர்ந்தபோதும்,

குறைவோனுடல்             கொள்ளாதே 

            நிறைவடைவான்             என்றெண்ணினான்.                                                      612

                                        பொருள் 

        அரக்கனின்  மாய  எண்ணத்தை உயிர்தோறும்  உறைந்திருக்கும்  

தலைவன்     அறிந்திருந்தும்,அவனுயிரைக்    கொள்ள நினையாது,

நல்லோனாய்  மாற  மேலும்  ஒரு  வாய்ப்பு  கொடுப்பான்போல  விட்டுவிட்டான். 

                                        அறவழி 

அயன்மால்பிறர்            அரக்கனழி 

            சயம்கூறச்             சண்முகமோ 

தயவாலிலை              தருமமேஅது ;

            சயமும்வரும்             சால்பும்வரும் .                                                                         613                                                                           

                                        பொருள் 

  பிரமன்,மால், பிற தேவர்கள்  எல்லோரும்   ஓடிப்போன  அரக்கனை  அழிப்பதே 

நமக்கு வெற்றியாகும்  என்று கூற,  முருகனோ,  அவன்மீது    கருணையால் 

கூறவில்லை;  அறவழி  அது  ஆகாது. அவன் செல்க; சால்பு வழிநிற்றலே 

சயத்தை  அளிக்கவல்லது.  என்றார் .

                                        சூரன் துயர் 

சாரதப்படை             மாரதனூர் 

            சீரழித்துப்             பேரழித்துத் 

தீரரக்கர்             திறனழித்துச் 

            சூரமனம்             ஈரமாக்கினர் .                                                                                614.

                                        பொருள் 

        பூதத்தேவப்படையினர்  சூரனூர்   சென்று தீயிட்டனர்;உடைத்தனர்;

நகரைச்சீரழித்தனர்;பெருமை  அழிந்தது; வலிமை  மிக்க   அரக்கர்கள் 

திறனழிந்து நின்றனர்; இவைகளைப்    பார்த்த  சூரனின்   மனம்  கண்ணீர்  

விட்டது.

                                        பானுகோபன் வருகை 

பானுகோபன்             பாங்கறிந்து,

            வான்புகழோன்             கூன் நிலையில் 

தான்சென்று த்             தயவுவேண்டிடக் 

            கோனவனும்             குளிர்ந்துசொன்னான் .                                                        615.

                                        பொருள் 

        பானுகோபனும்   சூரனின்  மனம்  அறிந்து, வானளாவிய   புகழுடையவன் 

இன்று  தாழ்நிலை அடைந்த நிலையில்  தானே சென்று  பார்த்தலே சிறப்பு 

என்று  கருத்திச்சென்றான்.சென்றவன்   வணங்கித்    தான்  ஆற்றவேண்டிய 

பணிகள்  பற்றி வினவ , சூரனும்  மகிழ்ச்சி  அடைந்தவனாகிச்  சொன்னான்.

                                        மகனுக்கு  வேண்டுகோள் 

பற்பலப்படை             வெற்றிவீரன் 

            மற்றவனை             வெற்றிகொள்ளல் 

எற்றிறமே;            சொற்றூதன் 

            பொற்புதனை             போக்கிடுநீ .                                                                        616.

                                        பொருள் 

        பலப்பல  போர்களில்  வெற்றிகண்ட  முருகனை வென்றிடவே  நான் 

முனைகிறேன். அந்த  தூதுவன்   அவனுடைய  வெற்றியை  நீ   அழித்துவிடு !

அது  போதும்.   என்றான்  சூரன்.

                                        விதி தொடருமே 

மட்டில்லா              மகிழ்வோடு 

            தொட்டிடுவாய்             நாளைப்போர் ,

இட்டமுடன்;            மகன்செல்ல ,

            திட்டமுடன்              விதிதொடர்ந்தது .                                                                    617

                                        பொருள் 

            அளவுகடந்த   மகிழ்ச்சியோடு தந்தையே!  நாளைப்போர்   தொடர்க!

உனது  விருப்பமும்  நடக்கும்;  எனது  விருப்பமும்  நடக்கும்  என்றபடிப் 

பானுகோபன்  செல்லக்   கூடவே தனது  விருப்பம்  நிறைவேற  விதியும் 

நடந்தது.

                                            மூன்றாம்  நாள் போர் 

                                            பானுகோபன் போர் 

                                        மாயையிடம் வேண்டுதல் 

உதிவான         இரவிகண்டு         உடனெழுந்த         சூரமகன் 

விதியான         செயல்முடித்து         மதிமாயைத்         தாள்தொழுது 

பதிதூதன்         படைமுன்னே           பலியானேன்;        பழியேற்றுக் 

கதியற்றுக்         களம்விட்டுக்         கரந்துவந்தேன்         காத்திடுவாய்!                618,

                                        பொருள் 

        வானத்தே   உதித்த  ஆதவன்  கண்டு,எழுந்து, காலைக்கடன்களை  முடித்த 

பானுகோபன்,  தனது  பாட்டியான   மாயையை நினைந்து,வணங்கி,

போரிலே  வீரவாகு  என்னும்  தூதுவனிடம்  தோற்றுப்போனேன்; பழிக்குப் 

பலியான  நான் யாருமற்ற  நிலையில்  களத்தை   விட்டு  மறைந்து வந்தேன்;

என்னைக்காத்திடுவாய் தாயே!  என்று வேண்டினான்.

                                        மாயவழி  காட்டு  

தூதுவனை         வீழ்த்திடவே         தூயதந்தை         ஆணையிட்டார்;

சூதுவாது         செய்துநீயே         தீயபடை         நல்கிடுவாய்'

வேதனான         வேலனவன்         காதலாலே         கர்வமிக்க 

தூதனைநான்         வென்றிடவே         தீயமாய         வழிகாட்டுவாய்!                     619

                                        பொருள் 

        மாயப்பாட்டி!  அந்தத்  தூதுவனை  வீழ்த்திடுமாறு   தந்தை  

ஆணையிட்டுள்ளார் . ஏதேனும்   சூதுவாது    செய்து எனக்குத்   தீயபடை  

நல்கிடுவாய்.மறைநாயகனான   முருகனின் அன்பிற்குரியவன்  என்பதால் 

கர்வம் கொண்ட   அத்தூதனை நான்  வெல்லவேண்டும்;அதற்கான தீயமாய 

வழிகளைக்  காட்டுவாய்!  என்று வேண்டினான்.  

                                        மாயை  மாயப்படை வழங்கல் 

மாயையவள்         மாயப்படை         மாவீரன்         மனம்மாற்றும்;

நேயமாகி         நெடுந்தூரம்         நீக்கிவைக்கும்;        நினைவழிக்கும்;

ஆயகுண        சீயப்படை         ஆசியுடன்          நான்தருவேன்;

காயமாற்றும்          இப்படையால்         கடிதில்நீ         வென்றிடுவாய்!                     620

                                        பொருள் 

        மாயை  பானுகோபனுக்கு   மாயப்படையை  வழங்கி இவ்வாறு கூறினாள் .

இப்படை  மாவீரனின்  மனத்தை   உடன்  மாற்றும்; அவனைத்   தூக்கிக்

கொண்டு நெடுந்தூரம் சென்று  அங்கேயே  விட்டுவிடும். நினைவை 

அழித்துவிடும்;இப்படிப்பட்ட  சீயம்போன்ற  படையை  உனக்கு  ஆசியோடு 

தருகிறேன்; காயத்தையே மாற்றும்   இப்படையால்  அவனை  நீ  வெல்லலாம்,

என்று கூறிக் கொடுத்தாள் .

                                        பானு  போருக்குப் புறப்படல் 

காலழற்படை         மாலயன்படை  மாயப்படை         மாவரன்படை 

காலன்போல்         கைக்கொண்டு,        வேலதூதன்         வீழ்த்திடவே 

சீலப்போர்க்        கருவிகளைச்         செம்மையாய்         அணிந்துகொண்டு,

சூலபாணி         நீலகண்டன்         தாள்பணிந்து,        புறப்பட்டான்.                        621

                                        பொருள் 

        காற்றுப்படை,அக்னிப்படை ,திருமால் படை,அயன்படை ,  மாயப்படை,

சிவப்படை இவைகளை  எல்லாம்   காலன்  பாசக்கயிறுபோல்  கைக்கொண்டு 

வீரவாகுவை   வீழ்த்திடவே ,முறைப்படிப்   போர்க்கருவிகளை  அழகுற 

அணிந்துகொண்டு,சூலபாணியான  நீலகண்டனை  வணங்கிப்  போருக்குப் 

புறப்பட்டான்.

                                        வாகுவிற்கு  அறைகூவல் 

புறப்பாசறை         வரச்சூர்மகன்        நிறக்கார்முகன்         தனையழைத்து,

அறப்பாசறை         அணுகுகநீ         திறவாகு             தனைக்கண்டு ,

பறைசாற்றினான்         பகலழிவாய்         மறைபோற்றியே         மாற்றமுயல் 

அறைகூவல்         ஆதவப்பகை         அறிந்திடுவாய்!        அயர்ந்திடுவாய்!          622

                                        பொருள் 

         பாசறைக்கு  வெளியே   வந்த  பானுகோபன்  ஒரு படைவீரனை  அழைத்து,

நீ   தேவர்களின்  பாசறைப்பக்கம்  சென்று, வீரவாகுவைப்    பார்த்து  

இப்படிச்சொல்   என்று  ஆணையிட்டான் .  வாகுவே!  இன்று  

பகற்பொழுதிற்குள்  நீ  அழிவாய்! உன்  முருகனைப்   போற்றி    மாற்ற முயல்!

உனக்கு  இப்படி  அறைகூவல் விட்டவன்  பானுகோபன்,என்பதும்  அறி !

செய்தி  அறிவாய்!  அயர்வாய்! அவ்வீரனும்  அப்படியே  சொன்னான்.

                                        முருகன் காப்பு 

தூதுச்சொல்         கேட்டதூதுவன்         வேதநிறை         வேலவன்தாள் 

தீதறவே         வணங்கியதும் ,        மாதவகுகன்         மனதறிநிலை 

போதுவாய்ப்         பொருதுவாய்         சூதரெதிர்        படைதூண்டுவாய்!

பேதமாயை         புரிந்தானெனில்         வேதவேற்படை         விரைந்துகாக்கும். 623

                                        பொருள் 

        கோபனின்    தூதுவன் சொன்ன   சொல்லைக்  கேட்ட  வாகு, வேதநாயகன் 

ஆகிய வேலவனின்  சேவடிகளை  வணங்கியதும் , குகப்பெருமான் வாகுவின் 

மனநிலை  உணர்ந்து, போருக்குப்போ !  களத்தில்  அரக்கர்களுக்கு  எதிராகப் 

போராற்றுவாய்! கோபனோடும்  படை  பொழிவாய்! இடையே   மாயம் 

தொட்டு  அவன்  போர்  மாறியது  எனில்  வேல்  வரும்;  வினை  தீர்க்கும்;

கவல ற்க " என்றார்  முருகன்.

                                        கோபனும் வாகுவும்   வருகை 

பானுகோபன்         படர்பறந்தலை         தானைபல         தம்பியர்பலர்;

ஏனையோர்         இயைந்துவர,        வான்மேல்வரு         விரிகதிர்போல் 

மோனமாத்தலை         முருகன்வழி         ஈனஇயலை         எதிர்த்தழிக்கத் 

தீனதேவரைக்         காத்திடவும்,        தீரவீர             பாகுவந்தான் .                            624

                                        பொருள் 

        பானுகோபன்   படைகளோடும், தம்பியர்களோடும், மற்றவர்களும்  

இயைந்துவரப்   போர்க்களத்தில்  நுழைந்தான்.

வானத்தே   வரும் விரிகதிர்   போலவும்,  மோனத்தையே   வழியாகக்கொண்ட 

முருகன் வழியில் ஈனச்செயல்கள்  புரிபவரை  அழிக்கும் நோக்கமும்,எளிய  

தேவர்களைக்   காத்திடவும் எண்ணம்  கொண்ட வீரர்  வீரவாகு  களத்துள் 

நுழைந்தார்.

                                        வருணப்படை 

இருவருமே         பெரும்படைவிட 

            வருணக்கார்             பெருகும்நீர் 

அருந்தூதன்             இருந்தழிய,

            விருந்தாக்கினான்             பருந்துபானு.                                                                    625

                                        பொருள் 

        களத்திலே   புகுந்த  இருவரும்  தொடக்கத்திலேயே    தெய்வீகப்படைகளை 

முறைப்படி  எய்தினர் .பானுகோபன்  தூதனை   அழிக்கவிரும்பி  

வருணப்படையை எய்தான். பருந்துபோன்ற   பானு   நீரில்  மீன்போல்  பாகுவை 

வதைக்க  எண்ணினான்.

                                        அக்னிப்படை 

வீரவக்னி        விரிசுடர்ப்படை 

            வீரவாகு             விட்டிடவே 

வாருணப்படை             வற்றிநின்றது ;

            நீரெல்லாம்             நீத்தனவே.                                                                                   626

                                        பொருள் 

        வருணப்படைக்கு  எதிராக  வீரவாகு    அக்கினிப்படையை    விட்டான்;

அது  நீரையெல்லாம்  ஆவியாக்கி அகற்றியது; நீர்ப்பெருக்கு   வற்றிப்

.போயிற்று  

                                        காற்றுப்படை 

வீரசுதனைச்             சுற்றிவரவே 

            மாருதமாம்             மாப்படையைச்  

சூரசுதன்             திருப்பிடவே,

            திசையெல்லாம்             பசையற்றன.                                                                    627

                                        பொருள் 

        வீரவாகுவை    வட்டமிட்டு  அழித்திடப்    பெருங்காற்றுப் 

படையை ஏவினான்  பானு..உலகெங்கும்  வறண்டு, நீர்ப்பசையின்றிக்  

 காய்ந்தன.  

                                        நாகப்படை 

மாருதமதை             வென்றிகொள்ளவும்,

            காரரக்கன்             வீறிழக்கவும்,

சீறுநாகச்                 செங்கணையை 

            வீரவாகு           விட்டிட்டார் .                                                                                            628

                                        பொருள் 

  மாருதப்படையின்  வலிமை  அழித்து  வெற்றிகொள்ளவும், அனுப்பிய 

பானு,வீறு    இழக்கவும்,பாகு  நாகப்படையை  விட்டார்.

                                        கருடப்படை 

பன்னகப்படை             பற்றறுத்திடப் 

            பானுகோபன்             பைங்கருடப் 

பொன்பறவை             கண்டஞ்சிய 

            பன்னகமும்             இரிந்ததுவே .                                                                                  629

                                        பொருள் 

        பாம்புப்படையின்   வலிமையைக்  குறைத்திடப்  பானுகோபன்  

கருடப்படையை    ஏவினான்;  அதைக்கண்டு  அஞ்சிய   நாகம்  

மறைந்தோடியது. 

                                                நந்திப்படை 

தூதனவன்             துதித்தபடித் 

            தெய்வீக             நந்திப்படை 

வேகமாக             ஏகுவிக்க,

உலகையே             உலுக்கியதது .                                                                                            630

                                        பொருள் 

        கருடப்படையின்   உயர்வை  அழிக்க,வாகு  மனத்தால்  வணங்கி 

இறையம்சம்  கொண்ட    நந்திப்படையை  ஏகுவித்தார்.  அப்படை 

உலகையே  உலுக்கியது.

                                        சிறப்புற்ற நந்தி 

கருடனையே                 விழுங்கிவிட்ட ,

            திருநந்தி             திரும்பியகலக் 

குருட்டுப்                 படையையும் 

            குதறிவீழ்த்தக்             குருடானசூர் .                                                                            631

                                        பொருள் 

        கருடனை  அப்படியே  விழுங்கியது  நந்தி.மறுபக்கமாகத்    திரும்பிப் 

பார்க்க,அங்குநின்ற  படைகள்  எல்லாம் குருடடைந்தன;   குதறி  

 அது  கண்ட  கோபனும்  வெற்றியில்  குருடன்  ஆனான்..

                                        நான்முகன்படை 

நான்முகனாம்             நற்படையை 

             வீணனவன்                வீசியதும்,

நான்முகமே             நந்திகண்டு 

            நாணி யோடி             மறைந்ததுவே.                                                                            632

                                        பொருள் 

        பிரமப்படையைப்   பானுகோபன் வாகுமீது     வீசியதும்  அப்படை,

நந்தியைக்கண்டு  அஞ்சி  ஓடி  மறைந்ததுவே.  

                                        மால்படை 

மறைந்ததாலே             மனம்வெதும்பிய 

            மடமகன்தான்             மாலவனாம் 

மறைகாத்தோன்             படைவிடுப்ப, 

          மறை நந்தியை             மலைத்தெதிர்ந்தது .                                                            633

                                        பொருள் 

        பிரமப்படை   மறைந்ததாலே    மனம்   வெதும்பிய    பானுகோபன் 

திருமால்   படையை  விட அது  நந்தியோடு   போர்புரிந்தது .   

                                        வீரபத்திரப்படை 

நாரணப்படை             நந்திப்படை 

            தோரணமாய்ப்             போர்நடத்த 

வீரபத்திரப்             படைபோற்றி 

            வீரதூதன்             விடுத்தனனே .                                                                                 634

                                        பொருள் 

        நாரணப்படைக்கும்   நந்திப்படைக்கும்  பெரும் போர் நடக்க, வாகுவோ 

வீரபத்திரப்படையை  வணங்கி  அனுப்பினான்.    

                                        சிவப்படை 

மாயவன்படை             மாண்டிடலும்  

            சேய்ச்சூரன்,            நாயகச்சிவன் 

தூயமாப்படை             தொழுதுவிட்டான்;

            ஆயமாப்படை             எழுந்தபோது.....                                                                    635

                                        பொருள் 

        வீரபத்திரப்படையால்    மாதவப்படை  மாண்டது; சூரனின்  மகனோ 

நாயகனாகிய  சிவமாப்படையை வணங்கி    விட்டான்; அப்படை  

எழுந்தபோது  ......   

                                        எதிர்  சிவப்படை 

தாதைப்படை             பேதைவிடக் 

            காதலோடு             கழல்வணங்கி 

ஆதிநாயகன்             அற்புதத்தை 

            வேதவீரனும்             விட்டனன்காண் .                                                                        636

                                        பொருள் 

        சிவனாரின்  படையைப்     பானுகோபன்  விடவும்,அன்பு  மீக்கூறச் 

சேவடி  வணங்கி  அந்தச்சிவனின்  அற்புதப் படையை   வாகுவும் 

விட்டனன் .

                                        உருத்திரனாம் படை 

தூயசிவனின்             தொல்படைஎழத் 

            தீயவன்விடு             மாப்படையெழக் 

காய்தலில்லாக்             களப்போரின் 

            நாயகன்தனி             உருத்திரனே .                                                                           637

                                        பொருள் 

        வாகு விட்ட  சிவப்படையும் ,பானுவிட்ட    சிவப்படையும் விருப்பு  வெறுப்பு 

அற்றுக்  களத்தில்   தானே  நாயகனாகி  நடுவே   உருத்திரனாய்   நின்றனவே . 

                                        அழிவும்  ஆக்கமும் 

செவ்வகையால்             செயிர்த்தழித்து 

            முவ்வகையால்             மீண்டுமாக்கிச் 

செவ்வியான             செஞ்சிவன்படை 

            சேர்ந்தனவே             வாகுகரம் .                                                                                 638

                                        பொருள் 

        இருவர்  எய்திய   சிவப்படைகள்  நிகரான  ஆக்கத்தில்  இருந்ததால் 

உலகையே   அழித்து  நொறுக்கின;  அண்ட   சராசரங்களையும்    அழித்தன;

அறமேம்பாட்டில்    மீண்டும்   அவைகளைப் படைத்தன;முடிவாக,

மாறுபட்ட   இருவர்  எய்திய  சிவப்படை  இரண்டும்  நல்லவனாகிய 

வீரவாகுவின்  காரத்தைத்     தாமாகவே சேர்ந்தன.

                                        தனியனாம்   பானுகோபன் 

ஏற்றத்தான்             இளைத்துநின்றான் ;

            மாற்றத்தால்             மாறினபடை ;

ஏற்றப்பரி             கூற்றக்கரி 

            சீற்றப்படை             சீரழிதேர் ,,,                                                                                639

                                        பொருள் 

            ஆணவத்தால்  உயர்ந்துநின்ற பானு   வருந்தி  நின்றான்;  இடையில் 

நடைபெற்ற   மாற்றத்தால் களமே   கலைந்துவிட்டது ; வலிமைக்குதிரைகள்,

கூற்றமன்ன   யானைகள், சீற்றம்  கொண்ட காலாட்படைகள், சீர்  இழந்துவிட்ட 

தேர்கள் ....

                                        மாயஉரு 

முற்றுகாணான்             மற்றுசொன்னான் 

            மூண்டசுமை             முடிந்தனவெலாம் ;

தோற்றத்தால்             தனியனானேன் ;

            ஏற்றிடுவேன்             மாய உரு .                                                                                    640 

                                        பொருள் 

        களம் முழுவதும்  பார்க்கிறேன்;  எனக்கென  எதுவும்  காணோம்; மற்றும் 

சூரமகன்  சொன்னான் சுமைகள்  விலகின; எல்லாம்  முடிவு பெற்றுவிட்டது;

தோற்றத்திலும்   தனியனாகி  நிற்கிறேன்;  இனி  மாய  உருவை  

எடுத்திடுவேன்;      என  மறைந்தான்  காற்றில்.

                                        மாயம்நாடுவேன் 

அன்றுபோலவே             இன்றுமோடினன் 

            என்றிகழ்வீர்!            அழிவதைக்காண் !

நின்றுநகை             நீள்கோபன் 

            நன்றிவ்வுரு;            நாடுமாயம் .                                                                                641

                                        பொருள் 

        முதல்  நாள்  களத்தைவிட்டு  ஓடியதைப்போலவே  இன்றும்   ஓடினான்'

என்று   இகழ்பவர்களே! அழிவை   நேரே  பாருங்கள்!  நின்று  நகைத்தான்  பானு.

இவ்வுரு  எனக்குப்  பொருத்தமே; மாயத்தை  இனி  நாடுவோம்.

                                        மாயப்படை 

மாயமாப்படை             மாட்சியுடன் 

            மாயவைப்பேன்;            பகைத்தூதன்

நேயமிழந்தே             நெக்குருகி,

            வீயழியும்             வெற்றிகாண்பேன் .                                                                        642

                                        பொருள் 

        மாட்சிமையுடைய   மாயப்படையால்   பகைத்தூதனை   மாயவைப்பேன்;

அவன்  நினைவிழந்து,நிலை  தடுமாறி, அறிவழிந்து  துன்புறும்  காட்சியைக் 

காண்பேன்;அதுவே    வெற்றியாகும். என்றான்  கோபன். 

                                        விடுத்தனன் 

தாயவழி             மாயப்படை 

            தீயனபுரி             காயப்படை 

சீயதூதன்             சாயும்படை 

            மாயகோபன்             விட்டுத்தனனே .                                                                        643

                                        பொருள் 

            தாய்ப்பாட்டி  தந்தருளிய   மாயப்படை இது.  தீமைகளை ஆற்றும் 

காயத்தை மாற்றும் படை  இது.சிங்கம்  போன்ற தூதனைச்  சாய்க்கும் 

படை இது.ஆய  படையை  பானுகோபன்   வீரவாகு  மீது ஏவினான்.

                                        பற்றியது மாயம் 

ஒளிந்தாலும்             விட்டிடாத 

            களிமாயக்             கருமைப்படை 

ஒளிப்புகையுடன்             பறந்தேகி                                                                                 

            வெளிப்பட்டுப்             பற்றியதே.                                                                                644

                                        பொருள் 

        எங்குசென்று     ஒளிந்தாலும்   விடாது   பற்றிடும்;  மாயக்களியாட்டம் 

கொண்ட கரும்படை;அது  ஒளிமிகுந்த   புகையோடு    வானத்தே   காற்றில் 

பறந்துசென்று  பகைவர்முன்  வெளிப்பட்டுப்   பற்றியும்.  அதுபோல் 

இங்கும்  பற்றிக்கொண்டது.

                                        பற்றிய  மாயம் 

பகைத்தூதன்             சகத்தோழர் 

            இகப்பெரும்படை             குகக்கணங்கள் 

தகதகவெனப்             புகைபரப்பி 

            உகுஉகு வென             அமுக்கியதே.                                                                            645

                                        பொருள் 

        மாயப்படை  வீரவாகுவை,அவனது   தோழர்களை,அவனது  

பெரும்படைகளை .  குகக்கணங்களைப் பற்றிக்கொண்டது.தக தக எனப் 

புகையைப்  பரப்பி,அவர்களை  உகு உகு   என   அமுக்கிப் பற்றியது.

                                        தூக்கிச்சென்ற இடம் 

சூரமைந்தன்             சொல்லின்படி 

            சூரரையும்             சுற்றத்தையும் 

சூருலகா             றும்தாண்டிச் 

            சூழ்தொல்கடல்             சூழவைத்தது.                                                                         646

                                        பொருள் 

 மாயப்படை,  பானுகோபன் சொல்லியபடி. வாகுவையும், சுற்றத்தாரையும் 

ஆறு உலகமும் தாண்டி   அப்பாலுள்ள  கடல்  கரையில் வைத்துக்  காவல் 

காத்தபடி   நின்றது. 

                                        பானுகோபன் ஆர்ப்பரித்தல் 

நகைநகை என             நகைத்தபானு 

            குகைகுகைஎனக்             குழறியவன், 

வகைவகை என             மகேந்திரத்தின் 

            மிகைமிகை என             மிளிர்ந்துநின்றான் .                                                        647

                                        பொருள் 

            வெற்றியின்  விளிம்பில்  நின்றுகொண்டு ,   நகை நகை என நகைத்தான்;

அவர்கள்  முன்போலவே  குகையில்  குகையில்    எனக்குழறினான்; 

மகேந்திரத்தின்  வகையும், மிகையும்   தானே  என்று  மிளிர்ந்து   நின்றான்.

                                        தந்தையிடம்  வெறிக்கூச்சல் 

வியன்புனல்கடல்             உய்த்தசெய்தி 

            நயமுடனே             எடுத்துரைத்து,

அயன்மால்பிறர்             அறுமுகனுடன் 

            அனைவரையும்             அடக்குவனே !                                                                        648

                                        பொருள் 

            வெகு  தொலைவில்  கடற்கரையில்   வாகுவையும்,பிறரையும்  தமது 

கட்டுப்பாட்டுள்    வைத்திருக்கும்  செய்தியை   வரிசைப்படி    விவரித்தான்;

இதேபோல  அயனை ,மாலை, மற்ற  தேவர்களை   ஆறுமுகனையும் 

அடக்கிடுவேன்    தந்தையே!   எனக்கத்தினான்.

                                        சூரன் மகிழ்ச்சி

வென்றிமாமழைக்             கன்றதனை,

            நன்றுநன்றென             நெருங்கினான்;

குன்றுநிலவாய்க்             கனிந்துதழுவிப் 

            பொன்தவிசிடை              மன்னமர்த்தினான் ,                                                        649

                                        பொருள் 

  வெற்றியோடு    வந்துநிற்கும்  கார்மேகக்  கண்ணனை, நீ   ஆற்றிய   செயல் 

மிகுநன்மை  பயப்பதாகும்.மகனை  நெருங்கி, மலையில்   தோன்றிய 

இளம்பிறைச்சந்திரன் போல, நன்கு  தழுவிக்கொண்டான். அப்படியே 

அழைத்துவந்து   நல்ல   சிங்காதனத்தில்  இனி  நீயே  மன்னன்  ஆவாய்,'

என்பதைப்போல   அமர்த்தினான்.

                                        வேலுக்கு   ஆணை 

மாயப்பழியை             மனதுள்நினை !

            மாயமகல            மாவேலே !

நீயேசெல்!            தீயன களை !

             வாயுவென             வேகிடுவாய் !                                                                                650                                                                                       

                                    பொருள் 

            நடந்தன  உணர்ந்த  நாயகன் ,வேலாயுதத்தை  நினைத்தார். 

வந்துவணங்கிய வேலைப்பார்த்து,வேலே !மாயப்படை  ஆற்றிய   மாயத்தை 

மனத்துள்   நினை; அம்மாயம்  அகன்றிட   நீயே  செல்க!  சென்று  

 தீயவைகளைக் களைக!   காற்றைப்போல்   விரைந்து செல்க!  என்று 

முருகன் வேலுக்கு   ஆணையிட்டார். 

                                        வேலின் விரைவு 

அரிஅயன்படை             அருகுசெல்ல,

            அரியகதிர்             விரிநிலவு 

எரிகரிகிரி             நடுங்கிடவே 

            விரிசோதிபோல்             விரைந்ததம்மா!                                                                 651

                                        பொருள் 

        திருமால்,பிரமன், படைகள்    பக்கத்தில்  தொடர்ந்துசெல்ல,  ஆதவனும் 

நிலவும்  வளர்மலைகளும்    நடுநடுங்க,வானத்தே    எழுந்த  சோதிபோல 

விரைந்து வேல்  சென்றது.

                                        மாயம்  மறைந்தது 

செயவேற்படை             சென்றடைந்ததும்,

            வெயவீண்படை             வெறியிழந்தது;

மயலலையெலாம்             மறைந்துநீங்கிட 

            சேயவன்தாள்             சேர்ந்துபோற்றினர் .                                                            652

                                        பொருள் 

            வெற்றியைத்தரும்    வேற்படை   அக்கடற்கரையைச்  சென்றடைந்ததும்,

வீண்படையான    மாயத்தின்  ஆதிக்கம்  அகன்றது.மையல்  நீங்கியது.

அனைவரும்  முருகன்   தாளை  வணங்கச்சென்றனர். சேர்ந்து  செந்திலானைப் 

போற்றினர்.

                                        வேல்புகழ் 

வேலதன்புகழ்             வேற்கரப்புகழ்;

            நான்மறைமொழி             நாளுமேதுணை.

சீலமில்லாச்             சூரமகனோ 

            மால்தேடி             மயக்கமுற்றான்.                                                                            653

                                        பொருள் 

            வேலாயுதத்தின்   பெருமையும்,புகழும்  அவ்வேலைத்     தாங்கிநிற்கும் 

வேலவனின்  புகழ் ஆகும்.  நான்குமறைகளின்   நல்லொலி   நாளும் 

நமக்குத்  துணை  ஆகும்.

 நல்லொழுக்கம்  இல்லாத பானுகோபன்  மாயத்தை  நாடினான்;  அம்மயக்கமே 

அவனுடைய  வாழ்வாக   அமைந்தது.

                                        நகரெரி காட்சி 

எடுத்தமாயம்             கடுத்தவாகு 

            தொடுத்தபோர்             விடுத்தவழல் 

கடுசிடுவென             நடுநடுவென 

            நடுங்கிற்று             மகேந்திரபுரி .                                                                                654

                                        பொருள் 

            மாயப்படையினால்   மயக்கமடைந்த    வாகு   பெருந்தசீற்றமுற்றான்.

போரைத்தொட்டான்; வில்  வீசியது   அழல்  கணையை .  மகேந்திரபுரி 

தீ   அழலில்     ஆழ்ந்தது.

                                        மூன்றாம்நாள் இரவு 

                                        இரணியன் போர் 

                                        இரணியன் 

மறையாயிரம்             முறையாயிரம் 

            குறைமாயம்,            அறைவஞ்சம் ,

துறைதூயவன்             தலைமூன்றான் 

            இறைசூர்மகன்             இரணியனாம் .                                                                  655

                                        பொருள் 

   நிறைந்த   வேதம்   கற்றவன்; பண்பாடு  நிறைந்தவன்; கொஞ்சம்  மாயம் 

அறிந்தவன்; வஞ்சத்தன்மைகள்  கொண்டவன்;தூய்மையைப்  போற்றுபவன்;

மூன்றுதலைகள்  கொண்டவன்; சூரனின்     மகன் ;இரணியன்    

பெயரைக்கொண்ட  அரக்கன் ஆவான்.

                                        அறிவுரை 

தாதைதன்             திருவடியிணை 

            தாழ்ந்து,             தனதுசொல் 

தீதறுப்பது             பேதமின்றித் 

            தேவரீர்!             கேட்கவென.....                                                                                 656

                                        பொருள் 

தனது   தந்தையான   சூரன்     திருவடியை   வணங்கித்      தனது  சொல் 

தீத்தறுப்பது;பேதமற்றது;   அதனைத்  தாங்கள்    கேட்கவேண்டும்"  ...

.மாவரமது             பெற்றதுமுதல் 

            மாச்சிவனின்             புகழ்பேசினான்;

தாவுகர்வம்             தயவின்மை 

            மேவுதீத்தொழில்             நேருரைத்தான் .                                                           657

விண்ணவர்கள்             வெஞ்சிறை விட ,  

            வேலவனே             விரித்துரைத்தும்,

கண்முன்னே             காண்கின்ற 

            கந்தனடி             போற்றவில்லை.                                                                         658

சிறைவிடுக;               மறைபோற்றுக;

            குறைகளைக '            நிறைபணிவு;

கறையுற்றோம்             கந்தனடியைக் 

கலங்கரை             விளக்காக்குவோம்.                                                                            659

                                        பொருள் 

    புகழ்மிக்க   சிவனோ    தாங்களுக்கு  மாபெரும்   வரங்களைக் கொடுத்தார்.

வந்துசேர்ந்தது  கர்வம்;இரக்கமின்மை ;தீயதொழில்கள் ;நாமே     தீயவர் 

ஆனோம்.  

  விண்ணவர்களைச் சிறையில்  அடைத்தோம்; விடச்சொல்லி  வேலவன் 

சொல்லியும்  கேட்கவில்லை; கண்முன்னால்    காண்கின்ற   கந்தனைப் 

போற்றவில்லை;

            அதனால்         தந்தையே!   தேவரை    விடுவிப்போம்;வேதவழி 

நடப்போம்;கறை   உற்ற  நாம் காந்தனைப்  போற்றுவோம்;  அதுவே  நல்வழி 

என்றான் இரணியன்.

                                        சூரன்   சீற்றம் 

கேட்டதுமே             கொதித்தெழுந்தான் 

            நாட்டமில்லை             உன்சொற்களில் ;

மாற்றலனை             மண்டியிடு நீ .

            மற்றெனக்குநீ             மகனில்லை .                                                                        660

                                        பொருள் 

            இரணியனின்   சொல்லைக்   கேட்டதுமே  சினத்தால்  

கொதித்தெழுந்தான்    சூரன்.   உன்னுடைய   சொற்களை  நான் ஏற்கவில்லை;

பகைவனுக்கு    மண்டியிட்டு  வாழ்   நீ. எனக்கு  நீ  மகனில்லை , என்று 

வெறுப்போடு  பேசினான்.  

                                        இரணியன்  முடிவும் போர் ஈடுபாடும் 

 வருகின்ற             விதிநோக்கி 

            வந்திடாத             மதிநோக்கி,

அருந்தந்தை             அடிபணிந்து,

            அரும்போர்க்             காட்பட்டான்.                                                                           661

அன்றிரவே             தொடர்போரில் 

            வென்றிகொள்ளும்             வீரனாகிக்

 கொன்றுகுவி             பூதப்படை 

            நின்றழைத்தான்             நீலனையே.                                                                    662

நீலனோடு             காலனாக 

            நாலுபூதர்             சாலப்போர் 

மேலெடுத்து,            வேலெடுத்து 

            மேலுலகம் தொடவைத்தான் .                                                                                663

நெடும்படையில்             விடும்படையால் 

            கடும்படையின்             அடுபோரினில் 

தடுமாறித்             தத்தளித்து 

            வீழ்ந்தனரே !            தாழ்ந்தனரே.                                                                            664

வீரவாகு             நேர்வந்து 

            தேர்தொட்டுக்            கார்தொட்டுப் 

பேருயிர்த்            தொடும்போது 

            சூர்மகன்             சிந்தித்தான்.                                                                                    665

                                        பொருள் 

            இறந்துபடுவோம் என்னும்  விதியை  நோக்கியும்,தந்தைக்கு  

வரமறுக்கும்  அறிவு  நோக்கியும்,இரணியன்  தந்தையை   வணங்கி 

அவருக்காகப் போர்புரியத்  தொடங்கினான்.

            அன்றிரவே தொடரும்  போரில் வெற்றி   வீரனாகக்  கலந்துகொண்டான் 

பூதப்படைகளைக் கொன்றுகுவித்தான்    நீலன்  என்னும்  பூதப்படைத் 

தலைவனை அழைத்தான் போருக்கு.

            நீலனோடு  போர்  புரியுங்கால் நான்கு  பூதர்களைக் கொன்றான்;

மேலும்  பலரையும்  நீலனையும்  தோற்கடித்தான் .

            பெரிய  போர்க்களத்தில் பகை  வீரர்களை  அலைக்கழித்து,

அஞ்சவைத்துச் சிலரை வீழவைத்தான்;சிலரைச்  சாகவைத்தான்.

            இவனை  எதிர்த்துப்  போரிட வீரவாகு  வந்தான்;தேரை  அழித்தான்;

வில்லை  அழித்தான்;பேருயிரை  அவன்  அழிக்க  முயல்கையில் 

இரணியன்  இறுதி  நேரத்தில்  சற்றுச்  சிந்தித்தான்.

                                        இரணியன் சிந்தித்தல் 

விதிவசமே             பதிமறைவு;

            அதிசூரன்             அக்ரமத்தால் 

அதிகாலை             மாண்டிடுவான்;

            அதேவழியில்             புத்திரர்களும்.                                                                    666

முத்திவழி             முகம்சுளிப்பர் ;

            முத்தான             தந்தைக்கு 

முத்தியளிப்             பத்தியங்கள் 

            முழுநீரும்              விழுபிண்டமும்.                                                                        667

தசகாரியம்             பணியாற்ற 

            நசைமகவிலை ;            நரகமேகதி;

தசகாரியப்             புத்திரனாய்த்  

            தரணியில்             தரிக்கவேண்டும்.                                                                     668

ஆதலினால்             அருங்களத்தின் 

            ஆர்வப்போர்             அகற்றிவிட்டு,

மாதவவழி             மாயவுருவாய் 

            மறைந்தேகுவன்.            எனமறைந்தான்.                                                        669

வானவழி             மீனாகி,

            மோனவழிப்             பெருங்கடலுள் 

காணவியலாக்             கட்டுமாழம் 

            காலமெல்லாம்             நீலமானான் .                                                                            670

                                        பொருள் 

            ஊழ்வினையால்  சூரன்   இறந்துபடுவான்.அக்கிரமச்செயல்களாலும் 

அவன்   இறப்பதுஉறுதி. நாளை  அல்லது  மறுநாள் அவன்  இறக்கக்கூடும்.

அவனது  புத்திரர்களும்  இறப்பது  உறுதி.

           முத்தியடையத்   தந்தைக்கு   முகம் சுளிக்காது முறைப்படி  கடன்  

ஆற்றவேண்டியது மகன்களின்  இன்றியமையாத செயல்.நீரூற்றல் 

பிண்டம்போடல் போன்றவைகள்  ஆற்றப்படவேண்டும்.

            பத்துநாட்கள்  காரியங்கள்   ஆற்றவில்லையென்றால் நரகம்  தான் கதி.

என்  தந்தைக்கு  நானாற்ற  உலகில்   வாழவேண்டும்.

            ஆதலினால்  நான்   போரை விட்டுவிட்டு மாய   உருவம் எடுத்து வானில் 

மறையப்போகிறேன், 

என்றெண்ணியவன்   மீன்  வடிவம்  எடுத்து,வானவழியாய்  நீள்கடலைச் 

சார்ந்தான்;  கடும்  ஆழத்தில்  சென்று யாரும்    அறியா  வண்ணம் 

கடலோடு  கடல்  ஆனான்.

                                        பூதப்படை    ஆரவாரம் 

மாயமாகி                மறைந்திட்டான் 

            மற்றுமொரு              சூரப்புதல்வன்;

ஆயபடை             ஆர்ப்பரித்து,

            ஆறுமுகம்             வாழ்த்தியது.                                                                                671

                                        பொருள் 

  மாயமாகி  சூரனின்   மற்றொரு   மகனும்   மறைந்திட்டான்;பூதப்படை 

ஆரவாரித்தது;ஆறுமுகக்கடவுளை  வாழ்த்தியது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக