செவ்வாய், 20 ஆகஸ்ட், 2024

மகேந்திரபுரப்பரணி - 2

                                         சூரன் மீண்டும் உரைத்தல் 

நாரணனோ             நலிந்தோட ;

            வாரணனோ          வனத்தோட ,

பூரணனோ             பயந்தோடக் 

            காரணமோ             கடுஞ்சூரன் .                                                                                 472.

    

                                        பொருள்  

            காக்கும் கடவுளான திருமால்   அஞ்சி ஓடினான்; இந்திரனோ நாட்டை 

விட்டுக் காட்டில்  மறைந்துவாழ்ந்தான்;நான்முகனோ எப்பொழுதுமே அஞ்சி 

நடுங்கி  நின்றான்; இவை  எல்லாவற்றிற்கும்  காரணம்  சூரனாகிய  என்னைக் 

கண்ட அச்சம்தான். 

                                        படைப்பெருமை  

அண்டகோள்களின்             ஆண்டவன் நான் ;

            துண்டமாயின             தேவகூட்டம் ;

கொண்டமாயக்             கோட்டைகள் ;

            பண்டுபோரினில்             வென்றிடுவரோ ?                                                        473.

                                        பொருள் 

            அகிலஉலகத்தையும்,அண்டகோள்களையும் ஆள்பவன்  நானே.

எதிர்த்த  தேவகூட்டம்   ஆங்காங்கு  சிதறிப் பிய்ந்து  போயின.என்னிடம் 

மாயநிரம்பிய பலகோட்டைகள் உள .இப்படிப்பட்ட  என்னை  யாரால் போரில் 

வெல்ல இயலும்? சீறினான்  சூரன்.

                                        படைப்பெருமை 

இந்த்ரஜாலம்             எனதுதேர்;

            மந்த்ரஜாலம்             எனதுமேனி;

விந்தியமலை             எனதுகரம்;

            விந்தையாம்             எனதுபடை.                                                                                474.

                                        பொருள் 

            இந்த்ரஜாலம்  என்னும்  மாயாஜாலத்தேர் என்னிடம் உள்ளது.

மந்திரஜாலங்களால் விளங்குவது  எனது  மேனி.   விந்தியமலை  எனது 

கரம்போன்றது. எனது   போர்ப்படைகள் எல்லாம்  விந்தைகொண்டவை.

                                        விளையாட்டுக்குழந்தை 

விளையாட்டுச்             சிறுகுழந்தை 

            விளையாட             வருகிறது;

விளையாடலன்             பெருவரத்தால் 

            விளையாட்டில்             விழுந்திடுமே.                                                                        475.

                                        பொருள் 

            என்னோடு  போரிட விளையாட்டுச்சிறுகுழந்தை   வருகிறது.அந்தத் 

திருவிளையாடல்   தலைவன்  எனக்களித்த  பெருவரத்தால் இப்போர்  

விளையாட்டில்   நானே  வெற்றி பெறுவேன்" என்றான்  சூரன்.

                                        சூரனின்  தன்னம்பிக்கை 

படைவீரத்             தளபதியரே!

            படைகளான             தம்பியரே !

படைபோற்றும்             புதல்வர்களே !

            படையாக             இருக்கையிலே....                                                                         476.

                                        பொருள் 

            வீரத்தளபதியர்களும் ,படைகளாகவே   மாறிவிட்ட  என் தம்பியர்களும் ,

படைகள்  எல்லாம்  போற்றும்   என்  புதல்வர்களும் ,  என்னுடைய  

 படைகளாகவே   மாறிவிட்டபின்னர்.........

                                        சூரனுக்குத் தோல்வியில்லை 

சூரனுக்குத்             தோல்வியில்லை ;

            சூரனெனிலோ             வெற்றிதான்.

சூரன் நான்             செருக்குற்றேன்;

            சூர வெற்றி!            சூரவெற்றி .                                                                            477.

                                        பொருள் 

            எந்தப்போரிலும்   சூரனுக்குத்  தோல்வி  என்பதில்லை. சூரன்  என்று 

சொன்னாலே  வெற்றிதான்.அதனால்  சூரனாகிய    நான்  செருக்குற்றேன்.

சூரனுக்கே   வெற்றி!   ஆம்.வெற்றி.

                                        படை  புறப்படல் 

தெருவெல்லாம்             மலையாகி,

            மாறினபோல்             மதகரிகள்'

உருவான             மலைக்கூட்டம் 

            தெருவெல்லாம்             நிறைந்தனவே.                                                                478.

                                        பொருள் 

            போருக்குப்  போர்ப்படைகள்  புறப்பட்டன. தெருக்கள்  முழுவதும் 

மலைகளின் மாண்புபோல    மதம்பிடித்த  யானைகள்  அணிவகுத்தன.

மலைகளின்  பெருங்கூட்டம்  தெருவை  அடைத்தபடி  நிற்பனபோல் 

யானைக்கூட்டங்கள்  விளங்கின.

                                        காளமேகக்கூட்டம் 

ஆயிரமாம்             ஆயிரமாம் 

            ஆனைகளின்             அணிவகுப்பு;

பாயிரமாம்             நூல்முதல்போல் 

            காயகருமைக்             காளமேகம்.                                                                        479.

                                        பொருள் 

        இலக்கக்கணக்கில்    யானைகளின்  அணிவகுப்பு; நூலுக்குப்   

பாயிரம்போலப்    படைப்பிரிவின்  முதலில்  அலங்கரிப்பது காளமேகம் 

போன்ற  யானைப்படைகள்.

                                        குதிரைப்படை 

கனைத்தலிலே             கனிவெற்றி ;

            வினைப்படையில்             வீறுநடை'

துணைப்படையோ ?            யமன் படையோ?

            கணக்கில்லை             குதிரைப்படை.                                                                     480.

                                        பொருள் 

            குரலெடுத்துக்  கனைக்கும்  கனைப்பிலே  வெற்றியைத்  தரும்.

செயலாற்றலில்  வீறுகொண்ட  நடை நடக்கும்;இது   துணைப்படையா?

யமன்  படையா?கணக்கற்ற  குதிரைக்கூட்டம்   படைகளாக சென்றன.

                                        தேர்களின் வரிசை 

சடச்சடரெனப்             படர்படரெனச் 

            சுடர் சுடரென                 இடர் இடரென த் 

தடதடவெனத்             தொடத்தொடவென 

            விடவேகப்             படைத்தேர்கள் .                                                                            481.

                                        பொருள் 

            சடசட   எனவும், படார் படார்   எனவும் ஒலியெழுப்பிக்கொண்டும் ,

சுடர்,இது சுடர்  சுட்டுவிடும்  என  எச்சரித்தும், நெருங்கினால்  இடர் இடர் 

என அச்சுறுத்தியும்,தட  தட   என்றும்,  தொட  தொட   என்றும் பேரொலி 

எழுப்பியபடி  விடம்பாயும்   வேகம்போல்  விரைவாகச்  செல்லும்  

தேர்ப்படைகள்  அணிவகுத்துச்சென்றன.

                                        காலாட்படை 

மலைக்கரத்து             மதவீரர் ,

            மரக்கரத்து             உரவீரர் ,

சிலைக்கரத்து             சீர் வீரர்,

            அலைக்கடல்போல்             அணிவகுத்தனர்.                                                       482.

                                        பொருள் 

            மலைபோன்ற  கரங்களைக்கொண்ட வெறிபிடித்த  வீரர்கள்,

மரம்போன்ற  வலிமைமிக்க கரம்கொண்ட  நெஞ்சுரம் மிக  வீரர்கள்,

வில்லை ஏந்திய  சீர்மை  மிக்கவீரர்கள்  அலைகடல்போல்  

அணிவகுத்துச்சென்றனர் .

                                        பலவீரர்கள் 

கூச்சலிடும்             கொடுவீரர்,

            வீச்சரிவாள்             தொடுவீரர்,

பாய்ச்சல்புலி             படுவீரர்,

            மேய்ச்சல்நில             மேதிவீரர்.                                                                                483.

                                        பொருள் 

            பெருங்கூச்சலிட்டபடியே   செல்லும்  கொடுமையான வீரர்,

வீசுகின்ற  அரிவாளைக்  கையிலேந்திய வீரர், புலிபோல்  பாய்கின்ற 

வேகவீரர்,மேய்ச்சல்  நிலத்தே கிடந்தாலும், தக்கநேரத்தில்  சிலிர்த்தெழும் 

எருமை  அன்ன   வீரர்,  எனபலப்பல   வீரர்கள்  அணிவகுத்துச்சென்றனர்.

                                        அரக்கர்படை 

அரக்ககுண             ஆட்டத்தில் 

            இரக்கமில்லாப்           பெருங்கூட்டம்,

உறக்கமில்லாக்             கின்னரர்கள்,

            பறக்கும்குணக்             கிம்புருடர்.                                                                            484.

                                        பொருள் 

            இரக்கமில்லாது,அரக்ககுணம்   வாய்ந்த  அரக்கர்   கூட்டமும்,

தூங்கவே  விருப்பமில்லாத கின்னரர்  கூட்டமும், நடப்பதோடு  பறக்கும் 

பழக்கம்  கொண்ட  கிம்புருடர்   கூட்டமும்  அணிவகுத்துச்சென்றன.

                                        அழிபடை 

எழுந்ததோ             வெழுகடலென,

            விழுப்படை             குழுக்குழுவாய் .

கொழுகொழுவுடல்             கூட்டத்தினர் 

            அழிவழியெனப்             படைதிரண்டனர்.                                                            485.

                                        பொருள் 

            ஏழுகடல்   எழுந்ததுபோல் விழுமை  உடைய  படை, குழுக்குழுவாய்ப் 

புறப்பட்டன.நல்ல  உடற்கட்டு  உடைய  அப்படையினர் அழிப்போம்  

பகைவரை"  என்றே  திரண்டெழுந்தனர்.

                                        தேவர் படையெடுப்பு 

செந்திப்பதி             புரக்கின்ற 

            செவ்வேளின்             ஆணைப்படி,

விந்தியமுதல்             குமரிவரை,

            செந்தூர்ப்படை             சேர்ந்திசைத்தது.                                                            486.

                                        பொருள் 

            விண்ணவர் போர்ப்படைகளும்  மகேந்திரம்  நோக்கிப் புறப்பட்டன.

செந்திப்பதியிலிருந்து   முருகன்   ஆணையை  ஏற்ற  படைவீரர்கள்,

விந்தியம் முதல்   குமரிவரை  நாடுகளில் இருந்து  வந்துசேர்ந்த  வீரர்கள் 

அணிவகுத்தனர்.

                                                சேரபாண்டியப்படைகள் 

சேரபாண்டியர்             அனுப்பிவைத்த 

            வீரயானை             வியன்படைகள்,

பூரபரணிப்             புண்ணியனின் 

            போர்ப்படையில்             முந்துசென்றன.                                                            487.

                                        பொருள் 

            அரக்கர்களை  அழிக்கும்  புண்ணியப்போரில்  பரணி  நாள்  பிறந்த 

முருகக்கடவுளின்  சார்பில்  போராடத்   தமிழ்  மூவேந்தர்  படைகளும் 

வந்தன. சேர,பாண்டிய  நாட்டிலிருந்து வீரயானைப்படை  முதன்முதலில் 

அழகுற  அணிவகுத்துச்சென்றது.

                                        சோழப்படை 

சோழநாட்டின்             வேழங்களும்,

            சோழப்பெருமைக்             குதிரைகளும்.

ஆழசக்கர             மேழித்தேர்,

            சூழவந்தது             சோழப்படை.                                                                            488.

                                        பொருள் 

            முருகன்  நடத்தும்  புனிதப்போரில்  சோழநாட்டுப்   படைகளும்  

கலந்து  கொண்டன.சோழநாட்டின்   யானைகளும்,குதிரைகளும் 

தேர்ப்படைகளும்   கொண்டு சோழப்படை  அணிவகுத்தது .

                                        விண் படை 

விண்ணகத்தின்             ஐராவதம்,

            விண்ணிலசெல்             பொன்குதிரை ,

பொன்னால்புனை                 புதுத்தேர்கள்,

            விண் விண் எனப்             பறந்துவந்தன.                                                                489.

                                        பொருள் 

            தேவர்களின்  வீரம்  மிக்க   ஐராவதம் என்னும்   வெள்ளையானையும்,

வானத்தே   பறக்கும்  பொன்னிறக்குதிரையும்,பொன்னால்  உருவாக்கப்பட்ட 

பொற்றேர்களும்  மிகவிரைவாய்ப்  பறந்துவந்தன.

                                        தேவவீரர்ப்படை 

கொடியோடு             குடைகளும் 

            கூர்வேலும் ,            சீர்வில்லும்,

விடிவுவேண்டி             விண்படையினர் 

            அடி!பிடி!எனக்             கடிநடந்தனர்.                                                                        490.

                                        பொருள் 

            தங்களுக்கு  விடிவு  காலம்  பிறக்கவேண்டும்   என்று  விரும்பிய 

தேவர்கள் கொடியும்,  குடைகளும்  சுமந்து  சென்றனர்.வில்லும்,வேலும் 

ஏந்திச்சென்றனர்.அரக்கர்களை  அடி!அழி!  எனக்கதியபடிச் சென்றனர்.

                                        விலங்குகளும் 

தேவிவழியே             சிங்கங்கள்,

            தேவன்வழி             காளைகள்,

ஆவியய்யன்             அரும்புலிகள்,

            காக்கவந்தன ;            தாக்கவந்தன.                                                                        491.

                                        பொருள் 

            காட்டில்  வாழும்  கடும் விலங்குகளும்  கந்தனுக்கு   உதவிடப்

படையில்  அங்கம்  வகித்தன.தேவியருளால்  சிங்கங்கள்,தேவனாசி 

காளைகள்,ஐயப்பன் அன்பு  புலிகள்   என  இவை காக்கவும்  செய்தன;

பகைவர்களைத்    தாகவும்  செய்தன.

                                        பறவைகளும் 

கிளிமயில்புறா             செம்பூத்து,

            அளியன்னம்             அருங்காகம் 

விளிகுயில்நா             கணவாய்ப்புள் 

            களிப்போடு             கனல்படையாம்.                                                                    492.

                                        பொருள் 

            முருகனது   படையில்  பசுமைப்பறவைகளும்   பங்கேற்றன.

கிளி,மயில்,புறா,செம்பூத்து, அன்னம்,காகம்,குயில்,நாகணவாய்ப்புள்,

ஆகியன  மகிழ்வோடு   கனல்  காக்கும்  போர்ப்ப்டையாக விளங்கின.

                                        திறன்மிக்க தேவர்களின்  அணிவகுப்பு 

எட்டுதிக்கும்             காப்பவர்கள்,

            எட்டாப்புகழ்             நவவீரர்,

பதினோரு             உருத்திரர்கள் ,

            பன்னிரண்டு             சூரியர்கள்.                                                                                493.

சிவனருளுடைப்             பூதங்கள்,

            சிவனடியார்க்            கணங்கள்,

தவமுருக             மாமுனிகள்,

            தவமாக             நடைபோட்டனர்.                                                                             494.

                                        பொருள் 

   அட்டதிக்பாலகர்கள், நவவீரர்கள்,ஏகாதசருத்திரர்கள், த்வாதச ஆதித்யர்கள் 

அணிவகுத்தனர்.

   சிவனது பூதகணங்கள்,  சிவனடியாராகிய   கணங்கள்,முருகனையே 

வணங்கும் தவமுனிவர்கள்,ஆகியோர்  இப்பொறைத் தவமாகக் கருதிப் 

பீடு  நடைபோட்டனர்.

                                        அடியவர்க்கூட்டம் 

காவடித்தோள்             கந்தனடியார் ,

            சேவடிசேர்             செந்திலடியார் 

பாவடிபுனை             பைந்தமிழர்,

            தேவப்படை             வீரரானார்.                                                                                495.

                                        பொருள் 

            தேவரைக்  காக்கும்  படையினில்  எப்பொழுதும்  காவடி   தூக்கி 

முருகன்புகழ்  கூட்டும்  அடியார்கள், செந்திலாதிபதி   சேவடியைப் 

போற்றும் அடியவர்கள்,முருகன்மீது  பாமாலை  புனையும்  பைந்தமிழ்க் 

கவிஞர்கள் ஆகியோரும்  முருகன்  படையில்  வீரராகச்  சென்றனர்.

                                        மாலும்பிறரும் 

மாலொடு             நான்முகனும்,

            காலோடு             கவின் தீயும் ,

மகிழ்வோடு             இந்திரனும்,

            காலனுமே                படைநடந்தார்.                                                                     496.

                                        பொருள் 

            திருமாலும்,   நான்முகனும், காற்றும்,அக்கினியும், இந்திரனும், இயமனும் 

அவ்வணிவகுப்பில்  நடந்து சென்றனர்.

                                        முருகனும்  நடந்தான் 

வல்லவனின்             நல்லாசி,

            தொல்லோரின்             தண்ணாசி ,

பல்லோரின்             பணிவுவாழ்த்து,

            நல்முருகன்             நனிநடந்தான்.                                                                            497.

                                        பொருள் 

            எல்லாம்  வல்ல சிவபெருமானின் நால்லாசியும், தொன்மை   வாய்ந்த 

முனிவர்களின்  தண்மைமிகுந்த  வாழ்த்து,பலப்பல  மக்களின்  பணிவான 

வாழ்த்துக்கள்  இவைகளோடு கூட ,முருகப்பெருமானும்  அவ்வணிவகுப்பில் 

அழகே  உருவாகவும்,  வீரமே   விளைக்களனாகவும்  நடந்தான்.


                                        12. போர்   பாடியது .

                                        வலம்வரும்படை 

பலகாலும்             அலைமோதும் 

            உலகாளும்             நிலைகாணும் ,

களங்கண்ட ```கடல்நாடு 

            வலம்வந்த             நலப்படையே.                                                                             498.

                                        பொருள் 

        உலகை   ஆள்வதற்கான  நிலையான   ஆட்சி  அமைக்கவே, பலயுகங்களாக 

அலைமோதிக்கொடிருந்த  நிலையில், இன்று  அரக்கர்களை   அழித்தே 

தீருவது, என்ற நோக்கத்தோடு களம்காண  முற்பட்ட   தேவப்படை 

செந்திக்கடல்   நாடு போருக்குப்   புறப்பட்டு நீண்ட   வலம் வந்தது, முருகன் 

தலைமையின்  அமைந்த  நலப்படை.

                                        பயணப்பணி 

நெடுந்தூரக்             கடும்பயணம் 

            உடுக்கூட்டம்             தொடுதூரம்,

சுடும்வெய்யில்             நடுங்குபனி 

            மடுக்கடலுள்             தடுப்பணைகள்.                                                                    499.

                                        பொருள் 

            மகேந்திரபுரம்    நோக்கிச் செல்கையில்  படைகள்   பல்வேறு  

துயர்களைச்   சந்திக்க  நேரிட்டது;நெடுந்தூரம்செல்லவேண்டும் .கடுமையான 

பயணம்.தொடுகின்ற  தூரத்தில்   விண்மீன்கள்   கண்சிமிட்டும்;  சுட்டெரிக்கும் 

வெயில்;நடுங்கவைக்கும்  குளிர்; கடல்வழி  ஆங்காங்கு   கடற்பள்ளங்கள்;

அதனைத்    தாண்டிடத்   தடுப்பணைகள்   கட்டிச்செல்லுதல் துயரை நல்கும்.

                                        படைக்கூட்டம் 

படையானை ;            மடக்குதிரை;

            தடத்தேர்கள்             நடைவீரர் ;

கடைவரையில்             படைச்சீர்மை ;

            இடையிடமிலா             எழில்சிவப்படை.                                                                500.

                                        பொருள் 

            செல்லும்  வழியெல்லாம்    நிறைந்து நிற்கும்   யானைப்படை; குதிரைப் 

படை,தேர்ப்படை;காலாட்படை  முதல் தொட்டுக்    கடைசிவரை    பார்க்க 

இயலாத  அகலமும்  நீளமும் கொண்டது.அதுவே   அழகுடைச்சிவப்படை  

ஆகும்.

                                        படைகளின் பிரிவு 

வானத்துத்             தேவர்படை,

            மோனத்து             முனிவர்படை ,

தானத்துத்             தமிழர்ப்படை,

            ஞானத்துக்             கூறுபடை .                                                                                    501.

                                        பொருள் 

            தேவர்களின்    வானப்படை ; மோனமுனிவர்களின்  படை; 

தானம்செய்வதில் சிறந்த தமிழர்ப்படை ; ஞானத்தில்  சிறந்தோரின் அறிவுசால் 

படை என   நான்கு வகை  விளங்கின. 

                                        பாவபூமி ;பாசறை  புண்ணியத்தானம் 

பகைநாட்டின்              முகைகண்ட 

            வகைமால்தான்             தகைச்செய்தி 

பகைப்பாவச்             சிகைநாட்டில் 

            புகுவதன்முன்             புகுபாசறை......                                                                        502.

                                        பொருள் 

            மகேந்திரபுரியை    நெருங்கிய  திருமால்   பாவபூமியாகிய   இந்நாட்டில் 

காலடி வைக்கும்முன்   முருகக்கடவுள்   நம்  எல்லையில்  அமைந்த  

பாசறையில் முதலில்  தங்கட்டும்; பின்னர்  இந்நாட்டில்  நுழையலாம்'

என்றார்.

                                        பாசறை 

பாசறையைப்             படைத்தனர்சுரர் 

            வீசுபுகழ்             வேலவனும்,

பாசறையில்             போர்ப்பணியை 

            ஈசனருள்             இயற்றலுற்றார்.                                                                             503.

                                        பொருள் 

            விண்ணகத்தச்சர்களும் பிறரும் கடல்நடுவே  பாசறையை  அமைத்தனர்.

ஈசனின்  அருளோடு   அப்பாசறை  அமர்ந்து,  முருகன்    போர்ப்பணியைத் 

துவக்கினார்.

                                        முதல்நாட்போர் 

கோதைவேல்             தூதவாகு, 

            பூதப்படை ,   தொலைத்திடவே 

ஆதவச்சிறை             சீதமகனை 

            அழைத்துவருக             என்றனன்சூர் .                                                                      504.

                                        பொருள் 

            அன்னையின்  அருவேல்தாங்கிய  குகன்,  வீரவாகு,  பூதப்படை  

ஆகியோரை    அழித்திடவே  ஆதவனைச்சிறையில்    வைத்த   தனது  அன்பு 

மகன்    பானுகோபனை   அழைத்துவருமாறு    ஆணையிட்டான்.  

                                        சூரன் உருக்கம் 

வந்தமைந்தன்             வணங்கிபோற்றித் 

            தந்தையே 1            தருகபணி!

மைந்தனே!             முகில்மேகம் 

            தந்ததுதுயர்;            தவிர்த்திடவே .....                                                                         505.

                                        பொருள் 

            வந்த  பானுகோபன்  தந்தையை   வணங்கிப்போற்றினான்; தந்தையே!

எனக்கான  பணியைத்தாருங்கள்!  என வேண்டினான். சூரனும்  அன்போடு,

மகனே!  நம்மைச்சுற்றும்  போர்மேகம்   நமக்குத்  துயர்   தர  இருக்கிறது.

அதனால்  அத்துயரைப்போக்கிடவே    உன்னை  அழைத்தேன்  "என்றான்.  

                                        செயல்  ஏற்க 

கந்தனைத்             கசடர்தனை 

            அந்தமிலா             தாக்கிடவே 

உந்தனை             அழைத்தேன்,

            உறுவினை             ஏற்றிடுவாய்!                                                                                506.

                                        பொருள் 

            கந்தனையும்,   அவன்  கூட்டத்தாரையும் அடியோடு   அழித்திட   உன்னை 

அழைத்தேன்;நான்சொல்லும்  செயலை   ஏற்றிடுவாய்! இன்றே  

செயலாற்றுவாய்!  என்றான்   சூரன்.

                                        சூரனின்  வேண்டுகோள் 

சிந்துநீர்த்துளி             சிறுவன்படை'

            அந்தமாதி             இல்லாக்கோன்;

உந்துபோரினை             உளம்விரும்பாப் 

            பந்தமான             மைந்தன் நீ.                                                                                     507.

                                        பொருள் 

             அந்தச்சிறுவன்   முருகனது  படையானது   சிந்துகின்ற    நீரின்  

துளிபோல்   திவலைபோல்  அடர்த்தியும்,வலிவும்   இல்லாததாகும்.  அவனோ 

அந்தம்  ஆதி இல்லாத  தெய்வக்குமாரன். அவன்போன்றோருடன்    

 போராற்றவே    விரும்பாத  போராற்றல்  மிக்க  மைந்தன்  நீ  ஆவாய்.உன்னால் 

யாரையும்வெல்ல     இயலும்.

                                        சூரன்  பானுகோபனைப்பாராட்டுதல் 

வெற்றிபெற்றிடப்             பொற்றுணை நீ;

            நெற்றிமகன்             நீள்படையை 

வெற்றிகொள்ள             உற்றவன் நீ ;

            மற்றதுபோர் ;            வெற்றியுறு .                                                                                508.

                                        பொருள் 

நெற்றிக்கண்ணில்  தோன்றிய முருகனின்  பெரும்படையை  வெற்றிபெற்றிடப் 

பெரிய துணை  எனக்கு  நீதான். அவனை  வெற்றிகொள்வதற்காகவே  

பிறந்தவன்  நீ. இனி  வரவேண்டியது  போர்மட்டுமே. வெற்றி  என்றும் 

உன்பக்கமே.  என்று மகனைப்பாராட்டினான்  சூரன் .

                                        பானுகோபன்   சூளுரை 

கந்தனழி             சந்தனழி 

            விந்தனழி             வேந்தனழி 

சந்திரனழி             தந்திரனழி 

            தந்திடுவேன்             நற்செய்தி.                                                                                509.

                                        பொருள் 

            கந்தன்  அழிந்தான்;பிரமன்  அழிந்தான்; திருமால்   அழிந்தான்;

இந்திரன் அழிந்தான்;  சந்திரன் அழிந்தான்; நாரதன்  அழிந்தான்;  இன்னும் 

பற்பலர்  தேவர்கள்  அழிந்தனர்;  என்ற  நற்செய்தியை  நான் உங்களுக்கு 

வழங்கிடுவேன்    தந்தையே!  என்று  சூள்   உரைத்தான்   பானுகோபன்.

                                        விடைபெற்றான்  பானு 

விடைபெற்றுப்             படையோடு,

            விடவிசண்டன்,            மடமுசலி 

கடமூர்க்கன்,            தடத்தசமுகன்,

            சுடர்சூலன்            பின்தொடர.......                                                                             510.

                                        பொருள் 

            தந்தையிடம்  வணங்கி  விடைபெற்றான்   பானுகோபன். படைகளோடும்,

பரிவாரங்களோடும்  புறப்பட்டான்.விடவிசண்டன்,மடமுசலி ,கடமூர்க்கன், 

தடத்தசமுகன்   தொடர்ந்துவரப்     போர்க்களம் நோக்கிச்சென்றான்.

                                        படைக்கலன்கள் 

ஆலம்வாள்             அயில்தோமரம் 

            சூலமுடன்             நேமிதாங்கிக் 

காலன்பின்             கருமேதிபோல் 

            ஓலமுடன்             ஓடிவந்தனர்.                                                                                    511.

                                        பொருள் 

            ஆழம்,வாள்  அயில் ,தோமரம்,சூலம்,சக்கரம்,தாங்கியபடி,இயமனின் 

பின்  ஓடிவரும்  எருமைபோல  பானுகோபன்  பின்  அரக்கர்கள்  ஓலமிட்டபடி 

ஓடிவந்தனர்.

                                        பானுகோபன்  புறப்பாடு 

முப்பதாயிரம்             முரட்பரிபூண் 

            ஒப்பில்லா             வுயர்தேரில்,

அப்புக்கடல்             அலைபோல 

            ஆர்ப்பரிப்பப்             புறப்பட்டான்.                                                                           512.

                                        பொருள் 

            முப்பதாயிரம்   முரட்டுக்     குதிரைகள்  பூட்டிய  நிகரில்லாத  உயர்ந்த 

தேரில்   அரக்கர்  கூட்டம்    அலைகடல்போல    ஒலியெழுப்ப  அரசிளங்குமரன் 

பானுகோபன்  போர்க்களம்  நோக்கிப்  புறப்பட்டான். 

                                        பாய்ந்துவந்தான்  பானு 

மாயபானு             சீயமாகிக் 

            காய்கதிரை             வென்றதுபோல் 

தூயதேவரை             மாய்த்துமகிழப் 

            பாய்ந்துவந்தான்             படைக்களத்தே.                                                                 513.

                                        பொருள் 

            மாய  பானுகோபன் சிங்கமாகி அக்காலை   வானத்தே    உதித்த 

சூரியனை  வெற்றிகொண்டதுபோல  நல்ல தேவர்களை  மாய்த்து  மகிழ 

விரும்பிப்  படைக்களத்தே    பாய்ந்துவந்தான்.

                                        நாரதன் பதற்றம் 

அறிந்தநாரதன்             விரைந்துவந்து 

            ஆறுமறி             ஆறுமுகமே !

செறிசூர்மகன்            பரியேறினான்;

            நெறிகளம்காண்!            நீதியாகும்.                                                                         514.

                                        பொருள் 

            பானுகோபன்   போர்க்களம்  வருவதையறிந்த    நாரதன்  முருகனிடம் 

ஓடோடி  வந்தான்;அனைத்தும்   அறிந்துள்ள    ஆறுமுக சாமியே! சூரன் மகன்  

பானுகோபன்  போர்க்களம்  வருகிறான்;  அவனை  எதிர்கொள்ள  நீயே களம் 

காணச்செல்!  அதுதான்  நீதியாகும்  என்றார்.

                                        பாகுவிற்கு  முருகன்  ஆணை 

சூரமகன்             பாரதிரப் 

            பதைபதைத்த             நாரதன்முன் 

வீரவாகு!            சூர்மகனுடன் 

            போர்புரியப்             புறப்படுநீ.                                                                                 515.

                                     பொருள் 

            சூரமகன்   பாரதிரப்  போர்க்களம்  வருகிறான்'என்பதால்  பதைபதைத்த 

நாரதரின்  முன்னர்,  முருகப்பெருமான்  'வீரவாகு!  போர்க்களம் நோக்கிப் 

போருக்கு  வருகிற  பானுகோபனுடன்  போர்  புரியப்  புறப்படு ! என்று  

ஆணையிட்டார்.

                                          வீரம்  பார்!நாரத!

வீரநவர்             கூர்ப்படையுடன் 

            கார்க்கழல்கள்             கனிந்துபோற்றி,

வீரனகல            நாரதரிடம் 

            வீரம்பார்!            உரைத்தான்குகன்.                                                                          516.

                                        பொருள் 

            ஒன்பது  வீரர்களும்,  படைகளுடன்  வந்து, முருகனின்  கால்களில் 

விழுந்துவணங்கிச்சென்றனர். நாரதரைப்பார்த்து,முருகன்  வாகுவின் 

வீரத்தைப்பார்! என்றுரைத்தான் .

                                        போர்க்காட்சி 

கரி கொண்டே             கரி மோதினர்;

            பரிகொண்டே             பரிமோதினர்;

அரி அவுணக்             கரிபரிகள் 

            அயர்ந்து வீழ்             அயராத போர் .                                                                        517.

                                        பொருள் 

            யானைகளோடு    யானைகள்  மோதின; குதிரைவீரர்களோடு  குதிரை 

வீரர்கள் மோதினர்;அவுணர்களும்,யானைக்கூட்டமும், 

குதிரைப்படைக்கூட்டமும்  அயர்ந்து   வீழ்ந்தபோதும்   அயராது   போர் 

நடந்தது.

                                        செம்போர் 

நிலைகுலை         அரைகுறை         படைகண்டு ,

தலைகுலை         பலவீனன்         பலம்பெற்றுச் 

சலசல         நலநல         வம்புமழை 

சிலைமுனை         சீறிடச்             செம்போரே .                                                                518.

                                        பொருள் 

            நிலைகுலைந்த  சிலப்படைப்பிரிவுகளைப்    பார்த்த   பலவீனனாகிய 

வீரனும்,  மிக்க பலம்  பெற்றும், தனது  வில்லில்  நாண்களை  அடுக்கடுக்காய் 

ஏற்றி,அம்புமழை  பொழிந்து  அவைகள்  சீறிச்சென்று   பகைவர்களை 

அழிப்பதைக்  கண்டு   மேலும்  வீரஉணர்வு  பெறும்    காட்சிகளைக் கொண்டு 

விளங்குவது  இந்தச்சீரிய  போராகும்.

                                        அஞ்சம்பு 

தோளைத்         துணிந்தது         வஞ்சவாளி;

தாளைத்         தலையைத்         தணித்தது ;

வாளைக்         கரத்தை         வெட்டியது;

நாளைத்         துணித்தது         பூதருக்கு.                                                                                519.

                                        பொருள் 

        அரக்கன் ஒருவன்   எய்த   அம்பு.ஐந்தாக   மாறி, ஒன்று  பூதர்  ஒருவரின் 

தோளை வீழ்த்தியது;  இருகால்களையும்    வீழ்த்தியது;  தலையைத் 

துண்டித்தது;  வாளைப்பற்றியிருந்த    கரத்தை  வீழ்த்தியது; முடிவாக 

அப்பூதரின்  வாழ்வையையே   வீழ்த்தியது.

                                        பானுகோபன் போர் 

செறுபோரில்         உக்கிரன்         செயிர்த்துவிழ ,

வெறிதண்டி        நெறிப்படை         இரிந்தேக ,

எறிவேல்         எண்வீரர்                அழிந்தேகச்

சூர         மகனவன்             வெற்றிகண்டான் .                                                                    520.

                                        பொருள் 

        போர்க்களத்தே   பானுகோபனை  எதிர்த்த  உக்கிரன்  நிலைகுலைந்துவிழ,

வீரம் மிக்க      தண்டி    என்பான்  அஞ்சிப்பின்வாங்க,  வீரகோளரி    தொட்டு,

எட்டுவீரர்களும்  பலப்பல   படைகளையும்    பயன்படுத்திப்   போர்புரிந்தும் 

தோல்வியுற,  சூரனின்  மகனான பானு   வெற்றி கண்டான். 

                                        வீரவாகு வந்தான் 

இந்நிலை         வீர         வாகுவும் 

முந்நிலை         யுணர்ந்து         முதுபோரின் 

நன்னிலை         நயந்து         நாடினானே ,

முன்னிலை         சூரமகன்         முன்புதானே .                                                                521.

                                        பொருள் 

        பானுகோபன்  முன்னர்  நின்று  போரிடமுடியாது   தவிக்கும்  தமது 

படையின்  நிலையை   மாற்றிட  வீரவாகு பானுவின்  முன்பு   வந்தான். 

                                        பானுகோபனின் விரிசின உரை 

வந்தனை         முன்புதான்;        குகனோ நீ ;

விந்தனோ?        விண்ணவ         வேந்தனோ?

சந்தநான்         முகனோ?            தூதுவன்;

கந்தனின்         தூதுவன்;        வந்தனை!                                                                              522.

                                        பொருள் 

        தன்  முன்  வந்த   வீரவாகுவைக்   கண்ட  பானுகோபன்  சினத்தோடு 

கூறினான், "எனக்கு   முன்பாக  வந்தவனே!  நீ   அந்தக்குகனோ?

இல்லை;திருமலோ ? இந்திரனோ?நான்முகனோ?  இல்லை;இல்லை;

தூதுவன்;  கந்தனின்    தூதுவன் ; நீயா  என்முன்   வருவது? என்றான்  

சினத்துடன்.

                                        வெஞ்சின உரை 

எந்தை         பழித்தாய்!        இளவலையே 

                    அந்தம்         ஆக்கினாய்!        அழித்தாய்,

முந்தை         முதுநகர் ;        மூடனே!

                விந்தை         வீர!நான்         இலாதது .                                                                  523.

                                        பொருள் 

        எங்கள்   நகருக்கே  வந்து, எம்  தந்தையைப்   பழித்திருக்கிறாய்?

அங்கு நடந்த  போரில் எனது  தம்பியைக்  கொன்றிருக்கிறாய்!

எங்களது  தொன்மை     நகரை அழித்திருக்கிறாய்!மூடனே! உன்னைப் 

பிடித்த  நல்லகாலம்  நான்    அங்கு இல்லாது  போய்விட்டேன்! நீ பிழைத்தாய்.

என்று  கத்தினான்.

                                        சூளுரை 

இன்றோ         இறுதியே         காண்பாய்!

மன்றல்         விடுத்த         மகபதியோ 

நன்றே         நனிசிறை         நாடுவன்;

வென்றி         ஒன்றையே         நாடுவேன் .                                                                            524.

                                        பொருள் 

        அன்று  பிழைத்த  நீ   இன்று     இறுதி   காணப்போகிறாய்!

ஆங்காங்கு  சுற்றிக்கொண்டிருக்கும்    இந்திரனை  சிறையில்    தள்ளுவேன்;

வெற்றி!வெற்றி! அது ஒன்றே   நான்  நாடுவது.  என்றான்  பானுகோபன்.

                                        வீரவாகு   விடை 

வெல்லும்         திறன்விட்டு         வீண்சொல்லைச் 

சொல்லும்         சூரனினும்         சூரனே !

வில்லெடு!        தொல் போர்         புரிந்திடு!

நல்லதும்         தீயதும்         கண்டிடு .                                                                                     525.

                                        பொருள் 

        பானுகோபனுக்கு  விடையாக  வீரவாகு,  வெற்றிபெறுவதை  விட்டுவிட்டு 

வீண்சொல்லைப்   பேசுகின்ற   சூரனே !வில்லெடுத்துப்   போரைப் புரி !

நல்லதையும்,தீயதையும்  காணவைப்பது  போரே    ஆகும்;  அதனைத்தொடு.

என்றான்.

                                        போர் முனைப்பில் 

விட்டனன்             சொல்லை         வீரவாகு.

தொட்டனன்         வில்லை         தீயமகன்;

மட்டிலாப்         போர்முனை         மாறியதே;

பட்டானே         பரிதி         பகலிலேயே.                                                                                526.

                                        பொருள் 

        பேசும்  பேச்சை   நீக்கினான்  வீரவாகு.  பானுகோபன்  வில்லைத்  

தொட்டான். போர்க்களம்  மாறியது;  பகலிலேயே    ஆதவனும்  

மறைந்ததை ப்போல் வானத்தை   மறைத்தன   அம்புக்கூட்டங்கள்.

                                         இருவரின் வில்லாற்றல் 

கதிரவன்         தேரது         காணவில்லை;

மதியது         மகிழொளி         காணவில்லை;

நதிநுழை         கடல்நீர்         காணவில்லை;

உதிஉடு         வானமும்         காணவில்லை.                                                                     527.

                                        பொருள் 

 இருவருடைய     கணை  வீச்சுக்களால்    உலகமே  நின்றுபோனது.

கதிரவனின்   தேரைக்  காணமுடியவில்லை; நிலவின்    நல்லொளியைக் 

காணமுடியவில்லை; கடல்நீரைத்  காணமுடியவில்லை; வானத்தே 

உதிக்கும்  விண்மீன்கள்  கூட்டமும்  காணமுடியவில்லை. அம்புகளின் 

கூட்டம்  அவைகளை  மறைத்துவிட்டன.

                                        அயர்வடைந்த   பானு 

முடியிழந்து,        அடிதளர்ந்து,            அலைவுற்றுப் 

பிடிதளர்ந்து         பேதலித்த          சூரமகன்,

கொடிதளர்ந்து             குலம்கண்ட         அவுணப்பகை 

கொடிசுற்றிய         மரம்போல             வாடலுற்றான் .                                                      528.

                                        பொருள் 

            போர்க்களத்திலே  பானுகோபன்    முடியிழந்தான்; அடி  தளர்ந்தான்;

மனம்  அலைவுற்றது ; பற்றிய   பிடி    தளர்வுற்றான்; பேதலித்தது  மீண்டும் 

மனம்; சூரபன்மனின்  வெற்றிக்கொடி  தளர்ந்து  விழுந்தது;  குலப்பெருமை 

தாழ்ந்தது;  அவுணப்பகை  வளர்ந்தது;பற்பல   இடையூறுகளும்   

கொடி  சுற்றிக்கொண்ட    மரம்போல  வாட்டமுற்றான்.

                                        நல்லமனம் 

அயவுயிர்த்து,        உணர்வுதோன்று         சூரமகன் 

நயப்படையெலாம்         அழியவே             கண்டான்;

"சயப்படை         வீரனே             வீரனென 

மயக்கமிலா         மனத்தால்         போற்றினான்.                                                             529.

                                        பொருள் 

        மயக்கம்  தெளிந்து, நல்லுணர்வு  பெற்ற   பானுகோபன் , களத்தைப் 

பார்த்தான்;நால்வகைப்  படைகளும்  அழிந்துபட்டன; துன்புற்றான்; 

வெற்றிபெற்ற   வீரவாகுவே   வீரனாவான்"  என்று  முழுமனத்தோடு 

பாராட்டினான்.

                                        வஞ்சினம் 

நெஞ்சமது         நொடியில்             மாறிடவே,

வஞ்சினம்         கொண்டேன்நான்             வாகுதான் 

துஞ்சிடவே         தொடுபோர்         தொடுப்பேன்;

எஞ்சிடின்             இன்னுயிர்             துறப்பேன்.                                                                  530.

                                        பொருள் 

  பானுவின்  மனம்   நொடியில்   மாறியது. மனத்துள்    வஞ்சினம்   கொண்டான்;

வீரவாகு  இன்று மாலைக்குள்  இறந்திடவே  கடும்போர்  தொடுப்பேன்; அவன் 

உயிர் பிழைப்பின்   நான்  உயிர்  துறப்பேன்"  என்று  சபதம்  கொண்டான்.

                                        வாகுமுன்  தோன்றல் 

என்றே             வஞ்சினம்             கூறியவன்,

நன்றே             தேரேறிப்             போராற்ற 

இன்றே             அழிப்பனுனை             என்றுசொல்லி 

கன்றுசூர்             வாகுமுன்             தோன்றினான்.                                                         531.

                                        பொருள் 

        சூளுரைத்த   பானுகோபன்  தனது  தேரில்  ஏறிப்   போராற்றக்   களம் 

புகுந்து,வாகுமுன்  சென்று இன்று உன்னை  அழிப்பேன்'என்று 

சொல்லியபடித்  தோன்றினான்.

                                        புதுப்புதுப்போர் 

எதிரெதிர்             புதிராய்ப்             பாய்ந்தவம்புகள்;

முதிர்போர்             விதியாய்             விதிர்ந்தனவே;

கதிர்ச்சுடர்க்             கணைகள்             கொடித்தேர்களைப் 

பதராக்கும்;            பொடியாக்கும்             புதுப்புதுப்போர் .                                          532.

                                        பொருள் 

        இருவரும்  ஆற்றிய  போரிலே    எதிர்   எதிராகப்   பாய்ந்த  அம்புகள் 

புதிய  புதிராகப்பாய்ந்தன; முதிர்ந்த  போரின்   விதிப்படி  அவைகள் 

செயலாற்றின ;கதிரவன்போல்    சுடர்கொண்ட  கணைகள்   தேர்களை 

அழித்தன;பொடியாக்கின; இது  புது  வகைப்போராக    விளங்கிற்று.

                                        சீரிளம் போர் 

தேரை            மாற்றினர்;            தொடர்ந்த 

போரை             மாற்றினர்;            பொல்லாத 

சூறைக்             காற்றென             வீசினர்;

சீரைப்             பெற்றதே             சீரிளம் போர்.                                                                    533.

                                        பொருள் 

            அழிந்ததால்   தேரை   விட்டிறங்கி  வேறுதேர்    மாற்றிக்கொண்டனர்.

இதுவரை ஆற்றிவந்த    போர்முறைகளை    மாற்றிஅமைத்துக்கொண்டனர் .

பெரும்  சூறைக்     காற்றுபோல  பொருள்களை    வீசி எறிந்துகொண்டனர்.

இவர்கள்  இருவரும்  ஆற்றும்  போர்     உடையதாக   விளங்கிற்று.

                                        மோகப்படை 

வாகுவின்             வேகம்             சோகமாக்கப் 

போக             புத்திரன்             பெருந்துயரால் 

மோகப்             படையைக்             கைக்கொண்டான்;

ஏகுக !            புந்தியைப்             போக்குக".                                                                         534.

                                        பொருள் 

            வீரவாகுவின்   போராற்றலுக்கு   ஈடு கொடுக்க  முடியாமல்  சோகமான 

பானுகோபன்,பெருந்துயரடைந்து, மோகப்படையை எவிட   முடிவு செய்து,

மோகப்படையே  செல்க!  சென்று  மாற்றான்   மனதை    மயக்குக "என்று 

புகன்று  விட்டனன் .

                                        சடமாக்கியது 

புகன்று             விட்டான்             தகவில்லார் 

அகமது             போன்ற             மோகப்படை 

அகன்றது ;            அணைந்தது;            அருவீரரின் 

தகவினைத்             தாழ்த்தியது;            சடமானார் .                                                    535.

                                        பொருள் 

  மோகப்  படையை ஏவிய  பானு,  வாகுவின்    மனதை  மயக்கிடுமாறு   புகன்று 

விட்டதும், அது வீரரின்  தகவினை   அழித்தது. அவரைச்சடமாக்கியது.   

                                        வாகுவின் முடக்கம் 

சுடரும்             குறைந்தது             சேயவனின் 

படர்செயல்             குறைந்தது;            பவித்திரமாய் 

அடர்மனம்             அகன்றது;            அருந்தெளிவு     

முடங்கிக்             கிடந்தது.            அந்தோ!                                                                        536.

                                        பொருள் 

            மோகத்தன்மையால்   வாகுவின்  சுறுசுறுப்பு  குறைந்தது; துடிப்புமிக்க 

செயலாற்றும்    மறைந்தது;தூய்மை    மனம்  தகுதி இழந்தது;தெளிவற்று 

ஒளியற்றுக் கிடந்தான் வீரன்.   அந்தோ! பாவம்!  

                                        கோபனின்  கொண்டாட்டம் 

செயலிலா           வாகுகண்டு             சிரித்தான்;

அயலிலா             நிலைகண்டு             சிரித்தான்; 

பயமிலை ;            படைகண்டு,            போராற்றக் 

கயமிலை;             கார்மகன்             குதித்தான்.                                                                537.

                                        பொருள் 

        செயலிழந்து  கிடக்கும் வாகுவைக்கண்டு  வாய்திறந்து  சிரித்தான் 

கோபன்.  யாருமே  இல்லாமல்  தனியே  கிடக்கும்   அவனது  நிலைகண்டு 

சிரித்தான்;அவனால்      வந்த   பயம்  போய்விட்டது!தலைமை     தாங்கிய  

யானை   இதோ படுத்துவிட்டது! மகிழ்வால்    குதித்துக் குதித்துச் சிரித்தான்.

                                        பானுகோபன் வெறி 

பூதப்             படைமீது             எறிந்தான் சரம் ;

சீதப்             படைமீது             சிந்தினான்சரம் ;

பேதம்             பாராது             பொழிந்தன்சரம் ;

ஏதம்             ஈங்கிது!            எறிந்தான்சரம் .                                                                       538.

                                        பொருள் 

        பானு  மீண்டும்   போரைத்துவக்கினான் ; பூதர்களின்   படைமீது,  அமைதி

மிக்க படைமீது, வலிமிக்கவர்,வலியற்றவர் என்ற  வேற்றுமை    பாராமல் 

கணைமழை  பொழிந்தான். துன்பமழை   என்று  மகிழ்வோடு எறிந்தான் 

சரங்களை.

                                        முருகனருள் 

உயிர்கள்             யாவினும்                 உறைபவன்,

பயின்றதால்             படைமயல்             உணர்முருகன் 

வியன்படை             அமோகம்             விரித்திசைத்து 

மயலதைப்             போக்கி             மற்றிவண் வா!                                                             539.

                                        பொருள் 

        அனைத்து   உயிர்களிலும்  உறைந்துள்ள  மாக்கடவுள், போர்க்களத்தில் 

நடந்த  மோகப்படை   மையல்    உணர்ந்து, அதை  மாற்றி   வீழ்த்தக்கூடிய 

அமோகப்படையை   மனத்துள்   நினைத்து,அதற்கு  ஆணையும்  இட்டான்.

அமோகமே !  சென்று   மயக்கம்  போக்கி  மீண்டும்  இங்கு வா!,என.

                                        நீங்கியது; சேர்ந்தனர்.

அறுமுகன்             ஆணை           அகன்றபடை,

உறுதுயர்             மயலதை               அகற்றியது.  

அருந்துயர்             நீக்கியோன்             அடிமலரை 

விருப்புடன்             வணங்கி,            விரைந்தனர்களம் .                                               540.

                                        பொருள் 

            முருகனின்   ஆணையை  ஏற்ற அமோகப்படை  சென்று,அவர்தம் 

மயக்கத்தைப் போற்றியது.    மயக்கமென்னும்   துயர்   நீங்கப்பெற்றோர் 

அருள்காட்டிய   ஆறுமுகனை  விழுந்து வணங்கிப்போற்றினர் .உடன் 

போர்க்களம்  நோக்கி  விரைந்தனர். 

                                        அச்சத்தில் பானு 

மயலால்             அயலான்             மதித்திடுவான்,

நயமே             நடப்பன் ,            எதிர்க்கமாட்டான்,

சயமே .            எனநினை             சூர்மகன்,

பயமே             கொண்டான்             பார்த்ததுமே.                                                            541.

                                        பொருள் 

        மயக்கமடைந்த  வாகு  வெளியேறியதால்   பூதப்படை  நம்மை  மதிக்கும்;

பணிந்து  நடப்பர்;எதிர்க்கமாட்டார்"  என்றும்,  வெற்றி  நமதே"என்றும் 

நினைந்து  மகிழ்ந்த பானுகோபன்  வாகுவைக்    களத்தில்   கண்டதும் 

வெலவெலத்துப்போனான்.  

                                        சிவப்படை 

வணங்கி             எடுத்தனன்             வீரவாகு;

அணங்கொரு    பாகனின்             அருமாப்படை;

குணப்படை             விலக்கிட             இணைப்படையைக் 

கணமே             மறந்தான்;            காலமுமிலை ;                                                         542.

                                        பொருள் 

        களம்  வந்த   வீரவாகு  பகைவனை  அழிக்கவேண்டும்  என்ற   ஒரே 

நோக்கத்தில், வணங்கிப்போற்றிச் சிவப்படையை  எடுத்தான்.  அதுகண்ட 

பானுகோபன்,  அப்பெருமை  மிக்க படையைத்  தடுக்க,   அதற்கு  நிகரான 

படை,அல்லது   அதே  படை நினைத்தான்;நினைவில்  வரவில்லை; 

அப்படையை  அவன் எடுத்தும்  அருச்சித்தும் வரவில்லை; இனி  எடுத்துவர 

நேரமும்  இல்லை;பாவம்!  என்னசெய்வான்? 

                                        மறைந்தோடல் 

வெல்லல்             அரிதினி             வாகுவைநான் .

வெல்லவோ             வேண்டும்             தெய்வதப்படை;

செல்வேன்             நன்னகர் ;            கைக்கொண்டு,

வெல்வேன்             நாளை             வாகுவை,,,என,                                                            543.

                                        பொருள் 

            இத்தகைய  நிலையில்  வாகுவை  வெல்லமுடியாது. அத்துடன்    வரும் 

தெய்வமாப்படையையும் எதிர்கொள்ளவேண்டும்;   இரண்டிற்கும்  என்னிடம் 

படை  இல்லை; ஆதலின்   நான்  நகர் நோக்கிச்செல்வேன்;

தெய்வமாப்படைகளைக்    கைக்கொண்டு நாளை  வந்து வாகுவை   வெல்வேன் 

என்று  மனதில்   நினைத்த    பானுகோபன்.......   

                                        களம் விட்டோடினான் பானு 

அருவம்             ஆனான்             அரக்கமகன்;

உறுதேர்             விடுத்தே             உயர்பறந்தான்;

கருமேகக்             காற்றாய்ப்             பறந்தான்;

திருநகர்             உள்நுழை             திருமகன்.                                                                     544.

                                        பொருள் 

            மாயஉருவத்தை   எடுத்தான்   மாயவரக்கன் .  தேரை  வீட்டுக்  கீழிறங்கி,

வான்வழியே   வானத்தில்  பறந்தான்; மேகக்கூட்டத்தினிடையே   மேகமாகிப் 

பறந்தான்.மகேந்திரபுரி   நகருக்குள்   நுழைந்தான்  அந்நாட்டு   இளவரசன்.

                                        அரக்கர்  ஓட,   அமரர்  பாட.... 

தானவர்             தானறி             செய்தியினால் 

காணாக்             கண்வழி             ஏகினரே ;

வானவர்               வாகை             சூடியவளம் 

ஆனதால்             ஆடினர்;            பாடினாரே .                                                                    545.

                                        பொருள் 

        பானுகோபன்   மறைந்த செய்தி  அறிந்த   அரக்கர்கள்   எல்லோரும் 

யாரும்  பார்க்கஇயலாத   மாயஉருவத்தோடு  மறைந்தோடினர்.

பூதப்படையோ  பெற்ற வெற்றியை  வாகை  சூடிய   நிகழ்வை 

ஆடிப்பாடிக்  கொண்டாடினர்.

                                        அறப்போர் 

மறைந்தான்             மாண்டிட             மறப்போரெடு !

அறைந்தார்             அத்துணை             அமரர்களும்; 

விரைந்தே             ஓடியோன்             மீதுநாமே 

அறைதல்             அறத்தின்             இழுக்காகும்.                                                              546.

                                        பொருள் 

        பானுகோபன்  மறைந்தோடிவிட்டான்; அவன்  மாண்டிடவும்  மீண்டும் 

போரெடுத்து  அவனை இன்றே   அழிக்கவும்"  என்று  அமரர்கள்   பலரும் 

வீரவாகுவை  வேண்டினர்.  வாகுவோ   ஓடிப்போனவன்  மீது  போர்  தொடுத்தல் 

அறம்   ஆகாது. என்று  மறுத்துவிட்டார்.

                                        ஈசன்  அருள் 

பாசறை   மேட்டில்             பரன் தாளினை 

நேசமுடன்             வணங்கி,            நீளருள் 

வாசமலர்             பெற்றோன்             வீரவாகு;

ஈசன்             அருள்தான்             இன்பமாகும்.                                                                    547.

                                    பொருள் 

 போர்க்களத்தே  ஒவொரு  நிலையிலும்  மாமுருகன்    சேவடிகளை  அன்போடு 

வணங்கி,  அவருடைய  அருளென்ற நறுமணமலரைத்    தலையில் 

சூடிக்கொண்டவன் வீரவாகு.    இறைவன் அருள்    என்றும்  இன்பம் 

பயப்பதல்லவா!

                                        சூரனின்  சோகம் 

மைந்தன்              செயலால்             மனம்மருவி 

நந்தம்             படைகொடு             நான்செல்வேன் 

கந்தனை             வெல்வேன்             கவலற்க.

பந்தமாய்             உரைத்தான்             பன்னகச்சூர்.                                                        548.

                                        பொருள் 

        மறைந்தோடிவந்த  பானுகோபன்  செயலால்   மன    உளைச்சல்  அடைந்து 

வருந்திய சூரமாமன்னன் "யாரும்   கவலைப்படவேண்டாம்.   நம்முடைய 

படைக்குத்  தலைமையேற்று    நாளை   நானே   செல்வேன்; அந்தக்கந்தனை 

அழிப்பேன்;சோகமனத்திலே    வீரம் ததும்பப்  பேசினான் .

                                        இரண்டாம் நாள் போர் 

                                                    சூரன் போர் 

கோடிக்கோடிக்                 கொணர்ந்தனர்படை ;

            கோடிகோடி                     கரி,பரி,தேர்,

நாடிநாடி              நற்றிறச்சீர் 

            பாடிப்படை             ஆடிவந்தன.                                                                                549.

                                        பொருள் 

அனைத்துலகங்களிலிருந்தும்,   அண்டகோள்களிலிருந்தும் ,கோடிகோடிப் 

படை கொண்டுவந்து நிறுத்தினர்.  நல்லதிறனும் ,சிறப்பும்  உடைய  யானைகள்,

குதிரைகள்,தேர்கள்   மற்றும்  காலாட்படைகளும்   வந்து  குவிந்தன.

                                        பூதப்படை 

இன்றே பணி !            குன்றன் அணி 

            என்றே குணி             மன்றல் பிணி 

வண்டார் மணி             விண்ணோர் துணி 

            வந்தது சனி             வளமே இனி .                                                                                550.

                                        பொருள் 

  அரக்கர்களை   அழித்திட  இன்றே  தொடங்குவோம்  நமது    போர்ப்பணியை.

இது  குன்றுதோறும்  நின்று   குவலயம்  காப்போன்  அணியாகும். நல்லகுணம் 

கொண்ட  குணவானை   நாடுக; நாட்டுநகரங்களில்  பிணியாக  ஆளும் 

அரக்கரை  அழித்திடுவோம். விண்ணவர்கள்   துணிவு  கொண்டுவிட்டனர்;

வண்டுகள்  ஆர்ப்பரிக்கும்  மணியான முருகன்   மாலையை அணிந்துவிட்டார்.

அரக்கற்களைப்  பிடித்துவிட்டது   சனி; அவர்களுக்குத் துயர்  ;நமக்கு   நலம் 

தான்.

                

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக