உ
ஞானமலை அலங்காரம்
சரவணபவ ஓம்
காப்பு
ஞானமா மேலோனே! ஞாயிற்றின் வெண்ணிலவின்
மோனமா வேலவனின் மேதக்க ----------- ஞானமா
பாமாலை சீர்மேவு பாவால் அலங்காரத்
தேமாலைத் தீந்தமிழ் கா
பொருள்
ஞானங்களை அருளும் ஞான ஆசானாம் உயர்ந்தவனே ! வீரத்தின்
ஞாயிறாகவும், ஈகை இரக்கம் கருணையில் தண்மை மிகுந்த நிலவாகவும்,
விளங்குகின்ற அழகையும், அமைதியையும் கொண்ட வேலவனின்
தந்தைக்கே உபதேசம் செய்த மிக்குயர்ந்த ஞானத்தை,ஞான மேன்மை
போற்றும் பாமாலையாகவும், வீரம் கருணை,ஆற்றல், அழகு ஆகிய
சிறப்புக்களைச் சீர்மை மிக்கதாகிய ஆசிரியப் பாவகையால்
அலங்காரமாய், அலங்காரம் போற்றுகின்ற வருணனைகளால்
தேன்போன்ற சுவைமிகு மாலையாய் இனிய தமிழ் மாலையாய்
ஞானமலையில் வீற்று அருள் பாலிக்கும் முருகன் ஆதலின் " ஞானமலை
அலங்காரம்" என்ற பெயரில் படைக்க இருக்கும் பாமாலையைக் காத்தும்,
பாமாலைத் தலைவனைக் காத்தும், பாமாலையைப் படிக்கும்
அன்பர்களைக் காத்தும்,காப்பாற்றுவாய்! என்று ஆசிரியர் வேண்டுகிறார்.
விளக்கம்
1. நூலைப் படைக்கும் முன் காப்புச்செய்யுள் இயற்றுவது வழி வழி மரபு.
2. காக்கும் கடவுள் கணபதி ஆதலின் அவரைப் போற்றிய பின்னரே
நூலைத் தொடங்குவர்.
3. ஆசிரியரும் அப்பண்பு தழுவிக் காப்புச் செய்யுள் படைத்துள்ளார்.
4. நூலின் முதற்சொல் மங்கலமாய் அமைதல் வேண்டும்.
பெரியபுராணம் பாடிய சேக்கிழார் சுவாமிகளும்,திருமுருகாற்றுப்படை பாடிய நக்கீரர், இராமாயணம் பாடிய
கம்பநாடரும் "உலகம்" என்ற உயர்ந்தோங்கிய மங்கலச் சொலாலே
தமது காப்பியத்தைப் படைத்தனர்.
5. இந்நூலின் முதற்சொல் ஞானம் . நிறை மங்கலச் சொல் இது.
அனைத்தையும் அறியவும், இறைவனை அறியவும்,மங்கலங்களை
அறியவும் ஞானமே முதற்படி. ஆதலின் இச்சொல் மங்கலம் ஆகிறது.
6. இதன்பின் ஞாயிறு,வெண்ணிலவு,வேல்,பா, தீந்தமிழ் போன்ற சொற்களும் பயின்று இந்நூலை மங்கலம் ஆக்குகிறது.
7. நேரிசை வெண்பாவால் அமைந்தது இப்பாடல்.
8. ஞாயிற்றின், வெண்நிலவின் ஞானமா மேலோனே! என்று
விநாயகப் பெருமானுக்கும்,
ஞாயிற்றின் வெண்ணிலவின் மோனமா வேலவனே! என்று
முருகப் பெருமானுக்கும் அடைமொழியைச் சிறப்பாகக் கொள்க.
9. மூன்றாம் அடியில் அமைந்துள்ள "சீர்மேவு" என்ற சொல்
மத்திம தீவகமாய் நின்று, சீர்மேவு பாமாலை,எனவும், சீர்மேவு பாவால்,
என்று நின்றும், சீர்மேவு அலங்காரம் என்றும் நின்று பொருள் தருகிறது.
10. "தேமாலைத் தீந்தமிழ்" என்ற இடத்தில் தேனுடைய மலர்களால்
கட்டப்பட்ட பூமாலை. இனிக்கின்ற சொற்களால் உருவான தமிழ் மொழி.
தமிழ் மாலை. அது தேன்போன்றது; இனிமை உடையது .என்பதோடு
இனிமையும்,தேனும் கலந்த மொழி தமிழ் என்ற பொருளும் சுவைக்கத் தகுந்தது.
அவையடக்கம்
எண்சீர்க் கழிநெடில் ஆசிரிய விருத்தம்
சண்முகம் என்றுபோற்றிச் சாத்திரங்கள் பலசொல்லும்,
உண்முகச் சைவமணி உலகத்து மாச்சுடர்
பண்ணெடுத்துப் பாடுதலோ பேறுற்ற அருணகிரி
கண்ணான குமரகுருச் சான்றோர்க்கு நல்லருளாம்;
மண்துகளால் மாளிகையை மேல்மேலும் கட்டநினை
எண்ணம்போல் என்னாவும் ஏற்றகவி இயற்றிடவே
எண்ணிட்டேன்; இருந்தாலும் ஏரகத்தான் சீர்புகழைக்
கொண்டதனால் குமரனருள் காத்துயர்வு கொடுத்திடுமே.
பொருள்
சண்முகன் என்ற தாரக மந்திரத்தைப் போற்றியே சாத்திர நூல்கள்
எல்லாம் அவனைத் தலைவனாகப் படைக்கின்றன.
உள்ளமெல்லாம் ஒரு முகமாய் நின்று சிவா வழியாம் சைவநெறி போற்றும், ஒளிர்மணி அவன்; உலகில் விளங்கும் ஞாயிறு,நிலவு, அக்கினி
இவைகளை அருளிய, இவைகளுக்கு மேலான பெருஞ்சோதி அவன்.
அவனைப் போற்றுதல், பாராட்டுதல் எல்லோர்க்கும் அமையாது. குமரன்
போற்றும் குணக்கவிக் குன்று எனப்பெயர் பெற்ற அருணகிரியார்,கண்ணால்
கந்தனைக் கண்ட குமரகுரு போன்ற சந்தக்கவிச் சான்றோர்களுக்கே அது
சாலும்.
கைநிறைய தூசிமண்ணைச் சேர்த்து வைத்துக்கொண்டு,மிக உயர்ந்த
மாளிகையைக் கட்ட விரும்பும் தாழ்ந்தோன்போல் அவன் கொண்ட
பேராசை எண்ணம்போல் அடியேனும் என் நாவால் ஞானமலை
முருகனைப் போற்றும் அலங்காரம் என்னும் கவிதையை இயற்றிட
முனைகின்றேன்.
சொல்லும் சொற்கள்,மன எண்ணத்தின் வெளிப்பாடு, அவ்வெளிப்பாடும்
ஞானகுரு சுவாமி மலையான் ஞானமலையான் புகழையே பாடும். "முருகன்
புகழ் என்ற ஒன்றையே கொண்ட இந்நூல் முருகன் அருளுக்குப் பாத்திரம்
ஆகும்" என்ற மனம் இயற்றுகிறது இந்நூலை.
கந்தனே! ஞானமலை ஞானமுருகா! எளியேன் சொல்லை ஏற்று
இரக்ஷிப்பாய், என்று பணிந்து போற்றுகிறார் ஆசிரியர்.
அவையடக்கம்
அவை முன்னர் அடக்கம் கொள்ளுதல் மரபு. அதேவழியில் நூலை
இயற்றும் ஆசிரியன் தன்னைத் தாழ்த்தி அவையினரை உயர்த்தி
அமைத்தல் அவையடக்கம் ஆகும்.
1. சண்முகன் புகழ் பாடும் கவிஞன் என்ற தகுதி தனக்கில்லை.
2. அருணகிரியார்,குமரகுருபரர் போன்றோரே ஆறுமுக அருட்கவிஞர்
ஆவர்.
3. மண்துளி கொண்டு மாளிகை கட்ட நினைக்கும் மட மனம்.
4. ஆயினும் "முருகன் புகழ்" என்ற கருத்தாழம் அருள்பெற வழிவகுக்கும்.
5. முருகனும் ஏற்றிடுவான்.
6. முருக பக்தியே இந்நூல் இயற்றிடப் பேரருள் சுரக்கவைக்கும்.
ஞானமலை அலங்காரம் . 1
மலையுற்றாய் ஞானமாய்; மலருற்றாய் மோனமாய்;
மகிழ்வுற்றாய் கானமாய் ; மதியுற்றாய் வானமாய் ;
கலையுற்றாய்க் காட்சியாய்க் கனிவுற்றாய் மீட்சியாய்;
கனலுற்றாய் வீழ்ச்சியாய்; கதியுற்றாய்ச் சாட்சியாய்;
நிலையுற்றாய் நித்தியமாய்; நினைவுற்றாய்க் கத்தியமாய்;
நிதியுற்றாய்ச் சத்தியமாய்; நிகருற்றாய்ப் புத்திரனாய்;
தலைஞான மலைமீது கலைஞான வள்ளியோடு
தலைவனாய்த் தத்துவமாய்த் தரணிகாக்கும் சண்முகனே!
பொருள்
ஞானமாம் மாமலையை உனதாக்கிக் கொண்டவனே! மோனத்
தவத்திலே மலராய் மலர்ந்து,மணம் வீசுபவனே! இசையாய்,ஸ்வரமாய்
மாறி உலகோர் மனமெல்லாம் நிறைந்து மகிழ்ச்சி ஆனவனே! பரந்த
வானத் தண்மதியாகிக் குளிர்ச்சியும், மகிழ்ச்சியும் அளிப்பவனே!
தன்னை வணங்குவோருக்குக் காட்சி அளித்துக் கலையாய்
நிற்பவனே! ஆன்மாக்களை மீட்டெடுத்துப் பிறவிப்பிணி அறுத்துச்
சிவப்பேறு நல்கும் கனிவுடையவனே! அரக்கர்களையும், தீய
சகதிகளையும் வீழ்ச்சி அடையச் செய்வதில் கனலாய்த் தீப்பிழம்பாய்
ஜொலிப்பவனே! தன்னை நாடிவரும் ஞானிகளுக்கும், முனிவர்களுக்கும்,
நல்லடியவர்களுக்கும் காட்சி கொடுத்து, நற்கதி அருளும் ஆண்டவனே!
அழியாத நித்திய ஜோதியாய் நின்று,நிலைத்து வாழ் தெய்வமே!
வேதங்களாகிய கத்யத்தால் (கத்யம்= செய்யுள்) போற்றப்பட்டு, மூவேழ்
உலகத்தோர் நினைவிலும் நிற்பவனே! உண்மை என்னும் உயர்ந்த
வடிவமாகி, அதனையே அழியாப் பொருளாய்க் கொண்டவனே! மகேசன்
மகனாகத் தோன்றி மகேசனுக்கே உபதேசம் செய்து, அவனுக்கு
நிகரராகி, அவனின் மேலாக அவனது நாதனும் (சுவாமிநாதன்)
ஆனவனே!
உயர் ஞான மலைமீது, மான் பெற்றெடுத்த வள்ளி நாயகியோடு,
தரணி போற்றும் தலைவனாய்த் தத்துவப்பொருளாய் நின்று மூவேழ்
உலகங்களையும் காக்கும் சண்முகனே!
எங்களையும் காத்து அருள்வாய்" என்று ஆசிரியர் வேண்டுகிறார்.
விளக்கம்
1. மலருற்றாய் மோனமாய் =
மோனம்= மௌனம். தவம்
மலர்--- வண்ணம் கொண்டது;மணம் உற்றது.
அரும்பாகி, குவிந்து, இதழ் விரித்து மணம் பரப்புவது.
மோனம் = அசையாத தன்மை. அமைதி காத்தல். பற்று விட்டும்,விடாமலும்.
அறவே பற்றறுத்தல் . பேறடைதல்..
2. கனிவுற்றாய் மீட்சியாய்=
கனிந்த கனி. கனிவுடைமை.
ஆன்மாக்களின் மீது கனிந்த இரக்க உணர்வு.
மீட்சி = மீட்டெடுத்தல்.
பிறவிப்பிணி மீண்டும்,மீண்டும் வாராது தடுத்தல்.
சிவப்பேறு அளித்தல் .
3. கதியுற்றாய் சாட்சியாய் =
முருகனே கதி என்றடைதல் .
தவமும், பூஜையும் முருகனே. என்றிருத்தல் .
சாட்சி = சூரபன்மன் = மயில், சேவல் .
குமரகுருபரர், அருணகிரி மற்றும் பலர் ஆட்கொண்ட முறை.
4. நிகருற்றாய் புத்திரனாய் .....
நிகர் = சரி சமானம்
புத்திரன் = முருகன்
தந்தை = சிவபெருமான்
தந்தைக்கு மகன் பிரணவ உபதேசம் செய்தான். அதனால்
" சுவாமி நாதன்" ஆனான்.
நிகராக மட்டுமன்று; மேலும் உயர்ந்த தன்மை அடைந்தான்.
5. கலை ஞான வள்ளி .......
கலை களும் ஞானமும் பெற்று விளங்கும் வள்ளிப் பிராட்டியார்.
கலை = மான்
ஞானம் = சுமந்து பெற்றெடுத்த குழவி
வள்ளி = வள்ளிப்பிராட்டியார் .
பாடல்.. 2
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
சண்முகா! சண்மதச் சாத்திரச் சான்றே!
சங்கத் தமிழே!
வண்ணக் கலாப வளமயில் வாகன!
வரகுண! சரவண!
மண்ணும் மலையும் மதியும் ஆனவ !
மலரடி மாதவ!
விண்ணிகர் ஞான மலைவாழ் வித்தக !
வியந்துனைப் பணிந்தேன்.
பொருள்
ஆறுமுகா! சைவம், சாக்தம், சௌரம், வைணவம், கௌமாரம், காணாபத்யம் என்ற ஆறுவகைச் சமய நூல்களெல்லாம் போற்றுகின்ற முதன்மைச் சான்றானவனே!
முச்சங்கத்திலும் போற்றப்பட்ட முத்தமிழாக விளங்குபவனே!
வண்ணங்கள் ஒளிர்விடும் தோகை கொண்ட மயிலை ஊர்தியாகக் கொண்டவனே!
வணங்கும் அடியவர்களுக்கு வரன்கள் வழங்கிக் காப்பவனே!
சரவணப் பொய்கையில் மலர்ந்தவனே!
மண்ணாம் உலகமும் நீ, வளர்ந்து உயர்ந்த மலையும் நீ, வானில் வந்து தண்ணொளி வீசும் நிலவும் நீ, மலர் போன்ற பாதங்கள் கொண்டு விளங்கும் மாதவனே!
விண்ணுலகிற்கு நிகராய் விளங்கும் ஞானமலையில் வீற்றிருக்கும் ஆசானே!
உன் பெருமை, உன் புகழ் வியந்து வியந்து உன்னைப்
பணிகிறேன்.
வேதாந்த மூலவன் ;
காலணி கழலில் கருணை மிக்கவன்;
காக்குமலைக் கந்தனே!
பொருள்
ஓங்கார மார்பினில் புண்ணியப் பூணூல் அணிந்தவன்;
நெற்றிக்கண்ணில் சிவபெருமான் தோற்றுவித்த நெருப்புப்
பிழம்பானவன்;
இசை,நடனம், கூத்து ஆகிய நுண்ணிய திறன் வாய்ந்த கலைகளில்
தந்தையைப் போல் பெரும் பெருமை பெற்றவன்;
திருமாலின் சக்கரத்தைப் பறித்துத் தன் வெற்றியைப் பறை சாற்றிய
தாரகனையும், மாயங்கள் நிறைந்த அவனது கிரௌஞ்ச மலையையும்
அழித்த வேலாயுதத்தைக் கரத்திலே ஏந்தியவன்;
அழகே உருவான தோகையை உடைய மயிலை ஊர்தியாகக்
கொண்டவன்;
மறைகளுக்கும், ஞான சாத்திரங்களுக்கும் மூலமாயும், முதல் குருவாயும்
விளங்குபவன்;
அடியவர்களைக் காப்பதற்காகத் தனது பாதங்களில் அணிந்த வீரக்
கழலணியையும் கூடக் கருணை கொண்டதாக அமைத்துக் கொண்டு
உலகைக்காப்பவன்;
அப்பெருமான் வீற்றிருக்கும் ஞானமலையில் வீற்று அருள் பொழியும்
கந்தப்பெருமானே! உன் சேவடிகளைப் போற்றுகிறோம்.
பாடல்- 46
கந்தா! கடம்பா! கார்த்திகை மைந்தா!
காங்கேயா! ஒற்றைத்
தந்தனின் தம்பியே! தத்துவ மூலமே!
தங்கவள்ளி காந்தனே!
தந்தையும் தாயும் ஆனவனே! தர்மச்
சிந்தை வாழ்பவனே!
செந்தீயே ! செந்தூர்த் தலைவ! போற்றினேன்.
செம்மலைச் செவ்வேளே.
பொருள்
கந்தனே! கடம்பனுக்கு அருள்புரிந்து ஆட்கொண்டவனே! கார்த்திகை
விண்மீனில் அவதரித்து, வானத்து விண்மீன்களான கார்த்திகைப்
பெண்களால் வளர்க்கப்பட்ட மைந்தனே! கங்கையின் புதல்வனே!
ஒரு தந்தம் கொண்டு உலகைக் காக்கும் விநாயகப் பெருமானின்
தம்பியே! தத்துவார்த்தங்களின் மூலமாகவும், முதற் காரண கர்த்தாவாகவும் விளங்குபவனே! அழகே உருவான வள்ளியம்மையின்
மனத்தைக் கொள்ளை கொண்டவனே! மூவேழ் உலக மக்களின்
தாயாகவும், தந்தையாகவும் ஆகிக் காப்பவனே! அறத்தை வளர்க்கும்
சிந்தையிலேயே வாழும் கடவுளே! சிவனின் நெற்றிப்பொறியில் உதித்த
தீச்சுடரே ! திருச்செந்தூரில் குடிகொண்டுள்ள தலைவனே! செம்மை
வாய்ந்த மலைகளில் எல்லாம் வீற்றிருந்தாலும் ஞானமலையில்
வீற்றிருப்பதையே விரும்பும் ஞான பண்டிதனே! உன்னை ப்போற்றி
வணங்குகிறேன். முருகனைப் போற்றினால் முத்தியும் கிடைக்கும்;
முழுமையும் கிடைக்கும்.
பாடல் --47
செவ்வாய் மலர்ந்ததால் சிறந்தது ஏரகம்;
செவ்வாய்ச் செவ்வரளி சிறந்தது செந்தூர்;
செவ்வாய் இதழில் சிலிர்த்தது திருத்தணி;
செவ்வாய் விரதம் சிறப்பளி பழனி;
செவ்வாய்த் தேவாள் சேர்ந்தது குன்றம்;
செவ்வாய்த் தேங்கனி சிதறும் சோலை;
செவ்வாய்க் கதிபதிச் செவ்வேள் வேளூர் ;
செவ்வாய் ஞான பண்டித மாமலையே.
பொருள்
பிரணவத்தின் பொருளைத் தந்தை ஆகிய சிவபெருமானுக்கு
விளக்கி உபதேசித்த செம்மையும் சீர்மையும் வாய்ந்த திருவாயை
உடையவன் சுவாமிநாதன் வீற்றிருக்கும் மலை சுவாமிமலை.
செவ்வாய்க்கிழமை தோறும் செவ்வரளி மலர்மாலை சார்த்தி
வழிபட்டால் , அந்தச் செந்திலாதிபதி நலமும் வளமும் நல்குவான்.
அழகும் இளமையும் வாய்ந்த வள்ளிமலைக் குறவள்ளியின்
செவ்வாயில் மேன்மை உதடுகளில் இன்பம் அனுபவித்து, மகிழவடைந்து
தணிகைமலையில் வீற்றிருக்கும் முருகன் மலை திருத்தணிகை
மலையாகும்.
செவ்வாய்க் கிழமை தோறும் உண்ணாநோன்பு மேற்கொண்டு,
கோயில் சென்று, முருகனை வணங்கிப் பூஜித்தால் அருளும் வரமும்
நல்குவான் பழனி ஆண்டவனாகிய முருகன்.
செம்மை ஆகிய அழகு முகமும், அருட்கண்களும் அன்புச்சொல் பேசும்
வாயும் கொண்ட இந்திரனின் மக்களாகிய தெய்வயானையை மணந்து
மகிழ்ந்தான் திருப்பரங்குன்றத்திலே எம்பெருமான் முருகன்.
செவ்வாயால் சுவைத்தால் தேன் போல் இனிக்கும் பழங்கள்
தானாகவே பழுத்து, மரங்களில் இருந்து சிதறி உதிரும் பழமுதிர்
சோலையிலே அடியவர்கள் வேண்டும் வரங்களை அருள்கின்ற
முருகன் வீற்றிருக்கின்றான்.
செவ்வாய் என்னும் அங்காரகனின் தலைவனாகி அவனையும்,
அடியவர்களையும் காத்து அருள்புரிகின்ற செல்வ முத்துக்குமாரசாமி
வீற்றிருக்கும் புள்ளிருக்கு வேளூர் என்னும், வைத்த்தீஸ்வரன் கோயிலை
வணங்கி அருள்பெறு க.
கருணை,இரக்கம், ஈகை, அருள் ஆகிய அத்தனைச் செல்வங்களையும்
வழங்குகின்ற ஞானபண்டித மாமுருகன் வீற்றிருக்கும் மலை
ஞானமலையே ஆகும்.
அறுபடை வீடுகளுக்கு நிகரான ஞானமலையைப் போற்றுவோம்..
பாடல்--48.
மாமரம் பட்டது, மயிலாய்ச் சேவலாய்;
மாங்கனி விட்டது, மாப்பழனி உதித்தது;
மாம்பூ மலர்ந்தது , மாக்குன்று மனத்தே;
மாவிலைத் தோரணம், மாவள்ளி திருத்தணி;
மாம்பிஞ்சு மாப்பிறவி; மாங்காய்ச் சஞ்சலம்;
மாம்பழம் சாயுஜ்யம்; மாங்கொட்டை முற்றுதவம் ;
மாஞ்சோலை மாநிழல் மனவமைதி மாக்கருணை;
மாமலையே ஞானமலை;மனம்குளிரப் போற்றுவமே.
பொருள்
போரிட இயலாத சூரபன்மன் மாயத்தால் மாமரமாக மாறி நின்றான்;
அம்மாமரத்தை முருகனின் வேல் இரண்டாகப்பிளந்தது. சிவபெருமானிடம்
பெற்ற வரம், முருகன் கருணை ஆகியவற்றால் சூரமரம் மயிலாகவும்,
சேவலாகவும் மாறியது. மயிலாக நாளெல்லாம் முருகனைச் சுமந்தது;
சேவலான சூரன் முருகன் தேர்க்கொடியாகி முருகன் புகழை
"கொக்கு அறு கோ" என்று நாளும் கூவிற்று.
சிவபெருமானிடம் நாரதரால் ஒரு ஞானப்பழம் காணிக்கையாய்க்
கொடுக்கப்பட்டது. அப்பழத்தைப் பெற விநாயகனும் முருகனும்
விரும்பினார்கள். இறைவனோ,யார் உலகை முதலில் சுற்றி
வருகிறார்களோ,அவரே இக்கனியை அடையலாம் ." என்றார்.
உடன் முருகன் தனது மயில் வாகனத்தில் உலகைச் சுற்றப்
புறப்பட்டான். சிந்தனை செய்த விநாயகர் தனது தாய் தந்தையர்
ஆகிய பார்வதி, பரமேஸ்வரனைச் சுற்றிவந்தார்; உலகே இறைவன்'
இறைவனே உலகு" அவர்களைச் சுற்றிவந்தால் உலகைச் சுற்றியதற்குச்
சமம்" என மனத்தில் கொண்ட அவர் செயலைக் கண்டு வியந்த
இறைவன் அவருக்கு அப்பழத்தை அளித்தார்.மகிழ்வோடு பழத்தை
விரும்பிச்சுவைக்க ஆரம்பித்தார். மூவேழ் உலகத்தையும் மிக மிக
விரைவாய்ச் சுற்றிவந்த முருகன் கயிலை வந்தவுடன் கண்ட
காட்சியால் மிகுந்த சினம் கொண்டார்; கனி, உறவு,தந்தை,தாய்,
போன்ற ஆசைகளை விட்டுவிட்டு நிலவுலகிற்கு வந்து தனியே
ஒரு மலையில் அமர்ந்துவிட்டார். அம்மலையே முருகன் விரும்பும் மலை
ஆயிற்று. சிவபார்வதிகள், தேவர்கள் எல்லோரும் வந்து முருகனை
இங்கேயே போற்றுகின்றனர்.எல்லோரும் முருகா! நீயோ ஞானக்கனி;
உனக்கு எதற்கு மாங்கனி ? என்று வினவியதோடு, மலையும்
பழம் நீ" பழனி என ஆயிற்று.
மாமரங்களிலே பூக்கள் மலர்ந்தன; வசந்த காலம் வந்தது; அரக்கர்களை
அழித்து மாமுருகன் வெற்றி பெற்றான்; அதனால் மகிழ்ந்த தேவேந்திரன்
முருகனுக்கு போர்வெற்றிப் பரிசாகத் தன்மகள் தேவயானையை
அளிக்க விரும்பினான்; மலர்ந்த முகத்துடன் நாணம் கொண்டாள் தேவா.
திருப்பரங்குன்றம் விழாக்கோலம் பூண்டது; தேவர்களும், முனிவர்களும்
வாழ்த்த தெய்வயானையை முருகன் மணந்தான்.
தினைப்புனத்திலே வாழ்ந்த வள்ளியின் தவத்தை நாரதர் எடுத்துரைக்க,
வள்ளிமலை சென்று, வள்ளியின் காதல் வேண்டி அவள்பின்னாலே
பலகாலம் சுற்றி அண்ணன் விநாயகன் உதவியால் அவளை மணந்து
திருத்தணிகை வந்த வள்ளிமணாளனை மாவிலைத் தோரணம் கட்டி
வரவேற்று மகிழ்ந்தனர் திருத்தணி அடியார்கள்.
மாமரத்திலே மலராகிப் பிஞ்சாகி வெளிவந்த அனைத்தும்
காயாவதில்லை; கனியாவதில்லை; உருவும் பெறும் ;உதிர்ந்தும் போகும்;
மானுடத் தன்மையும் மீண்டும் மீண்டும் பிறவி எடுத்து வீணே
அழிகின்றன; பிறவி பிஞ்சுபோல் ஆகும்; மாங்காயோ இனிப்பதில்லை;
புளிக்கும்; துவக்கும்; இனிக்கும் இப்படி மாறி மாறி அமைவதைப்போல்
மனித மனமும் சஞ்சலத்திற்கு உட்பட்டு உழன்றுத் துன்பம் அடைகின்றன.
மாங்கனியோ இனிமை கொண்டது; பிறவி எடுத்த பயனை அடைந்து,
சிவப்பேறு பெறுகின்றது. சில புளித்து விளங்குவதைப்போல் இடைப்பட்ட
ஆசாபாசங்கள் சிவப்பேற்றை அடைய விடாமல் தடுக்கும்.
மாங் கொட்டையோ வற்றி,உலர்ந்து முற்றிய முனிவன்போல் காட்சி
அளிக்கும்.
குளிர்தரும் மாஞ்சோலைபோல் ஞானமலை அருள் அளிக்கும்;
மாமர நிழல்போல் கருணைநிழல் நல்கும்; குளிர்ச்சியும் நிழலும்
மனதிற்கு அமைதி அருளும்;கருணை மிக்க மலை ஞான மலை;
அங்கே வீற்றிருக்கும் மாமுருகனைப் போற்றி நீண்ட நலவாழ்வு
பெறுவோம்.
பாடல்-49.
போற்றிடப் பொன்னாய்ப் பொருளாய்ப் புலர்ந்தவன்,
போற்றாது நிற்போமோ?
போற்றிட்ட தவச்செயல் போற்றிய தாற்றுப்படை
போற்றுகின்ற புத்தமிழோ!
தூற்றிட்ட தீயரக்கன் ஏற்றிட்டான் போற்றிட்டான்;
காற்றூர்தி; வீறுகொடி.
மாற்றிட்ட மாலைகளும், மாதவத்தின் மாப்பரிசோ!
ஊற்றுமலை உயர்ந்தோனே !
பொருள்
போற்றிடும் அடியவர்களுக்குப் பொன்னையும்,பொருளையும்
அருள்பவன், போற்றும் அடியவர்களுக்கு அவன் அளிக்கும் ஆனந்தக்
காட்சியே பொன்னாகவும் ,பொருளாகவும் விளங்குகிறது; அப்படிப்பட்ட
ஆறுமுகனைப் போற்றாமல் வாழ்வை இழப்போமா? போற்றுவோம்.
முருகனைக் காணவே, அவனருள் பெறவே பலகாலம் தவம்
இருந்தார் நக்கீரர். அவரது தவம் பலித்தது. நேரே காட்சி
தந்தான் முருகன்; கண்ட காட்சி அவரைக் கவிதை பாட
வைத்தது. அதுவே அழகிய திருமுருகாற்றுப்படை. பத்துப்
பாட்டிலே முதல் பாட்டான புத்தம் புதிய செந்தமிழ் முருகன் புகழை
முருகன் சிறப்பை விரிவாகப் பாராட்டியது.
போரிலே தோற்றுத் துவண்ட சூரபதுமனுக்கு முருகன்
கருணையோடு, தனது விஸ்வரூபத்தைக் காட்டினார். சற்றே மனம்
மாறிய சூரனின் ஆணவம் மீண்டும் தலைக்கேறியது.
வஞ்சகத்தால் தன்னை ஏமாற்றவே இது செய்தாயோ? என்று
முருகனைத் திட்டினான். மாயப்போர் புரியத் தொடங்கினான்;
கடல்நடுவே விண்ணையும் மண்ணையும் தொடும் மா மரமாய்
நின்றான்; தனது வேலாயுதத்தால் அவனை இருகூறாக்கினார்.
சிவனருள், முருகன் கருணை ஆகியவற்றால் மாண்டுபோகாத
அவன்,மயிலாகவும்,சேவலாகவும் மாறினான், முருகன் கருணையினால்.
மனம் மாறி அரக்கனும் முருகனை முதுகிலே நாளெல்லாம் சுமக்கும்
மயிலாகவும், முருகன் புகழைக் "கொக்கு அறு கோ" எனப்போற்றும்
சேவலாகவும் மாறினான்.
பாடல்- 50
உயர்ந்தமலை உணர்ந்தமலை உறுமுனிமலை ஒருமலையே;
உபதேச ஞானமலை உலகாளும் முருகமலை;
மயக்கமனம் மாற்றுமலை மலைவள்ளி மகிழ்ந்தமலை;
மலர்க்கூட்ட மணமாமலை மழைச்சாரல் குளிர்ந்தமலை ;
புயசயிலப் பன்னிரண்டான் புளகாங்கிதம் அடையுமலை;
புள்ளினங்கள் துள்ளுமலை புகழ்த்தோகை ஆடுமலை;
கயமுகனின் கருணையால் கல்யாணம் கண்டமலை ;
கவித்தமிழ்க் கவிதைமலைக் கந்தனுக்குக் கரம்குவிப்போம்.
பொருள்
தோற்றத்தாலும் புகழாலும் உயர்ந்து விளங்கும் மலை; பண்பை
ஞானத்தை, உணர்ந்தோர்கள் அமர்ந்து, தவம் இயற்றுவதால் எல்லாம்
உணர்ந்த மலை;முனிவர்களுள் மிக உயர்ந்த குறுமுனி அகத்தியர்
போற்றும் மலை; கயிலை, இமயம்,மேரு என்று போற்றத்தக்க மலைகளுள்
இம்மலையும் ஒன்றாகக் கருதும் சிறப்பினைப் பெற்ற மலை.
முருகன் ஞானபண்டிதனாக அமர்ந்து மூவருக்கும்,முப்பத்து முக்கோடி
தேவர்களுக்கும், மூவேழ் உலக மாந்தர்க்கும், மூவா முனிவர்களுக்கும்
ஞான உபதேசம் அருளும் மலை; தனது பராக்கிரமத்தால் ஆணையால்,
அனைத்து உலகத்தையும் ஆட்சி செய்யும் ஆறுமுகக் கடவுள் வீற்றிருக்கும்
மாமலை;
மும்மலங்களில் மயங்கித் தவிக்கும் ஆன்மாக்களின் மயக்கத்தைப்
போக்கி நல்லதெளிவை அளித்து, நல்வழி காட்டும் மலை; வள்ளிமலைக்
குறத்திக்கு வாழ்வளித்த மாமுருகன் திருத்தணிகை செல்லும் வழியில்
தங்கி,இளைப்பாறி, மகிழ்வோடு மணக்காட்சி அருளிய மலை;
மலர்கள் பூத்துக் குலுங்கும் மாமலையிலே மணப்பெண் வள்ளியோடு
வந்து நின்று, மணக்காட்சியை அடியவர்களுக்கு அருளிய மலை; மேகக்
கூட்டம் நிறைந்த மலையாதலால் மழை பொழிந்துகொண்டே இருக்கிறது;
மலையில் அருள்பாலிக்கும் முருகனது கருணைபோல மலையெங்கும்
குளிர்ச்சிச் சாரல் வீசுகின்ற மலை;
மலை போன்ற பன்னிரண்டு கரங்களை உடைய வெற்றி வீரனாகிய
முருகன்,இங்கு தங்கி நிற்பதாலும், வள்ளியின் அரவணைப்பு கூடியதாலும்,
மலையின் செழுமையாலும் மனமெல்லாம் நிறைந்து பெரும் மகிழ்வோடு
வீற்றிருக்கின்ற மலை; வளமான மலை ஆதலின் மான்போன்ற அழகு
விலங்கினங்களும், மயில்போன்ற பறவையினங்களும் துள்ளிவிளையாடியும்,
தோகை விரித்தாடியும்,மகிழ்கின்ற மலை;
வள்ளியை மணக்க வந்த முருகன் வேடனாய், விருத்தனாய் மாறியும்
மயங்காத குறத்தியைக் கரம் பிடிக்க,அண்ணன் விநாயகப் பெருமானை
வேண்ட,அண்ணன் யானையாய்த் தோன்றிட, அஞ்சி,அலறி ஓடிய
காதலியை, அணைத்து ஆறுதல் கூறிக் கரம்பற்றிக் கல்யாணமும் செய்து
கொண்ட வள்ளிமலை போன்ற வடிவு உடைய மலை, முக்கனிபோல்
இனிமை,செழுமை,சுவையும் கொண்ட முத்தமிழ்க் கவிதைகளைத் தமிழ்க்
கவிஞர்கள் பாடிப் போற்றும் தமிழ் மலை .
இம்மலையில் வீற்று,அருள்பாலிக்கும் வள்ளிமணாளனைப் போற்றி
நாளும் வணங்குவோம்.
பாடல்-51
குவியிதழ்க் கூடின்பக் குளிர்சுகம் வேண்டிநின்று,
குசம்பற்றிக் குறுகிடைக் குலாலச் சேற்றினில்,
அவிவாழ்வை அணுஅணுவாய் ஆய்ந்த பின்னரும்,
அவிழாடை நினைவினிலே அலைந்தே திரிந்தேன்;
புவிபோற்றும் புண்ணியனைக் கவிகற்றுப் போற்றவில்லை;
புதுமலர் சாற்றவில்லை; புன்னகை புகழவில்லை;
செவிடன் காதிலூது சங்குபோலப் பயனற்றேன்;
செவிசாய்க்கத் திருவுளமோ? செம்மலைச் செவ்வேளே!
பொருள்
இன்பத்தைக் குவிக்கும் இதழும்,உதடும் சுவைத்தேன்;கூடிக்கூடி இன்பம்
அனுபவித்தேன்;குளிர்காலத்தில் அணைக்கும் சுகம் வேண்டிப் பலநாள்
காத்துக் கிடந்தேன் ; குசம்(முலை ) பற்றினேன்; ஒடிந்த இடையைப்
பற்றினேன்;
பானை செய்வோர் பிசையும் சேறுபோன்ற அவ்வங்கத்திலே பலநாள்
படுத்து அனுபவித்தேன்;
அவிந்துபோக வைக்கும் சிற்றின்ப வாழ்வை அணு அணுவாய் ஆய்ந்து,
ஆய்ந்து சுவைத்த பின்னரும் ஆடை அவிழ்க்கும் ஆசை எண்ணத்துடனே
அதனைத் தேடித்தேடி அலைந்தேன்; திரிந்தேன்;
புவிபோற்றும் புண்ணியனே! உன்னைப் போற்றும் பாடல்களைக்
கற்கவில்லை; மனமுருகிப் பாடவும் இல்லை; புத்தம் புது மலர்களைப்
பறித்து,உன் சேவடிகளில் சார்த்தவில்லை; புன்னகை தவழும் உனது
அழகுமுகத்தைக் கண்டு ,மகிழ்ந்து அழகினைப் போற்றிப் பாடவில்லை;
சான்றோர்கள் கூறிய சாத்திரச் சொற்கள் எல்லாம் செவிடன் காதில்
ஊதிய சங்க நாதம் போலப் பயனற்றுப் போயின; தவற்றிற்குமேல்
தவறு புரிந்த அடியேனை மன்னித்து ஏற்பாயா எம்பெருமானே!
இந்த ஏழையின் சொல்லை செஞ்செவியில் ஏற்றருள்வாயா?
செம்மை ஞானமலையில் எழுந்தருளி,அடியவர்களைக் காக்கும்
செவ்வேளே!என்னையும் ஏற்று அருள்புரிவாய்.
பாடல்- 52
செங்குருதிச் சேறுற்ற செந்திப் பதியினிலே
செம்படையின் செம்பதியாய் நிற்குமுன்னைப் பார்த்தேனோ !
மங்களம் முழங்குகின்ற மாக்குன்றச் சோலையிலே
மாதங்க மகளுடனே மாமணமும் கண்டேனோ!
பொங்குகனிச் சீராசை, பொலிவுற்ற அண்ணனாலே,
இங்குநின்ற ஆண்டியே! தங்குகால் மண்ணோ நான்!
எங்கும்புகழ் ஞானமலை ஏந்தலே! எந்நாளும்
சங்கவேள் சார்ந்துவாழும், சங்குமலர்ச் செடியோ நான்!
பொருள்
சூரபதுமனை அவன் சார்ந்த அரக்கர்களை அழிக்கப் போர் தொடுக்க, முடிவு செய்த முருகன் வீரவாகு முதலிய தேவர்களோடு புறப்பட்டுப் போர்க்களக் குருதிச் சேறு நிறைந்த திருச்செந்தூர்ப் பதியிலே, சீரிய விண்ணவர்ப் படைக்குத் தலைமை ஏற்றுத் தேவசேனாபதியாக நின்ற கோலத்தைக் கண்டேனே.
எப்பொழுதும் ஒலிக்கும் மங்கள ஒலிநிறைந்த பெருமை பெற்ற திருப்பரங்குன்றத்தில் மணவறைச் சோலையில்மணமாலை அணிந்துகொண்டு தேவயானையை மணக்க நின்ற காட்சியும்,
மண நிகழ்வும், கண்டேனே.
தந்தையின் கையில் உள்ள கனியைப் பெற முந்தி நின்ற
அண்ணன் கணபதியின் ஆசைமிக்க அறிவுச்செய்யலால் சினந்து பழனி மலையிலே வந்து ஆண்டிக்கோலத்தில்
நின்றமுருகா! உன் பாதாரவிந்தங்களில் ஒட்டிநிற்கும்
மண் அல்லவா நான்.
எல்லாததிசைகளிலும் புகழ் பெற்று விளங்கும் ஞானமலைத்
தலைவா! நாளெல்லாம் தமிழ்ச்சங்கத் தலைவனாய் விளங்கிய
உனது சேவடிகளே கதி, எனக்கிடக்கும் நான் உனது பாதங்களை
அலங்கரிக்கும், அருச்சனை மலராக அர்ச்சிக்கப்படும் சங்கு
மலர் பூக்கும் செடியாக மலையிலே வளரும் செட்டியல்லவா நான்!
பாடல்-53
செடிவேர்ச் செந்தூரில்; செடிமலர்த் திருத்தணியில்;
சிந்தை நின்றாடும்,
அடிவேர் நடிப்பனவால், அடிவணங்கும் சுவாமிமலை;
ஆன்மஞான மாபலத்தால்,
வடிவேலை வழங்கியருள் வடிவன்னை வளச்சிக்கல்;
வடிவெல்லாம் கூடிநின்ற,
துடியிடையாள் தூயபாதம், தொட்டுபோற்றும் ஞானமலை;
தோத்தரிக்கத் தீதகலும் .
பொருள்
அரக்கர் அழிப்பதிலும், ஆன்மஞான வளர்விலும், செம்மை,
இளமை,குளிர்வு, இரக்கவுணர்வு ஆன பலவும் நிறைந்த ஞானபோகச்
செடி, திருச்செந்தூரில் செந்திலாதிபதியாக அருள் பொழிகிறது.
ஞானபோகச் செடியும், கான போகமலரும் இணைந்து,
திருத்தணியில் வள்ளி,மணாளனாக வரம் அருள்கிறது.
உலக ஆன்மாக்களின் மனங்கள் அனைத்திலும் நின்று
ஆனந்த நடனமாடும் வேர், மூவர்க்கும்,மூவேழ் உலகிற்கும்
முதல்வனாகிய அந்தச் செஞ்சடைச் சிவனார்,தனது ஆடல்களில்
மிகச்சிறந்த ஒன்றாக, தட்சிணாமூர்த்தியாகிய தான் தனது மகனைத்
தன்னுடைய ஞான ஆசானாக ஏற்று,அடிபணிந்து, தோளில் சுமந்து,
ஓங்காரத்தின் பொருளை அறிந்து மகிழ்ந்தது; தந்தைக்கே மகன்
உபதேசித்த சுவாமி நாத மாமலை .
கடுந்தவம் புரிந்து, ஞானாம்பிகையாகி, அத்தவ பலத்தால் தானடைந்த
வேலாயுதத்தை வடிவாம்பாளாகிய பார்வதி அன்னை,வழங்கிய பதி
சிக்கல்.அங்கு வீற்றருளும் சிங்காரவேலன் சேவடி போற்றுவோம்.
அழகெல்லாம் ஒருங்கு சேர்ந்த மெல்லிடை கொண்ட வள்ளிநாயகி
அம்மை, வள்ளிமலையிலே மணந்துகொண்ட மாமுருகனோடு புறப்பட்டுத்
திருத்தணிகை செல்லும் வழியில் சற்றே இளைப்பாற, அடியவர்களுக்கு
அருள்புரிய அன்னையின் பாதங்கள் தொட்டுநின்ற ஞானமலை;
வள்ளி மணாளனை, வாழ்த்தி, வணங்கிப் போற்றுவோம்;நமது தீமைகள்
அகலும்;நன்மை கிடைக்கும்.
பாடல்-54
தீதென்செயும்? தீயரக்கர் போரென்செயும்?தீச்சுடர்வேல்
திருப்பார்வை தீண்டிவிட்டால்;
வாதென்செயும்? வழக்குதான் என்செய்யும்? வடிவேலின்
வரக்கருணை வளம்பெற்றிடின்.
சீதச்சுரமும், சீக்குநோயின் படுத்தலும் என்செய்யும்?
செஞ்சேவடி பற்றிடினே .
சூதென்செயும்? சூழ்ச்சிதான் என்செய்யும்? சூலாயுதம்
சூழ்கருணை மலைபோற்றின்.
பொருள்
நம்மை நாடி வரும் தீமைகள் நம்மை என்ன செய்து விடமுடியும்?
தீயவர்கள், சமூகவிரோதிகள் நமக்கு எதிராகச் சதி செய்து, சண்டை
இடுதல் நம்மை என்ன செய்யஇயலும்? நாம் வணங்கும் ஒளி மிகுந்த
வேலினை ஏந்திய மாமுருகனின் கருணைப் பார்வை நம்மீது பட்டு,
விட்டால் இவைகள் அஞ்சி அகன்றுவிடும்.
நம்மீது வீணே போடப்பட்ட வழக்குகளும், அதற்கான வாதங்களும்
நம்மை ஒருபோதும் தண்டிக்காது;நாம் வணங்கும் வடிவேல் முருகனின்
வரத்தால்,கருணையால், நாம் எதிலும் வெற்றி பெறுவோம்.
நம்மைத் தாக்கும் சுரம், தீராதநோய், படுத்த படுக்கை இவை
எல்லாம் நம்மைவிட்டு நொடிப்பொழுதில் அகன்றுவிடும்;நாம் நாளும்
முருகன் சேவடியைப் பற்றிக்கொண்டு, அவனைப் பூஜித்து,வழிபட்டு
வந்தால் நோயெல்லாம் அகன்றோடிவிடும்.
நமக்கு எதிரான சூழ்ச்சிகள், மந்திர,தந்திரங்கள்,போன்றவைகளும்
நம்மை ஒருபோதும் தீண்டாது;தீமை புரியாது;நாம் ஞானமலையில்
வீற்றிருக்கும் கருணையுள்ளம் கொண்ட முருகனை வணங்கினால்,
அவனது சூலாயுதம் நமக்குத் துணையாய் நின்று நம்மைக் காக்கும்.
பாடல்-55
போற்றியோ பூங்கழல்கள்; போற்றியோ பொலிவிரல்கள் ;
போற்றியோ முடிமணிகள் பணிபாதம் போற்றி;
ஆற்றல் முழங்கால், அழகுவாழ் தொடைபோற்றி ;
ஆதார சுருதியிசை, ஆன்மநடு போற்றி;
சேற்றிதழ்க் கமலச் செம்பட்டுடை போற்றி;
செங்குருதிச் செம்போர்ச் செவ்வியவேல் போற்றி;
நாற்றமலர், நறும்பூணூல் நாணிமார்பு போற்றி;
நலமருள் நல்முகமும் போற்றியென வாழ்த்தினனே.
பொருள்
வெற்றிக் கழல்களை அணிந்த மாமுருகன் கால்கள் போற்றி;
பாதங்களில் பொலிந்து விளங்கும் அழகுமிகு விரல்கள் போற்றி;
போற்றியோ போற்றி என்று பக்திக் குரல் எழுப்பியபடித் தமது
கிரீட மணிகள் படும்படி மூவேந்தர்களும் வணங்கும் முருகனின் சேவடி
போற்றி.
அழகும்,ஆற்றலும் உடைய முழங்கால்கள் , செம்மையும்,சிருங்காரமும்
குடிகொண்ட தொடைகள் போற்றி; உலகின் படைப்புத் தொழிலின்
ஆதாரமாய், ஆன்மாவின் நடுவாய் நின்று, மூவேழ் உலகத்தையும்
படைத்துப் புத்துயிர் ஊட்டும் நல்லிசைச்சுருதியே போற்றி.
சேற்றில் தோன்றும் செந்தாமரை இதழ்கள் போல அழகும்,வண்ணமும்,
குளிர்ச்சியும் கொண்ட முருகன் அணிந்துள்ள சிவப்புப் பட்டுடையே போற்றி.
சூரபன்மன் முதலாய அரக்கர்களை அழிக்க, எடுத்த தேவாசுரப் போரிலே,
வெற்றி பெற்று விளங்கும்,செந்தூர் முருகன் கை வேலாயுதமே போற்றி.
நான்மறை நறுமலராய் ஆறுமுகன் அணிந்துள்ள பூணூல் போற்றி.
அடியவர்கள் வாழ்வையே என்றும் நினைத்து, அவர்களுக்கு அன்பும்
கருணையும் காட்டும் நல்ல இதயமே போற்றி. தன்னை நாடி வந்து,
போற்றிப்புகழும் அடியவர்களுக்கு எல்லாம் ஆனந்தம் வழங்கும்
ஆசிகூறும் ஆறுமுகங்களும் போற்றி போற்றி என ஞானமலை
முருகனை வாழ்த்துகிறேன்.
பாடல்-56
வாழ்த்துபெற வந்துநிற்பேன்; வாட்டமுகம் வழிந்தோடும்,
ஆழ்கண்ணீர் அலைமனம் பாழ்துயர்கள் பார்வையால்,
வீழ்த்திவிட்டு, வியன்பெருமை, வீறுபுகழ் வழங்குகின்ற.
விரிகருணை வடிவேலே! அறுமுகனே ! திருகுகனே!
ஏழிசையும், யாழிசையும் இருபக்கம் கொண்டவனே!
ஏறிவந்தேன் உன்மலையை; இறக்கிடுவாய் என்சுமையை;
ஊழிமுதலாய் ஓங்கிநிற்கும் உயர்ஞான மலைமீது,
தோழியுடன் அமர்ந்தவனே! துதிக்கின்றேன் தூயபாதமே.
பொருள்
ஞானமலை மீது வீற்றிருக்கும் ஞான பண்டிதா! உன்னை வணங்கி
உன் ஆசிபெற உன் சன்னதியில் நிற்பேன்; துயரமே உருவான தன்மை
அடைந்ததால் வாட்டமுற்ற எனது முகத்தைப் பார்ப்பாய்; வழிந்தோடும்
அழுகைக் கண்ணீரைப் பார்ப்பாய்; அலை பாயும் மனத்தைப் பார்ப்பாய்;
பாழ்படுத்தும் என் துயர நிலையைப் பார்ப்பாய்' அருளும், கருணையும்,
இரக்கமும், அடியவர்மீது அன்பும் கொண்ட உனது நோக்கம், பார்வை,
இந்த ஏழையின்மீது படும்; அப்பார்வையால் எனது துயர்களை எல்லாம்
வீழ்த்திவிட்டு, உயர்ந்த வாழ்வாம் பெருமையும், உலகோர் போற்றும்
புகழும் அருள்வாய்; இவ்வாறு என்னைப்போன்ற அடியவர்களுக்கு
வரையாது, அருள் வழங்கும் கருணை கொண்ட வேல்முருகா! ஆறுமுகா !
நலமோங்கிய நல்குகனே!
ஏழிசையாய்,இசைப்பயனாய் விளங்கும் தேவயானையையும், யாழ்
போன்று மென்மைக் குரல்வளம் கொண்ட வள்ளியையும்
இருபக்கங்களிலும் அறத்துணையாகக் கொண்டு விளங்குபவனே!
உனது பாதங்களைப் போற்றிட, அருள் ஞான மலைமீது எறிவந்தேன்;
எனது துயரத்தைக் கலைகளை எல்லாம் என்னைவிட்டு நீக்கிடுவாய்.
மிகவும் தொன்மை வாய்ந்த வானளாவி உயர்ந்த ஞான மலை
மீதினில் வள்ளிமலைத் தோழியாகிய வள்ளிப்பிராட்டியுடன்
அமர்ந்தவனே! உனது தூய்மை மிக்க சேவடிகளை ,ஞானபாதங்களைப்
போற்றி வணங்குகின்றேன்.
பாடல்-57
தூயபாதம் துதித்துநின்ற தூயமணி வாசகரும்,
தோத்திரப்பா பாடிய, திருவிசைப்பா புலவர்களும்,
சாய்ந்தநிலைச் சமணர்க்குச் சாய்ந்தநிலை தந்ததோடு,
சாய்ந்தநிலைச் சைவமும் ஆய்ந்துயர்த்திய சம்பந்தரும்,
தோய்ந்தகல்லைத் தெப்பமாக்கிய திருநாவுக் கரசரும்,
பேய்சூழும் பித்தனைத் திட்டிட்ட சுந்தரரும்,
மாயமாம் பிறப்பறுக்கும், மருந்தாகிய மகேசனின்
மா குருவாம் மழலையே 1 மகிழ்ஞான கிரியோனே!
பொருள்
ஆனந்தக் கூத்தாடும் நடராசப் பெருமகனைத் துதித்துப் போற்றும்
திருவாசகம் பாடிய மாணிக்கவாசகரும், திருவிசைப்பா" என்னும்
பதினோறாம் திருமுறையைப் பாடிய புலவர்களும்,
தாழ்ந்த மனம் கொண்ட சமணர்களின் ஆதிக்கத்தைச் சாயவைத்து,
சாய்ந்த நிலையில் விளங்கிய சைவசமயத்தை உயர்த்தியும்,சைவம்
தழைக்கச்செய்த திருஞானசம்பந்தரும்,கல்லிலே கட்டிக் கடலில்
தன்னை எறிந்த சமணர்களின் இழிசெயலை, இறைவன் அருளால்
கட்டப்பட்ட அக்கல்லையே தெப்பமாகக் கொண்டு, கடலில் மிதந்து வந்து,
சைவப்பெருமை நிலை நாட்டிய திருநாவுக்கரசரும், பேய்கள் சூழச்
சுடுகாட்டில் ஆடும் சிவபெருமானை, பித்தனே! பேயனே! என்று
திட்டிய சுந்தரரும், மனத்தாலும், வாக்காலும், காயத்தாலும் பலவாறு
போற்றிய பெருமைகள் உடையவர்; மாயப்பிறப்பறுக்கும் மருந்தாக
விளங்கும் மகேஸ்வரனின் ஞான மஹா குருவான குழந்தை முருகா!
மிக்க மகிழ்வுடன் ஞானமலையில் வீற்றிருக்கும் ஞான பண்டிதனே!
உன்னடி போற்றினோம்;வணங்கினோம்.
பாடல்-58
கிரௌஞ்சம் பட்டது, கிரிமகள் அருள்வேலால்;
கிராதன் உயர்ந்தான் தினைமகள் காதலால்;
கிரௌஞ்சம் காத்த தாரகன் வீழ்ந்தான்;
கிரௌஞ்சம் சபித்த குறுமுனி உயர்ந்தான்;
கிரௌஞ்சம் வளர்த்த கீழ்மை மாயையைக்
கிரிபுயச் சூரனை, அரிமுகக் கன்மத்தைக்
கிரௌஞ்சம் போலவே அழித்தது ஆறுகரக் குலிசம்;
கீழாணவம் அடங்கி மயில்சேவல் ஆனதுவே.
பொருள்
கிரௌஞ்சமலையும், அதன் மாயமும் உமாதேவியாரின் தவத்தால்
பெற்ற வேலாயுதத்தால் முருகன் அழித்தான்; நம்பிராஜனாகிய கிராதன்
வள்ளிமலை வேடன் தனது மகள் வள்ளியின் தவமுடைக் காதலால் .
முருகனுக்கே மகளைக் கொடுத்து, உயர் புகழ் பெற்றான்.
கிரௌஞ்ச மலையைக் காத்துவந்த தாரகாசுரன் மலை வீழ்ந்த
பொழுது தானும் வீழ்ந்து மடிந்தான். இந்த இரண்டு நிகழ்ச்சிகளாலும்
முன்னொருகாலத்தில் கிரௌஞ்ச மலைக்கு, சாபம் கொடுத்தான்
அகத்திய மாமுனிவன். குறுமுனிவனும் உயர்ந்த புகழ் முனிவன் ஆனான்.
கிரௌஞ்சமலை மாயை, மாயை வளர்த்த மலை, இரண்டும்
அழிந்தன.மாயயமகனான தாரகன் அழிந்தான்; மலைபோன்ற
கரங்களை உடைய சூரபன்மனின் மற்றொரு தம்பியான சிங்கமுகன்
கன்ம மலம் சார்ந்தவன்;அவனையும் தாராமனை அழித்த, ஆறுமுகனின்
கரங்கள் குலிசாயுதத்தால் அழித்து வீழ்த்தியது, பலப்பல மாயப்
போர்களையும் ஆற்றிதுவண்ட ஆணவச்சூரபன்மனை அன்பால் அடக்கி,
ஆட்கொண்டு, தனது ஊர்தியாக மயிலாகவும், கொடிச்சேவலாகவும்
முருகன் ஏற்றுக்கொண்டான், முருகனை வணங்கி அவனது காலடியில்
போற்றிக் கிடந்தான் சூரன்.
பாடல்-58.
( 58,,,இரண்டு பாடல்கள் )
கிரியோ ஞானம்; கிடைத்தது பாதம்;
கிரியோ வைரம்; கிடைத்தது மாதவம்'
கிரியோ தானம்; கிடைத்தது தேவாள் ;
கிரியோ முள்ளி; கிடைத்தது வள்ளி;
கிரியோ குளிர்வு; கிடைத்தது கருணை;
கிரியோ செந்தழல்; கிடைத்தது வீரம்;
கிரியோ உயர்வு; கிடைத்தவன் கந்தன்;
கிரியோ அருவி; கிடைத்தது அருளே.
பொருள்
மலையின் பெயரோ ஞானம்;ஞானமலை; அம்மலையில்
கிடைத்தற்கரிய செலவமாம் முருகனின் ஞானபாதம் தோன்றிற்று.
வைரக்கற்கள் நிறைந்து ஒளியூட்டுவது ஞானமலை; இங்கோ
பெறற்கரிய முனிவர்கள் ஆற்றிய தவமும், யோகமும் கிடைத்தது.
தன்னை நாடி வருவோர்க்கெல்லாம் வாழ்வும், வளமும்
தானமாகத் தருவது ஞானமலை ; முருகனுக்கோ போர்ப்பரிசாய்,
கொடையாய்த் தானமாய் வந்து சேர்ந்த இந்திரன் மக்கள் தேவயானை
அடியவர்களுக்கு வரங்களைத் தானமாக வழங்குகிறாள்.
முட்செடிகள் சூழந்து, நடுவில் ஞானமாய் மிளிரவைத்து ஞானமலை;
கிடைத்ததோ வேடர்குலத்திடையே தோன்றிய தவச்செல்வி வள்ளிப்
பிராட்டியார்.
குளிர்ச்சி மிக்கது ஞானமலை; இங்கு காலம் காலமாய்க் கிடைப்பதோ
முருகனின் கருணை.
செந்தழலாய் ஜொலிப்பது ஞானமலை; கிடைப்பதோ ,
மாவரக்கர்களை அழித்து வெற்றிபெற்ற மாமுருகனது வீரம்.
விண்ணைத் தொடும் அளவு உயர்ந்தது ஞானமலை; மலை
பெற்றதோ மூவர்க்கும், முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும்
முன்னவனாய்,முதல்வனாய், உயர்ந்தோங்கிய புகழ் உடைய வேலவனை..
அருவிகள் பொழியும் அழகு மலை ஞானமலை; அங்கு
கிடைப்பது கந்தன் அருள்; முருகன் சேவடி வெல்க.
பாடல் -59 .
அருள்தனை அடியவர்க்கு அளிக்கும் பாதம்;
அமுதஇசை ஒலிக்கும் அழகுமிகு கிண்கிணி;
விருப்பமுடன் தேர்ந்தெடுத்த வெம்போர் வீரக்கழல்;
விரியொளி நறும்பட்டு உடைமேவிய வீரிடை;
அருவேதத் திருமார்பு; ஆறங்கப் புரிநூல்;
அழகுகாது ; நிலவுதோடு ; செழுங்கருணைச் செவ்வாய்;
பெருவெற்றித் திருத்தோள்கள்; புகழ்காக்கும் பெருவேல்;
பேரருள் பொலிமுகம் ; பெருமையோன் மலையூரே .
பொருள்
தன்னை வணங்கும் அடியவர்களுக்கு மகிழ்ச்சி, நிம்மதி, போன்ற
வரங்களை வழங்குகின்ற இரக்க உணர்வு கொண்ட முருகனின் சேவடிகள்
வாழ்க.
முருகனது கால்களை அலங்கரிக்கும் சதங்கை, கொலுசு
போன்றவற்றிலிருந்து எழுகின்ற ஒலியானது அடியவர்களுக்கு அமுதம்
போல் ஒலித்து நல்லருள் வழங்கும். கிண்கிணி ஒலியே போற்றி.
தேவர்களுக்கு அரக்கர்களோடு ஏற்பட்ட போரிலே, தந்தை
சிவபெருமானின் வேண்டுகோள் ஏற்றுத் தானே விருப்பமுடன் போர்ப்
படைத் தளபதி ஆகிய முருகன் வெற்றிக்கு வித்தாகத் தனது கால்களில்
வீரக்கழலை அணிந்தார். வெற்றி தந்த வீரக்கழலே போற்றி.
பரந்துபட்ட வீர்யமுடைய தனது இடுப்பினில் ஒளிமிகுந்த நறும்
பட்டாடைகளை அணிந்தார். பட்டாடை அணிந்த இடையே போற்றி.
அருமை ஆகிய நான்கு வேதங்கள் போன்று விளங்கும் முருகனின்
திருமார்பே வணங்குகிறேன்.
வேதத்தின் உட்பிரிவான ஆறங்கங்கள் போல நல்லறம் காட்டும்
முருகன் அணிந்துள்ள பூணூலே போற்றுகிறேன்.
அழகுடைய காதுகளும், அக்காதுகளில் ஒளிர்விட்டுப் பிரகாசிக்கும்
நிலவுபோன்ற தோடுகளே வணக்கம்.
அடியவர்கள் மீது கொண்ட கருணையால் அவர்களுக்கு நல்ல
வரங்களை நல்கும் மாமுருகன் செம்மை வாய்ந்த பவளவாயே
வணங்குகிறேன்.
தாரகன்,சிங்கமுகன் போன்ற கொடிய அரக்கர்களைப் போரிலே
அழித்தும், சூரனை மயிலாகவும்,சேவலாகவும் கொண்ட முருகனின்
வெற்றித் தோள்களே! வீரம் பதித்த வெற்றியை வாழ்த்துகிறேன்,
முருகனின் மாப்புகழை மூவேழ் உலகங்களிலும் நிலைநிறுத்தும்,
வேலாயுதமே ! வணங்கிப் போற்றுகிறேன்.
போற்றுவோருக்குப் பேரருள் அளிக்கும் அருமை முகமே! ஆறுதல்
நல்கும் ஆறுமுகங்கள் வாழ்க வாழ்க என வாழ்த்திப் போற்றுகிறேன்.
பெருமை பெற்று உலகெலாம் வணங்கக் கூடிய பெருமை கொண்ட
ஞானமலை முருகா! முருகன் வீற்றிருக்கும் ஞானமலையே! வணங்கிப்
போற்றுகிறேன்.
பாடல். 60.
ஊரெனின் ஓங்காரம் ஒலிக்கும் கோயில்;
ஊழெலாம் பாழுற்று அடிபணியும் வாயில்;
காரெனில் மாமயில்; கதிரெனில் சேவல்;
காடெனில் குறவள்ளி; தினைப்புனம் காவல்;
சீரெனில் செவ்வந்தித் தேவாவெனும் செம்மை;
சீலமெனில் செந்தூர் அருளாட்சி உண்மை;
கூறெனில் கூறாத நான்முகன் வெஞ்சிறை;
கூவிடும் குமரநாமம் சேர்ப்பது செஞ்சிறை.
பொருள்
ஓமெனும் மந்திர ஒலி ஒலிக்கும் கோயில் கொண்டதே ஊர்
எனப்படும்.
முற்பிறவி வினை, இப்பிறவி வினை ஆகிய விதிப் பாவங்கள்
எல்லாம் குறைந்து.அழிந்து, இல்லாமல் குறைந்து, தமது பலத்தை இழந்து,
குமரக்கோட்ட வாயிலில் ஆணவ மலங்களும், விதியும்அடிபணிந்து வணங்கி
நிற்கும்.
மயில் தொகை விரித்தாடும் மகிழ்வுக்காலம் கார்காலம் ஆகும்.
மேகம்போன்ற கருணை கொண்ட முருகனது பெருங்கருணை ,
பகைவனான சூரபன்மனை அழிக்காமல் மரமாக்கி ,இருகூறாக்கி,
ஒருகூற்றை மயிலாக, மாற்றித் தனது ஊர்தியாகவும் கொண்டது.
கதிர் அடிவானத்தே தோன்றும் காலை, சேவல் கூவும். பராக்கிரமம்
கொண்ட மாமுருகனோ பகைவனுக்கும் அருள் காட்டி அவனைச்
சேவலாக மாற்றிக் கொடியாய் ஏற்றுக்கொண்டான்.
காடு என்றவுடன் நினைவுக்கு வருவது வள்ளிமலைக்காடு;
வள்ளிமலை என்றதும் நினைவுக்கு வருவது தினைப்புனம்;
தினைப்புனம் என்றதும் நினைவுக்கு வந்து அருள் புரியும் பிராட்டி
வள்ளியம்மை;
சீர்மை,அழகு, செல்வம் என்ற உயர்ந்த இந்திரன் மகளாகி, முருகனையே
மணந்த செவ்வந்தி மலர்போன்ற தேவயானையின் செம்மை கொண்ட
பக்தியைப் போற்றுவோம்.
தந்தை சொல்லையே மந்திரமாகக் கொண்டு, அரக்கர்களை அழிப்பதை
நோக்கமாக ,பணியாக மனத்தே கொண்டு,போர்புரிந்து,தீமைகளை
அழித்து, வெற்றி பெற்று, வீரனாக அமர்ந்து மாமுருகன் அரசாட்சி
புரியும் சீலம் மிக்க ஊர் செந்தூராகும். திருச்செந்தூர் முருகன் போற்றி.
தன்னை வணங்காது, கர்வத்துடன் சென்ற நான்முகனை அழைத்து,
ஆற்றும் தொழில் கேட்டதும்,ஆணவத்துடன் படைக்கும் தொழிலைப்
புரியும் பிரமன், எனக்கூற,வேதம் உரைக்குமாறு கூற, நான்முகனோ
ஓம்" எனத்தொடங்க, இடைமறித்த முருகன் அந்தப்பிரணவத்திற்குப்
பொருள் கூறுக, என்றதும், பதட்டத்தினால் சொல்ல இயலாது பிரமன்
தவித்திட, உரை தெரியாத நான்முகனைச் சிறையில் அடைத்தார்
முருகன்.
குமரா! முருகா! கந்தா! என்று எழுப்பும் முருகனின் நாம ஒலியானது
ஆன்மாக்களை அழகிய ஆறுமுகப் பாதங்களாகிய நல்வீட்டை நல்கும்.
முருகா! என்போம் முத்தி பெறுவோம்.
பாடல்-61
சிறைப்பட்டேன் சிற்றின்பக் கோட்டைக்குள்; செயலிழந்தேன்;
சித்திரமே! செந்தேனே! சுற்றி சுற்றி வந்தேனே;
கறைப்பட்ட என்வாழ்வு, கவிழ்கலம் ஆயிற்று;
கடுநோயும், பெருநோயும், கலங்கவைக்கும் கசடானேன்;
குறையுற்றேன்; குணமிழந்தேன்; குன்றுசெல்வம் குறைந்ததுவே;
குறையுடலாய்க் கோயிலடிக் குப்புற வீழ்ந்தேனே!
மறையொலி மாமுருகன் கோயில்மா மணியோசை
மறுபிறவி நலம்காட்ட மனத்தினுள்ளே ஞானஒலி .
பொருள்
என்மனத்தைப் பற்றியது சிற்றின்பம்; அச்சிற்றின்பக்
கோட்டைக்குள் சிறைப்பட்டேன்; நல்லன பற்றும் மனநிலை இழந்தேன்;
கன்னியரைச் சித்திரம்,என்றும், செந்தேன் என்றும் வானளாவிப் புகழ்ந்து,
அவர்தரும் அல்ப சுகத்திற்காக ஏங்கி,அவர்பின்னே சுற்றித் திரிந்தேன்;
இல்லற வாழ்வின் பெருமைக்குக் களங்கம் ஆனேன்; குற்றமும்
குறையும்,சேர்ந்தன'கீழ்க்குணம் கொண்ட என் வாழ்வுக்கலம் கவிழ்ந்தது ;
கடுமையான நோய்களுக்கு ஆளானேன்; பெருநோயும் பற்றிக்கொண்டது;
துன்பத்தால் கலங்கினேன்; சமுதாயத்தில் ஒதுக்கப் பட்டேன்;
குற்றவுணர்வு குணம் இழக்க வைத்தது; மூதாதையர் சேமித்து
வைத்த செல்வமெல்லாம் இழந்தேன்; வீட்டுவாசல் எல்லாம் இழந்து
கால்கள் நிற்க மறுத்தன; கைகள் செயலிழந்து, குறைந்தன; பண்பும்,
பாசமும் செல்வமும் ஒழுக்கமும் இழந்த நான் நடக்கவே முடியாமல்
ஞானமலைக் கோயில் வாசலிலே நினைவின்றி வீழ்ந்தேன்;
தன்னை நாடி வருவோர்க்கு, இரக்கமும், கருணையும்,
பொழியும் மாமுருகன் கோயில் மணியோசை, மறையொலிபோல்
என் காதுகளில் விழுந்தது; அவ்வொலியும் முருகன் அருளும் என்னைத்
தீண்டின. முருகனின் கண் நோக்கம் என் மீது பட்டது; மறுபிறவி
எடுத்ததைப்போல் எழுந்தேன்; நலங்கள் நாதனின் கருணையால்
என்னை நோக்கி வந்தன; மனமெல்லாம் நிறைந்தது முருக ஒளி;
அறிவெல்லாம் நிறைந்தது மறை ஞான ஒலி ;
நானும் மனிதன் ஆனேன்; மாண்பு பற்றிய புதுப் பிறவி எடுத்தேன்;
முருகா! சரணம்.
பாடல்-62.
ஒலியோ உயர்ஞான மலைவீசு காற்றோ!
ஒளியோ ஓங்கார நாதன்மலை விளக்கோ!
ஒலியோ உன்னத மாமறை உருவோ!
ஒளியோ அளிமார் பழகுசுடர் மணியோ!
ஒலியோ கந்த புராணக் கவசமோ!
ஒளியோ ஓராறு முகத்தொளிர் அருளோ!
ஒலியோ ஒண்தளிர் ஓங்குகனி உபதேசமோ!
ஒளியோ ஓரன்னை அளிவேல் புகழே.
பொருள்
பிரணவ ஒலியென்போமா? இல்லை; அதனை ஞானமலை மீதில்
வீசும் முருகன் புகழ் பேசும் காற்று என்போமா?
முச்சுடர் ஒளி என்போமா? நாதன் முருகன் ஞானமலை மீது,
ஒளிரும் ஓங்கார விளக்கொளி என்போமா?
புண்ணிய ஒலி என்போமா? உன்னத ஞான மலையில் எழும்
வேதங்கள் பயிலும் மாணவர்களின் இருமுறை,மும்முறை உருப்போடும்
மறை ஒலி என்போமா? மாமறையே உருவாய்க்கொண்ட மகேஸ்வர
மாமகனின் உன்னதக் காட்சி என்போமா?
சுடர் விடும் சூரிய ஒளி என்போமா? ஞானமலையில் வீற்றிருக்கும்
வேலவனின் கருணை கொண்ட மார்பினிலே சுடர்விட்டுப் பிரகாசிக்கும்
நவரத்தின மணி என்போமா?
வழிகாட்டும் விண்ணக வளக்குரல் என்போமா? வாழவும், வளம்
மிக்க வீடு பேறு அடையவும் வகைப்படுத்தும் கந்தனின் வரலாற்றைக்
கூறும் புராணமா? கந்தர் ஷஷ்டி கவசப் பாராயணமா?
அக்கினி, ஆதவன், விளக்கு இவை கூட்டும் ஒளியோ? ஞானமலையில்
வீற்றிருக்கும் ஞானபண்டிதனின் , ஆறுமுகனின் ஆறுமுகங்களிலும்
அருவியாய்ப் பொழியும் அருள் ஒளியோ?
ஆசிரியர் குரலோ? அன்னையின் அன்புக்குரலோ? அழகிய இளமைப்
பருவத்திலே புண்ணியக் கனிக்காகப் போட்டியிடுகையில் அண்ணன்
கணபதி ஞான நிலையில் அதனைப் பெற்றுவிட, உலக்கைச் சுற்றி வந்தும்
கிடைக்காத கணிக்காகச் சினந்து மலையிலே நின்ற கோலமா? அதே
கோலத்தில் அப்பனுக்கே உபதேசித்த சுவாமிநாதன் கோலமா?
ஆசானாய் மாறி உபதேசித்த மௌன ஒலியோ ?
சரவணப் பொய்கையிலே ஒளியோ? சங்கத்தமிழில் ஒளியோ?
பெருமைமிக்க பார்வதி அன்னை பலகால் தவமிருந்து, தான் பெற்ற
வேலாயுதத்தை மகனுக்கு அளித்ததால் அரக்கர்களை அழித்து, அறம்
நிலைநாட்டிய புகழின் ஒளியோ?
ஒலியெல்லாம் உறைவிடம் முருகனே. ஒளியெல்லாம் ஒளிர்விடும்
இடம் முருகனே. முருகன் தாள் வாழ்க.
பாடல்-63.
புகழ்பாடிப் புண்ணியம் நாடிப் பேறுற்றான்;
புல்லிதழ்ப் பூவாலே பதம்போற்றிச் சீருற்றான்;
அகழ்பொய்கை ஆற்றுப் படைபாடி மேலுற்றான்;
அறுமுக வரலாற்றுத் திறம்பாடி அடியுற்றான்;
இகவாழ்வே காவடியாய்க் குகசேவடி நிழலுற்றான்;
எழில்மயில் சேவலாகி இறுமாப்பு, பொழிலுற்றான்;
முகக்கருணை முன்னவனோ மூதாசான் பணிந்துநின்றான்;
முகமாறு வுடையோனே! முதுஞானம் நீதானே.
பொருள்
புகழ் மிக்க உனது பெருமைகளைப் பாடிய அருணகிரி புண்ணியம்
நாடினான்; பெறற்கரிய உனது சேவடி அடைந்தான்.
விரிந்த இதழ்களைக் கொண்ட குளிர்ச்சியும், நறுமணமும் நிறைந்த
பூக்களாலே உனது பாதங்களைப் போற்றி அர்ச்சித்த
உன்கருணையால் உயர்ந்தோங்கினான்.
அழகிய சரவணப்பொய்கையிலே நின்று திருமுருகாற்றுப்படை பாடி,
உன்னருளாலே நக்கீரமாமுனிவன் மேல்நிலையுற்றான்.
உயர்வுமிக்க கந்தபுராணத்தைப் பாடிய கச்சியப்ப சிவாசார்யார்
உன் சேவடி அடைந்தார்.
முருகக் காவடிக்காகவே தன்னை அர்ப்பணித்த இடும்பன் உனது
சேவடியில் மாறாது நிற்கும் நிலை பெற்றான்.
ஆணவச்சூரனோ, தனது இறுமாப்பைக் கைவிட்டு, உன் அருளால்
மயிலாகவும்,சேவலாகவும் மாறி, நாளெல்லாம் உன்னோடே திகழ்கிறான்.
கருணையே உருவான கந்தபிரானின் தந்தையான முதற்கடவுளாகிய
சிவபெருமான், ஓங்காரப் பொருள் அறியவேண்டி,முருகனையே
ஆசானாகக் கொண்டு, அடிபணிந்து,வாய்பொத்திச் சீடனாக ஆனான்.
ஆறுமுகம் கொண்ட அன்புடைய முருகா! நன்குணர்ந்த நல் ஞானம்
என்பது நீயேயல்லவா! ஞானமலை ஞானபண்டிதனே! உன்னைப்
போற்றி வணங்குகிறேன்.
பாடல்--64.
நீலமலர்ப் பார்வையிலே நீண்டநாள் நீந்திநின்று,
நிம்மதி இழந்தேனே !
கோலவளை அரவணைப்பில் கொண்டசுகம் தனில்புரண்டு,
குணமெலாம் இழந்தேனே!
சீலமிழந்து, செல்வமும் சீர்மையும் போயிற்றே
சிவவாக்கியர் சொல்போலக்
காலமெலாம் கடந்தபின் காலடியில் விழுகின்றேன்;
கந்தஞானமே காத்திடுவாய்.
பொருள்
குவளைமலர்க் கண்களின் கொஞ்சும் பார்வை புரியும் பெண்களின்
வலையிலே விழுந்து, திளைத்து, பலப்பல ஆண்டுகள் இன்பநதியிலே
நீந்தி விளையாடினேன்; இன்றோ நிம்மதியின்றித் தவிக்கிறேன்;
அழகே உருவான மகளிர்களின் வளைக்கரங்கள் அணைத்த
காலத்தில் பெற்ற சுகமே, பெரும்பேறு என அதிலேயே புரண்டேன்;
குணமும்,குடிப்பிறப்பும் இழந்து இழி நிலைக்கு ஆளாகித் தவித்தேன்;
சிவ வாக்கியர் என்னும் ஞானி " இறை பக்தி கொள்ளாது,
காம இச்சையிலும், சிற்றின்ப வேட்கையிலும் மனம் கொள்பவன்,
பண்பிழப்பான்;செல்வமிழப்பான்; என்று தர்மோபதேசம் செய்தது போல,
நானும், சீலம் இழந்தேன்;செல்வம் இழந்தேன்;குலப்பெருமையும்
இழந்தேன்.
வீணே வாழ்நாள் கழிந்தது; இளமை கழிந்தது; உடலும் உள்ளமும்
சோர்ந்திட, முருகா! முருகா! என்று கதறியபடி உன் காலடியில்
விழுந்து விட்டேன்; ஞான பண்டித ஞான மலை முருகா! இந்த
ஏழையைக் காத்து அருள்வாய்.
பாடல்--65.
காத்தருளும் கறைக்கண்டன் கயிலையின் இளங்குமரா!
கற்பகத்தாய் நற்புதல்வா!
மூத்தவன் கணபதியின் முகிழ்ஞான சோதரனே!
முதுமுனிவன் பதிகுருவே!
பூத்தமலர் மீதமர்ந்தோன் புகுநெறி உரைத்தவா!
பூணணி வேலாயுதா!
பூத்ததிரு வள்ளிமலர் ஈர்த்ததிரு மணவாளா!
பூஞ்சோலைத் தீஞ்சுவையே.
பொருள்
அண்ட சராசரங்களையும் காத்துக் கடையேற்றும் நீலகண்டனது
கயிலைமலையில் தவழ்ந்து விளையாடும் மழலைக் குமரனே!
கற்பகாம்பிகையின் நற்றவப் புதல்வா!
மூத்தவனான கணபதிக்கும், ஞான உபதேசம் அருளிய தம்பியே!
பெரும் ஞான அகத்திய மாமுனிக்கே ஆசானாகி பிரணவ ஞானம்
உபதேசித்தவா!
தாமரைமீதில் அமர்ந்து, படைக்கும் தொழிலாற்றும் நான்முகனின்
அகந்தையை அடக்கி, அவனுக்கும் ஞான உபதேசம் செய்து, பண்பு
தழுவிய படைப்பாற்றல் வழங்கியவா! அழகுமிகுந்த கரத்தினிலே
அணியாக, அரக்கர் அழிக்கும் படையாக, அடியவர் காக்கும்
அன்பு ஆயுதமாக, வேலை வைத்திருக்கும் வேலாயுதா!
வள்ளி மலையிலே பூத்த மலரான வள்ளியின் மனம் கவர்ந்த
மணவாளனே! பூஞ்சோலையாய் விளங்கும் ஞானமலையில்
வீற்றிருந்து அருள்புரியும் இனிய கருணைச்சுவையே! ஞான பண்டிதா!
உன்னடி போற்றி வணங்குகிறேன்.
பாடல்-66
தீந்தமிழ்த் தீம்பாட்டின் தெள்ளுரை தேர்ந்தெடுத்த,
தீந்தமிழ் மாப்புலவ!
தீந்தமிழ்த் தவ்வைக்குச் சுடாத தீங்கனியைத்
தந்தருளிய தமிழ்வேடா!
மாந்தளிர் மாமேனி மாசுறவே காடதனில்,
மான்வள்ளி பின் நடந்தவா!
காந்தம்போல் பற்றுற்ற காரரக்கனைக் காலடியில்
காலமெலாம் காப்பவனே!
பொருள்
மதுரைத் தமிழ்ச்சங்கத்தில் இல்லாத களவியல் நூலை, சிவபெருமான்
இறையனார் களவியல்" என்று அருளிய காலை, அதனை விளக்க
முற்பட்ட சங்கப்புலவர்கள் பலரும் அதற்கு உரை எழுத,
எவ்வுரை சிறந்தது? என்ற நிலையில் "உருத்திரசன்மன்" என்ற பெயரைத்
தாங்கித் தானே ஒரு புலவனாக வந்து, அத்தனை உரைகளையும்
ஆய்ந்து நக்கீரர் எழுதிய உரையே சாலச்சிறந்தது" என்று தமிழ்
வளர்த்த சண்முகப்புலவனே !
காட்டுப்பாதையில் நடந்துவரும் ஒளவைப் பாட்டி, களைப்பு
மேலிட ஒரு மரத்தடியில் அமர்கிறாள். மரத்தின் மீதமர்ந்து இருந்த
வேடனாகிய முருகன்," களைத்து இருக்கும் பாட்டியே! உன் களைப்பும்
சோர்வும் போக, நாவல் பழம் போடவா! என்றுகேட்டான்; பாட்டி சரி.
போடு! என்றாள் .உனக்கு சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம்
வேண்டுமா? எனக்கேட்ட வேடச்சிறுவனைப் பார்த்து இங்கு
பழத்தில் சுட்டது, சுடாதது என்று உள்ளதோ! எனக்கு சுடாத பழமே
போடு! என்றாள் பாட்டி. வேடன் மரத்தை உலுக்கினான்; நாவல்
பழங்கள் கீழே விழுந்தன; அவற்றைப் பொறுக்கிய அவ்வை, அவைகளின்
மீது,ஒட்டியிருந்த மண் போக வாயால் ஊதினாள். மரத்தின் மீதமர்ந்த
வேடன் காய் கொட்டிச் கிரித்தபடியே "என்ன பாட்டி! சுடாத பழம்
கேட்டுவிட்டுச் சுட்ட பழத்தை எடுத்துக் கொள்கிறாய்! என்றான்.
பொருளை உணர்ந்த பாட்டி, அப்பா! ஞானபண்டிதா! என்னே உன்
விளையாட்டு! என்று புகழ்ந்து முருகனைப்போற்றினாள் .
வள்ளி மலைக் காட்டினிலே தினைப்புனம் காவல் காத்துவரும்
வள்ளியைக் கண்டு, அவள் மீது மோகம் கொண்டு, அவளது காதலை
வேண்டிக் காடெல்லாம், மலையெல்லாம் தனது அழகு மேனி,
கருக்கவும், செம்பாதங்கள் தேயவும், வெய்யில்,மழை எனப்பாராது
சுற்றிச்சுற்றி வந்த தமிழ்க்காதல் முருகா!
கொடுமை வாய்ந்த அரக்கன் சூரபன்மன் உன்னருளால் உன்மீது
பற்றுகொண்டுக் காந்தம் இரும்பினைப் பற்றியிருப்பதுபோல உன்
காலடிகளை ப் பற்றிக்கொண்டுக் காலமெல்லாம் ஊர்தியாய்க் கொடியாய்
வலம் வருவதும் உனது பேரருள் அல்லவா!
அருள்கொண்ட ஆறுமுகர்! உன்னடி பணிகிறேன்.
பாடல்--67
பவனே! பதியே! பரமே! பழமே!
பணிவோர்த் துணையே!
சிவனே! சிலைவேல் மகனே! சகமே!
சின்மயக் குருவே!
தவமே! தவத்தின் பயனே! தகையே !
தத்துவத் தலையே!
நவமே! நவமணிச் சுடரே! நலமே!
நன்ஞான நாயகனே!
பொருள்
அருளுடையவனே! அனைத்து உலகங்களுக்கும் தலைவனே!
ஆதிமுதலானவனே! முது ஞானப்பழமே ! தன்னை நாடி வந்து
போற்றுபவர்களுக்குத் துணையாக நிற்பவனே!
சிவஸ்வரூபம் கொண்டு மங்களங்கள் கொண்டவனே! மேருமலையை
வில்லாகக் கொண்ட சிவபெருமானின் மகனே! மூவேழ் உலகாயும்,
அவற்றில் வாழும் சராசரங்களாயும் விளங்கும், பேருரு கொண்டவனே!
அழியாத பேரானந்த ஞானத்தின் ஆசானாய் விளங்குபவனே!
தந்தைக்கே ஆசானான தவமுதல்வனே! முனிவர்களும், பிறரும்
தேவர்களும் ஆற்றும் தவங்களை ஏற்று, அதனதன் பயனை அளிக்கும்
பயன்களும், வரமுமாய்க் காட்சி அளிப்பவனே ! நேர்மை,நடுவுநிலைமை,
பண்பு, ஒழுக்கம் ஈகை கொண்ட தகைமை சால் தெய்வமே!அனைத்துத்
தத்துவங்களுக்கும் தலைமை அருள்நோக்கு கொண்டவனே!
புதிய செயல்,எண்ணம், கொண்டு விளங்கி அடியவர்களை நல்வழிப்
படுத்துபவனே! நவரத்தினங்களின் ஒளிபோல் பிரகாசிப்பவனே!
நலமெலாம் ஒருங்கு கூடிய மனம் கொண்டவனே! நல்ல ஞான மலையில்
நாயகனாய் வீற்றிருந்து கருணை பொழியும் ஒளி மிகுந்த மாமுருகா!
உன்னடி போற்றிப் புகழ்கிறேன்.
பாடல்--68.
நாயகன் ; நான்முகன் நாவரசி, நாவிலே
நவின்றேத்தும், நாவலன்;
மாயவன் மலர்மகள் மகள்களின் மாதவன்;
மாமறை மேலவன்;
தூயவன் நாயகித் தொல்பொருள் சேயவன் ;
தேவசே னாபதி ;
ஆயகலை ஞானமலை மேயபுகழ்ப் பண்டிதன்;
ஆறுமுகன் தாள்பணிவோம்.
பொருள்
மூவர்க்கும், மூவேழ் உலகங்களுக்கும், முருகனே தலைவன்;
பிரும்மதேவனது நாவிலே வசிப்பவளாகிய சரஸ்வதி தேவியின்,
நாவிலே ஓங்காரத்தை எழுதி, வித்யா செல்வத்தை அருளியவன்;
திருமால்,மகாலட்சுமியின் மகளிரான இருவருக்கும் மனத்தில்
குடிகொண்ட தலைவன்; நான்குவேதங்களுக்கும் மேலான பிரணவத்தின்
பொருளாய் விளங்குபவன்.
ஆணவக்கன்ம மாயா மலங்கள் பற்றாத தூயவனாகிய சிவ
பெருமானுக்கும், இமவான் மக்களாகிய பார்வதி தேவியாருக்கும்,
மறைப்பொருள் உபதேசித்த ஞானக்குழந்தை; அரக்கர்களை அழிக்க,
தேவர்களின் படைத்தலைவனாகி வெற்றி வாகை சூடியவன்.
அனைத்துக் கலைகளும் ஒருங்கு சேர்ந்த மாப்புகழ் கொண்ட
ஞானபண்டிதனாக ஞான மலையில் வீற்று அருள்புரியும் ஆறுமுகக்
கடவுளை வணங்குவோம்; அவனது சேவடிகளைப் போற்றுவோம்.
பாடல்--69
தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கவனாம்
வேலவன் திருவடிக்கே.
கோளா றில்லாது குவித்த கொழுஞ்செல்வம்
வேலவன் திருவடிக்கே.
ஆளுயர நெற்பயிரும், ஆணையடி நெற்களமும்,
வேலவன் திருவடிக்கே.
நாளெல்லாம் நலம்காக்கும், நல்லுடல் அடிமையும்
வேலவன் திருவடிக்கே.
பொருள்
சோம்பேறித்தனம் இல்லாமல், உழுது, பயிரிட்டு, அறுவடை செய்து,
வந்த நெற்குவியல் விற்று வந்த வானளாவிய செல்வம் அத்தனையையும்
முருகன் காலடியிலேயே சமர்ப்பிப்பேன்.
தவறான வழிநீக்கி, நேர்மையான நல்ல வழியில் ஈட்டிய எனது
எல்லாச்செல்வமும் முருகனுக்கே அர்ப்பணம்.
வயல்களில் வளமாக வளர்ந்துள்ள நெற்பயிரும் , அதனை அடித்து
நெல்லாக்கப் பயன்படுத்திய யானைகள் கட்டிப்போரடித்த களமும்,
நெல்லும் நல்ல முருகன் சேவடிக்கே சொந்தம்.
அழகிய உலகிலே தோன்றி,உருவாகி, பணியால், பதவியால்,
செல்வத்தால் உருவான நலமிகு இவ்வுடல் முருகனுக்கே. அவன்பணி
தவறாது, ஒழுக்கமுடன் செய்யும் அடிமை நான். கோயில் கூட்டல்,
மெழுகல், கோலமிடல் , தோட்டவேலை, மலர் பறித்தல், மாலை கட்டல்
போன்ற பணிகளைச் செய்வதே நான் பிறவி எடுத்ததின் பயன்'
என உணர்ந்து, என்றும் அடிமைத்தொழில் மகிழ்வோடு ஆற்றுவேன்.
பாடல்--70.
திருவடி வைத்துத் திரள்ஞானம் அருளியத்
திண்ணிய மதுரமலை ;
திருவடி இணைந்த தினைப்புன மலராள்,
நண்ணிய நலமலை;
திருவடி தேடிய திருமாலும் வந்துநின்று,
பெருவணக்கம் புரியுமலை;
திருவடி நாடியே குறுமுனி போற்றியதால்
உறுஞான மாண்புமலை.
பொருள்
வள்ளிமலையிலே வள்ளியை மணம் புரிந்து கொண்டு,
திருத்தணிகை புறப்பட்ட காலை, வழியிலே திருப்பாதம் பதித்து,
நின்ற ஞான பண்டித மாமுருகன் உலகோருக்கும்,முனிவர்களுக்கும்,
தேவர்களுக்கும் ஞான உபதேசம் அருளிய வலிமையையும், இனிமையும்
வாய்ந்த மலை.
முருகனோடு இணைந்த தினைப்புன வள்ளியம்மையும்,
மலர்போன்ற தனது திருவடிகளைக் கணவரோடு தானும் பதித்து,
ஞான மாதாவாக விளங்கும் மங்கள மலை.
எம்பெருமான் அண்ணாமலையாரின் அடிப்பாதங்கள் தேடி,
வராக உருவெடுத்துக் காண இயலாது தவித்த ,திருமாலும், ஞான மலை
வந்து, தந்தைக்கு நிகரான ஞானமகன் சுப்பிரமணியரை வண ங்கிப்
போற்றும் புனித மலை.
ஆசானுக்கு ஆசானான ஆறுமுகக் கடவுளை நாடி வந்து, அகத்திய
மாமுனிவன் போற்றுகின்ற காரணத்தால் உயர்ந்த ஞான மாண்புகள்
நிறைந்த சுவாமிநாதக் கடவுள் வீற்றருள்கின்ற ஞானமலையைப்
போற்றி வணங்குவோம்.
பாடல்--71
மாணவராய் மகேசன் மலரடி சுமந்தார்;
மாமறை உணர்ந்தார்;
வீணவா நான்முகனோ வியன்பாதம் தொழுதெழுந்து,
விரியுலகு படைத்தார்;
பூணழகுக் கருநீலன் தேனழகுப் பெண்களால்,
புவிகாக்கும் பேறுற்றார்;
கோணல் கூனழகுக் குறைஞான அடியேனும்,
கவிபாடி, அடியுற்றேன்.
பொருள்
பிராணவப்பொருளை நன்கறிந்துகொள்ள, முருகனின் மாணவச்
சீடனாகி, அவரைத் தோளிலே சுமந்து, மலர்போன்ற பாதங்களைச்
சுமந்து, மாமறைப்பொருளை மகன் உபதேசிக்கத் தந்தை
தலைவணங்கிக் காதால் வாய்பொத்திக் கேட்டார்.
ஆணவமும்,அகம்பாவமும் கொண்ட நான்முகன், முருகனைக்
கண்டு வணங்காது, சிவபெருமானைத் தரிசிக்கச் சென்றபொழுது,
அவனைத் தடுத்து நிறுத்திய முருகன், படைப்புத் தொழில் ஆற்றுகிறேன்"
என்ற மமதை கொண்ட பிரம்மனிடம்,பிரணவத்தின் பொருளைக்
கேட்கத் தெரியாது விழித்த நான்முகனைச் சிறையிலே அடைக்கத்
தந்தை சொல் கேட்டு,விடுவிக்க, மாமுருகனை வணங்கினான் பிரமன்.
தொழுது எழுந்த நான்முகனுக்கு மீண்டும் படைப்புத் தொழில்
ஆற்றும் பொறுப்பை அருளினார். நான்முகனும் ஆணவம் நீக்கித்
தனது படைப்புத் தொழிலைத் துவங்கினான்.
ஆடை ஆபரணங்களின் அழகுத் தோற்றம் கொண்ட கருநீல
நாரணனோ தனது இரண்டு மகள்களின் தவபலத்தால் மணாளனாகப்
பெற்ற மாமுருகன் பேரருளால் உலகைக் காத்துவரும் தொழிலைப்
புரிகிறான்.
எதற்கும் பயன்படாத கோணல், கூனல், அழகும் குறைந்த அறிவும்,
கொண்ட இந்த ஏழையும் மாமுருகன் மீது கவிதை,பாடிப் புகழ்ந்து,
அவனது,அருட்சேவடியை அன்றாடம் போற்றும் கருணையைப் பெற்று
முருகனடிமையாய் வாழ்கிறேன். முருகா! சரணம்.
பாடல்--72.
உற்றது ஓருடல்; பெற்றது பேருயிர்;
உடலுயிர் அவனன்றோ!
கற்றது கடல்கல்வி; பெற்றது பெரும்புகழ்;
கல்விப்புகழ்க் கந்தனன்றோ!
விற்றது வியர்வை; ஏற்றது பெருஞ்செல்வம்;
சேரிரண்டு ஆறிரண்டோ!
நற்றிணை தானம்; நாடலோ நற்றவம்;
நல்லாறும் ஓராறே .
பொருள்
உலக வாழ்விலே மனிதன் என்றபிறவி மட்டுமல்ல; எல்லா
உயிர்களும் பெறுவது ஒரு உடலைத்தான். அவ்வுடல் நின்று நிலவ,
இறைவன் அளித்தது உயிர். அந்த உடலும், உயிரும் இறைவன்
அல்லவா! முருகன் அல்லவா!
பிறந்த உலகிலே பிறவிப்பயனாய், மனிதன் பெறுவது கல்வி;
கடல்போல் பரந்த, ஆழமான அறிவு சார்ந்த கல்வியால் பெறுவதோ
நிலைத்த பெரும்புகழ்; அந்தக்கல்வியும், கல்வியால் வரும் புகழும்
கந்தனல்லவா!
உழைப்பின் பயன்பாடு தருவது வியர்வை; நெற்றி வியர்வை
நிலத்தில் சிந்தப் பாடுபட்டால் குவிவது குன்றனைய செல்வம்.
உழைப்பையும், உழைப்பின் பயனாம் செல்வத்தையும் உயிர்களுக்கு
வழங்கி, அருள் புரிவது ஆறுமுகனின் பன்னிரண்டு கரமல்லவா!
உயிர்களின் நல்லொழுக்கம் நற்பண்பு என்பன ஈகை என்னும்
பிறர்க்களிக்கும் குணமே ஆகும்; தானம் செய்வதால் தவம்
முற்றுகிறது; முற்றிய மோகனம் தவிர்த்த தவம் பேற்றினை
வழங்குகிறது. தானம்,தவம், என்ற நல்ல வழிகளைக் காண்பித்து,
பேறு வழங்குவது ஆறுமுகக் கடவுளன்றோ!
எல்லாம் வழங்கிய ஞான பண்டித மாமுருகனைப் பணிவோம்.
பாடல்--73.
ஆறெல்லாம் வழிந்தோடும், ஆகாய கங்கையோ!
ஆறுமுக, அருட்பெருக்கோ!
சீரெல்லாம் சிறந்தோங்கும், செல்வநிலைச் செழிப்போ !
சீராளன் செங்கரமோ!
காரெல்லாம் பொழிந்தோங்கும், கார்மேகக் கூட்டமோ!
கார்த்திகேயன் கரவருளோ!
பேறெல்லாம் பெற்றுமகிழ் பெருமுனிவர் நற்றவமோ!
பெருஞான மலையருளோ!
பொருள்
விண்ணிலும், மண்ணிலும் நிறைந்த நீரோட்டத்தால் வழிந்து
குளிர்க்கருணை பொழியும், வான்நீர்க் கங்கையோ? அன்று அன்று
இக்குளிரும், கருணையும் பொங்கி வழிவது, ஆறுமுகக் கடவுளின்
அருளும், அன்பும் பெருக்கெடுத்து உலகெலாம் ஓடுகிறது.
சீர்மையும், சிறப்பும் சிறந்து விளங்கிட உயர்ந்து ஓங்கிய
செல்வத்தின் செழிப்பு நிலை காரணம் ஆகுமோ? அன்று.
சீர்மையும், சிறப்பும் மனத்திலே கொண்ட வள்ளல் மாமுருகனின்
வற்றாத வளக்கரங்கள் வழங்கும் அருட்கொடையே காரணம் ஆகும்.
காட்டும்,நாடும் செழிக்கப் பொழிந்து, ஒங்கச் செய்வது கருணை
கொண்ட மேகமழைக் கூட்டம் காரணமோ? அன்று. கார்த்திகேயனின்
மனத்தில் தோன்றிய ஈகை, வள்ளல் செங்கர வழியே பொழிகின்ற
கருணையே ஆகும்.
நீண்ட நாள் தவம் இருந்து, பெரும் முனிவர்கள்; எல்லாம் பெறுகின்ற
பேறும் மகிழ்வும் தவப்பயன் ஆகுமோ? ஆகா. ஞான மலையில்
வீற்றிருக்கின்ற ஞான பண்டித மாமுருகனின் அருளையே தவப்பயனாகக்
கருதுவர்.
எல்லாம் வல்ல ஆறுமுகனை வணங்கி நல்லருள் பெறுவோம்.
-பாடல்-74.
மலையழகோ? மகரந்த மலரழகோ? மாசில்லா
மணியழகோ? அணியழகோ?
கலையழகோ? கவியழகோ? கரமழகோ? குறையில்லாக்
கருணைமிகு குணமழகோ ?
சிலையழகோ? வேலழகோ? சிரிப்பழகோ? செதுக்காத,
சிலைமாந்தர் இடையழகோ?
நிலையழகோ? நிதியழகோ? நிதமழகோ? நிலையான,
நித்தில முத்தழகனே!
பொருள்
ஞானத்தை வாரி வழங்கும், ஞானமலை வளத்தால், அறிவால்
உயர்ந்த தோற்றத்தால் , அழகாக விளங்குகிறது.
அம்மலையிலே பூத்துக்குலுங்கும் மகரந்தம் நிறைந்த மலர்களின்
அழகு உள்ளத்திற்கு மகிழ்வும்,ஆனந்தமும் தருகிறது.
குற்றமற்ற நவரத்தின மணிகளை விளைபொருளாகப் பெற்ற
மலையின் ஒளி ஓங்கும் அழகே அழகல்லவா!
ஞானத்தை,மலர்களை, மகரந்தங்களை, மணிகளை அணிகலன்களாக
உடுத்து, வானோங்கித் திகழும் மலையே அழகுதானே !
ஓவியம், சிற்பம், அருவி,சோலை, போன்ற கலைவண்ணத்தைத்
தன்னகத்தே கொண்ட அழகே கலை மயம் தானே!
மலையும் கவிதைப்பொருள்; மலைமேல் வீற்றிருக்கும் முருகனும்
கவிதைப்பொருள்; மலையை, முருகனைப் பாடுகின்ற கவிதையும்
அழகல்லவா!
வரமருளும் கரம் கொண்ட முருகன் மலை இம்மலை;இங்கு
அழகிற்கெல்லாம் அழகூட்டுவது ஆறுமுக அன்புக்கரமல்லவா!
அடியவர்களின் குறைதனைப் போக்கி, அன்பும், ஆதரவும்
வழங்குகின்ற கருணையாளன்; கருணையே மனமாகக் கொண்டவன்;
கருணையே குணமாகக் கொண்டவன் அழகிற்குச் சான்றல்லவா!
வீரத்தின் நிலைக்களனான மாமுருகன் கரத்திலே ஏந்திப்
போராற்றும் வில்லும் அழகுடையது அன்றோ!
அன்னை அருளிய வேல்; அரக்கர் அழித்த வேல்; தேவர் சிறை மீட்ட
வேல்; வேளே அழகு; அதுவும் முருகன் கரத்தில் திகழ்வதால்
அழகோ அழகல்லவா!
அடியவர்க்கு அருள்; அப்பனுக்கு உபதேசம்; தேவயானைக்கு
மங்கள நாண் ; குறவள்ளிக்கோ அன்புடைக்காதல்; அரக்கன் சூரனுக்கோ
அருகமரும் இடம்; இவை அனைத்தையும் வழங்கியது, குகவேளின்
சிரிப்பல்லவா! அச்சிரிப்பு அழகின் சிரிப்பு.
செதுக்காத அழகுப்பதுமைகள் அன்புமாந்தர் இருவர் முருகனின்
இருபக்கத்தில்; அழகே உருவான அவர்களின் உருவ அழகைப்
பாராட்டுவதா? அழகையெல்லாம் தனக்குள் அடக்கிய அம்மைகளின்
இடையழகைப் பாராட்டுவதா?
பேரூழிக் காலத்தும், தந்தை சிவபெருமானைப் போலவே நிலைத்து
நிற்கும் முருகனின் அழகே பேரழகு.
அன்பு,அருள், கருணை, இரக்கம், ஆதரவு, போன்ற நிதிக்குவியல்களைத்
தன்னகத்தே கொண்டு விளங்கும் செவ்வேளின் செல்வமே அழகாம்.
நித்யம் என்ற சொல்லின் பொருளே முருகன்; நேற்றும்,இன்றும்,
நாளையும் என்றென்றும் அழியாத அழகனாய் விளங்கும் அழகே அழகு.
மூவர்க்கும் முதல்வனாய்,மூவேழ் உலகிற்கும் தலைவனாய்
நான்மறைகளின் தலைவனாய் விளங்கும் நிலையான தெய்வமே!
தூய்மை வாய்ந்த முத்துமாலை அணிந்த பேரழகனே !
அழகென்றால் அது நீ தானே. அழகே! அழகனே! உன்னை
வணங்கிப் போற்றுகிறேன்.
பாடல்--75
முத்தே, முகிழும் முறுவல் சிரிப்பாம் :
மோகனத் தந்தமாம்:
சித்தே சிரிப்பினுள் விளையும், செயலாம்:
செவ்வாய்ச் சொல்லாம்:
சத்தே சதாசிவச் சத்புத்ரச் சாக்ஷியாம்:
சுவாமி நாதமாம்:
வித்தே! வியனே ! விரிமலை விளைவே!
வில்,சொல் ஏருழவ!
பொருள்
ஞானமும் வெண்மையும் வாய்ந்த முத்து, முறுவல் பூக்கும்
முருகனின் சிரிப்பாயிற்று. மயக்கும் வசீகரம் கொண்ட செவ்வாய்ப்
பற்களும் முத்துக்களே.
அடியவர்களுக்கும், அன்புகொண்டவர்களுக்கும், மகிழ்வளிக்கும்,
சித்து விளையாட்டே முருகனது சிரிப்பின் விளைபொருள்கள் ஆகும்;
செவ்வாய் அளிக்கும் வரங்களும், வாய்ச்சொற்களும் மறை பொருளாகவே
வெளிவரும்.
சத்" என்பது சதாசிவம் ஆகும்; அந்த சதாசிவப் பரம்பொருளுக்கே
ஆசானாகி, மந்திர உபதேசம் அருளிய சுவாமிநாதன் சத்" ஆகிறான்;
சத்" புத்திரனும் ஆகிறான்; சத்தைச் சாக்ஷியாய்க் காட்டித் தானே
சதாசிவமுமுமாய் விளங்குகிறான்.
மூவேழ் உலகங்களையும் படைத்த முழுமுதலே ! அரக்கர்களை
அழித்து, அறம் காத்த அதிசய மழலையே! பரந்துபட்ட ஞான மலையின்
விளக்கமாம் ஞானப் பொருளே! அரக்கர்களை அழித்ததால் வில் என்ற
படையைப் பயன்மிக்கதாக ஆக்கிய வீரனே! தமிழ்ச் சங்கம் காக்கப்
புலவனாய் வந்ததால் சொல் என்ற ஏரினை வளம் என்ற வயலில்
பயன்படுத்திய புலவனே! வணங்குகிறோம் உன் சேவடிகளை.
பாடல்--76.
ஏரகம் எழுந்தது ஞான பீடமாய்;
எழில்மறை அருளிலே.
சீரகம் செயிர்த்தது செம்போர்க் களமாய் ;
செந்தூர்ப் போரிலே.
சூரகம் ஏற்றது ஆணவம் பணிந்தது;
சேவல்மயில் காலிலே.
ஈரகம் தவத்தால் இருபுறம் இணைந்தது.
ஈர்த்தபுகழ் ஆர்த்தவா!
எழில் வேத முன்னொலி ஓங்காரப் பொருளைத் தந்தை , ஆசான்,
ஆகிய சிவபிரானுக்கே உபதேசித்ததால் சுவாமிமலைத் தலம்
ஞான பீடமாய் விளங்குகிறது.
அரக்கர்களின் சிறுமை கண்டு பொங்கி எழுந்த மனம்,
போர்க்களமாகிப் புறப்பட்டது செவ்வேள் முருகன் தலைமையில்
தேவர்ப்படை . செந்தூர் போர்க்களம் ஆயிற்று.
அரக்கன், வரம்பல பெற்ற சூரன், அவனது கொடுமை மிக்க மனம்,
ஆணவம் விட்டது. அடிபணிந்தது ; சேவலும்,மயிலும் ஆகி,
நாளெல்லாம் முருகன் சேவடி பணிந்து போற்றுகிறது.
இளகிய,இளம் இரண்டு மனங்கள் தவமிருந்து, முருகன் அருளும்,
அன்பும் பெற்று, முருகனின் இருபுறமும் என்றும் நின்று அருள்
புரியும் தேவியராக இணையற்ற பதத்தைப் பெற்றது.
ஆசானாய்,போர்த்தளபதியாய், பகைவனுக்கும் அருளிய
பண்பாளனாய், காதல் மனம் கனிந்த காருண்யனாய் விளங்கிப்
புகழை எல்லாம் தன்னகத்தே கொண்ட மாமுருகா! உன்னடி
போற்றினோம்.
பாடல்--77
ஆர்வத்தால் அலகு,குத்தி ஆருடலைச் சிதைத்து,
அரும்பக்தி மேம்பாட்டால்,
ஆறுமுகா! ஆறுமுகா ! என்றோதிப் பாடிவரும்,
அருங்காவடி எடுத்துவந்தும்,
தேரிழுத்தும், தார்மாலை தானணிந்து, தீநெருப்பில்
தாவியாடி மிதித்துவந்தும்,
ஊரெல்லாம் ஓங்கார உன்நாமம் போற்றுவரே :
உன்னருளை நாடுவரே.
பொருள்
முருகனடிமை, முருகபக்தி, பூண்டு, ஆர்வமேலீட்டால் விரதம் இருந்து,
திருவிழா நாட்களிலே, மார்பு,கைகள், முதுகு, வாய், நாக்கு போன்ற
இடங்களில் கூர்மையான அலகு குத்திக்கொண்டு, அழகே உருவான
உடலைச் சிதைத்துக்கொண்டு, மிகப்பெரிய காவடியைத் தூக்கிக்
கொண்டும், ஆட்டம்போட்டும், முருகா!குகா! ஷண்முகா ! என்று பக்திக்
குரல் எடுத்துப் பாடியும், வருவோரும்,
அலகு குத்திய முதுகில் அலங்கரிக்கப்பட்ட முருக விக்ரஹம் வைத்து,
அழகே உருவாய் அமைந்த தேர் நாணைக் கட்டி இழுத்தபடி வீதியில்
வலம் வருவோரும்,
விரத மாலை அணிந்துகொண்டு. கொழுந்து விட்டு எரியும் தீக்குள்
இறங்கி நடந்து, ஆடிப்பாடி ஓடிவந்து தீ மிதி மிதிக்கும் பக்தர்களும்,
ஊரெல்லாம் ஓங்காரப் பிரணவ மந்திரத்தை, உன் பெயரோடு,
உச்சரித்துப் போற்றுபவர்களும்,
உன்னருளை நாடி வந்து போற்றுவார்கள். அப்படிப்பட்ட ஈடில்லாப் புகழ்
உடைய ஞான மலை முருகா! வணங்குகிறோம் உன் பாதங்களை.
பாடல்-78.
நாடு கூடி, நற்றேர் இழுத்து,
நல்வீதி சுற்றி,
ஆடுவார் அன்போடு "அரோஹரா" என்றே
ஆட்டமும் போடுவாரே !
வீடு வீடாய் விளக்கேற்றிக் கோலமிட்டு,
விழாவும், எடுப்பாரே !
ஆடுமாடு சேவல் எல்லாம் ஆலயத்தில்
அளிப்பார்க்கும் அருள்வாயே.
பொருள்
முருகா! உன்கோயில் திருவிழா வந்துவிட்டால் நாட்டு மக்கள்
ஒன்றாகக் கூடுவர்; உனது வீதி உலாவிற்காக அனைவரும் ஒன்றுசேர்ந்து
அலங்கரிக்கப்பட்ட அழகிய பெருந்தேரை அன்போடும், பக்தியோடும்
கோயிலைச் சுற்றி அமைந்துள்ள நான்கு வீதிகளிலும், முருகா!
முருகா என்று போற்றியவாறே இழுத்து வருவர் .
வழியெல்லாம் ஆடுவார்கள்; முருகனுக்கு அரோஹரா" கந்தனுக்கு
அரோஹரா" என்று குரல் எடுத்துப் பாடி ஆட்டமும் போடுவார்கள்;
அன்பும்,பக்தியும் கலந்தது அந்த ஆட்டம்.
தேர் வரும் வழியெல்லாம் அமைந்துள்ள தத்தம் வீட்டு வாயில்களில்
நீர் தெளித்துப் பெருக்கித் தூய்மை செய்து, கோலமிடுவார்கள்; வீடுதோறும்,
வாயில்களில் அழகிய குத்துவிளக்கு ஏற்றி வைப்பார்கள்; மாவிலை,
தோரணம் கட்டி, விழா எடுப்பார்கள்.
தேரோடு கூட்டம் கூட்டமாய் மக்கள் வருவார்கள்; கோயிலுக்குள்
சென்று வழிபடுவார்கள்;சிலர் ஆடு,மாடு,சேவல்கோழி போன்ற
வீட்டுப்பிராணிகளை வேண்டிக்கொண்டு உன்னிடம் சமர்ப்பிப்பார்கள்;
அனைவருக்கும் ஞானமலை ஆறுமுகா ! நீயோ அருள்வளங்களை
வாரி வாரி வழங்குவாய். முருகா போற்றி.
பாடல்--79.
வாய்பெற்றது வளமுருகன் பேர்சொல்ல; வற்றாத
வேலனருள் பெற்றிடவே;
தாய் பெற்றாள் இந்தவுடல் தண் முருகன் போற்றுபணி
தளராது, ஆற்றிடவே;
வேய்க்கரங்கள் வேலவனின் வியன் தொண்டு விரிவாக
வேலையைப் போற்றிடவே;
மாயவாழ்வு மனத்திருத்தி, மாமுருகன் தாள்பணிக;
மாப்பதமும் உற்றிடவே.
பொருள்
மானிடப் பிறவி எடுத்த இவ்வுடல் பல அங்கங்களைப் பெற்றுள்ளது
அவைகளில் வாய் பெற்ற பயன், எப்பொழுதும் முருகா! முருகா என்று
அவன்பெயரைக் கூறிக்கொண்டே இருத்தல் ஆகும்.என்றும் துணை
செய்யும் முருகன் நாமம் ,அவனருளையும் குறையில்லாது அளிக்கும்.
இந்த ஆன்மாவின் உடலை ஈன்றெடுத்தவள் தாயாவாள். முருகனது
பணிகளைத் தவறாது, ஆற்றி, முருகன் அடிமையாய் வாழ்வதற்காகவே
இவ்வுடலும் உலகில் ஜனித்தது .
மூங்கிலன்ன கரங்கள்; எதற்கு? எம்பெருமான் முருகன் கோயிலிலும்
தொடர்பான எல்லா இடங்களிலும், வேலவன் போற்றியபடியே
அவனடிமைத் தொட்டு செய்து, வேலைப் போற்றுவதோடு, வேலைகளையும்
விருப்புடன் ஆற்றுவதற்கே கரங்கள். கரங்களைப் படைத்த கந்தன்
தாளினைப் பற்றுவோம். அவனது அருள் பிறவியை நீக்கிப் பேரின்பம்
வழங்கும். முருகா சரணம்.
மனிதனின் வாழ்வு நிலையற்றது; அழிவுடையது; இதனை உணர்ந்து,
மனத்திலே ஆணவமும், ஆசையும் கொண்டு அழிய வேண்டாம். மூவேழ்
உலகங்களையும் காக்கின்ற முருகன் சேவடி போற்றுவோம்.
பாடல்-80
பெற்ற ஞானம் பேசவைத்த பெரும்பாட்டுக் கலிவெண்பா,
பேசாத திருமகன்;
உற்ற ஞானம் உயரவைத்த ஓங்குபுகழ்த் திருப்புகழ்
ஓர்பாவச் சிறுமகன்;
கற்ற ஞானம் கனியவைத்த கன்னித்தமிழ் ஆற்றுப்படை,
கண்ணுதலோன் சாபமகன்;
கண்ட ஞானம் காலமெல்லாம் காலடியில் போற்றவைத்தது,
காரான சூரனையே.
பொருள்
ஐந்து வயது வரை,பேசாத குமரகுருபரனை, முருகனது அருட்பார்வை
ஞானத்தைத் திருச்செந்தூரில் வழங்கிட, வாய் திறந்து பேசாத
அக்குழந்தை கந்தனின் புகழைக் கலிவெண்பாவினால் பாடிப் போற்றியது.
சிற்றின்ப வேட்கையிலே சுற்றித் திரிந்த பாவச்சிறுமை கொண்ட
அருணகிரியான் ஆறுமுகம் கண்டான்; அருஞானம் உணர்ந்தான்;
அங்கே எழுந்தது முருகன் புகழ் ; திருப்புகழ்.
பாடலில் குற்றம் கண்டு, பரமனையே சாடிய நக்கீரன் சிவனால்
சபிக்கப்பெற்றான்; திருப்பரங்குன்றப் பொய்கையில் நின்று முருகன் மீது
திருமுருகாற்றுப்படை" பாடிச் சாபநீக்கமும் இருவர் அருளும் பெற்றான்.
ஆணவத்தால் ஆட்கொள்ளப்பட்ட சூரபன்மன், போர்க்களத்தில்
கந்தனைக் கண்டான்; கர்வம் தொலைந்தது; ஆயினும் விதி விடவில்லை;
மாயமனம் மாயப்போரை ஆற்றியது; மரமான அவன் இரு கூரானான் ;
முருகனது அருட்பார்வை,ஒருகூர் மயிலாயிற்று;மற்றொன்று சேவலாயிற்று;
காலமெல்லாம் கந்தன் சுமந்து வரும் மயிலாயிற்று.புகழ் பாடும் கொடி
ஆயிற்று சேவல். அருளே,இரக்கமே முருகனல்லவா!
பாடல்--81.
சூரைக் காட்டுள் ஆர்வத் தாடலன்
பேர்பெற்ற பிள்ளையே 1
காரிளம் குழலாள், பேரிளம் தவத்தால்,
சீர்வேல் பெற்றவா!
ஊருடை முதல்வன் நேரிடை அருளால்,
உறுமணம் கண்டவா!
பேருடைப் பெருமலை வீறுடன் அமர்ந்து,
பெருவரம் அருள்பவனே!
பொரூள்
காரை, சூரை ஆகிய முட்செடிக் காடு; சுடுகாடு; அங்கே
ஆனந்தத்தோடும் விருப்பத்தோடும் தாண்டவம் ஆடுகின்ற
அம்பலவாணருக்கு அருள் ஞானம் உபதேசித்துத் தகப்பன் சாமி"
என்று பெரும் பெயர் பெற்ற பிள்ளையே!
கரும்குழலைக் கொண்ட கல்யாணி அம்மை, இளமை தொட்டு,
விடாது ஆற்றிவரும் மிகப்பெரிய தவத்தினால் பெற்ற வீரவேலை,
ஞானவேலை, அன்னையின் ஆசியோடு பெற்றவனே!
ஊருக்கும், உலகிற்கும் முதல்வனாகிய விநாயகப் பெருமான்,
தினைப்புன வள்ளியை நீ மணப்பதற்காக யானையாகி, நேரே
வந்து,வள்ளியை அச்சுறுத்தி, அடைக்கலமாய் உன்னை அடையவைத்து,
மணக்கவும் நல்வழி காட்டியதால், வள்ளியை மணம் புரிந்து
கொண்டவனே!
பேரும் பெருமையும் கொண்ட ஞானமலையில் வீரமும்,விவேகமும்
கொண்டு, அமர்ந்து, உலக மக்களுக்குப் பேரருள் புரிகின்ற ஞானபண்டித
சுவாமியே! போற்றி போற்றி!
பாடல்--82.
பவமான சேவலும், அவமான மயிலும்,
ஆட்கொண்ட முருகா!
நவமான தினையும், நலமான விண்ணும்,
ஆட்கொண்ட முருகா!
சிவமான தந்தையும், தவமான தாயும்,
ஆட்கொண்ட முருகா!
சிவமும் தவமும் சண்முகன் எனவாழும்
சிறியேனைச் சீரடிகொள் !
பொருள்
ஆணவத்தால் தாழ்ந்த சூரனின் அடுத்த உரு; முருகனின்
கண்ணோக்கு பெற்ற உரு; சேவலையும் ,மயிலையும் கொடியாகவும்,
ஊர்தியாகவும் ஆட்கொண்டு அருள்புரிந்த முருகனே!
புதுமை வாய்ந்த தினைப்புனத்திலே புதுமையாய் மான் மகளாய்ப்
பிறந்த வள்ளியை அன்போடு காதலித்து மனையாளாக ஆட்கொண்டாய்;
செல்வக்குடியில் பிறந்த இந்திரன் மகளான தேவயானையையும்
போர்ப்பரிசாக ஆட்கொண்டு மனையாளாக ஆட்கொண்டாய்.
மூவர்க்கும் முதல்வனான சிவனாம் தந்தைக்கே பிரணவப் பொருள்
உபதேசித்து சீடனாக ஆட்கொண்டாய்; தவமிருந்து தாயாம் பார்வதி
தேவியார் பெற்ற மாணிக்கவேலைப் பெற்று, அரக்கர்களை அழித்து,
அந்த அன்னையின் தவத்தை நிறைவு செய்து, ஆட்கொண்டாய்.
சிவநாமமும், சிவஸ்வரூபமும், தவமும், தவப்பயனும் சண்முகனே"
என்று உன்னையே போற்றி வாழும் இந்தச்சிறியேனுக்கும் அருள்
புரிந்து, ஆட்கொண்டு, யான் ஈடேற வழி காட்டுவாய் ஞான மலை
முருகனே!
பாடல்--83.
அடிதேடி அகழ்ந்தானும், முடிதேடிப் பறந்தானும்,
அகந்தையை அகற்றவில்லை;
அடிமுடி காணா அண்ணா மலையை,
அன்பாலே கண்டிடலாம்;
இடிஇடி அரக்கனும், படிப்படியாய்ப் பக்குவம்
பெற்றதைப் பாரறியும்;
தொடித்துடி இடையாள் விடிவிடியல் பெற்றதால்,
கடித்துயர் கலைந்ததே.
பொருள்
திருமாலுக்கும், பிரமனுக்கும் போட்டி. யார் பெரியவன்?
என்பதில்; அவர்களுக்கு இடையே ஒரு சோதி தோன்றியது; அத்துடன்
சொல்லும் அசரீரியாய் வந்தது; இச்சோதியின் அடியையும், முடியையும்
யார் முதலில் காண்கிறார்களோ? அவரே பெரியவர்" என்று. பன்றி
உருவெடுத்துத் திருமால் அடியைக் காண பூமியைத் தோண்டலுற்றார்
நான்முகனோ அன்னப்பறவை உருவெடுத்து, விண்ணில் பறந்து ,
முடியைத் தேடலுற்றார்; யுகங்கள் பல கடந்தும் அவ்விருவரால் அடிமுடி
காண இயலவில்லை; எளிமையே உருவான பரம்பொருளின் மீது,
அன்பு கொள்ளாமல் அகந்தை, ஆணவம் தாங்கிச் சென்ற இருவரும்
தலைகுனிந்து நின்றனர்.
அண்ணாமலையென வளரும் அக்னிச்சோதியை அன்பும்,பக்தியும்
கொண்டால் கண்டிடலாம்; பெற்றிடலாம்.
இடிபோல் இடித்து, ஆணவச் சூரனாம் அரக்கனும், முருகனின் அருள்
பார்வை பட்டதருணம் முதற்கொண்டு படிப்படியாக மாறி,அரக்க குணம்
விட்டதோடு,சேவலாயும், மயிலாயும் மாறி நாளெல்லாம் முருகன்
சேவடி போற்றுகிறான் .
மத்தளம் போன்று, ஒடுங்கிய இடையினை உடைய அன்னை, பார்வதி
அம்மை,மூவேழ் உலகிற்கும் விடியும் விடியலாக முருகனைப்
பெற்றெடுத்தாள்;தவத்தாய் பெற்ற மகனால் விண்ணும்,மண்ணும்
அரக்கர்களிடம் இருந்து பிழைத்தது; விடுபட்டது; ஞானமலையில்
வீற்றிருக்கும் முருகனது தோற்றத்தால் உலகே மகிழ்ந்தது.
முருகா போற்றி.
பாடல்--84.
செயலெலாம் சண்முகச் செம்மலைச் சார்ந்திடுக;
செல்வமெலாம் சேவடிக்கே.
வயலெலாம் விளைவிளைச்சல் வடிவேலன் திருவடிக்கே;
வளமெலாம் சேவடிக்கே.
இயலெலாம் எடுத்தியம்பும் இலக்கியம் ஈசனுக்கே;
எழில்தமிழ் சேவடிக்கே.
கயலெலாம் கரைபிறழும் கழனியான ஞானமலைக்
காட்சிதரும் சேவடியே .
பொருள்
அடியேனும்,என்னைச்சார்ந்தவர்களும் ஆற்றுகின்ற செயல்கள்,
அதனால் விளையும் பயன்கள், எல்லாம் எம்பெருமான் முருகனுக்கே
சாரட்டும்; சேரட்டும்; பழைய செல்வம், நான் சம்பாதிக்கும் செல்வம்,
என்னைச்சார்ந்த அத்தனைச்செல்வங்களும் கந்தன் காலடிக்கே
சமர்ப்பணம்.
வயல்களில் விளையும் எல்லாப்பயிர்களும் வடிவேலன்
திருவடிக்கே சமர்ப்பணம்;எனது வளம், நலம், பலம் எல்லாம்
குமரன் பாதரவிந்தங்களுக்கே சொந்தம் ஆகும்.
இயல்,இசை. நாடகம் என்ற முத்தமிழ் இலக்கியங்கள்
தலைவன் முருகன் புகழையே போற்றட்டும்; அழகும்,அறிவும், ஆன்மிகமும்
வாய்ந்த அழகுத்தமிழ் முருகனுக்கே உரித்தாகட்டும்.
கரைகளெல்லாம் கயல் மீன்கள் துள்ளியாடும் கழனிகள்
நிறைந்த ஞானமலையில் வீற்றிருந்து, நற்காட்சி அருளும்,முருகன்
சேவடியை மனமெல்லாம் நிறைத்துப் போற்றுவோம்.
பாடல்--85
சேவடி சேவிக்கிலேன்; செந்தூர் நேசிக்கிலேன்;
செவ்வேள் தரிசிக்கிலேன்;
காவடி சுமக்கிலேன்; கூரலகு குத்தலேன் ;
கரகாட்டம் ஆடலேன் ;
பூவடித்தீ மிதிக்கிலேன்; பொன்மேனி வாடலேன்;
புதுநீர் சுமக்கிலேன்;
தூவடித் தொண்டாற்றாத் தொன்முருக பக்தனோநான்?
தேன்மலையான் தேடுகிறேனே!
பொருள்
செம்மை மிகுந்த முருகனது திருப்பாதங்களை வணங்காது
வீண் பொழுது போக்கினேன்; செம்மைப் போர்க்களம் அமைத்து, உலக
மக்களை அரக்கர்களிடம் இருந்து காத்திடத் தேர்ந்த நற்பதியாகிய
திருச்செந்தூர் மீது பற்றும், ஆசையும் கொண்டு, சென்று, வணங்க,
மறந்துவிட்டேன்; சீரிய போராற்றலினாலே தேவசேனாபதியாக
விளங்கிய எம்பெருமான் முருகனைக் கண்டும், போற்றியும்,
வாழ்த்தியும்,வணங்கியும் நடக்கவில்லை.
முருகனுக்கு, " அரோஹரா" என்று மனமார்ந்து கூவிக்கொண்டு
பால்காவடியோ, பழக்காவடியோ, பன்னீர்க்காவடியோ சுமக்கவில்லை;
அலகு காவடி சுமந்து, அதன் கூர்மையான அலகுகளை உடலெல்லாம்
ஆழப்பதித்து முருகனருள் தேடவில்லை; கரகம் சுமந்தபடி ஆறுமுகன்
அரும்பெயரைக் கோஷமிட்டபடி ஆட்டம் ஆடவில்லை.
மரங்களை வெட்டிப்போட்டு, தீமூட்டி, நெருப்புக் கட்டிகளை
உருவாக்கி, பக்தியோடும், தூய்மையோடும் அந்தப் பூக்குழியிலே
இரங்கி முருகன் புகழைப்பாடி ஆடியபடிச் செல்லவில்லை; பட்டினி
கிடந்தும், விரதம் இருந்தும், கோயிலில் பணிகளைத் தாமாகவே
முன்சென்று ஏற்று,நன்கு செயலாற்றியும் உடல் வாட , தொண்டுகள்
ஆற்றவில்லை;திருமஞ்சனத்திற்கும், கோயிலின் பிறப்பணிகளுக்கும்
குடம் குடமாகத் தண்ணீர் சுமந்து செல்லவில்லை.
இப்படிப் பலப்பலத் தொண்டுகள் செய்து முருகனது அடிமையாக
ஆற்றவேண்டிய பலவும் ஆற்றாத நான் எப்படி முருக பக்கதனாக
முடியும்? போற்றவும் இல்லை; வணங்கவும் இல்லை; தொண்டுகளும்
ஆற்றவில்லை;இனிக்கும் அருளை பொழியும் ஞானமலை முருகனின்
அருள் வேண்டி,அவனைத் தேடித்தேடி அலைந்தால் அவனருள் கிட்டுமோ?
தெய்வீகத் தேடலைத் தொண்டின் வழியாகவே பெற இயலும், என்றும்
பணிவோம்;அன்பு கொண்ட முருகனின் அரும்பணி பலவும் புரிவோம்;
ஆனந்தம் அடைவோம்.
பாடல்--86,
தேடிய செல்வமும் தேய்ந்ததே பனியாய்;
தேடிய வலிமையும் தேய்ந்தது முதுமையாய்;
தேடிய உறவும் தேய்ந்ததே பகையாய்;
தேடிய இன்பமும் தேய்ந்ததே நலிவாய்;
தேடிய யாவும் தேய்ந்த பின்னரே,
தேடித் தேடித் தேய்ந்தே அலைகிறேன்;
தேடியும், பாடியும், நாடியும் கிடைக்காத
தேடுபொருள் மாமுருகன் தரிசனம் கிடைக்குமோ?
பொருள்
பாடுபட்டுத் தேடிச் சேர்த்த பொன்னும்,பொருளும் நிலைக்காமல்
பனிக்கட்டி போல ஒருநாள் தேய்ந்து போய்விட்டது;
உடலை வளர்த்தேன்" உயிர் வளர்த்தேன்" என்னும் திருமூலர்
வாக்கிற்கேற்ப, உடற்பயிற்சிகளால் வலிமையான உடல் வளர்த்தேன்;
அந்தோ! அவ்வலிமை முதுமையில் தேய்ந்து போய்விட்டது.
அண்ணன் ,தம்பி, அக்காள்,தங்கை என்று உறவு நீண்டு வளர்ந்தது ;
நிலம், சொத்து,பாகப்பிரிவினை என்ற நிலையில் உறவெல்லாம்
பகையாகிப் போய்விட்டது.
இளமை வேகத்தில் இன்பம் எங்கே? எங்கே? என்று தேடித்தேடி
அலைந்து அவ்வின்பமே மனைவி என்ற பெயரிலும் கண்ட இன்பமும்,
உடல் நலிவு, சோர்வு, நோய், என்றுவந்த தன்மையில் அழிந்து தேய்ந்தது.
ஆக, இளமை முதல் தேடித்தேடிப் பெற்ற அனைத்தும், கொஞ்சம்
கொஞ்சமாக, அழிந்தபின்னரே ஞானமலை முருகன் பாதமலரைத்
தேடமுற்படுகிறேன்; அங்கும்,இங்கும் இரவும்,பகலும் நாடி ஓடுகிறேன்;
பாடுகிறேன்;ஓம் முருகா!என்று கூச்சலிடுகிறேன்;கோயில் கோயிலாக
அலைகிறேன் ; ஆசானை நாடுகிறேன்; அது அப்பொருள் அழியாத
நித்தியமான அந்தப் பொருள் கிட்டவில்லை; கிடைக்கவில்லை;
மாமுருகன் என்னும் மாப்பொருள் எனக்குக்கிட்டுமா? அந்த முருகனது
கருணைப்பார்வை என் மீது விழுமா? காண்பேனோ கருணைக்கடவுளாம்
கந்தப்பெருமானை. வருவாய் அருள்வாய் குகனே!
பாடல்--87.
கிடைத்த வாழ்வைக் கிறுக்கனாய்த் தொலைத்தேன்;
கிடைக்காத இன்பசுகம் கிறங்கித் தவித்தேன்;
அடைத்த கதவினை அன்புடன் அணைத்தேன்;
அடைகாயை அருங்கனியாய் அன்றாடம் சுவைத்தேன்;
படைத்த பரம்பொருள் பண்பினை அளித்தும்,
படைக்கலச் சீர்குலைவால் பலப்பல இழந்தேன்;
கடையனின் கடையனாய்க் காலம் கழிக்கிறேன்;
கடைக்கண் கருணையால் கரையேற்று! கந்தவேளே !
பொருள்
கிடைத்தற்கரிய மானிடப்பிறவி கிடைத்தது; அறமாகிய வாழ்வை
அறமற்ற வழியிலே சென்று, பித்தனைப்போலத் தொலைத்தேன்;
கிடைக்காத இறையருள் போல, தாழ்ந்த இன்பசுகத்தை நினைந்து
நினைந்து அதனுள் மூழ்கி, மதிமயங்கி நின்றேன்; கிடைக்காவிடில்
புலம்பித தவித்தேன்.
வராதே! என்று விரட்டியடித்தவர்கள் காலிலே விழுந்து, அன்பும்,
பொருளும் அளித்து, அன்புகொண்டு அணைத்து இன்பம் கண்டேன்;
புளிக்கும் கசக்கும் காய்களை எல்லாம் கனியெனவே நினைத்து
நாளும் நாளும் சுவைத்தேன்;
என்னைப் படைத்த, பரம்பொருள் பண்போடு, என்னைப்
படைத்தான்;என்னைக் காக்கும் அன்பு,அறம் ,இரக்கம், பண்பு,ஒழுக்கம்
என்னும் படைக்கலன்கள் சீர்மையை இழந்த என்னை விட்டு விலகின;
உயரிய குணங்கள் விலகியதால் நல்வாழ்வு அணிகலன்களை இழந்தேன்;
ஒழுக்க மேம்பாட்டில் கடையனுக்கும் கடையனாக ஆளாகி
அலைந்து திரிகிறேன்; காலத்தை வெல்ல வழி தெரியாமல், இழி
வாழ்வு வாழ்கிறேன்;
கந்தவேளே ! ஞான பண்டிதா! இந்த ஏழையின் மீது இரக்கம் காட்டு!
கருணைக்கண் கொண்டு பார்! கசட்டுக் குழியிலிருந்து அடியேனைக்
கரையேற்று! காலமெல்லாம் உன் காலடியே கதி என ஞானமலை
வாயிலிலே கிடக்கிறேன்; குற்றம் பொறுத்துக் குணம் நல்குவான்
குமரன்.
பாடல்--88.
கந்தனைக் கடம்பனைக் கார்த்திகை மைந்தனைக்
கல்லாலன் குருவை, நல்லோர் நாதனைச்
சுந்தரனைச் சுத்த சன்மார்க்க பந்துவைச்
சுந்தரச் சங்கரி புதல்வனைச் சண்முகனைச்
செந்தமிழ்ப் புலவனைச் சந்தக் கவிஞனைச்
செந்தூர்ப் பதியைத் செந்தேன் மலையைச்
சந்ததம் பணிந்திடச் சிவப்பே றணிப்பவனைச்
சிந்தும் கருணையைச் செம்மலையில் கண்டேனே.
பொருள்
செம்மலை, ஞானமலை; கருணையில் செம்மை; செயலில் செம்மை;
வீரத்தில் செம்மை; செம்மலையில் வீற்றிருக்கும் ஞான பண்டிதன் மூவேழ்
உலகிலும் எப்படி விளங்குகிறான், என்பதையே அவன்பெருமையாக
விளக்குகிறது இப்பாடல்,
இளமையிலேயே ஞானம் வீரம் கருணை நிறைந்து விளங்கும் கந்தன்;
கடம்பன் என்னும் அரக்கனை அடக்கித் தனது சேவகனாக மாற்றியவன்
கடம்பன்; கடம்பமரங்கள் மிகுந்த வனத்திலே குடி கொண்டவன்; சரவணப்
பொய்கையில் அவதரித்த காலத்தே கார்த்திகைப் பெண்களான ஆறு
விண்மீன்களால் காக்கப்பட்டதால் அவர்களின் அன்பு மகனாவான்;
கல் ஆலமரத்தின் அடியில் அமர்ந்து நான்கு முனிவர்களுக்கு ஞான
உபதேசம் செய்யும் சர்வேஸ்வரன் தமக்குக் குருவாகி, ஓங்காரப்
பிரணவத்தின் பொருளை உப்பு[தேசித்த மஹா ஞான குரு ; நல்லோர்கள்
முனிவர்கள், தேவர்கள், ஞானிகள் இவர்களுக்கெல்லாம் தலைவன்;
மும்மலங்கள் அண்டாத தூய்மையே வடிவானவன்; தூய்மை,
தூயமனம், நல்வழி இவைகளை உலகோருக்கு அளிப்பதால் அவர்களுக்கு
உறவாக விளங்குபவன்; அழகே உருவான அன்னை ,நன்மையையே
அடியவர்களுக்கு அருளும் அன்னை, அந்தப் பார்வதி தேவியாரின்
புதல்வன்;ஆறுமலர்களில் ஆறு உருவாகி அவதரித்து, அன்னையின்
கரங்களால் அன்புடன் அணைத்துத் தூக்கிய காலத்து, ஒன்றாகி
ஆறுமுகம் ஓருரு கொண்டு விளங்கியவன்;
மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் தோன்றிய "களவியல்" நூலின் உரை
எழுதியோர்களின் உரையைப் படித்துச் சிறந்த உரையாக நக்கீரன்
உரையைத் தேர்ந்தெடுத்த "உருத்திர சன்மன்" என்ற புலவனாக வந்தவன்;
அவ்வுரை சந்தக்கவிதை போல் விளங்குவதால் அன்றே புதுக்கவிதை
வடித்த சந்தக் கவிஞனாகவும் விளங்குபவன்;திருச்செந்தூர் நகரத்தின்
அரசன்;ஆண்டவன்; காவலாளி, தேனொழுகும் பழமுதிர் சோலை மலையில்
தேன்போன்ற வள்ளிநாயகி வளர்ந்த வள்ளிமலையில், இனிக்கும்
குறமகளை மணந்துகொண்ட திருத்தணி மலை, வண்டின் வாய்த்
தேன்போல் தந்தைக்கு ஓங்காரத்தை உபதேசித்த சுவாமி மலை,
அருவிகளும், ஓடைகளும், தித்திக்க, மலர்களும்,கனிகளும் தேன்போல்
தித்திக்கும் ஞானமலை,தேன்பழமே குடிகொண்ட பழனிமலை,
வீற்றருளும் வேலன் ;
நாளும்,பொழுதும், மனமெல்லாம் உருகி வணங்கிப் பணிந்து
போற்றிட, அடியவர்களுக்குச் சிவபதம், தந்தையைப் போல் வழங்கும்
நிர்மலன்; ஆறுதலே கரங்கள்; கருணையே நெஞ்சம்; இரக்கமே கண்கள்;
என விளங்கும் கருணையாளன்.
இப்படிப்பட்ட எழில் முருகனை நான் ஞானமலையில்
கண்டுகொண்டேன்; காலடி வணங்கினேன்.
அவனடி தொழுங்கள்; ஆனந்தம் பெறுங்கள்.
பாடல்--89.
கண்டன கண்கள்; குவிந்தன கரங்கள்;
கனிந்தது மனமே; கலந்தது உறவே.
கண்களோ கார்மழை; கார்மேகம் கலைந்தது;
கல்லுடல் சரிந்தது; கருங்குணம் சிதைந்தது;
மண்ணெலாம் மக்கிற்று ; மாளிகை விழுந்தது;
மனைப்பாசம் மாண்டது; மமதை மடிந்தது;
விண்வாயில் வியன்செல்வம் வீணவா விலகின;
வேலொன்றே நின்றது; மாலன்றே மறைந்ததுவே.
பொருள்
ஞானமலை முருகனின் காலடியில் நின்று, கண்கள் ஆண்டவனைக்
கண்டன; இருகரமும் குவிந்து வணங்கின; மனமெல்லாம் கனிவுடைக்
கந்தன் கருணையால் கனிந்தது; கனிந்த மனம் கடவுளோடு ஒன்றாகிக்
கலந்தது.
அந்த ஆறுமுகனின் கண்கள் கார்காலக் குளிர்மழையாக அருளைப்
பொழிந்தன; அப்பொழிவிலே கருமை நிறைந்த எண்ணங்கள் கொண்ட
மனம் சற்றே மேகமாய்க் கலையத் தொடங்கிற்று; கந்தபிரானின்
கால்களைப் பற்றிக் கண்ணீர் சிந்தி அழுதிடப் பாறை போன்ற பேருடல்
அப்படியே சரிந்து கீழே விழுந்தது.
காலடி தீக்ஷை தலையில் பட்டதும்,நிலம், காடு ,கழனி, விளைச்சல்
எல்லாம் மனத்தை விட்டு அகன்றன;மாளிகை, மாட்டிக்கட்டிடம், தோட்ட
வீடு எல்லாம் மனத்தை விட்டு நீங்கின. மனைவி, மகன், மக்கள், உற்றார்,
உறவினர்,பாசமெல்லாம் பறந்து போயின; நான்" எனது" என்ற
அகம்பாவம் அப்படியே நிலைகுலைந்து விழுந்தது.
வானைத்தொடும் மாடமாளிகைகள், வங்கியிலும் பிற இடங்களிலும்
சேர்த்து வைத்த செல்வங்கள், அதுவேண்டும்" இதுவேண்டும்" என்ற
பேராசை, யாவும் மண்ணோடு மண்ணாயின;
கண்முன்னே காண்பது வேலொன்றே. மனத்திலே நிற்பது வேலொன்றே.
பந்த பாச, சொத்து,சுக மயக்கங்கள் மனதை விட்டு அகன்றன.
நித்தியத் தலைவனாம் முருகன் மட்டுமே நெஞ்சகக் கோயிலிலே
குடி கொண்டான். முருகனடி வெல்க.
பாடல்--90
மறைந்த நிலவை, மணிக்குழை காட்ட,
மறையாக் கருணை மாதா மடியினில்,
நிறைந்த சுடராய் நாளும், அமர்ந்தே,
நீள்வேல் பெற்றே நிலமதை மீட்டவன் ;
சிறைப்படு தேவர், நிறைப்பட நெற்றி
மறைக்கண் மாப்பொறி ; மலர்ந்தது சரவணம் .
குறையொளிக் கூட்டம், தரைப்பட வெற்றிக்
குணம்படக் குவலயம் காத்த குமரனே!
பொருள்
அன்னை அபிராமியிடம் பக்திகொண்ட அபிராமிபட்டர்; அன்னையின்
அழகு ஜோதியில் மனதைப் பறிகொடுத்து அமர்ந்திருக்கும் வேளை,
ஆணவ அரசன் வந்ததும் கவனிக்காத மனம்;ஒளியில் ஒன்றிய மனம்;
அந்த நேரம் மன்னன் கேட்டான்,"இன்று என்ன நாள்? திதி?
ஒளி தெரிகிறதே! தெரியவில்லையா உனக்கு? இன்று பௌர்ணமி"
உள்ளம் உணர்ந்த விடை. கொதித்தான் மன்னவன்;அமாவாசை இன்று;
அதுகூடத் தெரியாத நீர் பட்டரோ? இன்று மாலை நிலவு வானிலே உதிக்க
வேண்டும்; உதிக்காவிடின் உன் தலை மண்ணில் புரளும்' , நடந்தது
உணர்ந்த பட்டர் அம்மையிடம் புலம்பினார்; அழுதார்; புரண்டார்;
அபிராமி அந்தாதியை மனமுருகப்பாடினார்; மாலை வந்தது; வானிலே
வட்டநிலவு வடிவோடு தோன்றியது. பட்டரின் சொல்லை மெய்ப்பிக்க,
அம்மை, தனது தாடங்கம் என்ற தோட்டை வானிலே வீசினாள் .
இருள் அகன்றது; இப்படி அடியவர் மீது மாறாத கருணை கொண்ட
அன்னை பார்வதி தேவியின் மடியிலே நெற்றிச்சுடரில் தோன்றிய
குழந்தை குமரன் அமர்ந்து விளையாடினான்;அரக்கர்களை அழித்து,
மூவேழ் உலகையும் மீட்டிடக் கருணை கொண்ட அன்னை அருந்தவம்
இருந்து பெற்ற வேலாயுதத்தை அளித்தாள் ;
சூரபன்மன் என்ற அரக்கனால் சிறைபிடிக்கப்பட்ட தேவர்கள்
விடுத்தலை பெறவும், அரக்கர் குலம் அழியவும், ஒருவீர மகனைத்
தோற்றுவிக்கத் தனது நெற்றிக்கண்ணைத் திறந்தார் சிவபெருமான்.
அங்கே தோன்றிய பொறி தீயாலும், காற்றாலும்,கங்கையாலும் ஏற்க
இயலாத வெப்பச்சூழலிலே சரவணப் பொய்கை அதனை ஏற்றது.
வானத்து விண்மீன்கள் கூட்டத்தில் கார்த்திகைப் பெண்கள் அறுவர்
கீழிறங்கி வந்து மலர்களில் மலர்ந்திருந்த ஆறு குழந்தைகளையும்
பாலூட்டிச் சீராட்டி வளர்த்தனர்; அப்படி வளர்ந்து வீரமும் விவேகமும்
பெற்று, விண்ணையும் மண்ணையும் காத்த குமரனே! உனது
மலர்ப்பாதங்களுக்கு வணக்கம்.
பாடல்--91.
குமரா! குழந்தைக் குகனே! குறிஞ்சிக்
கிழவா! கிருத்திகை வாசா! கிரௌஞ்ச
மமதை வீழ்த்திய வீரா! விண்ணவர்
மனத்துயர் நீக்கிட மகேந்திரம் வீழ்த்தியவா!
அமரர் சேனைத் தலைவா! அழகா!
அழகுடைத் தேவாள் அங்கணவா! புனத்தின்
விமலை வள்ளியை விரும்பி வேட்டவா!
வியன்ஞான மலையமர் வெற்றிவேல் பெருமானே!
பொருள்
என்றும் இளமை கொண்ட குமரனே! குழந்தை வடிவில் குருவாய்
விளங்குபவனே! மலைநாடெல்லாம் தலைவனாக நின்று ஆள்பவனே!
கார்த்திகைப் பெண்களாம் விண்மீன்களால் வளர்க்கப்பட்ட காரணத்தால்
கிருத்திகை விண்மீனின் நாளைத் தன் நாளாகக் கொண்டவனே!
ஆணவத்தாரகனையும். அவனது மாயக் கிரௌஞ்ச மலையையும்
அழித்து, மமதை போக்கிய வீரனே! தேவர்களின் , "அரக்கர்களின் அடிமை
ஆகிவிட்டோமே" என்ற மனத்துயர் நீங்கிட, சூரபன்மனின் மகேந்திர
நகரை அழித்து உயர்ந்தவா!
தேவர்களின் படைகளுக்குத் தலைமை தாங்கிய தேவ சேனாபதியே!
அழகென்ற சொல்லின் இலக்கணமே! அழகுமிகுந்த தேவசேனாவை
மணந்தவனே!
வள்ளிமலைத் தினைப்புனத்தில் தோன்றிய வள்ளிப்பிராட்டியை
விரும்பித் தேடி அலைந்து காதல் மொழி பேசியவா! பெருமைமிகு
ஞானமலையில் அமர்ந்தவனே! வெற்றிவேலாயுதப் பெருமானே!
உனது பொன்னார் திருவடிகளைப் போற்றுகின்றோம்.
பாடல்--92.
மானே! மயிலே! மனமெலாம் நிறைந்த
மலைக்குற மகளே! என்றிரங்கி ஒடியும்,
யானே வருவேன்" யானை முகத்தோன்,
தானே காட்டிய, தகவால் பாடியும்,
கோனே மகிழ்ந்து கொடுத்த பரிசால்,
கோமகள் குவியிதழ் கூட்டிய சிரிப்பும்,
தேனே! தமிழே! திகழ்சுவை அமுதே!
தேர்ந்திசைப் பண்களாய்க் கொண்டமலைச் செல்வனே!
பொருள்
மானென்றும் மயிலென்றும் அழைத்துக் கொஞ்சிடும்
சொற்கள் பேசிப்பின்னால் ஓடி ,மனமெல்லாம் நிறைந்த மலைவாழ்
குறப்பெண்ணே! என்னைப்பார்! என்று கெஞ்சிட, அவள் ஏற்காத நிலையில்,
"தம்பி! நான்வந்து உன்காதலுக்கு உதவுகிறேன்" என்று வந்த கணபதி,
யானை உருவில் வள்ளியின்முன் வந்து பயம் காட்ட,அஞ்சிய அம்மை
அண்ணல் மார்பிலே சாயப் பிறந்த மகிழ்வும்,
தேவேந்திரன் போர்வெற்றி ஆற்றித் தந்த தேவசேனாபதியாம்
முருகனுக்குத் தன்மகளைப் பரிசாக நல்கிப் பரிசம் போட்ட காலை,
தேவசேனாவின் முகத்திலே சிரிப்பைத் தோற்றுவித்த பாங்கும்,
தேன்போல் இனிக்கும் கருணை கொண்டவரே! தமிழ்போல் முச்சுவை
கொண்டவரே! எல்லாச்சுவைகளும் நிறைந்த அமுதம் போன்றவரே!
இருபக்கத்திலும் பண்களாய் , அருட்பெண்களாய்ப் பெற்று விளங்கும்
ஞானமலைச் செல்வரே! வாழ்த்தினோம்;போற்றினோம்; போற்றி.போற்றி.
பாடல்--93
செல்வம் மல்கும் சீர்ஞான மலையின் ,
செம்பொன் செழுஞ்சுடரே! செவ்வந்திச் செம்பவளமே!
அல்லல் அறுக்கும் அருமருந்தே! அண்ணலே!
அன்பில் விளைந்த ஆரமுதே! அருமுத்தே!
மல்கும் கண்ணீர் மாற்றும் மருந்தே!
மனத்துள் அமர்ந்த மாசிலாச் சோதியே!
கல்லும் கரையும் கருணைக் கடவுளே!
கல்லான் போற்றினேன், கழலடி அருளே.
பொருள்
அருட்செல்வமும், பொருட்செல்வமும் நிறைந்து விளங்கும் சீர்மை பெற்ற
ஞான மலையின்கண் வீற்றிருக்கும், செம்பொன் போல் ஒளிரும்
செழுமையான ஒளிச்சுடரே! செவ்வந்தி மலர்போன்று நறுமணம் கொண்ட
தூய்மையான பவளமணி போல் ஒளிர்பவரே!
அடியவர்களின் துன்பத்தை அகற்றி,இன்பம் விளைவிக்கும்
மருந்தாக நின்று காப்பவரே!(பிறவி நோய் அகற்றும் மருந்து) மூவர்
போற்றும் பரம்பொருளே!அன்பெனும் பயிர் கொண்ட மன வயலிலே
விளைகின்ற அமுதமே! ஆழ்மனக்கடலில் அன்பும், ஞானமும் சேர்ந்து
விளையும் உயர்ந்த முத்து போன்றவரே!
துன்பச் சாயலை அடியோடு நீக்கி, வழிகின்ற கண்ணீரைத்
துடைத்துவிட்டு, இன்பநிலைக்கு மாற்றி அருள் சுரக்கும் மருந்தானவரே!
ஆன்மாக்களின் மனத்தாமரை மலரில் அமர்ந்து, அறியாமை, அஞ்ஞானம்
அகற்றி, அல்லல் நீக்கும் வழிகாட்டும் ஒளி வடிவானவரே!
சூரன் போன்ற அரக்கனையும் தன்வயப்படுத்தும் தளிர்க்குணம்
ஊமையைப் பாடவைத்த பாங்கு, சிற்றின்ப வேட்கை கொண்ட
அருணகிரியையும் மாற்றியமை போன்ற அருள்களினால் கல்லையும்
கனியவைக்கும் கருணைக் கடவுளாக விளங்குபவரே! கல்வி,பண்பு,
ஒழுக்கம் பக்தி ஆகிய எதுவும் கல்லாத நாயினேன் உன்னைப்
போற்றுகின்றேன். என்னையும் ஏற்று, அருள்புரிந்து மலரடி காட்டி,
அருள் புரிய வேண்டுகிறேன்.
முருகா! என்றிட முழுவினை தீரும்"
பாடல்-94.
அருளார்ந்த சிந்தை,எம் ஆதிப் பிரானை
அன்பார்ந்த மனத்துள்ளே ஆல்போல் வளர்த்தேன்;
தெருளார்ந்த என்னுள்ளம் தெளிவினைப் பெற்றதுவே;
தெற்காளும் தேவனுமே தீண்டிடத் தயங்கினான்;
இருளார்ந்த கண்டத் திறைவன தினியமகன்,
இருளார்ந்த நெஞ்சத்தை எழிலாக மாற்றினான்;
மருளார்ந்த மாசினைப் போக்கிடும் மலையானே!
சுருளார்ந்த செஞ்சடையான் தான்வணங்கும் சுவாமிநாதா.
பொருள்
அருளெல்லாம் நிறைந்து விளங்கும் எண்ணம் கொண்ட எம்முடைய
மூலப்பொருளை, மூர்த்தியை, அன்பும்,பக்தியும் நிறைந்த நாயினேன் என்
மனத்துள்ளே நிலைத்துப் பரந்து விளங்கும் ஆலமரம்போல் வித்திட்டு
வளர்த்து வந்தேன்.
அதனால் மயக்கமும், அறியாமையும் நிறைந்த என்மனம் தெளிவு
பெற்றது; அத்வைத சித்தாந்தத்தை அணுகி நின்றது; அவனோடு,நானும்,
என்னோடு அவனும் ஒன்றினோம்; இந்நிலையில் கூற்றுவன் கூட என்னைத்
தீண்டிட அஞ்சினான்.
விடத்தைக் கழுத்திலே நிறுத்தி,"நீலகண்டன்" என்ற திருநாமம் உற்ற
சிவபிரானின் இணயமகன், இருள் குகையாகி ஒளிபுகாத எனது
பாழுற்ற நெஞ்சத்தை, அறிவும்,அன்பும், கொண்ட எழில் நெஞ்சமாக
மாற்றினான்;
ஆணவ மயக்க மலங்களால் மாசு அடைந்திருந்த என்மனமாசுகளை
நீக்கி, சுத்தசன்மார்க்க நிலையைத் தோற்றுவித்த ஞான மலைப்
பண்டிதனே! சுருளான முடிகள் சூழ்ந்த செம்மையாகிய சடையை
உடைய பரமேஸ்வரனும், பாதம் தொட்டு வணங்கினான்; பிரணவப்
பொருள் வேண்டினான்; தந்தைக்கும் குருவாகி உபதேசித்த குருவே!
சுவாமிநாதனை ! போற்றி!போற்றி.
தகப்பன் சுவாமியே சரணம்.
பாடல்--95.
நாதனே! நான்முகன் நாவின் வேதனே!
நாவின் நல்லாள் நவின்ற போதனே !
ஆதவ ஒளிபோல் ஆணவச் சேதனே !
ஆனந்த ஆன்மாவின் ஞான கீதனே!
மோதக முன்னவன் முதிர்வால், பேதனே !
முதுமை, இளமை, முகிழ்த்த வேடனே !
வேதனை வாதனை நீக்கிடும், மாதவ!
சீத மதியானே! செம்மலைச் செஞ்சுடரே.
பொருள்
மூவேழ் உலகிற்கும் தலைவனாய்க் கடவுளாய் விளங்குபவனே!
ஆணவமுற்ற பிரம்மதேவனின் தலையில் குட்டி, ஸ்பர்ச தீக்கை அளித்து,
நாவிலும் ஓங்காரம் எழுதி, உபதேசித்த மறைவடிவானவனே ! கலைமகள்
கலங்கிய காலத்தில், குருவாகித் தான் அமர்ந்து பிரணவத்தை,
மறைகளை உபதேசித்த ஞான ஆசானே!
ஆன்மாக்களின் ஆணவ மலங்களை ஆதவன் இருளை அழிக்கும்
ஒளிபோல அகற்றி,நீக்கித் தூய்மை ஆக்குபவனே!ஆன்மாக்கள் ஆனந்தம்
அடைந்திட ஞானகீதம் பாடிப்பேசி, அருளி ஆனந்தம் கொள்பவனே!
கொழுக்கட்டை விரும்பும் கண நாதன் ,"உலகையே ஓர்நொடிக்குள்
சுற்றி வருவதற்கு ஏற்பத தன் தாய்தந்தை ஆகிய பார்வதி
பரமேஸ்வரர்களைச் சுற்றிவந்து,பெற்ற கனியால் பேதம் (வேறுபாடு)
அடைந்து பழனி மலையில் தனியே அமர்ந்தவனே ! அம்மலையில்
அமர்ந்து, இளமைமிகுந்த அரசனாகவும், முதுமை மிகுந்த ஆண்டியாகவும்,
வேட்கை நிறைந்த வேடனாகவும் காட்சி தரும் கந்தவேளே!
பிறப்பு என்ற வேதனையையும்,இறப்பு என்ற வாதனையையும்
நீக்கிச், சிவப்பேறு என்னும் பாக்கியத்தை அளித்து, ஆன்மாகளுக்கு
நல்லருள் வழங்கும் தவ மா முனியே! இரக்கம்,அன்பு, கருணை,
என்னும் குளிர்ச்சி கொண்ட மனம் கொண்டவனே! ஞானமலையில்
சீர்வழிகாட்டி நிற்கும் செழுமை வாய்ந்த ஒளிச்சுடரே! நின்
மலர்ப்பாதங்களுக்கு ஆயிரம் கோடி வணக்கங்கள்.
பாசம் நீக்கும் பைந்தவ முருகனே போற்றி.
பாடல்--96.
செஞ்சுடர்ச் செம்பொறி தோற்றிய செல்வா!
செம்மை தாங்காச் செவ்வாய்த் தலைவா!
அஞ்சியோர் அடிபணியப் பொய்கை உதித்தவா!
அஞ்சுகக் கார்த்திகை அரவணை மழலையே!
மஞ்சமாம் மலர்துயில் மகிழ்முகக் குழந்தையே !
கஞ்சமலர்க் கரத்தால் இணைந்த கந்தா!
அஞ்சும் பணிந்திட ஆறும் கொண்டவா !
அஞ்சேல்! என்றருள் அருமலைப் பண்டிதா.
பொருள்
முக்கண்ணன் மூன்றாம் கண்ணிலிருந்து தோன்றிய
சுடர்ப்பொறியிலிருந்து அவதரித்த செல்வனே! தோன்றிய பொறியை
ஏற்க வந்த தீ நாக்குச் செம்மை வாயினைக் கொண்ட அக்கினியால்
தங்கி ஏற்கமுடியாமல் ஆனபொழுது, உன்னடிமை ஆனானே ! அவனுக்கும்
நீயே தலைவன் ஆகிறாய்.(செம்மையும், வீரமும் தாங்கிய அங்காரகனாம்
செவ்வாயின் தலைவனே!) என்றும் பொருள் கொள்ளலாம்.
சிவ சைதன்யச் செம்பொறியைத் தாங்க முடியாது, வாயுவும்,
கங்கையும் அஞ்சி நடுங்கிட ஏற்றுத் தாங்கிய சரவணப் பொய்கையில்
உதித்தவா ! அழகிய கார்த்திகை விண்மீன்களாம் பெண்களால்
அரவணைத்து வளர்க்கப்பட்ட மழலையே!
சரவணப் பொய்கையில் மலர்ந்த தாமரை மலர்களே துயிலும்
மஞ்சமாக மாறிட, குயிலும், வண்டும் தாலாட்டுப் பாடிட, மகிழ்ந்த
முகத்த்தோடு துயிலுற்ற தெய்வக்குழந்தையே! காணவந்த சர்வேஸ்வரன்
பார்வதி தேவியிடம் ஆறு குழந்தைகளையும் காண்பிக்க, அம்மையோ
அன்பொழுக ஆறுகுழந்தைகளையும் அன்போடு அணைத்துக்கொள்ள
ஆறுமுகங்களும் ஒன்றாகி ஓர் முகமாய்க் கந்தனாய் மலர்ந்தவா!
நமசிவாய என்ற ஐந்தெழுத்து கொண்ட நாயகன் பணிந்தபொழுது
சரவணபவ என்னும் ஆறெழுத்து உயர்ந்தோங்கி உலகெலாம்
கொண்ட சுவாமிநாதனாக மிளிர்ந்தது. அவ்வாறுமுகமே ஞானமலையில்,
ஞானபண்டிதனாக அமர்ந்து,அடியவர்களை அஞ்சேல்! யாம் இருக்க
பயம் ஏன் ? என்று காத்துவருகிறான்.
ஞானபண்டித ஸ்வாமி நமோ நம "
பாடல்--97.
திருப்பரங்குன்றம்
பண்ணவள் பெண்ணவள் கண்ணவள் கரம்தொட்டு,
மண்ணவள் மாதரசி மகிழ்கொண்ட மாமலை;
விண்ணவன் வீரத்தின் விளைநிலப் பரிசானாள்
வேழத்தாள் விரும்பும் பரங்குன்ற மலையேயாம்.
திருச்செந்தூர்
எந்நாளும் இறுமாப்பு; இயல்மீறிய சூரரக்கன்
அந்நாளே அழிந்திட அன்னைவேல் தொட்டவூர்,
பொன்னாளாய்ப் புதுமையாய்ப் போர்வெற்றி பெற்றவூர்,
செவ்வேள் செற்றவூர்; செந்தூர் செம்மலையே.
பொருள்
97,98,99 ஆகிய பாடல்கள் ஆறுபடை வீட்டோடு ஞானமலையை
இணைத்துப் பாடப்பட்டுள்ளது.
பண்ணும் அவளே, உயர்குலப் பெண்ணும் அவளே, விண்ணுலகக் கண்ணும் அவளே,என,அவளது அருட்கரத்தை வணங்கி, மண்ணிலே
வந்த மாதர்குல மாணிக்கம் அவளே எனப்போற்றும் மகிழ்வோடு அவள்
புகழ் பாடும் மாமலை திருப்பரங்குன்றம்.
விண்ணக வேந்தன் தேவேந்திரன் தேவாசுரப் போரிலே வெற்றி
தேடித்தந்த வீர விளைநிலமாம் வேலவனுக்குப் பரிசாகத் தன்மகள்
தேவயானையைக் கொடுக்கஎண்ணி மனமும் செய்வித்தான்;அந்த
தேவயானை விரும்பிய மலையான திருப்பரங்குன்றம் போன்றதே இந்த
ஞானமலை என இதனையும் விரும்புகிறாள்.
இறுமாப்பு,ஆணவம்,வரம்பு மீறிய செயல்கள், வேதநெறி மனம்
கொள்ளாமை போன்றவற்றைக் கொண்டவன்,தேவர்களைத் துன்புறுத்திச்
சிறைப்பிடித்ததும் அவர்களை விடுவிக்க முருகப்பெருமான் போர்
தொடுக்க எண்ணிச் செயலாற்றிய ஊர்;அன்னை அளித்த வேலைத்
தொட்டுப் போர்புரிந்து வெற்றியைப் பொன்னாகப் புதுமையாய்
வெற்றி அடைய வைத்த ஊர்;செவ்வேள் போராற்றிச் செங்குருதி
பரந்த நிலம்;அவ்வூர் திருச்செந்தூர். அவ்வூருக்கு நிகராக முருகன்
புகழ் பாடும் பெரிய மலை ஞானமலை ஆகும்.
பாடல்-98.
பழனி
மலையேறி நான்நிற்பேன் மற்றங்கே வருகவே;
மாங்கனி மாதேவன் மனமுறு சினம்தானே;
கலைக்கோல் கோவணாண்டி; கண்குறும்பு இளவேடன் ;
கால்நடுங்கு குடுகிழவன் ; வேல்பழனி நிகர்மலையே.
சுவாமிமலை
நிலைஞான நித்தியமாய் நீள்பிரமன் சிறைவது,
நிர்மலத் தந்தைக்கு உபதேச நீறளித்துத்
தலையான சுவாமிநாதன் தன்கருணைப் பேறாலே
தத்துவ சுவாமிமலை தனக்குநிகர் இம்மலையே.
பொருள்
அண்ணனுக்கே மாங்கனி; எனக்கில்லை; தந்தை,தாய் உறவுகளை
மறந்தேன்; சினம் கொண்டேன்;தனிமலையில் நான் நிற்பேன், என்னைக்
காண எல்லோரும் அங்கு வாருங்கள்"என்றுரைத்த முருகன் நின்ற மலை;
கையிலே அழகுமிகுந்த தண்டம் ஏந்திய நிலை;கோவணம் மட்டுமே
தரித்த ஆண்டிக்கோலம்; மாறாக கண்ணெல்லாம் குறும்பு நிறைந்தும்,
இளமை ததும்பும் பார்வையும் கொண்ட வேடனாகக்காட்சி; வள்ளியாகிய
அன்புடைக் காதலிக்காக நடுங்குகின்ற கால், வெண் தாடி; குடு குடு
கிழவ உருவம்;வேலவனின் அழகு காணக் கண் ஆயிரம் போதா.அந்த
முருகனைக் காண ஞானமலை செல்லலாம்; பழனிக்கு நிகரானது
ஞானமலையாகும்.
அழியாத தன்மை; நித்தியமாய் விளங்கும் உயர்வு; ஆகிய
பெருமை கொண்ட வேதத்தை,அதன் முதலாகிய பிரணவத்தை அறியாத
பிரமன் ஆணவத்தை அடக்க ஆறுமுகன் அவனைச்சிறையில் இட்டார்;
பிரமனை விடுவிக்க வேண்டிய தந்தையாகிய சிவபெருமானுக்கும்
பிராணவப்பொருள் தெரியாது,வேண்ட ,அவர் தோளிலே அமர்ந்து அவர்
காதில் பிரணவோபதேசம் புரிந்தார் முருகன். பரம்பொருளுக்கே
ஞான குருவான முருகன் சுவாமி நாதன்" என அழைக்கப்பட்டார்;
தத்துவ குருவாம் சுவாமிநாதன் வீற்றிருக்கும் மலை போன்றது
ஞானமலையும் ஆகும்.ஞானபண்டிதசுவாமி வீற்றிருக்கும் மலை இது.
பாடல் --99.
திருத்தணிகை
மலைநாட்டுக் குறவள்ளி மனத்தாலே போற்றிநிற்க,
மலைவேடன் தானாகி, மனத்தோடு மனமொன்றி
மலைவேழத் துணையாலே மகிழ்ந்தேற்ற மலர்வள்ளி
மணம்கண்ட மணித்தணிகை அணியாகும் நனிமலை ;
பழமுதிர்சோலை
அலைமேகக் குளிர்வோடு அருவண்டு சுழன்றாட,
அளவில்லாப் பெருமரங்கள் அற்புதமாம் நற்கனிகள்,
அலைமோதும் அழிதுயரை நீக்கியருள் ஆறுமுகன்
அறஞானப் பழமுதிரும் அஞ்சோலை நம்சுடரே .
பொருள்
மலைநாட்டுக் குறவள்ளியாக அவதரித்த மால்மகள், மனத்தாலே
குமரனையே நினைந்தபடி வாழ, தக்க தருணத்தில் தானே ஒரு மலை
வேடனாகி வள்ளிமலை சென்று,தினைப்புனம் காவல் காக்கும் வள்ளி
போகும் இடமெல்லாம் தானும் போகி, மனக்காதலை எடுத்துரைத்த
பொழுது, அவள் உடன்படாத நிலையில், அண்ணன் யானைமுகன்
உதவி புரிய அஞ்சிய அவளோடு மனம் ஒன்றி மகிழ்ந்து, மணம்
புரிந்துகொண்ட திருத்தணிகை மலை நமது அழகு மிகுந்த ஞான
மலைக்கு அணியாகும்; ஒப்பாகும்;
வானிலே அலை அலையாய்க் குளிர்மேகங்கள்;குளிர்ச்சியில்
வண்டுகளின் ரீங்காரங்கள்; வளர்ந்தோங்கிய நல்மரங்கள்; மரமெல்லாம்
அற்புதக்கனிகள்; மலையில் அமர்ந்துள்ள ஆறுமுகக் கடவுள்,
அடியவர்களின் மாளாத பெருந்துயரைப் போக்கி அருள்பவன்;
அறமும், ஞானமும் சிறந்தோங்கும் பழமுதிர்சோலைக்கு நிகராக
நமது சுடர்மிகுந்த ஞானமலை திகழ்கிறது.
பாடல்--100.
சுடராறு சுவையாறு சுகமாறு சுனையாறு
சொல்லாறு எழுத்தாறு பொருளாறு புதிதாறு
தடமாறு தலையாறு திடலாறு முடியாறு
மடலாறு மணியாறு மதியாறு முகமாறு
இடமாறு குடமாறு கடலாறு வடமாறு
இலையாறு மலராறு கலையாறு கனியாறு
உடலாறு நடமாறு உயர்வாறு உணவாறு
ஓராறு ஈராறு உடையோனே! மலையருளே.
பொருள்
ஆறுமுகனின் பெருமைகளைப் பட்டியலிட இப்பாடலில் "ஆறு"
என்ற எண்ணிக்கைச் சொல் பயன்படுத்தப் படுகிறது.
ஆறு அதனைப் பட்டியலிட்டால் அதுவே ஒரு தனி நூலாகும்.
குறிப்பால் உணர்த்தப்படுகிறது.
முருகனுக்கு, ஒளிமிகுந்த சுடர் , பிடித்தமான சுவைகள்,
அடியவர்களுக்கு அருள்கின்ற சுகம், குன்றங்களிலே அமைந்த சுனைகள்,
செவ்வாயில் பழகும் சொல், குறிக்கும் எழுத்து, சொல்லும்.எழுத்தும் தரும்
பொருள், புதுமை, ஆனபலவும் ஆறே.
கால்பதித்த தடம், தலைகள், போர் ஆற்றிய திடல்கள், கிரீடம்,
எழுதிய மடல்,மணிகள்,நிலவுகள்,முகங்கள், ஆறு உடையவனே!
சிறப்பாக அமர்ந்த இடங்கள் ஆறு;பூஜைக்கும்பங்கள் ஆறு; அமர்ந்து
ஆட்சி புரியும் கடற்கரை , கழுத்து வடங்கள், பூஜிக்கும் இலைகள்,மலர்கள்,
அழகூட்டும் கலைகள், நிவேதனைக் கனிகள் ஆகியன ஆறு கொண்டவனே!
உடல்கள், ஆடும் நடனம்,பெறற்கரிய பெருமைகள்,நிவேதன உணவுகள்,
கருணைமுகங்கள், அன்புக்கரங்கள் ஆறு உடைய ஞானமலை முருகா!
வணங்குவோருக்கு நலங்கள் நாளும் அளித்திட வேண்டுகிறோம்.
"ஆறுதலைத் தரும் ஆறுதலை"
பாடல்--101,
நன்மை தந்தருள் நாயகன் வாழ்க.
நால்வேத நற்றமிழ் நாளும் வாழ்க.
கன்னிவள்ளி கார்வேழக் கருணை வாழ்க.
கரவேல், இளமயில், சேவலும் வாழ்க.
பன்னிரு கரமும் , படையும் வாழ்க.
பழந்தமிழ் நாவும், பண்பும் வாழ்க.
சென்னியும், செவ்விதழ்ச் செம்மையும் வாழ்க.
சென்னிமலை, சொர்ணமலை வாழ்கஞான மலையே .
பொருள்
உலக உயிர்களுக்கு என்றும் நன்மையையே தந்தருளும் தலைவனாம்
முருகன் வாழ்க.
நான்குமறைகளும்,பன்னிரு திருமுறைகளும், நிலைத்து வாழ்க.
இளமையழகு வள்ளிப்பிராட்டியும், கருணை மிகுந்த தெய்வயானை
அம்மையும் வாழ்க.
பொற்கரத்திலே தாங்கிய வேலும், ஊர்தியான மயிலும், கொடியான
சேவலும் வாழ்க.
பன்னிரண்டு கரங்களும்,அக்கரங்கள் தாங்கிய படைகளும் வாழ்க.
தொன்மை வாய்ந்த தமிழ் மொழி அருளும் செந்நா வாழ்க.
பண்பு மிக்க சொல்லாற்றல் வாழ்க.
ஆறு தலைகளும் வாழ்க. செவ்வாய், செவ்விதழ் பயிலும் சீரிய
அருளாக்கம் வாழ்க.
சென்னிமலை போலவும், சொர்ணமலை போலவும் விளங்கும் ஞான
மலை வாழ்க, வாழ்கவே.
திருக்கடைக்காப்பு
அணியாகும் ஞானமலை அலங்கார நூலாதனில்,
அணியாக வகுத்துள்ள, அறவழிக் கருத்துக்களில்
மணியாக ஒருகருத்தை, ஓர்பாடலை மனமுருகி,
மாமுருகன் மாப்பெயரை ஒருமுறை உரைத்தாலும்,
பிணிபோகும்; பகைநீங்கும்; பழியகலும் ; பலர்போற்றும்,
பெருமைகள் வந்துசேரும்; பெரும்பேறு சித்திக்கும்;
கணித்தபடிக் கடிமணங்கள் காலத்தில் நடந்தேறும்;
கதிர்ஞான பண்டிதனின் கருணையைக் காண்பீரே.
பொருள்
அழகுத்தமிழ்க் கவிதையிலே உருவான "ஞான மலை அலங்காரம்"
என்னும் இந்த நூலின் முறையாக வகுத்துள்ள அறவழி, வழிபாடு, முருகன்
பெருமை, போன்ற கருத்துக்களில் ஒரு கருத்தை, ஒரு பாடலை,
மனமுருகிக் கூறினாலும், பாடினாலும், பாடலில் வந்துள்ள முருகன்
பெயரை மனதார ஒருமுறை கூறினாலும்,பக்தியோடு கூறுவோரின்
நோய் அகலும்; பகைமைக் குணங்கள் நீங்கி அன்பு வளரும்;
குற்றங்கள் நீங்கும்;பலரும் போற்றும் உன்னத நிலைக்கு ஆளாவோம்;
இறைவனின் அருள் கூடும்; சிவப்பேறு கிட்டும்; சந்ததியினருக்குத்
திருமணங்கள் காலத்தில் நடந்தேறும். ஒளிமிகுந்த ஞான மலையில்
வீற்றிருக்கும் முருகனாம் ஞான பண்டிதக்கடவுளைப் போற்றும்
இந்நூலைப் படித்துப் போற்றி இறையருள் பெறுவீர்!
முருகா போற்றி. கந்தா போற்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக