சனி, 13 ஜூன், 2020



                     4,39, ஆறாம்  நாள் போர் 

                                  சிங்க முகாசுரன்    அழிதல் 


1.  தூதுவர்   தீயசெய்தி     காது ற்ற      சிங்கமுகன் 
     தீதறுக்கப்     போதுற்றான்      தேர்ந்து.

2,  அண்ணனாசி    பெற்றபின்பு      விண்ணவரை     வேரறுக்க 
     மண்ணதிர      மாப்படை  கொள்,

3,   அஞ்சியோடும்      இந்திரன்;    அஞ்சாத     வீரவாகு,
      அஞ்சலென       ஆறுமுகம்      ஆறு.

4.   தசமுகன்      துன்முகன்     மாண்டான்;   மறைந்தான்;
      கசடெனக்      கார்குணம்      நீக்கு.

5.   மிதித்தே     அழிப்பான்;     அடித்தே    மிதிப்பான்;
      சிதைத்தே     எறிவான்     அரி.

6.   வாகுவின்      ஆற்றலழி       வேகமாயை    ஏவியே,
      சாகுநிலை    ஆதிமலை    ஏகு .

7.   வந்துநின்ற      செந்தழல்      செம்மையை     வீழ்த்திட 
      முந்துபயில்       போரெல்லாம்    சாற்று.

8.   மாயத்தால்      பேயுரு      வாய் வயிறு       தேவர்கள்,
      தேய்ந்தழித்து     உண்டனன்     கார்.

9.   வேலன்றி       வேறுபடை     கொள்ளாயோ?     வேலவனே!
      காலக்              குலிசம்         கனன்று.

10.   உதயகிரி      காப்பாற்றி,     ஓரரக்கன்      வீழ,
        விதயமெலாம்      நின்றருளும்    வேல்.


                                              பொருள் 
1.பானுகோபன்   போரில்  இறந்துபட்டவுடன்   சூரன்   தூதுவர்களை   அனுப்பிச்
 சிங்கமுகனை   அழைத்துவர    ஆணையிட்டான்;  தூதுவர்கள்   ஆசுரநகர் சென்று  சிங்கமுகனிடம்   செய்தியைக்  கூறினர் ,  அவனும்    அண்ணனுக்கு உதவப்    பெரும்படையுடன்   புறப்பட்டான்.

2.     மகேந்திரபுரம்      வந்து,   அண்ணனை   வணங்கி, அண்ணனுக்கு நல்வழி
கூறினான்.  ஏற்காத   அண்ணனின்    விதியை  நினைந்து   வருந்தியபடியே
அண்ணனிடம்   ஆசிபெற்றுக்கொண்டான்.   நால்வகைப்   படைகளுடன்,
ஆயிரம் காரமும்,ஆயிரம்   தலைகளும்   கொண்ட சிங்கமுகாசுரன்  போருக்குப்   புறப்பட்டான். விண்ணவர்களையும்  அவர்கள்   தலைவன் முருகனையும்   வெற்றி கொள்ளப்    புறப்பட்டான்;  மண்ணும்   விண்ணும்   அதிர்ந்தது;

3.    சிங்கமுகன்    வருகிறான்   என்ற செய்தி   கேட்டு   அஞ்சியபடியே   இந்திரன்   முருகனிடம்   ஓடிச்சென்று   செய்தி   தெரிவித்தான்; முருகனோ    வீரவாகுவை   அவனோடு   போரிட   அனுப்பிவைத்தார்.  அஞ்சாத   வீரவாகு சிங்கமுகனை  எதிர்த்துப் போரிடப்   புறப்பட்டார்.அஞ்சவேண்டாம்   அவனை  இன்று   நாம்   அழிப்போம்" என்று   ஆறுதல்   அளித்த  முருகனும்
போர்க்களம்   நோக்கினான்.

4.    அரக்கர்    படை  ஏழு  கடல்களும்   ஒன்று   சேர்ந்தாற்போல  ஒருங்கே
இணைந்து     ஆரவாரக்   கூச்சலிட்டது.  அவர்களுள்   "தசமுகன்"  என்னும்
படைத்தலைவன்   பூதர்களை    அழித்துக்  குமித்தான்.   அது கண்ட   வீரவாகு தனது    வில்லை  வளைத்து,ஒலி    எழுப்பினார். அவனோடு   போர் புரிந்தார்.
தசமுகன்   மாண்டான்; அடுத்ததாக   "துன்முகன் "  என்பான்   வீரவாகுவை எதிர்த்தான்;  கடுமையான   போரிலே   வீரவாகுவை   எதிர்க்க  முடியாமல்
அரக்கன்   மாயத்தால்   மறைந்து போனான்; மறைந்தவனைத்    தேட ஓடினர்   தேவர்கள். வீரவாகு   அவர்களைத்    தடுத்துப்   புறமிட்டவனை  அழிக்க  முனைதல்  கூடாது; ஆதலின்   அவனை   விட்டு விடுங்கள்"   என்று  தடுத்தார்.

5.    களத்தினுள்    நுழைந்த   சிங்கமுகன்,  பூதர்களைப்    பலவாறு   வீழ்த்தினான்.   சிலரைக்    காலால்   மிதித்துக்   கொன்றான்; சிலரைக்
காலால்   தூக்கி  எறி ந்து    சாக  அடித்தான்; சிலரின்   கை ,கால்களை
ஓடிப்பான்;பூமியில்   அப்படியே   அறை வான்;   விண்ணவர்   படை உயிருக்கு   அஞ்சி   இங்குமங்கும்   ஓடியது.

6.   இந்நிலையில்    வீரவாகு   சிங்கமுகனை   எதிர்த்துப்  போரிட  வந்தார்;
வீரவாகுவைக்     கண்டதும், மிகுந்த   சினமுற்ற   அரக்கன்   அவரோடு
வெறித்தனமாகப்  போரிட்டான். வீரரோடு  போரிட  இயலாமல்   களைத்துப்
போன    சிங்கமுகன்   தனது   தாய்   தந்த   மாயப்படையை   நினைத்தான்.
அதுவும்    வந்தது; இந்த   வீரவாகுவையும்,  அவனது   கூட்டத்தையும் முதலில்   உணர்வு   அற்ற   தன்மையை   உருவாக்கி, மயங்கிய   நிலையில்   ஏழு  கடல்
தாண்டி  அமைந்துள்ள   உதயகிரியின்   கரையில்  போட்டுவிட்டுக்   காவல்
காதபடி   அங்கேயே  இரு"!  என்று  அப்படைக்கு   ஆணையிட்டான்.அதுவும் அவர்களை   மயக்கித்    தூக்கிச் சென்று  மலையடி   வாரத்தில்   போட்டது.

7.   விண்ணவர்   படையை  அழித்துக்  கொண்டிருந்த   சிங்கமுகன்முன்  முருகன்   போரிட   வந்து நின்றார், அவரையும்   வீழ்த்தி,அண்ணன்    சூரனுக்கு   வெற்றி  தேடித்தரும்  அவாவில்  சிங்கமுகன்   எதிர்த்துப் போரிடத்
துவங்கினான்.  அண்ணன்   சூரன்   அவனது   போர் வெற்றியைக்   காண  ஒரு  மலைமீது   நின்று   போரைக்    கவனித்துக் கொண்டிருந்தான்.பலப்பல   படைகள், பலப்பல   தெய் வீகப்   படைகள்,என   மாற்றி மாற்றி  முருகன்   மீது  வீசினான்.இதுவரை   தான்   கற்ற   போர்முறைகளை    எல்லாம்  பயன் படுத்தி   எதுவும்   அவனுக்கு   உதவாத  நிலையில்   தளர்த்தும்   போனான்.

8.    போரிட்டுக்  கொண்டிருந்த     சிங்கமுகன்  திடீரென  மாய  உருவத்தை எடுத்தான்;   வானுக்கும்,  நிலத்திற்கும்  நடுவே   பெரும்   தூண்போல  ஆயிரம்    கரங்கள்,  ஆயிரம்   தலைகள்  கொண்டு   பேய் போல நின்று, தேவர்களை  அகன்ற   வாயால்   விழுங்கினான்;நசுக்கி   அப்படியே  உண்டான்; காதிற்குள்    சிலர்; கண்ணிற்குள்  சிலர்; பல்லிடுக்கில்  சிலர்;
என அவர்களை  கசக்கிப் பிழிந்து   குருதியைக்  குடித்தான்; இலக்கக்  கணக்கான  பூதர் கள்     அவன்   வயிற்றிலும், வாயிலும்  குடியிருந்தார்கள்;


9.    கடுமையான   போரின்   நடுவே   அரக்கனை  வீழ்த்த  வேலாயுதத்தைத் தொட்டார்   முருகன்,  ஏளனமாகச்    சிரித்த   சிங்கமுகன்,  வேலவனே!உனக்கு   இந்த   வேலைத்    தவிர   வேறு   படைகளைப்   பயன்  படுத்தத் தெரியாதா? என்று   கூறிச்சிரித்தான். அடுத்த   நொடி   முருகன்  கரத்திலிருந்து   புறப்பட்ட  "குலிசம்"   சிங்கமுகனின்   தலையை   வெட்டி
வீழ்த்தியது;  அரக்கனை   கீழே    விழுந்து   மாண்டான்.

10.    அதே   நேரத்தில்  தனது   வேற் படையை     அனுப்பி,உதயகிரியில் மாயப்
படையிடம்   சிக்கித்   தவித்துக்  கொண்டிருந்த   வீரவாகுவையும், பிறரையும்
விடுவித்து   அழைத்துவர   ஆணையிட்டார்.  அவர்களும்   வந்து  முருகன் சேவடியைப் போற்றினர்.  விண்ணவர்   திருமால்,பிரமன், இந்திரன்  போன்றோரும்   முருகனை   வணங்கிப்    போற்றினர்.


                                                        விளக்கம்
1.   தீதறு க்க,                                          =  சூரனுக்கு  வந்த தீமையை   அழிக்க,
2.   வேரறுக்க,                                        =   குலம்   அழிக்க,
3.   ஆறு                                                    =    வழி காட்டும் வேல்
4.   கார் குணம்                                     =    அரக்க குணம்
5.   அரி                                                     =     சிங்கமுகன்
6.   ஆதிமலை                                       =     உதய கிரி
7.   முந்துபயில்                                    =     மாயைப்போர்
8.   பேயுரு                                               =    வானும்,மண்ணும்   தொடும் பெரிய உரு
9.   கனன்று                                            =    சினந்து  அழித்தது.
10.  காப்பாற்றி                                     =   வீரவாகு   போன்றோரைக் காப்பாற்றி

                                                      இலக்கணம்
 மாப்படை  .................................................உரிச்சொற்றொடர்
செந்தழல்    ................................................ அன்மொழித்தொகை                                             

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக