செவ்வாய், 2 ஜூன், 2020



                               4.36. நாலாம் நாட்போர் 

                              இரணியன் , அக்னி முகன்,  மூவாயிரவர் 


                                        இரணியன் 


1 .   அரக்கருள்     நல்லறத்தான்    மாய,மறை      கற்றோன்,
       இரணியன்     வந்தான்      களம்.  

2.    வருமுன்னர்        வாய்மை,        வலிமை       நிறுத்தி 
       உறு சினச்சூர்      வாழ்ந்திடப்     போர்.

3.    பூத,நீலன்          போரினில்       தோற்று,மாயம்   தொட்டான் 
       தூதரால்            சாகும்    நிலை.

4.     தந்தைக்கு      ஈமவிறுதி      ஆற்றவெண்ணித்       தாவினான் 
        விந்தை,மீன்    வெங்கடலுள்    வீழ்.

                                    அக்னிமுகன் 

5.    அடல்கொள்வேன்       தூதனைப்       பூதரை.   அப்பா!
       விடைதருக.        வேண்டினான்     தீ.

6.    கனற்போர்      கவிழ்ந்தனர்      பூதர் ,     எழுவர் 
       கணமும்        அழித்தே     உயர்.

7.    அக்னிமுகன்        பற்றுடைக்      காளி       விழுந்தாள்;
       அக்னி முகன்       வீழ்த்தினார்    வீர்.

8.    கூற்றம்     கலங்கிக்      கொணர்ந்தான்    எழுவருயிர் .
       ஆற்றலே     வீரவாகு     வாம்.

9.    தேவா!நீ         ஏவுக ,     மூவா     யிரவர்கள் 
       மேவியே      வென்றிடுவோம்    சென்று.

10.  அழியினும்      தோன்றியோர்     ஆறுமுக    வேலால் 
       அழித்தான்    விசயன்      ஆங்கு.


                                          பொருள்


1.    நான்காம்   நாளில்   சூரபன்மனின்  மகனான   இரணியன்   தந்தையைக்   காண   வருகிறான். அரக்கர்களிலே  ஞானம்   வாய்ந்தவன்; மாயப்   போரிலே   வல்லவன்;மறைகளும்   கற்றவன்; அவன்   போர்க்களம்  நோக்கி   வந்தான், வருவதற்குமுன்   தந்தையைச்   சந்தித்து   ஆசி பெற்றே   கிளம்புகிறான்.

2.    சூரபன்மனைச்    சந்தித்த   இரணியன்,  தந்தையே!  நான்   சொலவதைக்
கேளுங்கள்.  நமக்கு   அஞ்சி   இருந்த   தேவர்கள்  நம்மோடு   போர்   தொடுக்க  வந்துள்ளார்கள்   எனில்  அவர்களுக்குப்   புதிய   பலம்   வந்துளது   என்று  தானே  பொருள்;  வந்திருப்பவர்   யார்? நம்மிடம்  தோற்றோடிய  பிரமனோ,  திருமாலோ  இந்திரனோ   அல்ல; உங்களுக்கு   வரம்    பல   அளித்த   சிவபெருமானின்   மகன் .   அவரைக்    குழந்தை   என்கிறீர்கள்!   அவரா   குழந்தை; குழந்தையாய்   இருக்கும்   காலத்திலேயே
தனது   விஸ்வரூபத்தைக்   காட்டித்    தானே   உலகம்   என்பதை   விண்ணவர்களுக்கும்  நமக்கும்  உணர்த்தியவர்; தாரகன்    என்னும்  வரம் பெற்ற பலசாலி, அவரைக்    காத்த   கிரௌஞ்ச   மலை; அழித்தவர் 
  ஆறு முகக்கடவுள்     ஆவார். நாம்   செய்தது   எல்லாமே   தவறான   செயல்   ஆகும். தேவரைச்   சிறையில்   அடைத்தோம்;  மறவழி   நின்றோம்; இந்த  நிலையில்   நம்மை  மாற்றிக்   கொள்ள   அவர்   ஒரு   தூதும்   அனுப்பினார்.  நாம்   கேட்கவில்லை; அதனால்   பலம்  மிக்க   நேர்மை   மிக்க   அவர்களோடு
போர்புரிந்து   தோற்றுப்     போவதைத்   தவிர்த்து,அவர்களோடு   பேசிப்   பணிந்து  செல்வதே   நன்மை   பயக்கும்,  என  எனக்குத்   தெரிகிறது;   தாங்களும்......... நிறுத்தடா!  யார்   யாரைப்பணிவது?  சாவா   வரம்பெற்ற  நான்    யார்காலி லும்     விழமாட்டேன்; நீ  போய்   விழு;எனக்குமுன்   நில்லாதே.நின்றால்    நானே   உன்னை   அழித்துவிடுவேன்"  எனச்   சூரன் கத்தியதும்    அஞ்சிய   இரணியன்,  விதியை   யாரால்   வெல்ல   இயலும்? என்ன   சொன்னாலும்   இவர்   கேட்க  மாட்டார். நமது   கடமை   தந்தை  சொல் மிக்க     மந்திரமில்லை;  ஆதலின்   அவர் வழி,  போருக்குப்  புறப்படுவோம்"  என   முடிவு   செய்து  தந்தையின்    ஆசி பெற்றுப்   போர்க்களம் வந்துள்ளான்.

3.    களத்திலே   கடுமையாகப்   போர்  ஆற்றினான்   இரணியன்; பூதப்படைகளை    ஓட ஓட   விரட்டினான்; அம்பு  மழை  பொழிந்தான்; நீலன்" என்ற   பூதப்படைத்   தலைவனை   எதிர்த்த   காலத்தில்   தோற்கும்  நிலையை    அடைந்த   இரணியன்   மாயமந்திரத்தால்  பல உரு  எடுத்தான்;
பலராகத்    தோன்றினான்; நிழலாகவே   வந்தான்; செய்வதறியாது   நீலன்   தவித்த காலை    வீரவாகு   போரிட   வந்தார்; இருவருக்கும்   கடுமையான   போர்    நடந்தது. நொந்து   தவித்த   இரணியன்   மனதில்   நினைத்தான்.

4.    இந்தப்போரிலே   அரக்கர்கள்  தோற்றுவிடுவார் ;  தந்தையும்   இறந்து  விடுவார். அவர்   இறந்துபட்டால்   அவருக்கு   ஈமச்சடங்குகள்  செய்ய   யார்
இருப்பார்கள்?  நானும்   இறந்து  பட்டால்  மகன்   தந்தைக்கு   ஆற்ற  வேண்டிய   கடமைகளில்   தவறியவன்  ஆவேன் "  ஆதலின்  இங்கிருந்து  வேறு   உருவில்   தப்பித்துச்   செல்லுதல்   முறை" என  முடிவு   செய்து,தனது
மாய   சக்தியினால்  ஒரு  மீனாக   மாறி,வானில்   பறந்து  கடலில்  விழுந்து,யாரும்    காண முடியாத   ஆழத்தில்  சென்று   வாழத்   தொடங்கினான்.  அவன்  மறைந்த  செய்தி   அறிந்த   பூதர் கள்     ஆராவாரக்
கூச்சலிட்டனர். செய்தி   அறிந்த   சூரன்   மிகவும்   வேதனை    அடைந்தான்.


                                                  அக்னி முகன்

5.    சூரனைப்போலவே    அரக்ககுணம்    வாய்ந்த   அக்னி முகன்,   தந்தைசூரபன்மனை   வணங்கி  அந்தத்    தூதுவனை, விண்ணவர்களை   வென்று  வருவேன்;   விடை   தாருங்கள்    தந்தையே!   என வேண்டிப்   புறப்பட்டான்.

6.    களத்திலே   நுழைந்த   அக்னிமுகன்   கடும்போர்   புரிந்தான்; பூதப்
படையைச்   சேதமாக்கினான். பலரும்   தோற்றோடிய   நிலையில்   வீரவாகுவின்   உடன்பிறப்புகள்   எழுவர்   அவனை   எதிர்த்தனர். தோல்வி   அடைந்து  விடுமோ   என்ற  அச்சத்தில்  அரக்கன்   சிவப்படையைக்   கையில்
எடுத்தான்.அதனை   அக்னி ப்படை   என   எண்ணிய   எழுவர்  வருணப்படையை   அதற்கு   மாற்றாக   ஏவினர்.  அந்தோ! சிவப்படை   அந்த   எழுவரையும்    அழித்தது; அக்னி முகன்   மகிழ்வடைந்தான்.

7.     வீரவாகு    அரக்கனை   எதிர்த்தார்.  கடுமையாகப்   போரிட்டும்  கீழே   வீழ்ந்து   உயிருக்கு   மன்றாடினான்  அரக்கன். அந்த நேரம்   அவன்   அவனுக்கு க்    கட்டுப்பட்ட   காளியை   மனதில்   எண்ணினான். வந்த   காளி
 உன்  பகைவர்களை   நான்  அழிப்பேன்" என்றபடிக்    களத்தில்   இறங்கினாள் .  போரிட்ட    காளியின்  எட்டுக்கைகளையும்   தனது   ஒரு   கையினால்    வளைத்து,முறுக்கி,  அவள்  கன்னத்தில்   ஓர்   அறை  விட்டார்   வீரவாகு.   தன   சக்தியிழந்த   காளி   வீரரிடம்  தான்   அடிமையாக அக்கினிமுகனிடம்   சேர்ந்ததையும்,   அதனால்  வந்ததையும்   கூறி, வீரருக்கு   ஆசி  வழங்கிவிட்டுச்  சென்றாள்.   உடனே   வீரவாகு   அக்னி முகனை   வீழ்த்தினார்.

8.    போர்க்களத்தில்  போரிட்ட   தனது   தம்பியரை  நோக்கினார்   வீரர். வீரமார்த்தாண்டனைத்    தவிர   எழுவரைக்   காணவில்லை; எங்கே  என்  தம்பியர்? எனத்    தேடும்  காலை  அக்கினிமுகன்   விட்ட  சிவப்படை   அவர்களை  வீழ்த்திவிட்டதைக்   கூறினார்   பூதர் கள்.  என் தம்பிகள்   இறந்து  பட்டனரா? முருகனது   தம்பியரின்   உயிரை   இயமன்   எடுத்துச்   சென்றானா?   இதோ   என்   அம்பு; இது   கூற்றுவனை   நோக்கிச்   செல்லும். அவர்தம்   உயிரை   அவன்   திருப்பிக்  கொணர்ந்து   உடலோடு சேர்த்து  உயிரூட்டுவானாகில்  பிழைத்தான்; இல்லெனில்  என   எய்தியதும், அஞ்சி   நடுங்கிய    கூற்றுவன்   எழுவர்   உயிரைத்   தேடினான்.   அவ்வுயிர்கள்   கைலாயத்தில் இறந்துபட்ட   பூதர்களது  உயிரோடு  மகிழ்ந்தபடி   அமர்ந்திருந்தன. உடனே   அவைகளை  அப்படியே   எடுத்துக்  கொண்டு வந்து  களத்தில்  உயிரற்றுக்  கிடந்த   எழுவரின்   உடலில்  பொரு த்தினான்.
  எல்லோரும்  மகிழ்ந்து   வீரவாகுவின்   ஆற்றலைப்   பாராட்டினார்.

                                                 மூவாயிரவர் 
9.    சூரனின்   மூவாயிரம்   புதல்வர்களும்   தந்தை   முன்   கூடித்,  தந்தையே!
 எங்களைப்   போருக்கு   அனுப்புங்கள்;   நாங்கள்  அந்த   தேவப்பதர்களை
வென்று   வருகிறோம்"  என்று   கூறி,  ஆசியுடன்   புறப்பட்டனர்.

10.    போரிட்ட   மூவாயிரவர்களும்   போரிட்டனர்; பூதர் கள்    அவர்களை   அழித்தனர் .   ஆயினும்   பிரம்மதேவன்   கொடுத்த   வரத்தால்  மீண்டும்  உயிர் பெற்று   எழுந்தனர்;  கை   வெட்டுப்பட்டு    வீழும்;  ஆனால்   உடனே முளைக்கும்;  இறந்தோர்   எழுந்தனர்; அவர்களோடு   போர் புரிந்த   விசயன்"
என்ற  பூதர்,   முருகனை   வணங்கி வேண்டினார்.  முருகன்   அவருக்கு   ஓர்
படையை  அளித்தார். அதன்  வழியே   வெட்டுண்ட   அனைவரும்   மாண்டு போனார்கள்.   விசயன்  வெற்றி பெற்றான்.  சூரனோ   மீண்டும்  சோகத்தில்   ஆழ்ந்தான்.


                                                       விளக்கம்

1.   மாய,மறை                                    = மாயமும், வேதங்களும்.
2.   வாய்மை,வலிமை                      =   நேர்மை,கடவுள்  பலம்
3,   மாயம்                                              =   பல உருவில்,பல இடங்களில்  தோன்றல்
4.   விந்தை மீன்                                  =    மீனாக   மாறிப்பறந்து
5.   தீ                                                          =அக்னி முகன்
6.   கணமும்                                          =   கூட்டமும்
7.   பற்றுடைக்காளி                          =   கட்டுப்பட்ட   காளி
8.   கூற்றுவன்                                      =    இயமன்
9.   மூவாயிரவர்                                  =    சூரனின்   புதல்வர்கள்
10.  அழியினும்   தோன்றியோர்   =    இறந்தாலும்   உயிர்த் தெழும்   அமைப்பு


                                                        இலக்கணம்
1.   மாய,மறை  ........................................உம்மைத்தொகை
2.   உறு சினம்  ........................................உரிச்சொற்றொடர்
3.   வெல்வோம்........................................தன்மைப் பன்மை வினைமுற்று .

                                       


                                           


                                 


                                               

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக