திங்கள், 18 மே, 2020




                                  6. 6.  வீரபத்ரர் 


1.    எண்ணினன்      ஏறெனத்    துன்னினன்     தூயமகன் 
       மண்,வான்       தொடுமேனித்    தீ.

2.    உமையருள்     காளி      உடன்வரு     பத்ரன்,
       கடையூழிக்       காலருத்ரன்   போல்.

3.    வீரபத்ர!    வேள்விப்பலி    வேண்டிடு; வாங்கிவா.
       மறினன்     மண்டுதலை   மாய் .

4.    உடன்பணி    உற்றோர்    பலருயிர்     போக்கு;
       விடைமேல்     வருவோம்   செல்.

5.    விண்ணதிரும்    பூதர்        புடைசூழக்    கண்கனலான்
       மண்ணதிரப்     போனான்    களம் .

6.    மாலயன்      மற்றோர்     மனமஞ்சி    வந்தநோக்கம்
       சால்பறியக்     கேட்டனர்   வினா.

7.    ஆண்டகை     வேண்டுபலி    தீண்டுசுடர்      ஈண்டளி!
       மாண்டிடுவாய்    மாற்றிச்   செயின்.

8.    அணங்குடன்    ஆட்டமாடும்    பித்துப்பேய்க்     காட்டன்
       வணங்கவிஸ்    ஈயேன்    உணர்.

9.    என்றுசொன்ன    ஏளனத்தான்    மீதுற்ற    சீற்றத்தால்
       வன் கதை      தொட்டான்   விழு.

10.  விழுந்ததக்கன்    போதாமல்    வேள்வித்     துணையாம்,
       விழுமமிலாச்      செயலாளர்   நோக்கு.


                                             பொருள்

1. அன்புள்ளம்   கொண்ட   மனையாளின்   சொல்   ஏற்ற   சிவபெருமான்,
மனத்திலே    தன்    மைந்தன்   வீரபத்ரனை   நினைத்தார். எம்பெருமான்
நினைத்த   அடுத்த  நொடி,  எம்பெருமான்   முன்  வந்துநின்றான்; விண்ணையும்  மண்ணையும்   அளக்கும்  மேனிகொண்ட  வீரபத்திரன்
நெருப்புச்சுடர்  மேனியான்  தந்தையை   வணங்கிப்   பணிவோடு  நின்றான்.

2.    வீரபத்ர!    தக்கன்   என்பவன்   நம்மை   மதிக்காமலும்,  நம்மை   அழைக்காமலும்   ஒரு வேள்வி   நடத்துகிறான்;  விண்ணவர்  முனிவர்  ஆகிய  அனைவரும்   கலந்து கொள்ளும்  அவ்வேள்வியில்   நமக்கு   அளிக்க வேண்டிய   அவிர்ப்பலியை   வழங்க   மறுத்து  நம்மை   அவமானப் படுத்தவேண்டும்,  என்ற   எண்ணத்தோடு   வேள்வி நடத்துகிறான்; அங்கு  செல்!  எமக்கு   அளிக்க வேண்டிய   அவிர்ப்பலியை  முறைப்படி  அளிக்கச்சொல்;  அவன்  அளிக்க    மறுத்தான்   எனில்   அவனது  தலையைக் கொய்து   எடுத்துவிடு!  என்று    சிவபெருமான்   பத்ரனிடம்  கட்டளை   இட்டார்.

3.     பத்ரனே!    அவனை   மட்டுமன்று;  அவ்வேள்விக்கு   வந்தவர்கள், விண்ணவர்,கந்தர்வர்கள்,   முனிவர்கள்,  அந்தணர்கள்   ஆகிய  அனைவரையும்  அழித்துவிடு!  தீய   நோக்கில்     செய்யப்படும்  வேள்விக்குத்
துணை   நின்றவர்களும்   அழிக்கப் படவேண்டும். அந்த   நேரம்   நாம்  அம்மையுடன் அங்கு  வருவோம்"  என்றும்  சொன்னார்.

4.   வீரபத்திரனுக்கு    உதவும்   நோக்கத்தில்   அம்மை பார்வதி  காளியை  நினைத்து  வரவழைத்தாள்.  அவளும்  வீரபத்திரனோடு  சேர்ந்து  கொண்டாள்; ஊழிக்காலத்துத்    தோன்றும்    உருத்திரன்  போல்  வீரபத்ரர்
புறப்பட்டார்.

5.   இறைவனைச்    சுற்றி   இருக்கும்    பூதப்படைகள்   வீரபத்திரனோடு  இணைந்து கொண்டன;   விண்ணும், மண்ணும்   அதிரும்  படியாக  பூதப்படைகளும்,காளியும்  சூழ்ந்தவர்   வேள்விக்களம்   நோக்கிப்  புறப்பட்டார்   வீரபத்திரர்.

6.    வேள்விச்சாலையை   அடைந்து   அங்கு   வாயிலில்   எதிர்த்த  படைகளை
எல்லாம்   அழித்துவிட்டு, யாக  சாலைக்குள்  நுழைந்தார்   வீரபத்ரர்.
நெடிதுயர்ந்தும், உமையுடன்      கூடிய   உருத்திரன்   போலவும், தீச்சுடர் பரவும் மேனியுடனும்,  நடுவே   வந்து நிற்கும்   பேருருவத்தைக்  கண்டு, அஞ்சிய   விண்ணவர், முனிவர்கள், அச்சத் தோடு     கேட்டனர்,  ஐயா!தங்கள்   யார்?  எதற்காக     இவ்வேள்விச்சாலைக்குள்  வந்துள்ளீர்கள்?உங்களுக்கு    என்ன   வேண்டும்? என்றெல்லாம்  கேள்வி   எழுப்பினர்,

7.   நான்   வீரபத்திரன்;  சிவபெருமானின்   தூதுவனாக   வந்துள்ளேன்;அவரை
அழைக்காமல்   ஆற்றப்படும்     இவ்வேள்வியில்   அவருக்கு   அளிக்க வேண்டிய   அவிர்பாகம்"  அளிக்கப்பட்ட வில்லை; அவருக்கு  இதே  வேள்வியில் இப்பொழுதே   முறைப்படி, "ஹவிஸ்"  வழங்கப்படவேண்டும்.அவ்வாறு     அளிக்கப்   படாவிடின்  இந்த   வேள்வியைச்  செய்பவனும்,  மற்றோரும்   அழிக்கப்   படுவீர்கள்" என்று புத்ரன்   கூறினார்.

8.   இதைக்   கேட்டுக் கொண்டிருந்த    தக்கன், சினத்துடனும், அலட்சியத்துடனும்.ஏளனத்துடனும்,  இவ்வாறு   கூறினான்."  அவிர்ப்பலி;  யாருக்கு? அந்தப்பித்தனுக்கா?  பேயனுக்கா?  சுடுகாட்டில்   பேய்களோடு   நடனம்   ஆடும்     அவனுக்கு   ஒருபோதும்  "ஹவிஸ்"  அளிக்க மாட்டேன்.
என்று   கத்தினான்.

9.    தக்கனின்   சொல்   முடிவதற்குள்   வீரபத்திரரின்  கதை,  ஒரே  அடியில்
மார்பில்  பட்ட   அடி, தக்கனைக்   கீழே   வீழ்த்தியது.எழ   முடியாமல்   கீழே கிடந்தான்   தக்கன். பத்ரரின்   சினம்  குறையவில்லை;

10.     தக்கனை   அப்படியே   விட்டுவிட்டு  வேள்விக்குத்   துணை   நின்ற ஒவ்வொருவராக அழிக்கத் தொடங்கினார், பத்ரர். காளியும்   தன்  பங்கிற்கு  முனிவர்களையும்,அந்தணர்களையும் விண்ணவர்களையும்  அழிக்கத்   தொடங்கினாள்.


                                                    விளக்கம்

1.   மேனித்தீ                                         =   நெருப்பு  தகிக்கும்   உடல்
2.   மண்டுதலை                                  =    தலை
3.  விடைமேல்                                      =    காளை    ஊர்தி மேல்
4.  கடையூழி                                          =   ஊழிக்காலம்
5.  மைந்து                                                 =    இறைவன்  மைந்தனான வீரபத்திரர்
6.  சால்பறிய                                          =     செயலறிய
7.  தீண்டு சுடர்                                      =     வேள்வித்தீயில்
8.  இணங்கவிஸ்                                    =   தகுதியான அவிர்ப்பலி
9.  ஏளனத்தான்                                       =   ஏளனம்   பேசிய   தக்கன்
10. செயலாளர்                                       =    செயல்  புரிந்தவர்


                                                  இலக்கணம்
தீண்டு  சுடர் ..............................................வினைத் தொகை
ஈயேன் .........................................................தன்மை  ஒருமை  எதிர்மறை                                                                                                        வினைமுற்று

             




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக