ஞாயிறு, 17 மே, 2020



                              6.5. தக்கன்   வேள்வி 


1.   பொந்தினுள்    தங்கிய     புங்கவன்   தன்சாப
      நொந்துநீங்கி    நன் பதி   ஏகு .

2.    உரைத்த    ததீசி;    உணராத     தக்கன் 
       வரைசாபம்    வெம்மை    வதி.

3.     மால் முதல்      நான்முகன்     மந்திர    மாமுனிவர் 
        வேள்வியைத்   தொட்டனர்     வீண்.

4.      தானதர்மம்    தன,நிலம்,     பொன்,வெள்ளி,   தொன் மணிகள்,
         வான்போல்    வந்தோர்க்கு     வார்.

5.     நந்தியால்    நின்ற    நவவேள்வி     போலவே 
        வந்திடுமோ     துன்பம்     வருந்து.

6.      செஞ்சிவன்     வஞ்சித்துச்     செய்திடும்     வேள்வி 
          பஞ்சுசூழ்     தீபோல்     பற்று.

7.      நாரதன்       நாவழி     நல வேள்வி     காணவே 
         பார்வதி       வந்தாள்    மகம்.

8.      விருந்தில்லை ;    வேதப்    பரிசில்லை;   நாதன் 
         மருமகன்     அழையா    அழகு?

9.      மதியாத     தந்தை    விதியால்    அழிவாய்!
         பதிசார்ந்து    பாவமழி    வேண்டு.

10.   அன்பானாள்     துன்புற்றாள்;   வன்னெஞ்சம்   கொண்டாளே ;
        பண்பில்லாப்     பாவதக்கன்   வீழ்த்து.

                                                      பொருள்

1.    இறைவனும், இறைவியும், வட்டு   ஆடிய   காலத்துத்   திருமால் இடைவனுக்கு இறைவனுக்கு     சாதகமாக ஒன்றைக்   கூறினார், அதனால்  சினமடைந்த  பார்வதி   தேவியார்  திருமாலுக்கு   ஒரு   சாபம்  கொடுத்தார்,அதன்படி நிலவுலகில்  எங்காவது  ஒளிந்திருந்து  அழகை  நடத்தவேண்டும்" என.அஞ்சிய   திருமால்  சிவனைப்   போற்ற  அவரோ திருமாலுக்கு   ஒரு வழி  காட்டுகிறார்  நிலவுலகில்   ஆலமரப்   பொந்து
ஒன்றில்  வாழ்ந்து   வருங்கால்    ஐங்கரன்   கயமுகாசுரனை   அழிக்கும்பொழுது உனக்கு   விடிவு   ஏற்படும்" என,  அதன்படி   இன்று  விடுபட்ட  சாபம்; இறைவனைத்   துதிக்கிறார். இறைவன்   அவருக்கு ஆசியும், சக்கரப்படையும்    அருளினார்.அவரும்    வைகுந்தம்   பயணமானார்.

2.    இவ்வளவு    வரலாற்றையும்  கூறிய   ததீசி   முனிவர்   சிவனின்  பெருமையை உணர்ந்தாயல்லவா! இப்பொழுதாவது    அவரை   வேள்விக்கு  அழை" என்றதும், ஆணவத்   தக்கன்   அந்தப்பித்தனை  ஒருபோதும் அழைக்கமாட்டேன். அவிர்ப்பலி    அளிக்க மாட்டேன்" என்றான்.மிகுந்த   சினமுற்ற   ததீசி  முனிவர். "  உன்    தலை   வெட்டப்படட்டும்; உன்   ஆணவம்
அழிந்து போகட்டும்" என்றெல்லாம்   சபித்து   விட்டு,  யாகசாலையை   விட்டு
வெளியேறினார்.

3.     வேள்வி    தொடங்கிற்று.    விண்ணவர்கள் ,முனிவர்கள்   அந்தணர்கள்
கூட்டம்   கூட்டமாய்   வந்து சேர்ந்தனர்;  வந்தோரை   வரவேற்று  நல்ல  மாளிகையில் தங்க   வைக்கப் பட்டார்கள்;  உணவு, குடிநீர், கனிவகைகள்
அவர்களுக்கு   அளிக்கப் பட்டன. வேள்வி   தொடங்கிற்று. முதல்வனாகத்  திருமாலும், வேள்வி   ஆசானாக    நான்முகனும், இலக்குமி, கலைவாணி
போன்றோரும்,இந்திரன், அக்கினி,வருணன், குபேரன்,போன்றோரும்,சூரிய சந்திரர்களும்   வந்தமர்ந்தனர்.மறையொலி   முழங்க  வேள்வி  தொடங்கிற்று. வீணான   செயலாக   அது  தோன்றிற்று,

4.    இதுவரை   உலகில்   யாருமே   இப்படி  வாரி   வழங்கியதில்லை " எனும்படி  அங்கே   வந்திருந்த   அனைவர்க்கும், பொன்னும்,பொருளும், வழங்கப்பட்டன.  ஆடைகள்,  பட்டுப் பீதாம்பரங்கள் மணிகள்  முறையே
எல்லோருக்கும்  வழங்கினான்   தக்கன்.அவனை   எல்லோரும்  அஞ்சியபடியே  வாழ்த்தினர்.

5.     வேள்வியிலும், அதைச்   சுற்றியும்   அமர்ந்திருந்தவர்கள்  "பிரம யாகத்தில்  நந்திதேவர்  வந்து  யாகத்தை   நிறுத்தியதுபோல்  இன்றும்
நடைபெறுமா? முழுமையாக   இவ்வேள்வி   நடக்குமா? என்றே   அஞ்சியபடி
அமர்ந்து   மந்திரங்களை   ஓதியபடி  இருந்தனர்.

6.   சிவனோ   நெருப்பானவன்; அவனில்லாமல்,   அவனுக்கு    அவிர்ப்பலி கொடுக்காமல்  நடக்கும்   இவ்வேள்வி , அவனது   புகழுக்கு   இழுக்கு   ஏற்படுத்தும் இவ்வேள்வி   நடக்குமா?  பஞ்சுப்   பொதிகள்  நிறைய  நிறைய
இருப்பினும்  தீச்சுடர்ப்  பொறி   ஒன்று  அவைகளைப்  பொசுக்கிடுமே!
என்றபடி   அஞ்சியும், நடுங்கியும்  அமர்ந்திருந்தனர்   பலரும்.

7.   இந்நிலையில்,  கயிலை   சென்ற   நாரத   மாமுனி  தக்கயாகத்தைப் பற்றி
இறைவனிடம்   எடுத்துரைக்கிறார். அது கேட்ட   அன்னை   தாக்ஷாயணி
தனது    தந்தை    நடத்தும்   வேள்வியைக்    காண   விரும்புகிறார்.அங்கு செல்ல இறைவனிடம்   அனுமதி   வேண்டுகிறார். இறைவன்   அங்கு  உனக்கு
மதிப்பு   இருக்காது" என்று   சொல்லியும், தந்தை   மீது  கொண்ட   அன்பின்
காரணமாகவும்,இறைவனை   அழைக்கவேண்டியதை  எடுத்துரைக்கவும் அங்கு செல்ல  முடிவு செய்து, தனது   பரிவாரங்களுடன்  புறப்படுகிறார்.
வேள்விச்சாலையை  அம்மை   அடைகிறார்.

8.     அங்கே  யாரும்   தன்னை   வரவேற்காத   நிலையிலும், தன்னைச்  சார்ந்த உறவினர்  அனைவரும்   ஆடம்பரமாக   அமர்ந்திருந்த  நிலையில், தனது தந்தையிடம்   வாதாடுகிறார்.தந்தையே 1  மகளான   என்னையும், மருமகனான சிவனையும்   அழைக்க   மறந்தது ஏன் ?விருந்தும், சீர் வரிசைகளும்   எல்லோரையும் போல   எங்களுக்கு   அளிக்காதது ஏன் ?
எனது   கணவனுக்கு   அளிக்க வேண்டிய   அவிர்ப்பலியை  அளிக்க   மறுப்பது ஏன் ? என்றெல்லாம்  கேட்கிறாள்.  ஆணவத்   தக்கனோ  பித்தனான  பேயனான  அவனை  மதிக்கச்  சொல்கிறாயா?நீயேன்   இங்கு   வந்தாய்?
அவனோடு  கூத்தாடு. போ  போ   என  ஏளனமாகப்  பேசுகிறான்.

9.    என்னை,  எனது   கணவனை, இறைவனை  உனது   மருமகனை   மதியாது வேள்வி   செய்யும்   நீ   விரைவில்   அழிவாய்! என்று   மிகு   சினத் தோடு 
கூறிவிட்டு    வேள்விச்சாலையை   விட்டு   வெளியேறுகிறாள்.கயிலையை  அடைந்து  தனது  கணவனிடம்   ஆணவத்   தந்தையின்   வேள்வியையும்,தந்தையையுமே    அழிக்குமாறு  வேண்டுகிறாள்.

10.    அன்பே  உருவான  அம்மை  மிக்க   துன்பத்தால் தனது   கணவனுக்கு
ஏற்பட்ட  அவமானத்தைத்  தாங்க   இயலாமல்  இங்ஙனம்  சினம்   கொண்டு விட்டாள்"  என   நினைந்த  சிவபெருமான் பண்பு   இல்லாது. ஆணவத்தில்  செயலாற்றும்    தக்கனை   அழிக்க வேண்டியது  தான் " என  முடிவு  செய்து,
"வீரபத்திரரை"   மனத்துள்   நினைக்கிறார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக