ஞாயிறு, 10 மே, 2020

           

                            5.தேவ காண்டம் 

                                    1.திருப்பரங்குன்றம் 


1.   தார்மார்பன்  தன்பணி   தான்முடித்துத்   தத்துவச் 
      சீர்காணச்   செவ்வாணை  புள்,

2.  மாலயன்,  இந்திரன்,  மற்றையோர்   தன்னோடு 
     காலாகிப்   பின்வரக்  கூறு.

3.  அன்னம்,  கருடன்,  அயிரா   வதமேறித் 
     தன்னூர்தித்     தாமேறிச்   செல்.

4.  பூதப்     படையோடு     விண்படை சேர்ந்துசெல்லச் 
     சீதளச்   செம்பூமி    சேறு.

5.  தேர்க்கொடி   ஆர்த்தல்    கார்குளிர்க்    காற்றாடி,
     சூரியன்    செவ்வெப்பம்   போக்கு,

6.  கூடல்     நகர்தன்னைக்   கூடிநின்ற   குன்றமலை 
     நாடிநிற்க   நல்லிடம்    நாம்.

7.  மாலயன்     சொல்லே    மனதில்   நினைத்தது;
     சூலத்தான்  போற்றிட,நற்  குன்று.

8.  மாடகூட     மாளிகைகள்     ஆடபாட   நல்லரங்கு 
     தேடிபுனை     தேவதச்சன்   ஆக்கு.

9.  அருமுருகன்     அன்புத்    திருப்பரங்    குன்றம்
     விருப்புடன்   தங்கினான்   பிறர்,

10.பராசரத்    தோன்றல்கள்   பாவத்தைப்  போக்கித்
     தராதல      வாழ்வளித்   தோங்கு.


                              பொருள்

1.   போர் முடித்த   முருகன், அருளுக்குரியவர்களுக்கு, அருளும்,
அன்பும்,  அளித்தபின்,  அவரவர்ப்    பணியை   ஆற்றுமாறு
கூறிவிட்டுத்   தன்னை   நோக்கித்   தவம்  இருந்த  இரு கன்னிகளின்
தவப்பலனை   அருள  வேண்டி  ஒரு  பயணத்தை  மேற்கொண்டான். தனது   ஊர்தியான   மயிலுக்கு   ஆணை  பிறப்பித்தான் .அதுவும்  தனது சிறகை
விரித்தபடிப்   புறப்பட்டது. அதன்   மீ தமர்ந்த    வேலன்  மாலயனாதி   தேவர்களுக்கு  ஆணை   பிறப்பித்தான்.

2.தேவர்களே!  நீங்கள்   அவரவரும்   அவரவர்   ஊர்தியில்  என்னைப்  பின்
தொடருங்கள்; விரைந்து   வாருங்கள்"  என்று   தேவர்களுக்கு   ஆணை பிறப்பித்தான்.

3.பிரமன்   அன்னப்பறவை   வாகனத்திலும்,திருமால்
கருட ப்பறவை    ஊர்தியிலும், இந்திரன்  ஐயிராவதம்  என்னும்  வெள்ளையானை மேலும்,  அக்கினி, வருணன்  போன்றோர்   அவரவர்க்குரிய  ஊர்தியிலும்  ஏறி   அமர்ந்தனர்; அவ்வூர்திகள்   காற்றுபோல்  வானத்திலே   மயிலைப்   பின்  தொடர்ந்து  பறந்தன.

 4.  அவர்களைத்   தொடர்ந்து   பூதப்படைகளும், தேவர்கள், வித்யாதரர்கள் 

கந்தருவர்,   போன்றோரும், இலக்கக்    கணக்கில்  வானத்திலே  பறந்தனர்

அவர்கள்  அனைவரும்   ஒருசேரப்  பரந்ததால்  மண்ணுலகு   முழுவதும் 

நிழல்    படர்ந்தது, சூரிய  வெப்பத்தை  மறைத்தது;  குளிர்ச்சி  தோன்றியது 

5.   வானத்தே    ஆதவன்   வெப்பத்தை   வீசிக்  கொண்டிருந்தான்; அவ்வெப்பம்  அவனையே   சுட்டு  ப்பொசுக்கியது       அவனோ  காற்று இன்றித்  தவித்தான். வானத்தே   பவனி   வந்த   தேர்க்          கொடிகள் 

விரைவான  வேகத்தினால்   படபடத்தன; அக்கொடிகள்  தோற்றுவித்த  காற்று  சூரியனின்  வெப்பத்தை   விசிறி   வீசுவதுபோல்  தணி த்தது"
எனத்  தற்குறிப்பேற்றமாகச்  சொல்லப்படுகிறது.

6.  வானத்தே   இத்தேர்ப் பவனி   "கூடல்மாநகரம்"  என்னும்  மதுரையைத் 
தாண்டி, அதனருகே   அமைந்துள்ள   "திருப்பரங்குன்றம்"     என்னும் 
மலை  நாட்டைத்   தொட்டது. அதைக்   கண்ணுற்ற   திருமால் ," ஐயனே!
இம்மலையே   நாம்   தங்குவதற்கு   ஏற்ற   இடமாகும்" என்றார்.

7.  திருமாலும், நான்முகனும்,   அவ்வாறு  கூறியதும், முருகன்   சொன்னார்,
"நானே   இங்கு  தான்   தங்கவேண்டும,  என   மனத்தில்  நினைத்திருந்தேன்;
அதையே  உரைத்த   தேவர்களே!  நாம்   இங்கேயே   தங்கி, நல்ல  மலையில் 
சிவார்ச்சனை  செய்து  நன்மை   பெறுவோம்; இங்கேயே   தங்கலாம்" என்று.

8. எல்லோரும்   அங்கு  இறங்கினர்; பிரமன்   தேவதச்சன்   விஸ்வ  கர்மாவிற்கு   ஆணையிட்டான், அடுத்த  நொடி   அங்கே  மாட  கூடங்களும்,
மாளிகைகளும்,சோலைகளும், நீரரருவிகளும்  தோன்றின;முருகன் 
தங்கும் மாளிகை, திருமால்  போன்றோர்   தங்கும்   மாளிகை  போன்றவற்றையும் அமைத்த  தேவ தச்சன்  தேவர்களுக்கும், பூதர்களுக்கும் 
தனித்தனியே  கூட்டங்களையும்  அமைத்தான். ஆங்காங்கே   அவவரவர்  த
தங்கினார்.

9.   முருகனின்   மனத்திற்குப்  பிடித்தமான  "திருப்பரங்குன்றத்தில்"
விருப்பத் தோடு    தங்கினான்.மற்றவர்களும்   அங்கங்கே  தங்கினார்.

10.  மலையிலே   அமைந்த   குகையில்  சிவபூஜை  செய்த  முருகன்,அங்கே 
சரவணப்  பொய்கையில்   மீன்களாய்த்  தவித்தபடிச்  சுற்றிக்  கொண்டிருந்த 
"பராசர "  முனிவரின்   புதல்வர்களின்   பாவத்தைப் போக்கிச்  சிவக்குற்றம்புரிந்த அவர்களை  மன்னித்து,அன்பு  காட்டிப்  பேரருள் புரிந்தார்.அவர்களும்   முருகனை   வணங்கியபின் தவம்   ஆற்றப் புறப்பட்டனர்.


                                                     விளக்கம் 
1.  தார்மார்பன்                =   முருகன்.
     புள்                                   =    மயில் 
2.  காலாகி                         =   காற்றாகி 
3.  அயிராவதம்                =   வெள்ளையானை 
4.  சேறு                                =   குளிர்நிலம் 
5.  காற்றாடி                      =   விசிறி 
6.  கார்மலை                    = மேகம் சூழ்ந்த  மலை 
7.  சூலத்தான்                  =  சிவபெருமான் 
8.  தேவதச்சன்                =  விஸ்வ கர்மா 
9.  பிறர்                              = மாலயனாதி தேவர்கள் 
10.தராதலம்                    =  உலகு 

                                            இலக்கணம் 
தார்மார்பன்,,,,,,,,,,,,,,,,,,,,,,இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் 
                                                  தொக்க  தொகை 
மாலயன்      ,,,,,,,,,,,,,,,,,,,,,,    உம்மைத் தொகை 
செம்பூமி    ...........................பண்புத் தொகை 
சூலத்தான் ..........................குறிப்பு  வினையாலணையும் பெயர்.
"

                                    









                           



                             2.தெய்வயானைத்   திருமணம்

1.   வெற்றிதந்த  வேலனுக்கு   விண்வேந்தன்   தன்மகளைப்
       பற்றுமனை  நற்பரிசு  என்.

2. மாலயன்    மாத்தேவர்   மண்டலங்கள்   தாமறியக்
    கோலமணம்   கூறினான்  மன்.

3. விண்ணவரோ   இம்மலையே   வேலன்   திருமணம்
    என்னதவம்   என்றுமகிழ்ந்   தார்.

4.  இந்திராணி   வந்துசேரக்   கந்தனின்  தாள்பணிந்து
     அந்திமலர்    ஏற்றிடுக  அன்பு.

5.  மூச்சிலும்   எம்மை   முதலாகக்   கண்டவள்
     மூச்சே   நுகர்மலர்  செல்க.

6.  தேவதச்சன்  குன்றத்தைத்   தேவநகர்   ஆக்கினான்;
      மூவுலகும்   மாமகிழ்வில்  கூடு.

7.   சோழன்    முசுகுந்தன்    வாழ்த்தி   வணங்கிட
      வேழமகள்     வேலன்   மணம்.

8.  பாலால்   அலம்பிப்  புடவையால்  ஒத்தியே
     கால்தொட்டுக்   கண்ணொத்தி   வாழ்.

9. சிவசக்தி   முன்னால்   தவமுனிவர்  வேதம்
    புவனத்தின்   புண்ணியம்  பார்.

1௦. தேவாள்   திருக்கரம்    தேவன்   கரத்திட்டுப்
      பூவிட்டுப்  போற்றினான்  வேந்து.

                                                பொருள்

1    நெடுநாள்  பகவனான   சூரபன்மனை   வீழ்த்தி,வெற்றிகண்ட  முருகப்
பெருமானுக்குத்   தனது  நன்றிக்கடனாக,வெற்றிப்பரிசாகத்  தன்மகள்
தெய்வயானையை   மணம்   செய்து கொடுக்க  விரும்பினான்   இந்திரன்,
   
 2. திருமாலையும்,நான்முகனையும்   வணங்கிய  இந்திரன் தேவர்கள்   அனைவரையும்  வரவழைத்துத்   தன்  மகளைச்   சுசுப்பிரமணியக்
கடவுளுக்கு  மணம்   முடித்துக்   கொடுக்க விரும்பும்  மங்கலச்  செய்தியைக்
கூறினான்.அதுகேட்டு   எல்லோரும் மகிழ்ந்தனர்.
   
3.  நல்ல   செய்தி   அறிந்த   தேவர்கள்   அந்த   சுப மங்கலம்  இந்த
திருப்பரங்குன்ற   மலையிலேயே  நடத்தப்பட வேண்டும், எனவும்   அதுவே
முருகனுக்கு   உகந்த   மலை   எனவும்  கூறினர். இத்திருமணத்தைக்   காண
மனத்திலே   தோன்றும்   மகிழ்வுக்கு   அளவே   இல்லை  என  மகிழ்ந்தனர்.

4.  மேருமலை யில்   தங்கியிருந்த   இந்திராணிக்கு, வெற்றிபெற்ற  செய்தியையும்,வெற்றியை  அளித்த   முருகனுக்குத்  தெய்வயானையை
மணம்  முடிக்க இருப்பதையும்  கூறி,அவளை  அழைத்துவரப்  பணித்தான்
இந்திரன். ஓடோடி   வந்த இந்திராணி மகன்  சயந்தனைக் கட்டித்தழுவி
அன்பு   பாராட்டிப்  பின் கணவனையும்  பணிந்தாள்.மங்கலப்  பொருட்களுடன்  மாமுருகன்   சன்னதி அடைந்து,நன்றியோடு   வணங்கினாள்   இந்திரனுடன். தங்கள்   மகள்  தெய்வயானையை  மணக்குமாறு  பணிவோடு   வேண்டினர்.

5.   முறுவலித்த  முருகன், நாளெல்லாம், நினைவெல்லாம்  என்னையே  நினைந்து  தவம்  இயற்றி,எமது   ஆணையால் உம மகளாகப்  பிறந்து வளர்ந்து  வரும் தெய்வயானையை  நாளையே   மணப்பேன் " மகிழ்வோடு
செல்க.என   அவர்களுக்கு   விடையும்  கொடுத்தான்.

6. இந்திரன்   ஆணை   ஏற்ற  தேவ தச்சன்   திருமணம்  நடக்கவிருக்கும்   திருப்பரங்குன்றத்தை  விண்ணுலகம் போல்   ஆக்கினான்.மூவேழ்  உலகத்தவர்க்கும்   செய்தி   அனுப்பப்பட்டது. எல்லா உலகங்களிலும்  இருந்து
வந்த   மக்களும்,விஞ்சையரும் முனிவர்களும்,மன்னர்களும்  கூடினர்.

7. தனது   மகள்  திருமணச்  செய்தியைச்  சோழமன்னனும்,தனது நண்பனும்
ஆகிய முசுகுந்த மன்னனுக்கு இந்திரன்  அனுப்பிவைத்தான்.சூரனுக்காக
அஞ்சி  வாழ்ந்த  சோழன் மகிழ்வோடு திருமணம்   காணத்  திருப்பரங்குன்றம்  வந்தான்.

8.  காமதேனுவின்  பாலால்   இந்திராணி  மணமகன்  முருகன்   கால்களை அலம்பினாள் ;தனது   புடவைத்   தலைப்பால்  துடைத்துவிட்டாள்;பூக்களால்
இருவரும்  முருகனைப்   பூஜித்தனர்;

9.  திருமால்,பிரமன்   முதலான  தேவர்கள்   தத்தம் இருக்கையில்  அமர்ந்திருக்க,மகனது   திருமணம்   அறிந்த  அம்மையப்பன் வானிலே
எழுந்தருளினார்.அவையினர்   அனைவரும் எழுந்துநின்று  முதற்கடவுளை
வரவேற்க,முருகக்கடவுளும்  தாய் தந்தையரை   வணங்கி   வரவேற்றார்.

1௦.  தனது  மகளின் கரத்தை முருகன்  கரத்திலே   ஒப்படைத்து,இந்திராணி
நீர்வார்க்க,இந்திரன்  தேவயானை யைத்  கன்னிகா தானம்  செய்து கொடுத்தான், தெய்வ யானை   கழுத்திலே   மாலை சூட்டி, மண நாண்
தொடுத்து,தாய்தந்தையர்  தேவர்கள்  முனிவர்கள்   வாழ்த்த மங்கள் நாணும்
சூட்டி,மகிழ்ந்தான்  வேலன்.


                                                விளக்கம்

1.விண் வேந்தன்       =  இந்திரன்
4. அந்தி மலர்              =  தெய்வயானை
7. வேழமகள்               =   தெய்வயானை
8. வாழ்                           =   வாழ்த்தியவள்  இந்திராணி
10. வெந்து                     =   இந்திரன்

                                     இலக்கணம்

நற்பரிசு ............................பண்புத் தொகை
பற்று மனை ................... ஆகுபெயர்
மாமக்கள் ........................உரிச்சொற்றொடர் .


                               3. விண்  குடியேற்றம் 


1.   மணநாள்     மகிழ்வு     மனநிறை    யெண்ணக் 
     குணவான்     துணையுடன்   தேர்.

2.  வெளிவந்த   மாமணக்     கோலத்தான்     சீலம் 
     களிப்புடன்    போற்றினர்  கண்டு.

3.  விண்ணவர்    வேந்தன்    மாலயன்     வாழ்த்திட 
     விண்ணகம்    செல்வோம்   விரை.

4.  பொன்னூர்தி    மேலேறி     விண்மீன்கள்   சூழ்ந்துவரு 
     வெண்ணிலவு    போல்பறந்து    போம்.

5.  நின்றதுவே      நீள்நிலை      நில்லாத    நன்னகர் 
     சான்றதுவே     சாத்திரக்   கோள்.

6.  பானுகோபன்     பற்றியழி     பேருலகம்     பார்த்ததும் 
     நான்முக!       நாவசைத்து    நாடு.

7.  தேவதச்சன்     தேடினாலும்       தேயமெங்கும்   தேர்ந்திசையாத் 
     தேவலோகம்    தேர்ந்தனன்    தேர்ந்து.

8.  நலச்செயல்     நான்முக!     நாட்டிடுக:   வேந்தன் 
     வளப்பொன்    முடிதானே    வாழ்த்து.

9.  மாமுருகன்     மாக்கருணை     மாமுடி    தாங்கியோன் 
     மாதேவி        சூழ்நன்றி     மலர்.

10. விண்ணரசு     வேலளித்த     பொன்னரசு    போற்றிமகிழ் 
      கண்ணுடலான்    காலமெல்லாம்   கா.


                                             பொருள் 

1.    திருப்பரங்குன்றத்தில்   தமது   திருமணம்  தேவர்களால்   நன்கு 
நடத்தப்  பட்ட   மங்கள   நிகழ்வை   மனத்திலே   எண்ணி  மகிழ்ந்தும்,
மன நிறைவும்  பெற்ற  முருகன், தனது   மனையாளுடன்,  தனது  மன
எண்ணத்தைப்  பகிர்ந்து  கொண்டான்.அம்மையும்   மகிழ்வோடு  ஏற்றுக்கொள்ள,  உடனே   இருவரும்,  மாளிகை விட்டு   வெளி வந்தனர்;
வெளிநின்ற    தேரிலே    ஏறி   அமர்ந்தனர்.

2.   மணக்கோலத்துடன்   அம்மையப்பன்போல  இருவரும்  வெளியே வந்து தேரில்   அமர்ந்ததும்   மனையறம்   கண்ட  கடவுளைக்   கண்ணால்   காணும் 
பாக்கியம்   பெற்ற  தேவர்களும், பூதங்களும்,இன்னபிற   கூட்டங்களும் மகிழ்வில் ஆடிப்பாடி   அவர்களுக்கு   வாழ்த்தும், வணக்கமும் தெரிவித்தனர்.

3.  வாழ்த்தொலி   கேட்டு,  வெளிவந்த   திருமால், பிரமன், இந்திரன்  அவன் தேவி,ஏனைய  தேவர்கள்  தேரில்   அமர்ந்திருக்கும் மணக்கோலத் தம்பதியரைப்  பார்த்து, வியந்து, உள்ளமெல்லாம்   அன்பு   நெக்குருக   வாழ்த்தியும்,  வணங்கியும்   மகிழ்ந்தனர்;  அவர்களது   வாழ்த்தை, வணக்கத்தை  ஏற்றுக்கொண்ட   முருகன்,"  எல்லோரும்   அவரவர்   ஊர்தியில்   ஏறி   விரைவாய்ப்  புறப்படுங்கள். நாம்    அனைவரும் தேவலோகம்   நோக்கிப்   பயணிக்கப்   போகிறோம்.    விரைவாகப் 
புறப்படுங்கள்!"  என்று   ஆணையிட்டார்.

4.  மண்ணிலும்,  விண்ணிலும்   செல்லக்கூடிய  ஊர்திகளைக்   கொண்ட தேவர்கள்   தம் தம்   வானூர்திகளில்  ஏறி  அமர்ந்தனர்;நடுவே   மயில் வாகனத்தில்   முருகன், சுற்றிலும், அன்னத்தில் பிரமன், கருடனில்  திருமால்,
அயிராவதத்தில் இந்திரனும்,இந்திராணியும்,இன்னும்   பலப்பல   ஊர்திகளில்  அக்கினி,வருணன், குபேரன்  போன்றதேவர்களும், அவர்களைத்   தாண்டி  பூதர்களும்,  கந்தர்வர்களும்  வானில்   பறந்து சென்றனர்; வெண்ணிலவைச்சுற்றி  பயணிக்கும்   விண்மீன்கள் போல 
அவர்கள் பறந்தனர்.

5.  நெடும்பயணம்    அழிவே   இல்லாத   "சொர்க்கலோகம் " என்று    அழைக்கப்பட்ட  தேவலோகத்தை  அடைந்தது; இவ்வுலகில்   எதுவுமே  நிலைத்து  இருக்காது;அழிவில்லாத    ஒன்று  உலகில்  கிடையா;
அழிவில்லாதது   இறைவனும்   அவன்மீது   கொள்ளும்  பக்தியுமே   ஆகும்"
என   உரைக்கும்  சாத்திரங்களுக்குச்   சான்றுபோல்   இந்திராபுரி  அழிந்தும்,
பாழ்பட்டும்   கிடந்தது;

6.   சூரபன்மனின்  மகனான   பானுகோபனால்   அழிக்கப்   பட்ட  அந்த  நகரைக் கண்டதும்,முருகன்   நான்முகனைப்   பார்த்துக்   கூறினார்.
" நான்முக!  விஸ்வகர்மாவிற்கு   ஆணை  இடு!  இந்நகரைப்  புதிய நகராக   மாற்றி  அமைக்கும்படி  அதுவும்  விரைவாக  முடிக்குமாறு  கூறு!" என்றார்.

7.   விரைந்து   வந்த   தேவதச்சன்   நொடிப்   பொழுதிற்குள்   அந்நகரைப்
புதுப்பித்தான்;மாடங்கள்,  சோலைகள்,அரங்குகள், தனித்தனி   மாளிகைகள்
நீர்நிலைகள், எனப்  படைத்தான்,மூவேழ்   உலகங்களிலும்  தேடினாலும், இது போன்ற  நகர்  இல்லை" என்று   சொல்லும்  அளவு  படைத்தான்.ற

8.   நகருக்குள்   எல்லோரும் சென்றனர்; இந்திரனது   மாளிகையில்   அமர்ந்ததும்,முருகன், நான்முகனை   அழைத்தார்; நான்முக!  இந்திரனுக்கு இன்றே   முடிசூட்டு விழா   நடத்தவேண்டும்; அதற்கான   ஏற்பாடுகளை  விரைவாக  ஆக் குங்கள்!  என்றதும்  தேவதச்சனால்   விழா ஏற்பாடுகள்  ஆக்கப்பட்டன;

9.   நான்மறைகள்  ஓதப்பட்டன; பல்லியங்கள்    இசைக்கப்பட்டன; நல்ல நேரத்தில்   அரியணையில்  இந்திரனும்,இந்திராணியும்  அமர்த்தப்பட்டார்கள் . நான்முகன்  பொன்முடியை  எடுத்து  முருகன்   கையில் கொடுக்க,
மாமுருகன்  இந்திரனுக்கு  முடி  சூட்டினார். திருமால்  பிற தேவர்கள்  வாழ்த்த
இந்திரன்  பெரு மகிழ்வடைந்தான்.இதற்கெல்லாம்   முழுமுதல்  காரணம்
முருகனே   என   மனத்தில்  நினைந்து  போற்றிய  இந்திராணி  இந்திரன்,சயந்தன் பிற தேவர்கள்  முருகனை  வணங்கிப்   போற்றினர்.தங்களது நன்றியை   அவரது   திருப்பாதங்களில் விழுந்து வணங்கிக் கூறினர்.
   

10.  அரக்கனை,அழித்தும், அவனால்   அழிக்கப்பட்ட   நகரை உருவாக்கித் தந்தும்,வாழவைத்த  முருகனது   ஆசியால்  பெற்ற   விண்ணகத்தை  இந்திரன் நன்கு   ஆட்சி புரிந்து வந்தான்.முழுமுதற்  கடவுளாகிய  முருகனைப் போற்றியும், வணங்கியும்  காலமெல்லாம் அவரை  நினைத்தும் அரசாட்சி புரிந்தான்   இந்திரன்.


                                                            விளக்கம்

1.     தேர்                                          = ஊர்தி
                                                               மனை யாளுடன்  ஆய்ந்தான்
2.     சீலம்                                         =  மனையற நல்லொழுக்கம்
4.     பொன்னூர்தி                        = விண்ணிலும் மண்ணிலும் செல்கின்ற ஊர்தி
5.     கோள்                                       =  கொள்கை
6.     பேருலகம்                               =   தேவலோகம்
10.   கண்ணுடலான்                    =   இந்திரன் (சாபத்தால்  உடலெல்லாம்                                                                                        கண் களாக உள்ளவன் )

                                                         இலக்கணம்
பொன்னூர்தி ....................................உவமைத்தொகை
கோள் ....................................................முதனிலை திரிந்த  தொழிற்பெயர்





                            

                                         4. கந்த  வெற்பு 


1.   கந்தமனம்     கந்தவெற்பு     சந்தமென   முந்திநிற்கும் 
      பந்தமானாள்   பற்றுடன்     பார்.

2.   மால்பிரமன்      ஊர்செல்ல,     வேற்கண்ணாள்    கூடவர 
      வேலவனும்       தேரதனை    நாடு.

3.   தேர்பறக்கப்      பூதப்      படைபறக்கக்      கார்பறக்கச் 
       சீர்பரவும்     ஊர்க்கயிலை    பார்.

4.   முக்கண்,     முதல்வி    முறைமுறை      போற்றியபின் 
      அக்கணமே    புக்கனன்   வெற்பு.

5.   கந்தகிரி       வந்தவேல்      இந்துமுகச்     சிந்துவுடன் 
      கந்தபீடம்      வீற்றருளும்    வீறு.

6.   இந்தவேளை    இந்திரனின்    மந்தமனம்    சொந்தவாழ்வு 
      நொந்ததன்மை    பற்றியதால்   நோய்.

7.   மறுத்த     புணர்வு;   வெறுத்த      வெறுக்கை 
      உறுத்தும்     தவநெறி   வீடு.

8.   இந்திரன்    சோர்வினைத்     தந்திரன்    மாற்றிட 
      இந்திர        போகம்    உணர்த்து.

9.   முனிவரும்,    மோனக்     கிழவரும்    வேண்டும் 
      இனிமையே    இன்பவாழ்வு    தான்.

10. கானலுக்கு    வஞ்சிக்      கடலில்     புகுதல்போல் 
      மோனநிலை    மேவல்;   தவிர்.


                                                   பொருள்


1.இந்திரனுக்கு   முடிசூட்டு விழா  எடுத்து,முடிந்தபின்,முருகனின்   மனம்
கந்தகிரியில்    சென்று   தங்க வேண்டும்" என்றே  நினைத்துக் கொண்டிருந்தது.  தெய்வ யானையிடம்   அது பற்றிப்   பேசி,இருவரும் கந்தவேற்பு  போகப்   புறப்பட்டனர்.

2.    தேவர்களும்,திருமாலும்,பிரமனும்,  அவரவர்   நகர்    அடைந்தனர்.தனது   மனையாளுடன்   முருகன்  கந்தகிரி  செல்வதற்காகத்   தேரில்  ஏறி  அமர்ந்தார்.

3,  முருகன்   புறப்பட்டதும், பூதப்படைகளும்  புறப்பட்டன.வான வீதியில் முருகனது  வானரதம்    பறந்தது; வான்வழி   பறக்கும்   பூதப்   படைகளும்
பறந்தன. வானமெங்கும்   மேகக்    கூட்டம்   பறந்தது;சீர்மை   மிக்க    மலையாய்   விளங்கும்   கயிலை   மலையை  முருகனும், மற்றோரும்  அடைந்தனர்.

             இப்பாடலில்    "பறக்க"  என்னும்  சொல் பலமுறை  வந்து  பறத்தல்   என்னும் ஒரே பொருளைத்  தருவதால்  இப்பாடல்   "தற்குறிப்பேற்ற அணி"
ஆயிற்று.

4.     கயிலை     சென்றதும்  முருகன், தனது   மனையாளுடன் தந்தையாகிய சிவபெருமானையும், தாயாகிய  பார்வதி  தேவியையும்  வணங்கிப் போற்றினான்.அதன்பின்னர்    அவர்கள்   கந்த வெற்பினை   அடைந்தனர்.

5.    அங்குள்ள   பூதப்படையினர்   முருகனை   வரவேற்றனர்; முருகனும்   தெய்வயானையுடன்   சென்று   அங்கு   அலங்கரித்து  அமைக்கப்  பட்டிருந்த
நவரத்தின   சிங்காதனத்தில்  அமர்ந்து  முனிவர்களுக்கும், பிறர்க்கும்   நல்லருள் வழங்கினான்.

6.     கந்தகிரியில்  கந்தன்  அமைதியாய்   அமர்ந்து  அருள்  புரியும் நேரம்,
 இந்திரபுரியில்   இந்திரன்   கொண்ட   சோகத்தைப்     பார்ப்போம்.இந்திரன்
தனது   வாழ்வை.  தனக்கு   நடந்த   தாழ்வை,  தானும், தன்மனைவியும், மகனும்  அடைந்த  துயரத்தை  முறையாக   எண்ணி எண்ணி  வருந்தினான்;
நிலையில்லாத     இவ்வாழ்வும்,  வளமும், செல்வமும், இந்திரபோகமும்
இனி   தனக்கு   அறவே   வேண்டாம்" என்றெல்லாம் எண்ணிய இந்திரனது மனம் பற்றில்லா   வாழ்வை   நோக்கி   நடை  போட்டது.

7.   தனது   மனையாள்   சசியுடன்  கொஞ்சுவதை   வெறுத்தான்;திலோத்தமை,
போன்ற வர்களோடு   கூடிக்     குலவுவதை   வெறுத்தான்;  இந்திரபோகமாம்
செல்வத்தை   வெறுத்தான்;அவன்   மனம்  பற்றற்ற   தவத்தை   விரும்பியது;
வீடென்னும்   மோட்சம்   அடையவே  ஆசைப்பட்டான்.

8.    இவ்வாறு   புலம்பித்    தவித்துக்    கொண்டிருக்கும்  விண்ணக   வேந்தனின்  மன   உளச்சலைக்   கண்ணுற்ற   அவனது  மூத்த   அமைச்சன்
"இன்பத்தைப்   பற்றியும்,  இந்திர   போகத்தைப்   பற்றியும், விரிவாக  எடுத்துரைத்தான்.

9.   தவம்    ஆற்றுவோர்   அதன்   பயனாக  வரங்களைப்  பெற்று, அவ்வரத்தின்   வாயிலாக  அனுபவிப்பது  இன்பமே   ஆகும்.முனிவர்களும்,  முதுமை   அடைந்தவர்களும்,என்றும்   விரும்புவது  செல்வம்; மங்கை; போகம்;பதவி;
போன்றவைகள் தாம்   என்பதை   நீ உணர்ந்து   பார்! என்றார்  அமைச்சர்.

10.  இந்திரா!   கடும்   வெப்பத்திற்கு   அஞ்சிக்   கடலுக்குள்  மூழ்கி  இருக்க இயலுமோ?  துன்பத்திற்கு    அஞ்சிப்   பேரின்ப   வாழ்வை  இழக்கலாமா?
வீடு   பேற்றிற்காக  நல்லின்பங்களைத் துறக்கலாமோ? துன்பத்தை   மற;
இன்பமே  என்றும்  இந்திரபோகம். அதை   அனுபவி" என்றும்  அறிவுரை  கூறினார்.


                                                            விளக்கம்

1.    பந்தமானாள்                         = தேவயானை
2.    வேற்கண்ணாள்                   =   தேவயானை
3.    கார்                                            =   மேகம்
4.    வெற்பு                                      =    மலை
5,    இந்துமுகம்                             =    தேவயானை
6.    நோய்                                       =     துன்பம்
7.   வெறுக்கை                             =     செல்வம்
8.   தந்திரன்                                   =    அமைச்சன்
9.   கிழவர்                                       =    முதிய முனிவர்
10. மேவல்                                      =     மேற்கொள்ளுதல்
      கானல்                                      =    கடும் வெப்பம்

                                                    இலக்கணம்

வேற்கண்ணாள் ................................உவமைத்தொகை
இந்துமுகம் ..........................................உவமைத்தொகை


                                            5. இந்திரபுரி 


1.   சொல்லில்    அமைச்சன்   சுந்தர   மங்கையர்
      சொல்லும்     சுகமென்   றறி.

2.   முனிவர்    முதல்வர்     முகமலர்    தொட்டே
       இணைவர்    இதுவே     இயல் .

3.    தவத்தோர்      பெறுவர     வாழ்விலும்,    மேலாய்!
       நவசுகம்       என்றும்    தலை.

4.     மதிமுக    மாதர்       மயக்கமே       சான்றோர்
        அதிசுவை      பேரின்பம்    ஆம்.

5.     வேந்தன்     சினமுற்றான்    வேதியர்    வேட்கையைப்
         பாந்தமாய்க்     கூறாச்     செயல்.

6.     தன்வழி        நாடும்       தனபதி        திண்மனம்
        என்வழி       என்றே      மகிழ்ந்து.

7.    மன்மத       நன்னூல்     மாண்மதிக்      காதலே;
       எண்ணின்     எல்லாம்     சுகம்.

8.     சிற்றின்பச்     சீரெடுத்து    உற்றவள்,  மற்றவள்
        கற்றிட்டான்      காமக்     களி.

9.     சயந்தன்     பயந்தான்;      கயந்தான்      ஏற்றுச்
        சயந்தரப்    பற்றினான்  சீர்.

10.   தேவரின்    தீத்துயர்    தோன்றிடக்     காரணம்
         பாவவினைத்    தக்கன்     செருக்கு.



                                       பொருள்


1.       இந்திரனின்   மனத்துயரைப்  போக்கி, அவனை  இந்திரபோகம்  அனுபவிப்பவனாக  மாற்ற  அமைச்சன்   முயல்கிறான்.இன்பியல்   வேட்கையை   அவன்  மனத்திலே   உண்டாக்க, மேலும் சொல்கிறான். வேந்தே!  அழகிய    பெண்களின்   சொல்லும்  சுவை உடையதாக  வசீகரிக்கும்" . அதைக்   கேட்பதும்  அதன்வழி   நடப்பதும்  கூட   ஒருவகையான   சுகம்"  என்பதை  நினைவு   கூறுங்கள்"என்றான்.

2.    மூவேழ்    உலகிலும்    தவம் செய்யும்  முனிவர்கள்.  அவர்களிலும் மேலான முதிய  முனிவர்கள்   அனைவரும்,  மங்கைகளின், கொங்கை,முகம்,உதடு போன்றவற்றைத்   தொட்டும்,சுவைத்தும், அவர்களோடு   இணைந்தும் பேரின்பத்தைச் சுவைக்கின்றனர்." இது   காலம்   காலமாக   வரும் நியதி ஆகும்,  என்பதை உணருங்கள்.  என்றான்.

3.   மேலானவனே!   நெடுநாட்கள்    தவமியற்றி, அதன்பலனாக   இறைவனிடம்   வரம் பெறுபவர்கள்   பெறுகின்ற   வரத்தில்  முதன்மை பெற்று  விளங்குவது  இனிமை   தரும்  புதுப்புது   சுகங்களே    ஆகும்.

4.  நிலவுபோல்   ஈர்ப்பு   சக்தி  கொண்ட   முகங்களைக்   கொண்ட  பெண்களின் பார்வையில், அணைப்பில்   மயங்கி, மயங்கிப்  பேரின்பம் காணலே உயர்ந்தோரின்  இலட்சியமாகும்.

5.   அமைச்சரின்   சொல்லைக்   கேட்டுக்   கொண்டிருந்த   இந்திரன் திடீரெனக்  கோபமுற்றான்."  அமைச்சரே!  இது  போன்ற   இன்பியல்  நிகழ்வுகளை  இத்தனை    நாள்   என்னிடம்   சொல்லாமல்   ஏன்  மறைத்த்தீர்கள்! இன்னும்   சொல்லுங்கள்", என்றான்.

6.   துறவறத்தில்   பற்று  கொண்ட இந்திரன்,  கொஞ்சம்  கொஞ்சமாகத்  தனது
வழி  வருவதைப்   பார்த்த  அமைச்சன் மேலும்   சொல்லத்    தொடங்கினான்.

7.   காமசாத்திரம்"  எனப்படும்   மன்மதக் கலை    பற்றிய நூல்  மிகச்சிறந்த அறிவாற்றலாக   விளக்குவது  காதலே   ஆகும்.பெண்ணோடு  இணையும் சுகத்தை அந்நூல்   இயற்கை   அறமாகவே  கூறுகிறது. என்றெல்லாம் விளக்கமாக   அமைச்சன்  கூறியதும்   இந்திரன்   மனம் இல்லற இன்பியலில் நாட்டம்   கொண்டது.

8.  சிற்றின்பம்   என்ற   ஓடையில்  மூழ்கத்   தொடங்கினான்; இந்திராணியுடன்  கலந்தான்; திலோத்தமை மேனகை   உள்ளிட்ட  அழகிகளுடன்   ஆடினான்;  பாடினான்; அவனுக்கு   முழுமை   ஏற்படவில்லை;மீண்டும்......மீண்டும்    என  காம   ஈடுபாட்டில்  திளைத்தான்.

9.   தனது   அரச   பதவியை, ஆட்சி   அமைப்பைத்   தன்மகன்   சயந்தனிடம்
ஒப்புவித்தான், அவன்   அந்தப்புரத்தை   விட்டு   நகரவே   இல்லை; சயந்தன் பொறுப்பை  ஏற்றுக் கொண்டு  நல்லாட்சி  புரிந்தான்.

10.  ஒருநாள்   தனது   அமைச்சரிடம்   சுதந்தன்,"   அமைச்சரே!  நாம்  இந்த  தேவக்கூட்டம்   அரக்கர்களிடம்   அடிமைப்பட்டும், எதிர்க்க   வலுவிழந்தும்,
துன்பப்   படக்   காரணம்   யாது?  விரிவாகக்   கூறுங்கள்"   என்றான்.
அமைச்சர்   நமது   இயலாமைக்கு   முக்கிய   காரணம்  நம்  குலத்தைச்  சார்ந்த "தக்கன் "   என்னும் கர்வம்  கொண்ட  ஒருவனால் தான். அவனைப்  பற்றி   அறியுங்கள்"< என்று  தக்கன்   வரலாற்றைக்   கூற த்தொடங்கினார்.

                                          
                                                              விளக்கம்  

2 .  முதல்வர்                                       =    உயர்ந்தோர் 
3.   நவசுகம்                                        =     புதிய  அனைத்து  சுகம் 
4.  அதிசுவை                                      =   அதிகமான   சுவை 
5.  வேந்தன்                                        =     இந்திரன் 
6.  தனபதி                                           =      இந்திரன் 
7.   மாண் மதி                                    =     உணர்த்தும்  அறிவு 
8.   மற்றவள்                                       =  திலோத்தமை,மேனகை  உள்ளிட்டோர் 
9.   கயந்தான்                                     = யானை..ஐராவதம் 
10. பாவவினை                                 =   ஆற்றிய   தீச்செயல் 


                                         இலக்கணம் 
 சொல்லும் ....................................இறந்தது  தழீ இ ய எச்சவும்மை 
முகமலர் ........................................உவமைத்தொகை 
நவ சுகம் .......................................தத்பவ வடசொல் 
பேரின்பம்.....................................பண்புதொகை 


....................................................................................................................................................................

                                  





























கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக