புதன், 27 மே, 2020




                      3,24. இலங்கை, அரக்கர்  அழிவு 


1.    வீரசிங்கன்    சூரிலங்கை   காக்கவந்து   போரிட்டான்;
        வீரரின்       வாளால்   வதி.

2.    போரிட்டுத்      தோற்றோடும்    போரரக்கர்   புன்கண்ணீர் 
        சீர்சேர்ந்து,     சீற்றலை    மூழ்கு.

3.     மூழ்கிநிற்கும்     முத்தூரை     முன்னவனாய்    மேல்கொணர 
        ஊழிபோல்      வந்தான்   அதி.

4.     சொற்போர்     தொடங்கியோன்    மற்போரும்   தொட்டனன் 
        நற்றவன்       போர்வாள்   நசி.

5.     தடைப்பட்ட    தூதுப்     பணிதொட்டு    வானில் 
        இடைநில்லா    வீரவாகு    ஏகு.

6.     மாவரத்தான்    மாண்பு     மகேந்திரம்    கண்டநொடி 
        தாவிவரும்      தும்பிக்கைத்    தூண்.

7.     சூரநாட்டில்    சோரனாக,    யாரவன்   வீரகுலம்?
        சீரழிப்பேன்     போரினைப்    பார்.

8.     ஆயிரம்       கைகொண்ட     ஆனையான்     மாய்ந்தனன் 
        பாயிரப்       பண்வீரர்    முன்.

9.     நாற்புற     வாயில்     மகேந்திரம்      மாறி மாறி 
        போர்ப்புறக்      காவலே    கண்.

10.   சிற்றுருக்      கொண்டார்;       சிறந்து     விளங்குகின்ற 
        நற்றிறச்சூர்     நாட்டுவளம்   நாடு.

                                               பொருள்

1.  வான்   வழியே   விரைவாய்ப்   பறக்கத்    தொடங்கிய   வீரவாகு இலங்கைத்
தீவின்    எல்லையைத்   தொட்டார். தனது   நாட்டின்   எல்லையில்   பறந்து
செல்லும்   வீரனோ?ஒற்றனோ?   யாராயினும்   நமக்குத்   தெரியாமல்  செல்லல்   இயலுமோ? தடுப்போம்"   என்று தனது   கூட்டத்துடன்  ஒடி  வந்தான்   அப்பகுதி அரக்கர்   படைத்தலைவன்.  வீரசிங்கன்   என்ற  படைத்
தளபதி   வீரவாகுவை   எதிர்த்தான்; வீர வாகுவுக்கும்    அப்படைக்கும்  கடுமையான   போர்; வீரார்கள்    அழிந்து  மடிந்தனர்; வீரசிங்கன்   கொல்லப்பட்டான்.

2.  போரின்   முடிவில்   இலங்கைத்   தீவு   அப்படியே   கடலில்   மூழகத்  தொடங்கியது.  தோற்றோடிய    வீரர்களின்  சோகக்குரல். கண்ணீர்,எல்லாம் சேர்ந்து   அங்கு  நடந்த   சண்டையின்   இறுதியாக   அதிதீவே  மூழ்கியது.

3.   இலங்கையைக்   காக்கும்  பொறுப்பை,  "யாளிமுகன்" என்ற  அரக்கனிடம் கொடுத்திருந்தான்     சூரபன்மன்.  சூரனைக்   காண   மகேந்திரபுரி   சென்றிருந்தான்  யாளிமுகன்.  செல்லும் பொழுது  தன்மகன்   "  அதிவீரனிடம்"  பொறுப்பை   ஒப்படைத்துவிட்டுச்   சென்றிருந்தான்.
 தனது   நாடு   கடலில்   மூழ்கித்   தத்தளிப்பதைப்   பார்த்து,  மிகுந்த  சினமுற்ற   அதிவீரன், இப்படி  முன்னறிவிப்பு   இல்லாமல்   போர்   புரிபவன்,சிங்கமுகனா?  பானுகோபனா?  வேறு   யார்?   தேவர்கள்!  அவர்கள்   அஞ்சி நடுங்கி   வாழ்பவர்கள்!  என்றெல்லாம்   எண்ணியபடி வீரவாகுவை  எதிர்க்கப்   புறப்பட்டான். தந்தை   தனக்கு   இட்டிருக்கும்   கட்டளைக்கு   ஆபத்து   வரவிடக் கூடாது"  என்னும்  மன  உறுதியோடு ஊழிக்காலத்து   உருத்திரன்  போல   ஆவேசமாக   வந்தான்,

4.    வீரனே!   யார் நீ?  எங்கே   போகிறாய்?போவதற்கு   அனுமதி   வாங்கி  உள்ளாயா?  காவலில்   நான்  நிற்கிறேன்; நீ  உன்   வழியில்   மதிக்காமல்   செல்கிறாய்?  என்றதும்,  வீரவாகு,  நான்   சூரன்  நகரான   மகேந்திரத்திற்குச்
செல்கிறேன்.  வழிவிடு.   விரைவாகச்   செல்லவேண்டும்" என்றார்.
சினமுற்ற   அதிவீரன்  என்னை  மதிக்காமல்  வணங்காமல் போகிறாய்?
உன்னை   என்ன செய்கிறேன்   பார்!   வீரர்களே!   அவனைக்   கட்டி  இழுத்து வாருங்கள்!  எனப்படை    வீரர்களுக்கு   ஆணையிட்டான்.அடுத்த நொடி   அங்கே    பலவீரர்கள்   இறந்து  கிடந்தனர்; ஆஆ   எனக் கூச்சலிட்டபடியே
வீரவாகுவின்  மீது  பாய்ந்தான்.  இருவருக்கும்,  மற்போர்  நடைபெற்றது.
மயங்கி   விழுந்த   அதிவீரன்   உடைவாளை   எடுத்தான். வீரவாகுவின்   உடைவாள்  அதிவீரன்   உயிரைப்  பறித்தது.

5.     இடையே   ஏற்பட்ட   போரினால்  தனது   பயணம்   தடைப்படுவதை  விரும்பவில்லை வீரர். இதுபோன்ற   சூழலில்   இனி   சண்டை  இடுவதைத் தவிர்ப்போம்; என்றபடி   விரைவாய்ப் பறந்தார்   வீரர்.

6.     மகேந்திரபுரி     வந்து விட்டது;  தவ   வரத்தால்   அழகுமிக்க   மாநகரை
உருவாக்கியுள்ள     சூரனின்   தவத்தை  வியந்தபடி   அந்நகரைப்   பார்த்தார்;
அடுத்த நொடி, ஆயிரம்   தூண்களான  தும்பிக்கைகளைக்   கொண்ட  கயமுகன்   என்னும்   கோட்டைத்   தளபதி   வீரரை   அழிக்கும்   நோக்கில்  வந்தான்.

7.    சூரரின்      திருநாட்டில்   திருடன்போல்    வரும்   வீரன்   எந்த  குலத்தைச் சார்ந்தவன்?  தேவனா?  மனிதனா?  யாராயினும்   நில்!  உன்னை  ஒருநொடியில்  அழிப்பேன்;  என்  போர்த்திறனைப்   பாரடா!  என்று  வாளேந்திய கையோடு    ஓடிவந்தான்.

8.    கயமுகன்   ஆயிரம்   துதிக்கைகளைக்   கொண்ட   யானையானவன்;
வந்தவனோடு   வாட்போர்   புரிந்த  வீரர்   அவனது   ஆயிரம்   கைகளை வெட்டி  வீழ்த்தினார்; முடிவில்  அவனது   தலையை  வெட்டினார்; இறந்து கீழே   விழுந்தான்   அரக்கன்.

9.     மகேந்திரபுரியின்    நான்கு   வாயில்களைப்  பார்த்தார்; கோட்டை  வாயில்கள்  காவல்  மிகுந்து   காணப்பட்டன. இங்கு   போரிடுவதைத்   தவிர்ப்போம்.   தூதுப்பணி   கருதி   வந்தவன்   போரிடல்    மரபும்    ஆகாது.
எம்பெருமான் முருகன்   அரக்கர்களை   அழிக்க  இருக்கிறார். என்று தன்னை
மாற்றிக் கொண்டார்.

10.    முருகன்   அருளியவண்ணம்    தன்னை  அணுவிலும்,  சிறியதான  உருவத்திற்கு   மாற்றிக்  கொண்டார். தான்   இருப்பது   யாருக்கும்   தெரியாத
நிலையில்   அப்படியே   வானத்தில்   பறந்து  அழகுமிக்க   சூரன்   நகரத்தைப்
பார்வையிடத்     தொடங்கினார்.


                                                       விளக்கம்.

1.சூரிலங்கை                                  = சூரனுக்குக்   கட்டுப்பட்ட  இலங்கை
2.சீற்றலை                                        = பொங்கும்  கடல்
3. முன்னவன்                                   =  அதிவீரனின்  தந்தை யாளிமுகன்
4. நசி                                                 =  அழி---அழிந்தான்.
5. தடைப்பட்ட                                 =   அரக்கற்களால்  தடைப்பட்ட
6. மாண்பு                                          =   சிறந்து  விளங்கும்,
7. சோரன்                                          =   திருடன்
8. ஆயிரம்  கை                               =தும்பிக்கை    ஆயிரம்  கொண்டவன்
9. நாற்புற வாயில்                         =   கோட்டை   வாயில்
10. சிற்றுரு                                        =   அணுவிலும் குறைந்த   உருவம்

                                                 இலக்கணம்
சீற்றலை ................................................ஆகுபெயர்
தும்பிக்கைத்தூண் .............................உருவகம்
மாறி மாறி             ..................................அடுக்குத்தொடர்

7. 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக