வியாழன், 14 மே, 2020


                                         6.  2.     திருமணம் 


1.     மாசி     மகப்புனல்      ஆடவேண்டித்     தக்கனும் 
        ஆசிபெறு   காளிந்தி   ஆறு.

2.     அலைநடு      தாமரை     கண்டான்;   கலையாள் 
        மலைமகள்    முத்துச்     சிரிப்பு.

3.      சிவவரச்        சீரிது ;       பற்றிடு     கையில்,
         நவவேத      வல்லி     பெறு .

4.      ஆறாம்       அகவையில்     ஆற்றும்    தவச்செயல் 
          பேறாய்ப்    புகுமாடம்    ஏகு .

5.      பன்னிரண்டாம்     ஆண்டினில்       பங்கயம்     பூண வந்தான் 
         அந்நியமாய்ச்       சோதித்தே     ஆள்.

6.      தானறி      செய்தியால்       மான்மணம்    தேக்கினான் 
         வான்நிலம்     வந்துகூட    வே.

7.      ஆதியான்      காணாது     அம்மை    அருந்தவம்;
         சீதக்கை     தொட்டழைத்     தேகு.

8.      சோதியான்    பாதியுடல்    பெற்றாளே      பேறுற்றாள் 
          ஈதறியா      ஈனன்      சினம்.

9.      மாக்கயிலை      தான்போனான்       மாக்கதவம்        தாளிடவே 
         மாச்சினத்தான்    மூச்சிறை க்க    மீள்.

10.    சிவனே      என்பகைவன்;       சிந்தியேன்   சீர்மை;
         நவவேள்வி      நாட்டுவேன்    நான்.


                                                      பொருள்

1.  புனிதமான   காளிந்தி   ஆறு;  அவ்வாற்றில்   மாசித்திங்கள்    மகம்
நக்ஷத்திர   நாளன்று   நீராடினால்  புண்ணியம்   ஆகும். அதற்காகத்   தக்கன்
தனது  குடும்பத்துடனும்,   பரிவாரங்களுடனும்  வருவான்; இதோ    தக்கன்
காளிந்தி  நதியிலே    மனையாளுடன்   இறங்கி     நீராட ப்போகிறான்.

2.    அந்த    ஆற்றின்    அலைகளில்    தத்தளித்தபடிப்    படர்ந்துள்ள    தாமரைக்     கொடிகள் ;  அங்கே    மலர்ந்த    தாமரை   மலரொன்று
தக்கன்    கண்ணில்   படுகிறது. அதற்குள்,    இதழ்கள்  சூழக்   காட்சி
அளிக்கும்    அழகிய   குழந்தை; சிரிக்கும்    சிரிப்பில்    மலைமகள்  அவனுக்குத்   தெரிகிறாள்; அப்படியே   வாரி   எடுக்கிறான் .

3.   சிவன்    தந்த   வரப்பிரசாதம்;  சீர்மையான   இக்குழந்தையைக்   கையிலே   பெற்றுக் கொள்வாய்!  வேதவல்லி! எத்தனை    குழந்தைகள்பெற்றிருந்தாலும்,  இக்குழந்தை  போலாகாது.என்றபடி   மனையாள்   கையில்  கொடுக்க   அவளோ  மகிழ்வோடு  செல்வத்தைப் பெற்றுக்  கொஞ்சுகிறாள்.

4.     தக்கன்    அரண்மனையில்   இளவரசி போல்   வளர்கிறாள் குழந்தை;அவளின்    பெயர்   தாக்ஷாயணி . அவளுக்கு    ஆறு   வயது   ஆகும் பொழுது, அவள்   தாய்தந்தையரை   நோக்கி,இவ்வாறு   கூறுகிறாள்.
"பெற்றோரே!  நான்   இறைவன்   கட்டளைப்படிப்   பிறந்தவள்;ஆறாம்   வயது முதல்  பன்னிரண்டாம்   வயது  வரை, இறைவன்   சிவனைக்   குறித்துத்  தவம்
இருக்கவேண்டும்.  ஆதலின்   எனக்குத்   தனியே  கன்னிமாடம்   அமைத்துக் கொடுங்கள். " என   வேண்டுகிறாள்.    இறைவனே  மாப்பிள்ளை   ஆக  வரப்
போகிறான்"என்ற  மகிழ்வில்  தக்கனும், அவன்   மனைவியும்  மகிழ்ந்து தனியே    கன்னிமாடம்   அமைத்தும், பணிப்பெண்கள், ஏவலர்கள் மேலும்
நல்வசதிகள்  அமைத்துக்   கொடுக்கின்றனர்.

5.       பன்னிரண்டாம்   வயதில்,  அவளுடைய    தவச்சாலை   நோக்கி, ஒரு
அந்தணர்    வருகிறார். வந்தவரை   உபசரித்த   தோழியர்,  அவளிடம்  கூறுகின்றனர்;  அழைத்துவருமாறு   கூறியதும்,    சேடியர்    அந்தணரை  உள்ளே  அழைத்து வருகின்றனர்.அவருக்குப்   பாத   பூஜை   செய்த பின்
யாத  காரணமாக   வந்துள்ளீர்கள்? என்று   வினவ,அவர்   சொன்னார்,
பெண்ணே!  உன்னை   மணப்பதற்காக   வந்துள்ளேன்;  நீ விரும்பினால்   நாம் மணம்   செய்து  கொள்ளலாம்" என்று   சொன்னதும்,  தனது   இரு   காதுகளைப்    பொத்திக்   கொண்டவள்  சிவ  சிவ  .யான்  சிவபெருமானை மணப்பதற்காகவே    தவம்   செய்கிறேன்;  அவரையன்றி  யாரையும்  மனதாலும் விரும்பேன்; என்றாள். அவரோ   சிரித்தபடி,சிவனை    மணப்பது
அவ்வளவு   எளிதான  செயலாமோ?உன்னால்   அது  எப்படி   இயலும்? நானே
உன்னை   மணப்பேன் "என்று   சொன்னதும்   தனது    காதுகளைப்
பொத்திக்கொண்ட    அம்மை   அங்கிருந்து   ஓடலுற்றாள்.   அவளின்
மென்மையான   காரத்தைப்  பற்றியபடித்   தனது   உருவத்தை  வெளிப்படுத்தியதும்   வெட்கத்தோடு,     தான்   செய்த  பிழையைப் பொறுக்குமாறு  வேண்டுகிறாள்.மகிழ்வோடு  தன்னைக்   காண   வந்த சிவனின் கால்களில் விழுந்து  வணங்குகிறாள். அவரும்   உன்னை மணப்பேன்  மாதொரு பாகனாக  விளங்குவேன்"
 என்றும் கூறுகிறார்.

6.    தோழிப்பெண்கள்   ஓடோடி   வந்து  தக்கனிடம்   தெரிவிக்கின்றனர்.
அவனும்   மகிழ்ந்து,   மகளின்     திருமண   ஏற்பாடுகளைப்   புரியத்
தொடங்கினான்.மூவேழ்   உலகங்களுக்கும், தூதுவர்களை   அனுப்பினான்.
திருமால், பிரமன்,இந்திரன்   போன்றோரும்  முனிவர்களும்,அந்தணர்களும் வந்து குவிந்தனர்.

7.     மண   நாள்;  மகிழ்ந்தபடி   அமர்ந்திருக்கும்    சான்றோர்   கூடம்;  நடுவே
அமர்ந்திருந்தார்   சிவனார். நந்தி,  பூதப்படைகள்     சுற்றி   நின்றிருந்தன;
ஒருபுறம்  திருமால்   இழக்கும்;மறுபுறம்   பிரமன்,கலைவாணி; இந்திரன்  பிற  தேவர்களும்,முனிவர்களும்     கூடியிருந்தனர்;  அரங்கத்தின்    நடுவே   நின்று
இருந்த    மகாதேவன்   மறைந்து விட்டார்.  இறைவன்  எங்கே?  எங்கே? என்று
எல்லோரும்   தேடினர்; செய்தி   அறிந்த   தாக்ஷாயணி  மீண்டும்    தவச்சாலை   சென்று  விட்டாள் . செய்தி   அறிந்த   தக்கன்  நிலை குலைந்து
சினத் தோடு     தேடினான்;பழைய   நினைவில்   திருமாலும் பிரமனும்  தேடினர்.    தவச்சாலையில்   சோகமாய்  நின்றிருந்த  அம்மையின்  அருங்கரம்    பற்றிய   இறைவன்.கவலற்க "  என்றபடி,  அம்மையை   அழைத்துக்    கொண்டு   கயிலை   ஏகினார்.

8.    ஆதிசிவனின்    அங்கத்தில்   பாதி  பெற்றிருந்த    அம்மை,இன்று, மீண்டும்
அவரோடு   ஒன்றிப்பு    பாதியுடல்  பெற்று, அம்மையப்பனாகக்   காட்சி அளித்தாள்.  இதனை    உணரும்   ஆன்ம  சக்தி   இல்லாத   ஈனப்பிறவி  தக்கன்  சினமுற்றான்; ஏமாத்துக்காரன்' என்று திட்டினான்; தன்னைச்   சிவன்   அவமானப்   படுத்தியதாக  எண்ணி, அவனிடம்   அது பற்றிப்
பேசவிரும்பிக்   கயிலை  நோக்கிப்  புறப்பட்டான். இறைவன்   திருவிளையாடல்  அறிந்த   தேவர்களும், முனிவர்களும்   அவரவர்   தத்தம் பதி     சேர்ந்தனர்.

9.     கயிலையை    அடைந்த   தக்கன்   நேர்வாயிலில்   நுழைந்தான்; அங்குள்ள   பூதப்படையினர்   அவரைத்   தடுத்தனர்;  அடுத்த   வாயிலுக்குச்  சென்றான்;  அங்கே   நின்றுகொண்டிருந்த   நந்தி   தேவர்   அவனை   உள்ளே
செல்ல   அனுமதிக்கவில்லை;மீண்டும்   சினம்  கொண்ட   தக்கன்  சிவனுக்கு நிகரான    எனக்கு   அனுமதி   இல்லையா?என்று   மீண்டும்   உள்ளே  நுழைய
முற்பட்டான் ;  கதவுகள்    தாளிட்டுக்   கொண்டன; சினத்தின்   கடைசி   எல்லைக்கே    சென்றுவிட்ட   தக்கன்   மூச்சிரைக்க  இரைக்க,  நாடு   நோக்கி ஓடினான்.

10.      தாக்கமாபுரி"  சென்றதும்  கத்தினான்."  இனி   எனக்குப்   பகைவன்  சிவனே;   அவனைப்  போற்ற  மாட்டேன்;பூஜை   பண்ண  மாட்டேன்;
வேள்விகளில்   அவனுக்குரிய   அவிர்பாகத்தை  ஒருபோதும்   அளிக்க மாட்டேன்;விரைவில்    சிவனை   அவமானத்திற்கு    ஆளாக்கும்  வேள்வி ஒன்று செய்வேன்;  எல்லோரையும்   அழைப்பேன்; சிவனையோ   , அவன்  மனைவி யையோ   அழைக்க மாட்டேன்;  நானே   உலகு; நானே   எல்லாம்; என்பதை நிறுவுவேன் ,என்று தக்கன்  கத்தினான் . 



                                                             விளக்கம்

1.   காளிந்தி                                                    =      யமுனை   ஆறு.
2.   கலையாள்                                                =      அழகுமிக்கவள்
3.   வேதவல்லி                                                =       தக்கன் மனைவி
4.   புகு  மாடம்                                                =       தவச்சாலை
5.   அந்நியமாய்                                             =       தனது  மனையாள் என்றில்லாமல்
                                                                                       பிறர்  போன்று  சோதித்தல்
6.   மாண் மணம்                                            =       சிறப்பு டைய  மங்கள மணம்
7.   ஆதியான                                                   =        சிவபெருமான்
8.   ஈனன்                                                            =       தாழ்ந்த  சிந்தனையாளன்,தக்கன் 
9.   மாச்சினத்தான்                                        =        தக்கன்
10.  நவ வேள்வி                                                =       புதிய   யாகம்


                                                               இலக்கணம்

சிவ வரம்........................................................ஆறாம்  வேற்றுமைத் தொகை
வான்,நிலம்................................................... உம்மைத் தொகை, ஆகுபெயருமாம்
















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக