ஞாயிறு, 9 பிப்ரவரி, 2020

                                               சேவலும்,மயிலும்

1.  வடிவேல்  வந்துற்ற   வேளையிலும்  வாடா
     முடிச்சூரன்  முகிழ்த்தான்  மரம்.

2.  மாக்கடல்    மாவயிற்று   மாமரமாய்  மாறினான்;
     மாவசைவில்  மாண்ட   துலகு..

3.  கொடுமரம்   சாய்த்தது;  கோனான  சூரன்
      கடுவுடல்    சாய்த்தது  கூர்.

4.  இருகூறாய்  வீழ்ந்தான்  இறைவரத்தால்  நின்றான்,
     அருமயில்   சேவலும்  ஆம்.

5.  அப்பொழுதும்  ஆரிருள்  தாழ்மனத்தான்  ஆர்ப்பரிக்க,
     நுட்பஞான  நேயவருள்  நீக்கு.

6.  காரிரும்பு   வேதியினால்   செம்பொன்னாய்   ஆனாற்போல்
     காரரக்கன்   சீர்ஞானம்  சேர்.

7.  நின்றவக்னி  நீங்கவைத்து    நீள்சேவல்  கூவவைத்து
     மன்றமயிலின்  மீதமர்ந்த   மாண்பு.

8.   செந்நிறச்    செஞ்சேவல்     செவ்வேளின்    செய்யதேர்மேல்
      செங்கொடி    யாய்ப்பறந்து    பாடு .

9.   மஞ்ஞையாம்    மாவூர்தி     மேலமர்ந்த     மாமுருகன்
      தஞ்சமெனத்      தான்சுமந்தான்    சூர்.

1௦. வெற்றிவாகை    உற்றதலை   நற்றிற்த்தைப்  பற்றிபோற்றிக்
      கொற்றவனைக்  கொண்டாடும்  விண்.
   
   
                                                     விளக்கம்
1.   முகிழ்த்தான்                                             =   தோன்றினான்
2.   மாவசைவில்                                              =   மர    ஆட்டத்தில்
3.   கூர்                                                                  =   முருகனின்   வேல்
4.   இருகூறாய்                                                  =    இரு பகுதியாய்
5.   ஆரிருள்                                                         =   ஆணவமான   குணம்
6.   நேயவருள்                                                    =    நல்லருள்
7.   வேதியினால்                                               =    கலவைத் தன்மையால் ''
8.   அக்கினி                                                         =    தீக்கடவுள்
9.   சூர்                                                                    =    சூரனாகிய   மயில்
10.  விண்                                                               =    விண்ணவர் கள்

                                                   இலக்கணம்

                                                 
வடிவேல்  ...............உரிச்சொற்றொடர்.
வாடா.......................ஈறு  கெட்ட எதிர்மறை ப்பெயறேச்சம்
மாக்கடல்...............உரிச்சொற்றொடர்
கூர்..........................  ஆகுபெயர்.
     காரிருள்    எனத்தொடங்கும்   பாடலில்  உவமை  அணி பயின்று வருகிறது.

1.  ஊழிச்சங்க்கார உருத்திர மூர்த்திபோல்வும்,  அருணாசல ஒளிவடிவம்
போலவும்   தன்னை  நோக்கி,வருகின்ற வடிவேலைக்  கண்டும், அஞ்சாத
சூரன் தனது  மாயத்தால்  ஒரு  மரமாக  உருவெடுத்து நின்றான்.
     
2.   பெருங்கடல்   நடுவே    நெருப்புத்  தளிர்களையும், புகை  உமிழும்  இலைகளையும்,மரகதம் போன்ற  காய்களையும்,கொண்டு,அண்ட  கூடம்  வரை  உயர்ந்து,திசைகளைத்  தொட்டுத் துழாவும் கிளைகளைப் பெற்றும்,பூமியைத்  தாங்கும்   ஆதி கூர்மம்(ஆமை) வரை  வேர்களைவிட்டும்,
வானையும்,மண்ணையும் இணைத்தபடி,மாமரமாய்  மாறினான்சூரன்.


3. கொடுமையின்   வடிவமான   சூரனாகிய  மரத்தைச்சாய்த்தது  வெற்றிவேல். அரக்கவரசன்  தன்னுருவில்   உடைவாள்  எடுப்பதற்குமுன்
அமரத்தை இருகூறாக்கிக்  கடலில்  சாய்த்தது  வேல்.

4.  சிவபெருமானிடம்   பெற்ற   வரபலத்தான்  சூரன்,முருகனது   அருட்பார்வையும்   பெற்றுச்   சேவலும், மயிலுமாய்  மாறி நின்றான்.

5.  சேவலும்,மயிலுமான  சூரனது  ஆணவம் மாறவில்லை ;முருகனோடு போரிடவே   முனைந்தான்.கருணை கொண்ட   முருகன்   அவன்மீது ஞானம்
கலந்த  அன்புப்   பார்வையைச்  செலுத்தினார்.

6.  கருமையும், பலமும்   நிறைந்த   இரும்பு,  வேதிப்பொருள்  சேர்ந்த   கலவையை  ஊற்றும்போழுது  செம்பொன்   ஆகுமல்லவா! அதுபோல் கொடுமையும்,தீய ஆணவபலமும்   கொண்ட   சூரன்,முருகனது அன்புகலந்த
அருள் ஞானப் பார்வை  பட்டதும்  ஞானியாக  நல்ல அன்பு கொண்டவனாக,
பணிவும்,பண்பும்  கொண்டவனாக   மாறினான்.

7.   இதுவரைத்   தனது   கொடியாக   இருந்த   அக்னியையும் ,மயிலாக  இருந்த
இந்திரனையும்,  அவரவர்  பணிக்கு  அனுப்பிவிட்டு,சூரனாகிய  சேவலைக்
கொடியாக  ஏற்றுக்  கூவச்சொன்னார். மயிலின்மீதமர்ந்து   மூவேழ்   உல கங்களையும்   சுற்றிவர்   ஆணையிட்டார்.


8.    முருகனின்   ஆணையை   ஏற்று  மகிழ்ந்த   சூரனின்   பாதி   உருவாகிய
சேவல்,   தனது   தலைவனாகிய   முருகப் பெருமான்   பவனி    செல்லும்   அழகிய    தேர்மீது   பறக்கும்   கொடியாகி   நின்று   "கொக்கறு கோ"   என
மூவேழ்  உலகங்களும்   அஞ்சுமாறு   குரல்   எடுத்துக்   கூவியது.

9.    மற்றொரு   உருவாகிய     சூரமயில்    மேல்   அமர்ந்த  தலைவன்   முருகப்
பெருமானைச்    சுமந்தது.  தனக்கு   அருள்  காட்டிய   முருகனைச்   சுமப்பதில்
மயிலுக்கு    அளவிறந்த   மகிழ்ச்சி   ஏற்பட்டது.


1௦.  திருமாலும்,நான்முகனும், இந்திரன்   முதலாய  தேவர்களும், அரக்கர்களை  அழித்துத்  தேவர்களைக் காத்த  தேவசேனாபதியாகிய
சுப்பிரமணியக்  கடவுளைப்   பணிந்து  போற்றினர்;

                                     




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக