ஞாயிறு, 9 பிப்ரவரி, 2020

                                      சூரன் மனம்

1.  அருளிய   நல்லுணர்வு   ஆண்டவனைப் போற்றும்;
     திருமுருகே  தெய்வம்   எனல்.

2.  போருக்கு   வந்ததே   பேரருளாம்; பூரணன்
     காருள்ளம்  கண்டேன்  களம்.

3.  பேராற்றல்  பெம்மானைப்   போர்க்களத்தில்   கண்டநான்
     சீருற்ற   செம்மனத்துச்   சேர்.

4. தீதான   தேவர்   சிறைவைப்பும்   தேவனருள்
    தீண்டிடத்    தக்கவழி   தான்.

5.  மாற்றினான்  மாவடிவம்; மாற்றினான்   மாமனம்;
     சீற்றத்தால்   தூற்றினான்  சூர்.

7. மயங்கியோன்  மீளவே   மாத்தேவர்   கூட்டம்
    சயனத்தான்  நான்முகன்  சார்.

6. என்றபடிப்   பேருருவம்  பேயுருவம் பேரண்டம்
    என்றுகாண்  உள்மறைந்து  தோன்று.

8.  வேற்படை  விமலனே!  ஒலமென  வேண்டிட்ட
     நாற்படைக்   காக்கவே  நாடு.

9. சங்கார   வேற்படையே!  சங்கரிப்பாய்.  சூரனை.
    சிங்கார   வேலன்  சினம்.

1௦. உருத்திர   மூர்த்தி   உயர்ந்துநின்ற    சோதி
      திருத்தகு  தெய்வவேல்   தான்.


                                                      பொருள்

1.  முதலும்   முடிவும் இல்லாது தோன்றிய  மாவடிவத்தைக் கண்ட   சூரன்,
சற்றே  விம்மினான்;முருகக்   கடவுளும் அவன்   அடிமனத்தே   ஆணவம்  நீக்கி,  நல்லுணர்வை  வழங்கினார். அவனது    மனம்,வாய், முருகனைப் போற்றத் தொடங்கியது. மும்மூர்த்திகளும்  இக்குழந்தைக்கு  நிகராமோ?
முழுமுதல்  தெய்வம்  முருகனே .வீரபாகுவும்,சிங்கமுகனும்  பானுகோபனும்
கூறிய  குழந்தையைக் கடவுளைக்  கண்ணாரக் காண்கிறேன்.

2.  என்னோடு   நிகராகப்  போர் புரிய   வந்ததே   யான் செய்த  புண்ணியத்தால்  உருவானது; போர்க்களத்திலே  எனது  வரபலத்தால் பெற்ற
படைகளை  ஏற்றதும்,தடுத்ததும், போர் புரிந்ததும்  காணக் கிடைக்காத
அழகுக்காட்சி  அல்லவா!

3. பேராற்றலுடன்  போராற்ற   வந்த   பெம்மானைக்  கண்டேன்.எனது  மனக்
கசடுகள்  அழிந்தன;  உரோமங்கள்   சிலிர்த்தன;கண்ணீர்  பெருகியது;
அகந்தை   அகன்றது; அன்பு   ஊற்றெடுத்தது;ஞானம்   தோன்றியது;
நன்மைக்கு   அறிகுறியாக  வலக்கரமும்,  வலக்கன்னும்   துடித்தது;  என்னே
விஸ்வரூப  தரிசனம்!என்றெல்லாம்  முருகனைப்  பலவாறு  புகழ்ந்தான்.

4.   தேவர்களைச்  சிறைவைத்து விட்டேன்" பெருங்குற்றம்   புரிந்து விட்டேன்"
என்று என்னைச்   சாடுகிறார்கள். அந்தத்   தவற்றை   யான்   புரியாவிடில்
காணற்கரிய  இந்த விஸ்வரூப  தரிசனத்தைக்   கண்டிருக்க   முடியுமோ?
அவனருளைப்  பெற்றிட  அதுவே   வழியாக  அமைந்தது  அல்லவா!
என்றெல்லாம் பலவாறு  முருகனைப்  போற்றினான்  சூரன்.

5. தனது   ஒளிவடிவமான   பேருருவத்தை   மாற்றிப்   போர்புரியும்  தானைத்
தலைவனாக நின்ற  முருகக்கடவுள், இடையில்  மலர்ந்த   சூரனது நல்ல
குணத்தையும்,மனத்தையும்  மாற்றி  அவனைப்   பழைய நிலைக்கு
மாற்றினார்.அடுத்த நொடி ஆ! மாயக்காரன்; என்னவோ   மாயம் செய்து என்னை  மாற்றிவிட்டானே!இவனைக்   கொல்லாமல்   விடமாட்டேன்"என்று
ஆணவத்துடன் பேசினான்.  இப்போருக்குக்  காரணமான  விண்ணவர்களை அழித்துத் தின்பேன்"  என்று  கூறியபடி  மாயமந்திரங்களை  உச்சரித்தான்.

6.  அவன்   உச்சரித்த   மாயமந்திரம்   அவனைப் பேருருவம்  கொண்டவனாக ,
விண்ணையும், மண்ணையும்   அளக்கும்   உருவமாக,பல்வேறு   சிகரங்கள் கொண்ட  மலையாக  அவனை   மாற்றியது;அப்பேருருவத்துள்    மறைந்து நின்ற   சூரன் முதலில்   விண்ணவர்   கூட்டத்தை நோக்கி  நடந்தான்.

7.   ஞான  மயக்கத்தில்  இருந்து  விடுபட்டு,மீண்டும்   அரக்க   ஆணவ   வயப்பட்ட  சூரனைக்  கண்டும், அவனது   உருவத்தால்   அஞ்சியும், நடுங்கியும்  மிரண்ட   தேவர்கள்   நான்முகனையும், திருமாலையும்
நாடினார்கள். பின்   அனைவரும்   ஒன்று  சேர்ந்து  தங்களைக்  காக்குமாறு
முருகனைப்   போற்றி வேண்டினார்கள்.

8.  வேல்  கொண்டு   வினை   தீர்க்கும்   முருகக்   கடவுளே! பேருருவத்தோடு
எங்களை   அழிக்க   வரும்   சூரனிடமிருந்து   காப்பாற்றும். வரபலம்  மிக்க
அவனை  அழிப்பதற்காகவே   தோன்றிய சேனாபதியே! அவனைச்  சங்கரித்து   எம்மைக்   காப்பீராக" என வேண்டினர். அவர்களையும், உலகையும்  காக்கப்  புறப்பட்டார்  முருகன்.

9.  சூரனது  கொடுமையையும்,அவன்  ஆற்றும் மரபு   அல்லாத செயல்களையும்  மனத்திலே  நினைந்து,சினம் கொண்ட  முருகக்கடவுள்   தனது   வேற்படையை  அழைத்தார் .அதற்குக்   கட்டளையும்  இட்டார்.
வேற்படையே! நீ விரைந்து  சென்று  சூரனை   அழித்து   வா!"  என.

1௦.   அவரது   ஆணையைத்   தலைமேற்கொண்ட  வேற்படை   உலகங்கள்
நடுங்கவும்,கடல்கள்  கொந்தளிக்கவும்,காற்றும்,தீயும்  வானெங்கும் பரவவும்.ஊழிச்சங் கார  காலத்து   உருத்திர மூர்த்தி போலவும்,ஆணவம்
அடக்கத்  தோன்றிய   அருணா சல  மூர்த்தி  போலவும் வீறு கொண்டு
விரைந்தது.

                                                         விளக்கம்

நல்லுணர்வு.............பண்புத்தொகை
திருமுருகே  .............தேற்றேகாரம்
வேற்படை  ................உருவகம்

சயனத்தான்= திருமால் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக