செவ்வாய், 4 பிப்ரவரி, 2020

                                                 விஸ்வரூபம்,  பேருருக்காட்சி


1,     மாய  வடிவம்   மடிந்தது  வேல்திறன்,
        தோய்ச்சுடர்ப்   பேருரு   காண்,

2,    கடல்மலை    காலடி;  விண்மீன்  விரல்கள்,
       இடிகோள்;  கணைக்கால்  முனி,

3,    வருணன்  குபேரன்  விஞ்ஞையர்  இந்த்ரன்
       பரட்டு  முழந்தாள்  தொடை.

4,    தொடைமூலம்   காலயமன்,தொட்டிடை  தேவர்,
       கடையர்,  கடைமுதல்  நாகு,

5,    அமுதமோ   அக்குறி;  ஆருயிர்கள்  நாபி;
       குமுதக்    கலைநிறை   மார்பு.

6,   பூணூலில்  பொங்குஞானம்;பேரண்டம்   பூமுடி;
      பேணுபோகம்    அங்கை   அருள்,

7,  மாலயன்   மாப்புயங்கள்; மால்மகளிர்  மைவிரல்கள்;
     காலாக்னி   தண்டு.

8,  வாயில்   மறைகள்;  எழுத்துக்கள்   பற்களில்;
     நாவில்    சிவாகமங்கள்;  நாடு.

9,  இதழில்  எழுகோடி  மந்திரங்கள்;  மூக்கோ
     புதுக்காற்று;  காதோ  திசை,

1௦, கண்கள்   இருகோள்கள்;  நெற்றிப்   பிரணவம்;
      பண்ணாம்   பரமசிவம்   தலை.,

                                         பொருள்   

    சூரனின்   ஆணவம்  அகலவும், ஆன்மசுகம்  வளரவும்  முருகக்கடவுள்
தனது   பேருருவை க்  காணும்   வாய்ப்பைத்  தந்தார், தனது  திருமேனியில்
அடங்கியுள்ள  பரமேஸ்வர  வடிவத்தைக்  காட்டினார்,
         சூரனே!  உனது   மாய வடிவங்கள்   அத்தனையும்   அழிந்தன, உன்   மாய
மனம்  பேரருள் பெற நமது   பேருருவை  உனக்குக்  காட்சியாக  அருள்கிறோம். காண்! என்றார்   முருகன்,

2 ,    மாமுனிவர்களுக்கும்   கிடைக்காத  முருகனின்  விஸ்வரூபத்தைக்
கண்டான்   சூரன்,    அந்த   மாமேனியின்   உள்பாதம்   மலைகள்; வெளிப்பாதம்  கடல்கள்; கால் விரல்ல்களில்  இடி, விண்மீன்,கோள்கள் ;

3,    கால் பரட்டில்   வருணன்,குபேரன்,நிருதி,அரக்கர்களும், கனைக்காலில்
முனிவர்களும், சிந்தாமணி போன்ற நவரத்தினங்களும்,முழந்தாளில்
வித்யாதரர்களும்     தொடையில்  இந்திரனும்,காட்சி  அளித்தனர்,

4,   தொடை  மூலத்தில்  யமனும்,இடுப்பின்  முற்பகுதியில் அரக்கர்களும்,விலாப்புறத்தில்  தேவர்களும்  மூலாதாரத்தில்   நாகர்களும்
காணப்பட்டனர்.

5,    குறியில்   அமுதமும், தொப்புளில்  உயிர் வகைகளும், மார்பில் அனைத்துக்  கலைகளும்   காணப்பட்டன,

6,   அணிந்திருந்த   பூணூலில்  ஞானமும்,உரோமத்தில் அண்டங்களும்,
அழகிய   கரங்களில்  இன்பனுகர்வுகளும்  அடங்கியிருந்தன,

7,    தோள்களில்  பிரமனும்,திருமாலும், அழகிய  கைவிரல்களில் தேவகுலப் பெண்களும், முதுகுத்  தண்டு வடத்தில்  ஒலிக்கூட்டங்களும்,அக்னியும்
காட்சி தந்தனர்,

8,   திருவாயில்   நான்மறைகளும், பற்களில்   எழுத்துக்களும், நாவில்  சிவாகமங்களும்  காட்சி தந்தன,

9,  இதழ்களில்   எழு கோடி   மஹா மந்திரங்களும், மூக்கினில்   வாயுவும்,
 காதுகளில்  திசைகளும், நிலைத்திருந்தன,

1௦, கண்களில்   சூரிய ,சந்திரர்களும்,நெற்றியில்   "ஓம்"   எனும் பிரணவமும்.
தலையில்  பாமன்மா வாகிய   பரமேஸ்வரனும்  காட்சி  தந்தருளினார்கள்.
         பேரொளி  மிகுந்த  தனது   பேருருவை அருளுடன்  முருகன்  சூரனுக்குக்
காட்சி   தந்தருளினார்,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக