வியாழன், 28 டிசம்பர், 2017

                                   மோனம்   நீங்குதல்

தென்றல்    நிலவொடு  தீண்டிய    தெம்மாங்கு
மன்றமே!   மண்ணானாய்   மன் .

பொன்திகழ்    மூர்த்தி,  பொடியான    மன்மதன்
என்னினி  என்றயர்  விண் .

நலம்பெற    நாடுவோம்:   நாவாலே    போற்றிக்
கலமெனக்   காலடைவோம்  நாம்.

நான்முகன்  நவின்ற    நால்வேத     நற்சுருதி
வான்தேவ    வாட்டம்   வரை .

ஆலால   ஆசானே/1   அல்லல்     அகற்றிடு:
மாலுற்றோம்   மன்னித்     தருள் .

அரக்கனின்   அல்லல்    அளவில:  அன்னான்
அழிக்க     அரும்புதல்வன்    ஆக்கு.

அன்னைநீ:  அப்பன்நீ: ஆக்குவாய்நீ:   ஆலகாலம்
உண்டுகாத்தோய்!  இன்றுமே  கா.

மகிழ்ந்த    இறைவன்    மணப்போம்   மலையாள்:
மகிழ்வளி    காலம்   வரும்.

முனிவ!    முனைக.   மவுனம் .  மனத்து
இனிமைத்     தவமென்   றுணர்.

மணம்புரி    நாளில்    மனமதன்    தோற்றம்,
இணைபெற்றே    இல்லறம்   காண்.

                                   பொருள்
1.    கணவனாம்  மன்மதனை  இழந்த  இரதி "தென்றலோடும்,
வெண்ணிலவோடும் ஆடிப்பாடித் திரிந்த   என் காதலனே! என்னை
விட்டுப் பிரிந்து  மண்ணாகி  மடிந்தது ஏனோ? என்றழுதாள்.
2.   மனம்   மாறாது,தவத்தே    நிலைத்த சிவபெருமான்,   அவரால்
சாம்பலாக்கப்  பட்ட  மன்மதன்: இனி  என்ன  செய்வோம்?நமது  துயர்
எவ்வாறு    தீரும்? என்று வருந்தித் தவித்தனர்   தேவர்கள் .
                                        விளக்கம்
விண் .......இங்கு   முதலாகு பெயராய்   விண்  என்பது   விண்ணவராம்
தேவரைக் குறித்தது .
3.    நாம்  நன்மை அடைய வேண்டின்   சரணடைய வேண்டியவர்   சிவனே,
ஆகும்.அவரே கத்தி எனக் கொண்டு,நம்மைக்காக்கும்    கலமென ப்
போற்றுவோம்.அவர் நம்மைக்  காப்பார்.
                                          விளக்கம்.
       கடலில்  தவிப்போரைக்  காக்கும்  கப்பல்  போல,துயர்க் கடலில்
அகப்பட்டுத்   தவிக்கும்  நம்மை எம்பெருமான் காப்பார்.

4.     இருக் ,யஜுஸ்.சாம.அதர்வண  மறைப்  பாடல்களால் , சிவபெருமானைப்
போற்றிப்  புகழ்ந்த  பிரமதேவன் விண்ணவர்களின்  துயரைப் போக்கிட வேண்டி,மீண்டும்,மீண்டும்   போற்றியபடியே  இருந்தான்.

5.    ஆலால மரத்தடி  அமர்ந்து   உயிர்களின்   ஆசானாய்த்   திகழும்  அண்ணலே!அறியாது  தக்கன் வேள்வியில் கலந்துகொண்டோம்.எங்களை
மன்னித்துக் காத்தருள்வாய்.தவநிலையைக்   கலைக்க    மன்மதனை
நாங்கள்  அனுப்பியதும்    எங்கள்    தவறே     ஆகும்.  மன்னித்து   எங்களைக்
காப்பாய்!" எனத்  தேவர்கள் இறைவனைப்   பணிந்து   போற்றினர்.
                                                விளக்கம்
    சிவபெருமானை   அவமதித்த   தக்கன்   மஹா வேள்வி நடத்துகையில்
சிவனுக்குத்   தர   வேண்டிய  ஹவிஸ்" ஆஹுதிகளை அளிக்கவில்லை.
அந்த யாகத்தில்   கலந்து     கொண்ட    தேவர்கள்   தங்களது   ஹவிர்ப்
பாகங்களைப்    பெற்றுக்    கொண்டனர்.அதே வேள்வியில் தோன்றிய
வீரபத்திரர்   தக்கன்  தலைஅரக்கன்   யைக் கொய்தார்.தேவர்களையும் ஓட ஓட விரட்டி அடித்தார்.,அந்த    பாவம்   சூரபன்மன் உருவில்    தேவர்களைத்
துன்புறுத்தியது. மற்றொன்று ......புதல்வன்  பிறந்தால்     அரக்கனை
அழித்துத்    தங்களைக்   காப்பான்"என்ற  நிலையில் தனித்துத்   தவம்
புரிந்த சிவனின்  மனத்தில்   மோகம்  உண்டாக்க,மன்மதனை   ஏவி,
மலர்க்கணை  பொழிய வைத்தனர் :அதுவும்    தேவர்கள்  செய்த   பிழை.
சிவனின் நெற்றிக்கண்   பொறி   மதனைச்   சாம்பலாக்கியது.

6.   இறைவா!    அரக்கனின்    அல்லல்கள்   சொல்ல முடியாத    அளவு
உள்ளது.அவனை     அழிக்கும்    ஆற்றல்  கொண்ட   புதல்வனை
உருவாக்கி,எங்களைக்      காத்திடுவாய்!  என விண்ணவர்    சிவபெருமானை
வேண்டினர்.

7.    எங்களை  உருவாக்கிய    தந்தையே!  அன்னைபோல்    அணைத்து
நேரமும்   எங்களைக்    காப்பவனே!  அமுதம்    வேண்டிப்    பாற்கடல்
கடைந்த    காலத்துத்   தோன்றிய   ஆலகால   விடத்தை  உண்டு,எங்களையும்
உலகையும் காத்தவனே! அதுபோல்   அரக்கன்   சூரபன்மனை   அழிக்கும்
ஆற்றல்   கொண்ட   அரும்புதல்வனை    அருளி,எங்களைக்     காப்பாய்.

8.    தேவர்களின்  போற்றலால்     மகிழ்ந்த    இறைவன்,தேவர்களே! கலங்க
வேண்டாம். மலைமகளை      மணந்து   கொண்டு,  உங்கள்   மனக்குறை
நீக்குவோம்,".அக்காலம்   விரைவி    வரும், என்றருளினான்.

9.    சனகாதி   முனிவர்களைப்     பார்த்து,முனிவர்களே!     மனத்தை  ஒருநிலைப்    படுத்தும்   மௌனமே   ஞானம்    அடைவதற்கான   நல்வழி "
அதனைக்   கடைப்பிடித்துத்    தவம்   இயற்றி,முடிவில்       எம்மை   வந்து
அடைக" என்றருளினான் இறைவன்.

10.     கணவன்  பிரிவால்   துயரில்   ஆழ்ந்து  கிடக்கும்   இரதியைப்  பார்த்து,
இறைவன் ,  "இரதியே!   நாம்     மலைமகளை  மணம்   புரியும்   தருணம்
உனக்கு  உன் கணவன்   உன்னோடு   வாழும்   திறனை   அருள்வேன்.
கவலை  இல்லாது செல்க"என்றருளினார்.
                                                      விளக்கம்
மன்மதன்   தோற்றம் .....உலகோருக்கு   மன்மதன்  தெரியான்: உனக்கு
மட்டுமே  இணையாகித்   தோற்றம் கொள்வான்"என்னும் கருத்து
வெளிப்பாடு .





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக