திங்கள், 13 நவம்பர், 2017

                குமரக்குறள்  வெண்பா

                           கடவுள் வாழ்த்து

1. முதலாகி, மும்மல  முள்நீக்கும்   முத்து
    மதலையின்  மூத்தவ! காப்பு.
 

2.. ஆறுமுகச்  சீர்பெருமை  ஆற்றிவழி  போற்றிடின்
    ஊறுதுயர்  நீறாம்  உணர்

3.. கார்கருணைக்  கண்ணோக்கும் கால்நிழல்  மண்ணோக்கும்
    ஊர்காக்கும்  ஆன்ம  உயிர் .

4  ஆற்றலின்  விண்மகள்  அன்பினில்  மண்மகள்
    ஏற்றமும்   மாற்றமும்  தார்.

5. பாரறியப்   போராற்றிக்   கூரரக்கன், மாளாது
    ஊர்தியாம்: பேரருள் பார்.

6. எல்லாமும்   இல்லாகி,இல்லதனுள்    உள்ளாகி
    வல்லான்   வளமை   வணங்கு .

7. இளம்கல்    உளம்நில்   களம்வேல்    புலம்புல்
    குளம் இல்  தலம்கல்  நலம்.

8. காலாய்,  அரையாகி,  முக்காலாய்   ஒன்றாகி,
    சீலமாம்   செந்தழல்   சேர்.

9. அருளிலோ   ஆசான்:கருணையோ   அம்மை:
    பெருமைப்  புதல்வன்  பணி.

10. தீயரக்கன்  தீவினைகள்  தீய்த்தது  தண்ண ழல்
      காய்வினை நீக்கும்  கழல்.

                                              பொருள்
   முருகனின் புகழ் பாடும் நூல்.குமரனின் பெருமைகளை விளக்கும் குறள்
வெண்பா.ஆறுமுகனின் அருமைபெருமைகளை அறுநூறு குறள்  வெண்பாக்களில்  படைக்க விரும்பி,முதல் அதிகாரமாய்,கடவுள் வாழ்த்து
தொடங்குகிறார் ஆசிரியர்.விக்கினங்கள்  நீக்கும் விநாயகப் பெருமானின்
வணக்கத்தோடு நூல் தொடங்குகிறது.

     முதலாக விளங்குபவனே!ஆணவம்,கன்மம்,மாயை என்னும் மும்மலங்களின்  தீமைகளை அகற்றுபவனே!முத்தாய்த் தோன்றிய
மழலை முருகனின் அண்ணனே!உன்னடி பணிந்தோம்.எங்களை,இந்நூலைக்
காத்தருள்வாய்.
          ஆறுமுகனின் பெருமைகளைப் போற்றி வழிபாட்டு வந்தால் நமது துயர்கள் எல்லாம் தீரும்.
           உலகைக்  காக்கும் மனம் கொண்ட முருகன்,கருணைமிகு கண்களால்
அருளை பொழிவான்.குளிர்ந்த காலடியில் இளைப்பாற இடம் தந்து மோட்சம்
அளிப்பான்.
          வெற்றிச் சின்னமாக,பரிசாக இந்திரன் மக்களை மணந்து கொண்டவன்,
அன்புடைக் காதல்தழுவி,நிலத்தினுள் வாழும் வள்ளியையும் மணந்து
கொண்டான்,உயர்வு,தாழ்வு பாராதது கந்தன் கருணை.
       கொடுமை மிக்க சூரபன்மன் முருகனை எதிர்த்துப் போரிட்டான்.ஆனால்
அவன் மற்றவர்கள் போல் அழியாமல் முருகனின் கருணையால் மயிலாகவும்,சேவலாகவும்  மாறி முருகன் அடிமையாய் வாழ்கிறான்.என்னே
இறைவன் பெருமை!
         எல்லாமும் ஆகி,இல்லது,உள்ளது  என்பவற்றிற்குள்ளும் நிறைந்து,
வல்லமையும்,வழங்கும் கருணை எளிமையும் கொண்டு விளங்கும் முருகனைத் தொழுவாய் மனமே.
      இளமையிலேயே தந்தைக்கே உபதேசிக்கும் ஆற்றல் பெற்ற கல்வி வளம்:
தவத்தின் முழுமை பெற்ற ஞான பண்டிதனாக நிற்கும் வளம்:போர்க்களத்தில்
வேலொடு நின்று,போரிட்டு அரக்கர்களை வென்ற சிறப்பு: மனம் விரும்பும் இடமாக,வள்ளி வாழ்ந்த தினைப்புனத்தை முடிவு செய்த மனப்பாங்கு:
சரவணப்பொய்கையையே தனது வாழ் இடமாகக் கொண்ட மாண்பு: தனியே
தனக்கு என பழனி மலையைத் தேர்ந்தெடுத்து அத்தலமே தன தல மாகக்
கொண்ட ஞான நிலை,இவை எல்லாம் கொண்ட முருகனை வணங்கிப்
போற்றினால் நாம் நலம் அடைவோம்.
                                                   விளக்கம்
          இப்பாவில் "இளம்கல் "என்ற இடத்தில் கல் =கல்வி ஞானம் எனவும்,
"தளம் கல் " என்ற இடத்தில் ,கல் என்பது முதலாகுபெயராய் மலையையும்
குறிக
       கருணைகொண்ட கால்கள்,இடுப்பிலே கோவணமும்,துண்டுமே கட்டிய
நிலை,கையிலே கோலூன்றி,மூன்று கால்போல் நிற்கும் ஆண்டிக்கோலம்,நிலம்,நீர்,விண் ,மண்,தீ,உலகம்,என எல்லாம் தானே ஒன்றி
ஒன்றாக நிற்கும் பெருமை,இவ்வளவும் நிறைந்த  முருகனை வணங்கு.நன்மை அடைவாய்.
                                                           விளக்கம்
    இப்பாவில் அளவை முரண் எதுகை பயில்கிறது.
       
 ஆசானாம் சிவபெருமானின் நிகரற்ற தன்மையும்,அன்னையின் கருணைக் கண்ணருளும் கொண்ட முருகனின் பெருமைக்கு அளவேது?
      தீய சூரபன்மனின் தீமைகளையே மாற்றியது முருகன் கருணை.அக்கருணை வேண்டித் தொழுதால் நம் வினையெல்லாம் அகலும்.

                                                  விளக்கம்.
குமரனின் புகழ் பாடும் குறள் வெண்பா "எனக்கொள்க. ஆறுமுகத்திற்கும்
அறுநூறு  குறள் வெண்பாக்கள் பாடப்படும்.
அதிகாரத்திற்குப் பத்துப் பாடல்கள் .

 
    . 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக