வியாழன், 31 ஆகஸ்ட், 2017

                                              வரவேற்புரை

  எல்லாம் வல்ல பரம்பொருளின் அருளினால்
  நல்லோர் முன்னிலை நாளுமருள் ஆசியினால்
 கற்றோர் பேரவை  கருத்தளி ஆக்கத்தால்
 நற்றவன் நல்லடி நலமே நல்லருளால்
 உங்கள்முன் வந்தே உயர்நனி சான்றோர்
 தங்கத் தாளடி தலையால் வணங்கி,
 மங்கள விழாவின் மதிநிகர் சான்றோர்
வருகை வாழ்த்த வரவேற்பு அளிக்க,
விருப்புடன் நிற்கிறேன் வேள்விசெய் புகழோர்
கூனம் பட்டிக் குணக்குன்று போற்றி,
கோவைக் குருமணி போற்றிச் சைவச்
சான்றோர் போற்றிப் படைக்கிறேன் வரவேற்பு.
அன்பொடு கனிந்த அருள்பொழி பார்வை,
துன்பம்  களைந்து  தூவழி   காட்டும்,
பண்புடைப் பரிவும், பதியென  வந்தோர்
கதிதனை  ஏற்று விதிதனை  மாற்றும்,
நதியாய்,நலமாய்,நலமளி வள்ளலாய்
குலமெலாம் காக்கும்,கூனம்  பட்டித் ,
தலமதின்  தலைவர்,தத்துவ ஜோதி,
ஆதிசைவ  மாணிக்க  வாசகப் பரம்பரை,
வீதி  தோறும்  விளங்கும் சைவ
விளக்காய்,விளக்கம் அளிக்கும் வியன்பணி,
கலங்கும் உள்ளக்  கலம்கரை  விளக்கம்,
பலகலை வல்லுநர் பாரெலாம்  போற்றும்,
குருவாம்  ஸ்ரீமத் இராஜ  சரவண,
குருதேசிக  மாணிக்க வாசக சுவாமிகள்
பொன்னார் திருவடி,பொன்னாய்ப் பொருளாய்,
இன்னமுதச் சொல்லாய் இறைஞ்சிப் போற்றி,
வருகவே!வருகவே வணக்கம் ஏற்கவே,
அருள்பொழி திருமணி வருக.வருகவே.


கோவைக்  குருமணி குணமுடை  அருள்மணி,
கோவை கண்ட   குலம்வழி அருள்மணி,
பெருந்தமிழ்  பாடிய புலவர்ப்  பரம்பரைச்
சிரவை  ஆதீனக்  குருவெனத்  திகழ்மணி,
நற்றமிழ்,வளர்க்கும் நாவலர் நல்மணி
கற்றவர் வளர்க்கும் கல்வி நிலையம்
காத்தே,சைவம் வளர்க்கும் சைவ  மாமணி
கூத்த  பிரானின் குகனென விளங்கும்,
குமர  குருபர சுவாமிகள்  குணநலம்
குமரன்  போற்றும் குகவழிப் பண்பு,
முனைவர் தமிழில்:முதல்வர் தமிழில்
என்றே போற்றி,இருகரம் கூப்பி.
நன்றே வருக!நலமே  வருக!


வாழ்த்தும்  வளமும் வளர்க,என நல்மன
வாழ்த்துரை அளிக்க வந்துள்ள  நண்பர்
விசுவம் அறிந்த விசுவ  நாத
சிவத்தை வாழ்த்திப் பணிந்து வரவேற்கின்றேன்.


நான்கு  மறைகள்  நான்கு பதங்கள்
நான்கு  பாதங்கள்  நலமுடைச்  சைவம்.
நான்கையும் தொட்டு,நன்கே  அமைத்து,
நான்கும்   நாமெலாம் அறிந்து  பதம்பெற
நான்கு  முனைவர்:நான்கு சான்றோர்:
நான்கு மறைகள் ஆகமங்கள் திருமுறைகள்
தர்க்க,மீமாம்ஸ  வ்யாகரண  ஸாஹித்ய
நான்கும் நன்கறிந்த நற்புலமைச் சான்றோர்.
சரியை   ஸ்ரீகண்ட  வித்யாலய  நிறுவனர்
சர்வேஸ்வர சிவமே! வருக.வருகவே.

கிரியா  பாதம் கிடைத்தது  வேதம்.
பெரியவர்:உரியவர் சிவாகம நிறுவனர் :
சோம சேகர  சிவமே! வருகவருக.

யோகமே சுப்பிர  மணியம்.ஆகமத்
தாகம்  தத்துவம் அளிக்க  வந்துள்ள
நாட்டரசன்  கோட்டை நல்லோரே! வருக.

அருண  சுந்தரம்:அழகிய சம்ஸ்க்ருதம்:
திருஞான   தீக்கை  அளித்திடும் மயிலை
வடமொழி வளநலச் சான்றீர்!வருகவருக.

முகநூல் நண்பர் முதிய ஆகமம்
திகழ்குணச் செம்மல் கணேச சிவமே!
அகமகிழ் மணமுடன் வரவேற்றேன்.வருகவே.

நல்ல பணியின் வல்ல சான்றீர் !
தில்லை கார்த்தி கேயராம் சிவமே!
பல்கலை வல்லுனர் வருக  வருகவே.

கலம்பக நூலின் நலம்புனை  அமைப்பை
வளமுடன் விளக்கும்  கல்யாண ராமரே!
அலைகடல் மொழியீர்! வருக.வருகவே.

என்னை ஆளாக்கி,இந்நிலை அருளிய,
மன்னராம்  மாதுலரே!வெங்கடேச சிவமே!
பொன்னார் திருவடிப் போற்றி வரவேற்கிறேன்.

திருமுறை இசைத்து,தலமுறை வளர்த்த
அரும்பணி சோம சுந்தர தேசிகராம்,
அருமறையே!அன்பரே!வருக.வருக,

இறைவணக்கம் பாடிய  இனிய தம்பியே!
நிறைவிழா நடத்தும் நலநிதி மகள்களே!
நிறைமன  நாயகர்  நீள்புகழ் மருமகன்களே!
அழைப்பினை ஏற்று விழையவை நண்பர்களே!
சான்றோரே!அவையோரே!உறவினர்ப் பெருமக்களே!
ஆன்றோரே!அனைவரும் வருக,அகமகிழ்வு
அடைந்திட்டேன் வருகையால்.வருக.வருகவே.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக