செவ்வாய், 13 ஜூன், 2017

நீராடற்பருவம்.......10

.                             நீராடற்பருவம்........10

நதிமலர்  நகையாகி, நலப்பொழில்  துணையாகி,
                நனையுடல்   தவமாகி,
உதிர்சுழல்   உருவாகி,  உமையெனும்   திருவழகே!
                ஒலிநீர்     ஆடுகவே.

நிதிதனில்   சங்கமே!  நிலைதனில்  பதுமமே!
                   நிகரிலா   நியதியே!
கதியளி    கழல்புனை   கனமழைக்   கருணையே!
                  கவின்நீர்    ஆடுகவே.

பதிபசு   பாசமெனும்    பதிசிவ   மதிவழி,
              பைஞ்சைவத்   தலைவியே!
துதிசெயு   அடியவர்   துயர்களை   தயைதாயே!
               தவழ்நீர்    ஆடுகவே.

மதியணி   மகேசனின்   மனத்துறை   மகேஸ்வரி!
               மணநீர்    ஆடுகவே.
விதியுரை  விரிநகர்   விளங்கிடு   வியனரசி!
               வெள்ளநீர்    ஆடுகவே.

                          பொருள்
   நதிநீர் மலரெல்லாம் சிரிப்பாக,விளங்க,(அணியாக எனவும் கொள்ளலாம்)நலங்கொண்ட இயற்கை அழகுக்குத் துணையாய் வர,தவமியற்றும் பாங்குபோல்,நீரில் மூழ்கி எழுந்து,
உடலெல்லாம் நீர்த்திவலைகள் நனைத்திருக்க,ஆற்றுச்சுழல்போல் நிலையாமை உணர்த்தும்
உருவாகி,உமை என்னனும் பெயருற்ற அழகே! ஆற்று நீரில் நீராடி மகிழ்வாய்.
        சங்கம்,பதும ம் என்னும் நிலையான நிதித்தலைவியே! முறைமை போற்றும் நிகரற்ற
தவச்செல்வி!போற்றும் அடியவர்க்குக் கனமழைபோல்கருணை காட்டும் பாதங்கள் கொண்டவளே!
அழகுமிகுந்த ஆற்றினில் நீராடி மகிழ்வாய்.
    பதி,பசு,பாசம் என்னும் வழியில் சிவனைப்போற்றும் சைவ சித்தாந்தக் கோட்பாட்டுத்தலைவியே!
நதி நீராடி மகிழ்க.
     பிறைசூடிய பெம்மானின் மனம் உறைந்த மலைமகளே!கல்யாணி!நன்னீரில் நீராடி மகிழ்க.
முறையை மறைதழுவி உரைக்கும் கன்னியாகுடியில் எழுந்தருளியுள்ள அழகுக் கல்யாணி!
ஆற்று நீரில் அகமகிழ நீராடி அருள்வாய்.

 
     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக