திங்கள், 15 மே, 2017

அம்மானைப்பருவம்.......8

                                 அம்மானைப்பருவம்.......8

அன்னச்   சிறகாட,அருங்கிளி   அழகாட,
                 அருகுறை   மயிலாட,
வண்டார்  குழலாட,வரிவில்   வளைந்தாட,
                  வகிடுமணி   குதித்தாட,

பண்ணிதழ்ப்   பரிந்தாட, தண்ணுதல்   வியர்த்தாட,
                       பொன்பல்   சிரித்தாட,
கண்ணிமை   கலந்தாட,   கன்னத்  தசையாட,
                       கலைமுகம்   சிலிர்த்தாட,

விண்மதிக்    குழையாட,  விரிகரம்   தொடர்ந்தாட,
                     வியர்வை   முத்தாட,
பொன்குன்று   இரண்டாட,  புகழணி   அகமாட,
                      மின்னிடை   துவண்டாட,

கண்காண்  கரமெறி    கந்துகக்  கலைதொட்டு
                   அம்மானை   ஆடுகவே.
மண்ணினுள்   புண்ணியக்    கன்னிவாழ்  கற்பகமே!
                    அம்மானை  ஆடுகவே.

                                  பொருள்
அன்னப்பறவை,கிளி,மயில் இவை எல்லாம் மகிழ்வில் திளைத்து,அருகினில் நடனம் பயில,
வண்டு மொய்க்கும் கூந்தல் காற்றினில் பறக்க,வில்போன்ற புருவம்   கூர்ந்து விரிய,தலை
வகிட்டில் தொங்கும் வைரமணி குதித்துக் குதித்தாட,
      பண்ணான செவ்விதழ் இசை மேலிடப் பரிந்திசைக்க,குளிர்ச்சி வாய்ந்த நெற்றி,ஆட்டம் ஆடுவதால் வியர்க்க,பொன்போன்ற பற்கள் சிரித்தபடித் திகழ,கண்ணிமைகள் பன்முறை இமைக்க,
கன்னத்துத் தசைகள் ஆட,,அழகே உருவான முகம் சிரிப்பினில் மகிழ,
    வான நிலவன்னக்  காதணி விரைவாய் ஆட,கரங்கள் அம்மானைக் கழங்கை எறிந்து எறிந்து ஆட,
ஆட்டத்தால் வியர்வை முத்துக்கள் ஆங்காங்கு வியர்த்தாட ,பொங்குன்று போன்றமார்பகங்கள்
குலுங்கி ஆட,புகழ் ஆபரணங்கள் நெஞ்சொடு ஒட்டி ஆட,ஆட்ட அசைவுகளால் மெல்லிடை,துவண்டபடி ஆட,
      கண்பார்த்தும்,கரம் எறிந்தும் ஆடும் அம்மானை ஆட்டக்  கலைதொட்ட அம்மையே!அம்மானை
ஆடுக.
நிலவுலகின் புண்ணியநிலமாய் விளங்கும் கன்னியாகுடியின் கற்பகமே!அம்மானை ஆடுக.                 
               


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக