திங்கள், 29 மே, 2017

நீராடற்பருவம்.....5

.                      நீராடற்பருவம்........5

செழுங்கரம்   அழுந்திடு   பழுதிலா   விழுமலர்
                      இழுமென  இங்குமங்கும்,
நழுவிடும்: தொழுதிடும்: பழுதடை,  மழுவென
                       குழுவெலாம்   சுற்றிசுற்றி,

விழுந்திடும்,   மழுங்கிடும்:  முழுமையாய்,   பொழுதினுள்
                       விழுகரம்   வழுக்கிடும்:
அழகுடை    உழைவளர்   மழைக்கணார்   தழைத்தநல்
                       பழவாடல்    பழவாற்றில்.

புழுவெனப்    பிறக்கினும்,  புனிதனின்  புணையடி
                      தொழுமனம்   வழங்குக:
அழுகுரல்   அடியவர்    அகம்குடி   கொளுமிறை
                   தழுவிய   செழுமையே!

உழுதொழில்   உழவரின்    மழவிடை   தழுவியோய்!
                         நீராடல்   புரிகவே.
மழுவுடையோன்   புலிஉடையோன்   மலருடையோன்  கலந்தவளே!
                         மணிநீர்    ஆடுகவே.

                               பொருள்

பழவாற்றில் நீராடும்,கல்யாணி அம்மை தலைமையிலான மங்கையர் கூட்டம், மலர்க்கந்துகத்தைச்
செங்கரத்தால் அழுத்திப் பிடிப்பர்: அடிப்பர: இழுமென மேலெழும்பும் பந்து கைக்குக் கை மாறும்:
அழுகுரல் காட்டும்: தொழுவோர் கரத்தில் அடங்கும்: முரிவுற்ற மழு போலக் குழு முழுமையும் சுற்றிச்
சுற்றி வரும்:
      கீழே விழும்: விழுந்த இடம் தெரியாமல் மறைந்திடும்: விரைவாய்,முழுக்குழுவிடமும் செல்லும்: விழுந்த கரத்திலிருந்து வழுக்கி விழும்: அழகுற்ற,அருகருகு நிற்கும் தங்களிடம் ஆட்டம் வரவில்லையே,எனக்கண்ணீர் சிந்தும் கண்களை உடைய பெண்கள் சூழ்ந்து ஆடும் பழமை நீராடல் விளங்கும் பழவாற்றில்,
    புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா! உன்னடி,என்மனத்தே நிலைத்திருக்க அருள் பாலிப்பாய்,என
வேண்டிய அப்பரடிகளின் நெஞ்சத்தில் நிலைத்தவனாம் சிவனைத் தழுவிய அழகுக் கல்யாணி அம்மையே!
     உழவரின் உழுதொழில் உறுதுணையாம் காளையை ஊர்தியாக க் கொண்டவனின்ஒருபாகம்
பெற்றவளே! நீராடி மகிழ்வாய்.
   மழுவாயுதம் கரத்தில் கொண்டவன்,புலித்தோலை உடையாக அணிந்தவன்,சிவன்,ஒருபாகம்
உனக்கு அளித்ததால்,மலருடை தரித்தவனோடு,கலந்து அம்மையப்பனாய்க் காட்சி தரும் கல்யாணி! நீராடி மகிழ்வாய்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக