வியாழன், 25 மே, 2017

நீராடற்பருவம்.....2

                               நீராடற்பருவம்.....2

கலைமேவு   ஞானக் கடலன்ன   கால்வாய்,
                கயல்மேவு   வியனலை,
தலைக்கங்கை த்  தவழ்சடையன்   தண்ணளித்  தருமம்போல்
                தழைத்தோடும்   பழவாறு.

நிலையாமை   நீர்சுழல்   நுரைபொங்கும்    நன்னீரில்,
                 நடுநின்று   நற்பவள,
வளைக்கரங்கள்  வாரிநீரை   வட்டாடி   வலமிடம்
                வந்துநிற்கும்   வனிதையர்,

மலைமேடு,   மதிமுகம்,மகிழ்வடைய,   மேலெறிந்தும்,
                 மடுவிடை   புகப்பாய்ந்தும்,
இலைபோல   எழிலுடன்   ஏகாந்தத்  தவநிலையில்,
                  இழுநீரில்    பயணித்தும்,

மலைமகளே! மதிசூடி,   மனத்துறை   மங்கையே!
                    மலர்நீர்   ஆடியருள்.
கலைச்சோழ,   நலநாட்டுக்  கலையூரின்  தலைவியே!
                     காவிரிநீர்     ஆடுகவே.

                            பொருள்
   ஆழமும்,அகலமும் கொண்ட கலையழகு மிக்க வாயக்காலும்,மீன்கள் துள்ளி மகிழும் அலைகளும்,
கங்கையாற்றைத் தலைச்சடையில் அணிந்த சிவபிரானின் வரமளி அறம்போல்,குளிர்நீரும்கொண்டு
திகழும் பழவாறு.( கன்னியாகுடி அருகே ஓடுகிறது)
    நிலையாமையைப் பறைசாற்றும் நீர்ச்சுழல்களில் பொங்கும் நுரைவளம்,மிக்க ஆற்றுநீரில்,நடுவே
நின்றபடி,வளைக்கரங்களால் நீரைத் தட்டியும்,எறிந்தும்,வட்டு போல் ஆடியும்,வலப்பக்கத்திலும்,
இடப்பக்கத்திலும் சூழ்ந்து நிற்கும் தோழியர் மீது வாரி இறைத்தும்,
     மார்பகம்,முகம்,மேலெல்லாம் மகிழ்வோடு வாரி இரைத்தும்,ஆழமான நீரின் உள்ளே முழுகி
எழுந்தும்,மெல்லிய இலைபோல்,அழகாக,ஒருநிலைத்தவம் ஆற்றும் பாங்குபோல்,சலனமின்றித்
தண்ணீரின் மீது படுத்தபடி நெடுந்தொலைவு சென்றும்,வந்தும்,ஆடுகின்ற,
      மலைமகளே! பிறைசூடிய பெம்மான் மனத்துறைந்த பெண்ணரசி! மலர்நிறைந்த நன்னீரில்
நன்கு நீராடுக.
    கலைவளர்க்கும் சோழவளநாட்டைச் சேர்ந்த கன்னியாகுடியின் தலைவி கல்யாணி அம்மையே!
காவரி போன்ற பழவாற்றில் நீராடி மகிழ்ந்திடுக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக