ஞாயிறு, 21 மே, 2017

அம்மானைப்பருவம்....10

                                  அம்மானைப்பருவம்.....10

பிறவாப்   பெரியோன்    பசுபதிப்   பரம்பொருள்
                       பிரியா    உணர்வே!
நறவாய்ச்     சுவையாய்     நனிதே    இணைந்த
                       நலமார்     பாகமே!

சிறைவாய்ப்    பிரமன்   சிவமறை   உணரான்
                      சிவம்பணி    சற்குரு,
கறையாம்    மும்மலக்    காரிருள்    களையக்
                      கரவேல்    தருதவமே!

மறையாய்    மாமுனி    முறையாய்    அறிந்து,
                     மனத்துப்    பாசமறு,
இறையாய்    ஈடிலா      ஈசனின்     துணையாய்,
                      இறைஞ்சும்    எழிலே!

நிறைகுண,   நெடுஞ்சைவ,   சித்தாந்த,   நித்திலமே!
                       அம்மானை   ஆடுகவே.
குறையிலாக்   கோச்சோழக்    கன்னிநகர்க்   குலவிளக்கே!
                       அம்மானை   ஆடிடுவாய்.

                               பொருள்

      பிறப்பிறப்பு இல்லாதவன்,ஆன்மாக்களின் தலைவன்,ஆகிய பரம்பொருள் சிவபெருமானின்
உடலோடும்,உணர்வோடும் ஒன்றியவளே! தேனாய்,அதன் சுவையாய் ஓன்றிப் பிணைந்து
விளங்கும் பாகம் உற்றவளே!
     சிவமறைப் பொருளறியாப் பிரமனைச் சிறையில் அடைத்தவனும்,சிவனுக்கே ஆசானாய் அருளியவனும்,ஆணவம்கன்மம்,மலம் என்னும் மும்மலத் தன்மை கொண்ட சூரன்,சிங்கமுகன்,தாரகன் ஆகியோரை அழிக்க,முருகனுக்குத் தவத்தால் பெற்ற வேலை
அளித்தவளே!
    மாமுனிவர்கள் மறைகளை முறையாய் அறிந்து,மனத்தின் ஆசாபாசங்களை அறுத்துத்
தடுத்தாட்கொள்ளும்,பரம்பொருளாம்,நிகரற்ற சிவனின் துணையாய்ப் போற்றும் எழிலரசி!
    முடிவான,நிறை ஞானமாம் சைவசித்தாந்த சாரமாய் விளங்கும் நித்திலமே!உனது
பொற்கரத்தால் கழங்கு தொட்டு அம்மானை ஆடுக.
   குறையில்லாது நல்லாட்சி புரிந்த சோழரின் நாடாம் சோழநாட்டுப் புண்ணியப் பதியாம்
கன்னியாகுடியின் மக்கள் குலம்காக்கும் கல்யாணி அம்மையே! அம்மானை ஆடிடுவாய்.
                        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக