சனி, 22 ஏப்ரல், 2017

அம்மானைப்பருவம்......2

                                அம்மானைப்பருவம்..........2

பஞ்சினும்,   மென்மை,   விஞ்சிடும்,   தளிர்மைப்
                     பல்லவ     விரல்கள்,
அஞ்சுகம்    அமர்சுக,   அபயக்    கரங்கள்,
                     அந்திவான்    நிறமாக,

மஞ்ஞை     விரிதோகை     மணத்துடன்   மதிமுக,
                   மகிழ்மேனி    மேல்பரவ,
அஞ்சொல்   அமுதம்      அரன்புகழ்     அருமறை
                   அருளதை     இசைத்தபடி,

செஞ்செவிய    செவ்வானச்   சுடர்கோள்   சிலிர்த்திட,
                      செல்தேவர்    வியந்திட,
கஞ்சநிகர்க்   கழங்கு,   கதிதவறிக்,    கவின்கோள்
                      கண்டவர்    கலங்கிட,

மஞ்சுசூழ்     மதிவான்   மகிழ்ந்தெறிந்து,    மலைமகளே!
                     அம்மானை     ஆடுகவே.
கருணையின்   கற்பகமே!   கலையமுதுக்    கல்யாணி!
                     அம்மானை    ஆடுகவே.

                                   பொருள்

    பஞ்சைக்காட்டிலும்,மென்மை உடையதாகவும்,தளிர்மையை விஞ்சும் கொழுந்து விரல்கள்,
அழகுக்கிளி சுகமாய் அமர்ந்திருக்கும் அபயமளிக்கும் கரங்கள்,மாலை வான் நிறமாய்த்திகழ,
      மஞ்ஞை விரித்த தோகை போல்,குழல் மணமுடன்,முகத்திலும்,மேனியெங்கும் தடவியபடிப்
பறக்க,அமுதூறும் சொல்லால்,சிவபிரான் புகழைப்பாடியபடி,
   தாமரை மொட்டு போன்ற கழங்கினை ஆட, அது மேல் நோக்கிச் செல்ல,வானில் உருண்டபடித்
தவழும்,கழங்கு கண்டு,நிலவும்,கதிரும் மெய் சிலிர்த்துப் பார்க்க,வானவீதியில் செல்லும் தேவர்கள்
வியந்து பார்க்க,தன்வழி தவறிய கோள்கள் பிறழ்ந்து பார்க்க,கண்டவர் அனைவரும் அச்சத்தால்
கலங்கிட,
     மேகம் சூழ்ந்த வானிலே எறிந்து,கல்யாணி அம்மையே!அம்மானை ஆடிடுக.
 கற்பகம் போன்ற கருணை உடையவளே!கலையமுதமாம் கல்யாணி! அம்மானை ஆடிடுக.


   




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக