வியாழன், 20 ஏப்ரல், 2017

அம்மானைப்பருவம .....1

.                                   அம்மானைப்பருவம்

 பெண்பால் பிள்ளைத்தமிழின் சிறப்பு வாய்ந்த மூன்று பருவங்களில் அம்மானைப்பருவம்,குழந்தையின் பத்தொன்பதாம் திங்களில் நிகழும்.மரத்தால் ஆன
பந்துகளை வைத்துக்கொண்டு மேலெறிந்து விழாமல் பிடித்து ஆடும் ஒருவகை ஆட்டம்.


                                  அம்மானைப்பருவம்.....1

ஒருமான்   இருமான்   மும்மானை    சுழற்றியே,
                  உயர்விக்கும்    அம்மானை.
அருமான்    திருமணக்   கருமான்    பருவரை,
                   தருமான்    அம்மான்.

சிறுமான்    நறுமலர்க்    கருங்குவளை  விழிமான்
                  சருகிலைத்    தவமான்,
உறுமனப்    பெருமான்    அருகுணர்   அருளால்
                  உருட்டிடும்    திருக்கரம்,

ஒருங்கிணை    ஒளிர்சுடர்,   உலர்ந்தலை   கருங்குழல்,
                   உறுமறை    ஒலிநா,
இருள்முகில்     எறிசுடர்,  இளமதி,    எனநினை
                   இலங்கிடும்    கழங்கது.

திருமான்,    தருமான்,    பெருமான்,   திறம்பாடி,
                    ஆடுக      அம்மானை.
கருணையில்   கற்பகமே! கலையமுதுக்   கல்யாணி!
                     ஆடுக. அம்மானை.

                                 பொருள்
உலகின் நிலைபெற்ற ஒருமானாம்,கல்யாணி அம்மையைப் போற்றும்,இரண்டு மானாம் இலக்குமியும்,சரஸ்வதியும் கழங்கினைச் சுழற்றி,ஆடிப் பெருமை சேர்க்கும் அம்மான ஆடல்.
கல்யாணி அம்மையாம் அருமை மானின் திருமணத்தைக் கணித்த  விதிமேலோன்,இமயம் என்னும் மலையரசனின் மகளாக்கி அடையவைத்தான் எம்பெருமானை.
     இளைய எழில் மான்,குவளை விழி கொண்ட மான்,காய்ந்த இலைபோல் உடல்வருத்தி,இளமையிலேயே தவம் புரிந்த இளம்மான்,மனத்திலே நிறைந்த சிவபெருமானின்
அருகே,அமர்ந்து அருளும், அருளினால் ஆர்வமுடன் கழங்கினை உருட்டிடும்அழகுக்கரத்தை உடைய அழகு மான்.
     ஒன்றாய் இணைந்து உருட்டும் சுடரணி அணிந்த கரங்கள்,உலர்ந்து காற்றிலே பறக்கும்
கருங்கூந்தல்,மறைபோல் ஒலிக்கும்,மழலை நா,கல்யாணி அம்மை மேல் நோக்கி எறிந்த கழங்கு,
வானத்துச் சுடராம்,சந்திர,சூரியர் போல் சுழலும்.
     திருச்சிவபெருமான்.வரங்கள் தரும் பெருமான்.புகழினைப் போற்றிப்பாடிடும் கல்யாணி!
அம்மானை ஆடுக.
     கருணையில் கற்பகமரம்போன்ற,கலைநிறை கல்யாணி! அம்மானை ஆடுக.

                 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக