வெள்ளி, 31 மார்ச், 2017

வருகைப்பருவம்...9

                                                வருகைப்பருவம்...9

நித்தியமே!நிலையிலா நீளுலகு நிதர்சனமே!
                       நிலத்துயர் தலைவியே!
வைத்திய    நாதனவன்    வலம்கொண்ட   மருத்துவமே!
                        வளத்தையல்     நாயகியே!

சத்தியமே!   சகலகலா    வல்லியே!   சாத்திரமே!
                        சதுர்வேத    உட்பொருளே!
தித்திக்கும்    தேன்பலா,    தீஞ்சுவைச்    சொல்லமுதே!
                        திகழ்ஞானச்   சுடர்விளக்கே!

முத்திக்கு     வித்தாகி,    மூவர்க்கும்     மூத்தவளே!
                        முருகனவன்     முதற்றாயே!
அத்தியான்    அன்னையாய்     அகிலமெலாம்    காத்தவளே!
                       அற்புதமே!    பொற்பரமே!

சித்திரமே!    செவ்வந்திச்     சீர்ப்பாத   மெல்லியலே!
                       வருகவே     வருக.
சித்திர    நற்சபைச்      செம்பதச்      சிவகாமி! 
                       வருகவே     வருக .

                                     பொருள்
 
    அழிவில்லாத்   தன்மை  வாய்ந்தவளே! நிலையில்லாத    மூவேழ்
உலகின்   நிலைத்திருக்கும்   உண்மைப்பொருளே! எல்லா    நிலங்களிலும்
உயர்ந்தோங்கிய   பெருமை  உடையவளே! வைத்தீஸ்வரன்   கோயில்
என்ற     ஊரிலே,வைத்திய   நாதராய்   எழுந்தருளி,நிலவுலக     மக்களின்
பிணி   போக்கும்,  சிவபெருமானின்   துணையாகவும்,மருந்தாகவும்
அமைந்து  அறம்   வளர்க்கும்  தையல்    நாயகி   என்னும்   அம்மையே 1
        மெய்ப்பொருளே! கலைகளுக்கெல்லாம்    தலைவியே! சாத்திரம்
போற்றும்    சாத்திரமே!   நான்மறைகளின்    நற்பொருளாய்   விளங்குபவளே!
பலாப்  பழச்சுளையின்   இனிப்பு   போல் ,இனிமையும்,அருளும்  கொண்ட
சொல்லைப்    பயிலும்   பெண்ணணங்கே!  அறிவுச்சுடராய்    விளங்குபவளே!
      முத்திக்குக்    காரணமான     மூவர்க்கும்  (அரி,அயன்,அரன் ) மூத்தவளே!
முருகனுக்கு   ஞானப்  பாலளித்து,முதல்  தாயாகி   விளங்குபவளே!
யானைமுகத்தான்   அன்னையே! அகில   உலகமக்களைக்  காப்பவளே!
அற்பதமாகி,  மண்ணாடும் ,பொன்னாடும், போற்றும்   பரமேஸ்வரியே !
        ஓவியம் போன்ற அழகுடையவளே!  செவ்வந்தி  மலர்  போன்ற உனது
பாதத்தால்  மென்மையாய்   நடந்து  வருக.வருக.
      சித்திரச்சபையிலே   கூத்தபிரானுக்கு   நிகராய்  நடமாடிய    சிவகாமியே !
 செம்மைப்   பாத  அடிகள்  நடந்து  வருவாய்.,








     
                     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக