செவ்வாய், 21 மார்ச், 2017

முத்தப்பருவம்...8

                                          முத்தப்பருவம்...8

அருமறை அஞ்சுகமே!அத்வைதக் கஞ்சுகமே!
                  அருள்விளை நெஞ்சகமே!
அருந்தவ மஞ்ஞையே! அநாதி விஞ்ஞையே!
                   அருள்பெறு அஞ்செழுத்தே!

இருளழி  ஒளிச்சுடரே! இருவிழி ஒளிக்கோளே!
                     இருபத ஒளிமலரே!
இருடிகள் இருக்குவே! இருக்குவின் ஒளிப்பொருளே!
                      இருள்நாள் ஒளிக்குழையே!

கருணைக் கவின்கரமே! கருகாக்கும் காரிகையே!
                      கருமேகக் கரையுளமே!
கருத்தவன் கலைத்துறையே! கருத்தொளிர் கவிதையே!
                       கஞ்சமலர்க் கல்யாணி!

விருப்பொடு சிறுகுடித் திருக்கோயில அமர்ந்தவளே!
                     வியன்முத்தம் தந்தருள்க.
விருந்தாய் மருந்தாய் விளங்கும் கல்யாணி!
                     வியன்முத்தம் தந்தருள்க.

                              பொருள்


    நான்மறை அறஞரான அழகிய கிளியே! இரண்டும் ஒன்று என்னும் த்த்துவக் கோட்பாட்டின்படி,இறையோடு ஒன்றிய சட்டையாய்க் காட்சி தருபவளே! அருள் விளையும்
மனம் கொண்டவளே! மயிலுருவில் தவம் மேற்கொண்டவளே! பிறப்பறப்பில்லா தேவதையே!
அஞ்செழுத்து மந்திரத்தால் சிவனருள் பெற்றவளே!
      அறியாமை போக்கும் ஞான ஒளியே!(நரகம்விலக்கும் ஒளி வடிவானவளே!) சந்திர,சூரியர்களை
இரு விழியாகக் கொண்டவளே! ஒளிமலரான  அழகிய சேவடி கொண்டவளே! முனிவர்கள் போற்றும் வேத உருவே!வேதத்தின் உட்போருளே! அமாவாசையன்று அபிராமி பட்டருக்காக
உதித்த நிலவான காதுத்தோடே!
    அடியவருக்கு அருள் வழங்கும் கருணைமிகு அழகுக்கரமே! பெண்களின் வயிற்றில் வளரும்
கருவைக் காக்கும் கர்ப்ப ரக்‌ஷாம்பிகையே!கருமேகம்போல் குளிர்ந்து கரையும் இளகியமனம்
கொண்டவளே! தலைவனாம் சிவனின் கலைத்துறையாய் விளங்குபவளே! கவிஞர் கவிதையின்
கருத்தாய் மிளிர்பவளே!தாமரைமலர் போல் குளிர்ச்சியும்,அழகும் கொண்ட கல்யாணி அம்மையே!
    கன்னனியாகுடித் திருக்கோயிலில் விருப்பத்துடன் வீற்றிருப்பவளே! முத்தம் அருள்வாய்.
 இம்மைக்கு வளமையும்,மறுமைக்கு நல்வழியும் அருள்பவளே! முத்தம் தந்தருள்வாய்.

                                             விளக்கம்
அநாதி= பிறப்பிறப்பின்மை
இருக்கு= மறை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக