திங்கள், 27 மார்ச், 2017

வருகைப்பருவம்....5

                              வருகைப்பருவம்....5

ஆன்ம   ஞானமே! ஆனந்த  வாரிதியே!
              ஆகம   மாக்கடலே!
ஆல   காலமும்    அடிபணி    அமுதமே!
               ஆருத்ரன்    சிவகாமி!

வான்மதி    வளர்கலையே! ஊன்பொதி    உயிர்நிலையே!
                 வாஞ்சையின்    வடிவுருவே!
தேன்சுவைத்    தென்தமிழே! தென்னினத்    தெம்மாங்கே!
                 தேன்குரல்   திருமுறையே!

தானவர்   தருக்குத்    தளிர்கொய்த    துர்க்கையே!
                தானவன்    தவமகளே!
கூன்பிறைக்    குணக்குன்றே! கூத்திடும்   நிகர்க்காளி!
                கூடையறக்   கொடையுணவே!

மானெனும்    மருள்நீக்கி  மாத்தவ  மதியூர்
                      மாதரசி! வந்தருள்க.
மான்மயக்கம் நான்மயக்கம் வான்நில வழிதீர்த்தோன்
                       மாதேவி! வந்தருள்க.

                                    பொருள்
  உலக உயிர்களுக்கு ஞானம் அளித்துக் காப்பவளே! அடியவர்களுக்கு
மகிழ்வை நல்கும் மகிழ்ச்சிப் பெருங்கடலே! நான்மறை,ஆகமங்கள் அறிந்து,
பரந்த ஞானம் கொண்டவளே! உலகைக் காக்க,இறைவன் ஆலகால நஞ்சைத் தானே விரும்பி உண்ட காலத்தில் அவ்விடம் உள்ளே செல்லாதவாறு,கழுத்தைக் கரத்தால் தீண்டித் தடுத்தவளே!
திருவாதிரை நாளின் சிறப்புமிக்க நடராசப் பெருமகன் அருகே அருள் பாலிக்கும் சிவகாமி  அம்மையே!
      வளர்கலை வான நிலவே! உலக ஜீவ ராசிகளின் ஊனாகி,உயிராகவும் விளங்குபவளே! அனபே
வடிவான அன்னையே! இனிக்கும் சுவை கொண்ட தமிழ் மொழியே! தென்னாட்டில் பாடி ஆடப்படும்
தெம்மாங்குப் பாடல்போல் விளங்குபவளே! தேனாம் தேவார,திருவாசகம் போன்றவளே!
     கர்வமுற்ற அரக்கர்களை இளமையிலேயே அழித்த துர்க்கை அம்மையே! அரக்கனாம் தக்ஷனுக்குத் தவமகளாய்ப் பிறந்தவளே! பிறை நிலவை அணிந்த சிவபிரானின் மனத்தமை குணமாய்
விளங்குபவளே! இறைவனுக்கு நிகராக நடனம் ஆடிய காளியே! மடியிலே அன்னப் பாத்திரம்
வைத்துக்கொண்டு உலக உயிர்களுக்கு உணவு வழங்கும் அன்னபூரணியே!
    மயக்கமாம் அறியாமை நீக்கி,மனம் ஒன்றி,மாதவ நெறி போற்றும் ஊராகிய கன்னியாகுடியில்
வாழும் பெண,ணரசி! வருக வருக.அருளைப் பொழிக.
     கர்வமாம் மாயை கொண்ட திருமாலுக்கும்,பிரமனுக்கும் ஒளி வடிவாய் நின்று,அடியும்,முடியும்
தேடச் செயது அறியாமை அகற்றிய சிவபிரானின் தேவியே! வருக.வருக. அருளைப் பொழிக.

                                                  விளக்கம்
ஆருத்ரன்.....திருவாதிரை நாளில் போற்றப் படுபவன்
நான் மயக்கம்.......நால்= நான்கு.இங்கு எண் நான்கு முகம் கொண்ட பிரமனைக் குறிக்கிறது.

                   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக