ஞாயிறு, 26 மார்ச், 2017

வருகைப்பருவம்...3

                                    வருகைப்பருவம்....3

பிணைசெடிக்      கொடிமலர்   பனைதனில்  படரவே
                    பிறைநிலா   உதிக்கவே,
இணைதனை    நினைகுயில்    இசைக்குரல்    எழும்பவே,
                    இலைப்பனி   நனைக்கவே,

அணையொலி   அதிரவே,அயல்வயல்   அஞ்சுநண்டு
                      அகழ்துளை   பதுங்கவே,
கணைமதன்    கரும்புவில்   கடிமலர்    மயக்கவே,
                       கலைப்பிணை    கனைக்கவே,

துணைநலம்    தனைநினை   தளிர்ப்பசு   தலையொடு
                        தலையுராய்   சிலிர்க்கவே,
மனையற     மாண்பெலாம்    தனிலுறை   கனிக்குடி
                         மங்களமே! கல்யாணி!

மணையமர்   மாத்தவ   மேன்மையால்   மகேசனை
                      மணந்தவள்   வருகவே.
இணையுரு   இறைவனின்   இனியநல்    கல்யாணி!
                      வருக!  வருகவே.

                                  பொருள்
  பிணைந்த செடிகளும்.கொடிகளும் பனைமரத்தில் படர்ந்திருக்க,வானத்தே இளம்பிறை நிலவு
தோன்ற,தன் துணையைத் தேடும் குயில் மென்குரல் எழுப்ப,இலைகளில் எல்லாம் பனி பெய்து
நனைத்திருக்க ,
    ஆற்றின் அணையில் மோதும் நீரலை ஒலியெழுப்ப,அவ்வொலி கேட்டுப் பக்கத்து வயல் நண்டு
அஞ்சி வளைக்குள் தஞ்சம் அடைய,கரும்பு வில்லில் மலர்க்கணையை மன்மதன் தொடுக்கவும்,உலகு
மயங்கி நிற்க,இணைபிரியா இணைமான்கள் கனைகுரலால் காதல் பரிமாறிக்கொள்ள,
       தனது துணைக்காளையின் அன்பு வேண்டித் தனது தலையை, அதன் தலையோடு உராய்ந்து,
காதல்மொழி பேசி,உணர்வுகள் வளர்க்க,மனையறக் கோட்பாடுகள் வளர்ந்து அன்பும்,பரிவும்
வளரும் கன்னியாகுடி என்னும் ஊரின் மங்களமாய் விளங்கும் கல்யாணி !
        தர்ப்பை ஆசனத்தில் அமர்ந்து,கடுந்தவம் ஆற்றி,அதன் பயனாய்,இறைவனையே மணந்த
கல்யாணி அம்மையே!வருக.வருக.
     இறைவனின் உருவில் பாதியைப் பெற்ற இனிய கல்யாணி அம்மையே!வருக.வருக.
 
                     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக