ஞாயிறு, 12 மார்ச், 2017

சப்பாணிப்பருவம்...10

                                  சப்பாணிப்பருவம்...10

செஞ்சேற்று மஞ்சவயல் தஞ்சமடை அஞ்சுமன்னம்
             செஞ்செவிய குஞ்சுவாத்து,மிஞ்சியோடி
கஞ்சமலர் அஞ்சிவளையக் கஞ்சிகுடுவை நஞ்சாகக்
            கெஞ்சிடும் மருதநிலக் கருமகளே!

வஞ்சவழிக் குஞ்சரம்,துஞ்சுபுலி நஞ்சரவு
         விஞ்சையர் கெஞ்சுபேய் அஞ்சுகாட்டில்,
மஞ்ஞையாய் மஞ்சுகண்டு பிஞ்சுமன அஞ்சிறை
        நெஞ்சுமகிழ் விரித்தாடும் குறமகளே!

அஞ்சலை,மிஞ்சலை கெஞ்சலை கொஞ்சலை
           அஞ்சிடவோ துஞ்சிடாச்சுறா வஞ்சவாளை
அஞ்சாது படகோட்டித் துஞ்சாது காத்திருந்து
           நெஞ்சமதில் நெய்தல்நில வலைமகளே!

பஞ்சியொளிர் பல்லவப் படர்முல்லை நிலத்தாளே!
           சப்பாணி கொட்டி அருள்வாய்.
விஞ்சுகுளிர் துஞ்சருவி தஞ்சமுல்லை கொஞ்சுகிளியே!
           சப்பாணி  கொட்டி அருள்வாய்.

                              பொருள்
சேற்றுநிலத்தின் மஞ்சள் பசுமை நிறைந்த வயலில் ஒடுங்கி,அஞ்சி நிற்கும் அன்னப்பறவை,
செம்மையான கால்களும்,காதும் கொண்ட இளமை வாத்து,இவ்விரண்டையும்,அவை அஞ்சும்படியாகத் தாண்டிக் குதித்தோடும் பொழுது,தலையில் சுமந்த கஞ்சிக்கலயம் கீழே
விழுந்து,கொட்டி,உண்ண இயலாத நிலைக்கு வருந்திக் கெஞ்சிடும் மருத நில உழத்தியே!
     நேர் வழியில்லாமல்,மயக்கம் தரும் சுற்று வழிகொண்டபாதை:மதம்பிடித்த யானை:வழியோரம்
உறங்கும் புலி:ஊர்ந்து செல்லும் விடப்பாம்பு:அறியா உருவத் தேவதைகள்:கொஞ்சும் மோகினிப்
பேய்கள்:அஞ்சுகின்ற வழியுடைய மலைப்பகுதியில். மகிழ்மனத்துடன் தோகை விரித்தாடும்
அழகு மயில்போல் சுற்றித் திரியும் குறமகளே!
    அஞ்சும் அலை உனக்கு அச்சத்தைத் தரவில்லை:செல்லும்கால் உன்னை அவ்வலை மிஞ்சாது:
அச்சத்தால் கெஞ்ச வைக்காத அலை:கொஞ்சிமகிழும் அலை:அச்சமில்லாது,பிறர்க்கு அச்சம் தரும் சுறா நீங்களும்,மறைந்து தாக்கும் வாளை மீன்களும் கொண்ட அக்கடலில் படகோட்டிச் சென்ற
வலைஞன் வரும் வரை உறங்காது காத்திருக்கும் மனம் கொண்ட நெய்தல் நில வலைச்சியே!
    பஞ்சுபோல் மென்மையுடைய அரும்புகள் கொண்ட முல்லை நில இடைச்சியே!இருகரம் 'கொட்டி
ஒலி எழுப்பி,சப்பாணி கொட்டி அருள்வாய்.
     நடுங்கும் குளிர் மிகுந்த அருவிகள் கொண்ட முல்லை நிலத்து,அழகுக்கிளியே!கல்யாணி!
இருகரம் கொட்டி ஒலி எழுப்பி,சப்பாணி கொட்டி அருள்வாய்.

                                                            விளக்கம்
நானிலத் தலைவியாய்,கல்யாணி அம்மை வருணிக்கப் படுகிறாள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக