சனி, 21 ஜனவரி, 2017

செங்கீரைப்பருவம்....9

                                    செங்கீரைப்பருவம்....9

தென்றல் நின்றாடும் பொன்மலர்புதுத்தேனே!
                தெள்ளலை தண்குளிரே!
தண்டலை மாமயிலே!தாமரை விரியிதழே!
                  தருமா நறுங்கனியே!

கன்றழை காராம் பசுவின் மடிப்பாலே!
             கலைமான் கண்விழியே!
கந்தர்வர் கைவீணை கான இசையமுதே!
             கழைவிளை கருமுத்தே!

மன்றல் மலர்ந்த முல்லை மணமலரே!
             மல்லிகை நறுமணமே!
மங்கள மஞ்சளே!மறுவிலா வெண்மதியே!
             மனையக அகல்விளக்கே!

நன்றெனச் சிவவழி நாடுமூர் நலமகளே!
               செங்கோ!செங்கீரை!
அன்புடன் பண்பும் போற்றுமூர் நன்மகளே!
               செங்கோ!செங்கீரை!

                                  பொருள்

தென்றல் காற்றிலே அசைந்தாடும் நறுமண மலர்களின் புதுக் தேனே!தெள்ளிய ஓடையின் ஓடும்
குளிர் நீரே!சோலையில் ஆடும் அழகிய மயிலே!தாமரைமலரின் மெல்லிதழே!மாமரத்து இனிமைக் கனியே!
    கன்றின் அழைப்பைக் கேட்டு மடி சுரக்கும் காராம் பசுவின் பாலே!கலைமானின் அழகிய கண்
விழியே!வானத்துக் கந்தருவர் இசைக்கும் வீணை இசையே!விளைந்த மூங்கில் மரத்தில் விளையும்
கருமை நிறம் கொண்ட முத்தே!
     சோலைகளில் மலர்ந்த முல்லை மலரின் மணமே!மல்லிகை மலரின் நறுமணமே!மங்களமாம்
மஞ்சளே!குற்றமில்லாத வெண்ணிலவே!வீட்டின் மங்கள அகல் விளக்கே!
      சிவா வழிபாடே நன்மை பயக்கும் என்ற எண்ணம் கொண்ட கன்னியாகுடியில் அருள்புரியும்
கல்யாணியே!செங்கீரை கொட்டி அருள்.
     அன்பும் பண்பும் போற்றி வாழும் கன்னியாகுடியில் வீற்றிருக்கும் கல்யாணியே!செங்கீரை
கொட்டி அருள்வாய்.

                                            விளக்கம்
இப்பாடல் இயற்கை சார்ந்த பொருளெல்லாம் கல்யாணி அம்மை "எனப் போற்றுகிறது.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக