ஞாயிறு, 15 ஜனவரி, 2017

செங்கீரைப்பருவம்......6

                                   செங்கீரைப்பருவம்......6

மணியும் முத்தும் மரகதப் பச்சையும்
                   நவமணியும் பதித்து
மஞ்சள் குங்குமமும் மாவிலைத் தோரணமும்
                 இட்டதொட்டில் அசைந்தாட,

அணிகால் கழலாட,அணைகர வளையாட,
                 அசைநாண் வளைந்தாட,
அனைகுரல் அன்பாம் அருந்தமிழ் ஆட,
                 அழகுமயில் விரிந்தாட,

நனிகுயில் நனைகுரல் நலுங்கென ஆட,
               நங்கைகள் நடனமாட,
இனிதென இருகால் இளவழகு குதித்தாட,
              இமைதுயில்  இளவரசி!

பணிவிடைப் பேரூர்,பஞ்சினும் மெல்லியளே!
                செங்கீரை  ஆடியருள்.
கனியூர்க் கருணைக் கண்ணருள் கல்யாணி!
                 செங்கீரை  ஆடியருள்.

                                பொருள்

மணி,முத்து ,பவளம்,பச்சைக்கல்,நவரத்தினங்கள் பதித்தும்,மஞ்சள்,குங்குமம் இட்டும்,மாவிலைத்
தோரணம் கட்டியும் விளங்கும் தொட்டில்இங்குமங்கும்  ஆட,
   தொட்டிலிலே துயிலும் குழந்தையின் கால் கொலுசு,சதங்கை ஆட,அணைக்கும் தாயின் கையணி வளையல் ஆட,தொட்டிலை ஆட்டும் கயிறு வளைந்தபடி இங்குமங்கும் ஆட,அன்னை பாடும் தாலாட்டில் தமிழ்ப்பண்  இசைந்தாட,அருகே சோலையில் மயில் தோகை விரித்தாட,
     கருங்குயிலின் மென்குரல் நலுங்குப் பாடல்போல் ஒலிக்க,பணிப்பெண்கள் நடனம் ஆடக்
குழந்தையின் அழகுடைக் கால்கள் குதித்தாட,இனிமையாய் உறங்கும் இளவரசியே !
       இறைவனுக்குப் பணிவிடை ஆற்றும் கன்னியாகுடியில் வீற்றிருக்கும் பஞ்சைக் காட்டிலும்
மென்மையான பாதங்கள் கொண்ட கல்யாணி அம்மையே!செங்கீரை கொட்டுக.
      கன்னியாகுடியில் கருணை பொழியும் கண் கொண்ட கல்யாணி அம்மையே!செங்கீரை கொட்டுக .

                          விளக்கம்
அனைகுரல் .....அன்னை என்பதன் இடைக்குறை விகாரம்
நனிகுயில் ........உரிச்சொற்றொடர்
                  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக