திங்கள், 9 ஜனவரி, 2017

செங்கீரைப் பருவம்......1

                                                        செங்கீரைப் பருவம்







                                               செங்கீரைப் பருவம்......1

திருவன்னை திகழரசி தெள்ளரியணைத்  தமிழமுதே!
      தீயிலுறை தீயணுகாத் தளிர்ச்சுடரே!
தருசூழ்ந்த ஆதவனின் ஒருநூற்று ஒளியாளே!
      தவழ்முகத்து நிலவான தண்ணழகே!
அருவான அனல்மீன்கள் அலையொளிர் ஆபரணமே!
      அழகுமலரே!அற்புதநல வரைந்திடாத ஓவியமே!
குருவான ஆலாலர்  குணமான நிறைமனமே!
         குலக்கன்னிக்  குழந்தைக் கல்யாணியே!

உருவெடுத்த நறுஞ்சோலை உள்ளடங்கு விரிமலர்கள்:
        உலவிவரும் உறுதென்றல் மன்றங்கள்:
பெருக்கெடுத்தப் பிரவாகப்  பைந்தண்ணீர்த்  தடாகங்கள் :
       பெண்ணென அசைந்திசை அலையொலிகள்:
கருங்குயிலின் கானச்சுவை:கழுத்தணி காட்டுமாட்டொலி:
        காற்றசைவினால் உராய்வேயின் கலைக்குழலொலி:
தெருவெங்கும் தமிழ்ப்பண்ணொலி:அருள்நகரக் கன்னியின்
        தவழ்மழலை மொழிபேசும் கல்யாணியே!

திருமறையும் திருமுறையும் தெய்வஅருள் தேர்ந்திசைக்கத்
       திருவருளும் குருவருளும் மனம்நிறைய,
விருந்தழைத்து விருப்பமுடன் வீடெல்லாம் நல்லுணவு,
        விண்ணவரும் மண்ணடைந்து வேண்டிநிற்க,
அருந்தவத்தில் நாட்டமுற்ற ஆன்றோர்கள் நிறைந்திருக்க,
        ஆண்டவனும் அருளாசி வழங்கியருளும்
மருந்தவனுறை மறுபக்கம் மலர்ந்தவூர் கன்னியாகுடி
       மழலைமொழி  மரகதமே! கல்யாணியே!

கருங்குழலோ கடைச்சங்கக் கீரனுக்குக்  கவியாக்கம்:
       கவின்தோடோ பட்டருக்குக் கண்ணாக்கம்:
எருதுடையான் இடப்பாக எழிலரசி கல்யாணியே!
          இளமைவழி,செங்கீரை ஆடியருளே!
கருதுவோர்கள் காலமெல்லாம் காத்துநின்று போற்றிவாழும்
          கன்னி நகர்க் குடிகொண்ட கற்பகமே!
மருதநில மணியூரின் மாதரசி மலைமகளே!
          மகிழ்வோடு செங்கீரை  ஆடியருளே.

                            பொருள்
உலகத்தின் தாயே!பேரரசியாய்ப் பெருமை பெற்றவளே!போற்றுதலுக்கு உரிய மாணிக்கச்
சிங்காதனத்தில் வீற்றிருக்கும் தமிழமுதே!நெருப்பில் நின்று,நெருப்பில் தவழ்ந்தாலும்,தீயும் தீமையும்
அணுகாத குளிர்ச்சிச் சுடரே!ஆதவ ஒளிபோல் ஆயிரம் மடங்கு ஒளி பொருந்தியவளே!நிலவன்ன
குளிர் முகத்துப்  பேரழகே!விண்ணில் மின்னும் விண்மீன்கள்போல் ஒளியாபரணங்கள் அணிந்தவளே!
அழகு மலரே! வரையப்படாத நல்லோவியமே!ஆலால மரத்தமர் சிவனின் மனத்தவளே!கன்னியாகுடியின் குலைக்க கொழுந்தே!மழலையாம் கல்யாணி அம்மையே!
       நறுமணமிக்க சோலைகளும்,மணங்கமழ் மலர்களும்,தென்றல் காற்றும்,பெருக்கெடுத்து ஓடும்
ஆறுகளும்,நீர்க்குளங்களும்,அங்கே நாணமுற்ற பெண்போல்  தோன்றும் காற்றசை அலையொலியும்
குயிலின் மெல்லொலியும்,வீடு திரும்பும் மாட்டின் கழுத்து மணியொலியும்,காற்றால் அசையும் மூங்கில் மரங்கள் உராய்வதால் தோன்றும் குழலொலியும்,தெருவிலே முழங்கும் தமிழ்ப் பண்ணொலியும் கொண்ட கன்னியாகுடியில் இவைகளை எல்லாம் வெல்கின்ற மாட்சிமை தங்கிய
மழலை மொழி பேசும் கல்யாணி அம்மையே!
        நான்மறை வேதஒலி,தேவாரத் திருவாசகப் பண்ணொலி சேர்ந்திசைக்க,குரு அருளும்,தெய்வ அருளும் ஊரெல்லாம் நிறைந்திருக்க,வீடுகளில் எல்லாம் விருந்தினர் கூட்டம்,உணவுண்ண,
விண்ணவர்களும் வந்தமர,தவத்தை மேற்கொண்ட சான்றோர்கள் நிறைந்து விளங்க,
எல்லாவற்றிற்கும் மேலாக இறைவனது அருள் கருணை நிறைந்து விளங்கும் ஊர்:வைத்தியநாதன் கோயில் கொண்டுள்ள வைத்த்தீஸ்வரன்கோயில் அருகே அமைந்த ஊர்:கன்னியாகுடியில் கோயில்
கொண்ட மழலை உருவான கல்யாணி அம்மையே!
       உனது கருங்கூந்தல் சங்கப் புலவன் நக்கீரனுக்குப்  புலமைத் தலைமை வழங்கிற்று.
உன் தோடு,அபிராமி பட்டருக்கு,நிலவாகிக் கருணை பொழிந்தது.காளை வாகனன்,கறைக்கண்டன்
பாதியுடல் பெற்றவளே!கல்யாணி அம்மையே!இளமையில் ஆடும் செங்கீரை ஆடுவாயாக.
      அடியவர்கள் உன் அருளுக்காகக் காத்திருந்து காலமெல்லாம் கடுந்தவம் புரிந்து போற்றி வாழ்கின்ற கன்னியாகுடியில் அமர்ந்தவளே!கற்பகமே!மருத நில நல்லூரில் குடி கொண்ட தாயே!
மலைமகளே!கல்யாணி!மகிழ்வோடு செங்கீரை ஆடி அருள்வாய்.

                                                              விளக்கம்
இப்பாடல் "லலிதா ஸஹஸ்ர நாம"க்கருத்தை அடிப்படையாகக் கொண்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக