ஞாயிறு, 25 டிசம்பர், 2016

காப்புப்பருவம்

                    காப்புப்பருவம்
  பிள்ளைத் தமிழிலக்கியத்தின் முதற்பருவம்.பாட்டுடைத் தலைவியாம்
கல்யாணி அம்மையாம் குழந்தையைக் காக்குமாறு சிவபெருமான்,திருமால்,தொடங்கி,
முப்பத்து முக்கோடி தேவர்களையும் வேண்டுதல்.

                காப்புப்பருவம் .....1

                    விநாயகர்

தமிழ்முதல் தனிமுதல் தவமுதல் தலையாகி,
குமிழ்முகக் குவியருள் குலம்வளர் குருவாகி,
அமிழ்தென அருமறை அகமதில் நிலையாகி,
கமழ்மணக் கலைநிறை கணபதி வருகவே.

திமி திமி திகழொலி திரலடி ஆட்டத்தின்
அமை அமை அருள்குண அடியவர் நாட்டத்தின்
உமைஉமை  அனையவள் உறுமனப் பாசத்தின்,
சுமை சுமை துயரது களைந்திடும் சுந்தரனே!

உமியவல் உறுபொரி உளவிருப் புடையோனே!
அமியறை அரிசிமா அதிலுரு கொழுக்கட்டை
தமர்தரின் இமையருள்  இளநகை கொள்வோனே!
இமையவர் முனிவரர் இறைஞ்சுதல் ஏற்பவனே!

தமிழ்மகள் தலைமகள் தளிர்குணக்  கல்யாணி
தமிழ்ப்புகழ் தவப்புகழ் துளிரிள நன்னூலை
அமிழ்தமாய் அருமையாய் அவமழி ஆக்கமாய்த்
தமிழ்ச்சுவை போற்றியே தவழ்கெனக்   காக்கவே.


                                பொருள்

தமிழின் முதலாகவும்,தவத்தின் முதலாகவும்,மூவருக்கும் முந்திய தனித்துவ முதலாகவும்,விளங்கி,
அழகு வாய்ந்த முகத்தில் பொழியும் அருட்பார்வையால்   உலகை நல்வழிப் படுத்தும் ஆசானாகவும்,
விளங்கி,ஆகம மறைகளை மனத்தகத்தே அமுதுபோல் கொண்டிருப்பதால் நிலைத்த தன்மையோடும் விளங்கி,அனைத்துக் கலைகளும் ஒன்றாய் நிறைந்து விளங்கும் விநாயகப் பெருமானே!அன்னை
மீது பாடப்படும் பிள்ளைத் தமிழ்நூல் சிறக்க,வளர்க்க,வாழ்த்த வரவேண்டும்.
       திமி திமி என ஒலிக்கும் ஆட்டத்தின் திகழ்கின்ற பாதச்சுவடுகளும்,  இரக்க குணம் அமைந்த அருட்பொழிவினை அருளும் அடியவர் மீது கொண்ட கருணையும், உமையம்மையின் நன்மனப்பேரன்பு பெற்ற பாசத்திறனும்,உலகோரின்    துயர்  என்னும் சுமையைப் போக்கும் பேரருளும் கொண்ட பெம்மானே!
      உமி நீக்கிய அவலும் நல்ல பொரியும்,ஆகிய வற்றை விரும்பி உண்ணும் எண்ணம் கொண்டவனே!அரைத்த மாவினை வேகவைத்து,அதனுள் பூரணம் என்னும் பாகு உள்ளடக்கி உருவான கொழுக்கட்டையினைப் படைக்கும்,அடியவர் மீது  அருள் பொழிபவனே!விண்ணவர்களும்,முனிவர்களும் இடைவிடாது போற்றிப் புகழ,அதனை அன்புடன் ஏற்பவனே !
        தமிழ் போற்றும் அன்னை,மூவருக்கும் முன்னவள்,மென்மையான குணமுடையவள் கல்யாணி அம்மையைப் புகழும் ,அவளின் தவத்தைப் புகழும்,பிள்ளைத்தமிழ் என்னும் நூலை,அமுது போலவும்,அருமையாகவும்,அல்லன போக்கும் ஆக்கமாகவும்,தமிழின் சுவையாகவும்,அமைக:
வளர்க:வாழ்க:என வாழ்த்தி அருள வருவீராக.காத்து அருள வருவீராக.

                                               விளக்கம்
உமியவல் .......இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
இளநகை ........பண்புத்தொகை

துளிரிள நன்னூல் ......ஒருபொருட்பன்மொழி
துளிரிள நன்னூல் =பிள்ளைத்தமிழ் நூல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக