செவ்வாய், 4 அக்டோபர், 2016

போற்றுவார் போற்றலுக்கு நல்வரங்கள் நல்கிடும்,
வீற்றுயர் சேவல் கொடியானின் ஊர்தியே!-----காற்றெனக்
காத்தும்,கடிதெனச் சென்றும்,கழலிணை
பூத்த மலரெனப் புண்ணிய நோக்கென ----யாத்த
விதியான் வினைதீர்க்க   வித்தகத் தீக்கை
பதித்த பதமென  ஏற்றுச் சுமந்தாய் ----நதியணி
தேவதேவன் தீங்கருணை தீயரக்கன் தேடழிவை
நாவலனின் நல்வேலின் நற்பணியை மாற்றியே -----கூவிடும்
சேவலாய்க் குற்றமிலாச் செம்மயிலாய் ஆக்கியது:
காவலாய்க் கந்தனடி சேர்ந்த  கலைமயிலே!-----ஆவலுடன்                                         20                      

                                            பொருள்
தலைவி,மயிலை மென்மேலும் போற்றுகிறாள். தன்னைப் போற்றி வணங்கும்
அடியவர்களின் துயர் களைந்து,அவர் விரும்பும் வரம் அளிக்கின்ற முருகனது
வாகனமே!கந்தனைக் காற்றும் அணுகா வண்ணம் காத்தும்,முதுகில் அவன்
ஏறி அமர்ந்ததும்,விரைவாகச் சென்றும்,அவனது சேவடிகளை அன்றலர்ந்த
மலர்போல் போற்றித் தான்செய்த புண்ணியப் பணி என நினைந்தும் சுமந்தாய்:
நான்முகனின் செருக்ககல அவனுக்கு ஞான தீக்ஷை அளித்த பாதங்கள்"இவை
என மகிழ்ந்தும் சுமந்த மயிலே!பரம்பொருளாம் சிவபெருமானிடம் பெற்ற
வரபலம்,எம்பிரான் முருகனது வேலாயுதம் வீழ்த்தினும்,மாளாது,மடியாது
சேவலாய்,மயிலாய் மாற்றியது சூரனை.அப்படிச் சூர்மயிலாகிக் கந்தனின்
தாள் போற்றி,அவனைப் பிரியாது காக்கும் கலையழகு மிக்க மயிலே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக