சனி, 9 ஜூலை, 2016

                    தலைவி இரங்கல்

       எண்சீர்  ஆசிரிய விருத்தம்


பனிமலர் பலரறி புணர்நிலைப் புதுவண்டே!
       பகலொடு இரவிலும் பரிதவி துயருடை
தனிமகள் தவமுடை தளிருளம் அறியாயோ?
      தழற்கரம் எனைச்சுட?தழற்கண் தருசுடர்
நனிமகள் நலமெலாம் பிணியிடு பொசுக்கலோ?
     நதியணி நாயகன் விழிநீர் வழங்கலோ ?
கனிமந்தி காதலுறு கடுவனூர் கன்னியில்
    கலைதலை மகனவன் கண்டுநீ  உரைத்திடு 

                                பொருள்
குளிர்ந்த மலரின் மேலமர்ந்து,பலரறிய,மது உண்ணும் வண்டே!
பகல் வருவான்,இரவில் வருவான் எனக் கண்விழித்துக் காத்திருந்தும்,துயரோடு பரிதவித்தும்,
தவம் புரியும் நிலையில் தவிக்கும் என் மனநிலை அறியாயோ?அந்தச் சிவன் கையில்
வைத்திருக்கும் நெருப்பு என்னைச் சுடவோ?அல்லது அவனது கனல்கக்கும் கண்ணின் தீப்பொறி
என் நலத்தையெல்லாம் பொசுக்கி அழிக்கவோ?தலையிலே தாங்கிய கங்கை நீர் என் கண்ணிலிருந்து
வழிவதற்கோ?மந்தியும்,கடுவனும் காதலில் ஈடுபட்டு மகிழும் கன்னியாகுடியின் கலைநலமிக்க
தலைவன் கைலாச நாதனைக் கண்டு,வண்டே!நீ கேட்டு வருவாயா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக