செவ்வாய், 5 ஜூலை, 2016

நற்றிறம் அடைய நாடு

                  நற்றிறம் அடைய நாடு 

       ஓரெதுகை எண்சீர் ஆசிரியச் சந்த விருத்தம்             

போற்று காற்று நாற்று சீற்றம்
      போற்றா மாற்றான் ஆற்றல் தோற்றல்
ஏற்று நோற்று சாற்று கூற்றம்
     ஏற்ற வீற்றோன் தேற்றம் போற்று.
ஊற்றும் கீற்றும் நாற்றக் கொற்றை
      உற்ற செற்றம் பற்று நற்றாய்
சேற்றுறு செற்றூர் சொற்றிறக் கற்றோன்
     செற்றிறம்  பற்றிடு:நற்றிறம் உற்றிடு.

                           பொருள்
காற்றின் சீற்றத்திலே தவிக்கும் வயல் நாற்றையும்,(சிறு சிறு உயிர்களையும்)காக்கும்
சிவனைப் போற்று:போற்றாத பகைவர்களின் ஆற்றல் தோற்றதை,அரக்கர் அழிவு வாயிலாய்
நாம் அறியலாம்:ஆதலின் சிவனடி மனத்திலே ஏற்று,நோன்பு பூண்டு பாடுவாயாக.
கூற்றத்தையே காலால் உதைத்துச் சங்கரித்த திறனைப் போற்றி புகழ்க.கங்கையும்,பிறைநிலவும்
நறுமணக் கொன்றையும் தாங்கிய செஞ்சடையைப் பற்றிடுவாய்.அன்னை மகாசக்தியின்
கருணைச் சேற்றில் உருவான கன்னியாகுடியில் சொல்லும் பொருளுமான கைலாச நாதன்
செம்மை வாய்ந்த கருணை மிகுந்த கால்களைப் பற்றிடு:நன்மைகள் யாவும் உன்னை நாடி வரும்.
                    விளக்கம்
ஏற்ற வீற்றோன்=  பணிந்த வீறுடையவன்.
ஊற்று=கங்கைநீரூற்று .கீற்று=ஒரு துண்டு ,நிலவின் ஒரு கீற்று
கொற்றை =கொன்றை என்பதன் வலித்தல் விகாரம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக