சனி, 28 மே, 2016

செவிலி கூற்று

                    செவிலி கூற்று
     
                 எண்சீர்ச் சந்த விருத்தம்

சொல்லா  லொருநல்லாள் வல்லா  னவைதன்னில்
        சொல்லால்   சுவைவேதம் எல்லாம் தருபாடல்
கல்லா    லவன்கன்னி உள்ளான் மகிழ்ந்தாட
       கண்டா லவள்கலந்தாள் காதல் மனத்தோடு:
பொல்லா  தனபுரியாள்,பொன்னால்  அணியணியாள்:
      பொன்மான் துணைநாடாள்:பொதும்பர் சுனைபோகாள்:
வில்லான் அளிதுயரால் விழியில் வழிநீராள்:
       விண்ணோர் தனைவணங்காள்:விந்தை மனமங்கை .

                                        பொருள்
  தலைவியின் பிரிவுத் துயரைச் செவிலி கூறுவது:
    கன்னியாகுடிப்  பேரவையில் சொல்லின் செல்வி,மாமறையை,வீணையில் இசைத்துப் பாட,
அப்பாடலுக்கு ஏற்ப, கைலாசநாதன் ஆனந்த நடனம் ஆடுகிறார்;அவ்வாட்டத்தைக்  கண்ட
தலைவி ஆடும் ஆடலரசனிடம் மனதைப் பறி கொடுக்கிறாள்:காதலுற்ற மனத்தோடு வீடு
திரும்பியவள் இறைவனுக்கு ஒவ்வாதவற்றை ஆற்றாது தவிர்க்கிறாள்:பொன்னணி ஆபரணங்களை
அறவே ஒதுக்குகிறாள்:அன்போடு அருகில் வரும் மானினத்துடன் விளையாடுவதைத்
தவிர்க்கிறாள்:சோலைகளிலும்,சுனைகளிலும் ஆடுவதை விரும்பவில்லை:மன்மதன்
கணை தரும் துயரினால் அழும் கண்களைக் கொண்டவளாய்க் காணப் படுகிறாள்:எந்த
தெய்வத்தையும் வணங்க விரும்பாத மனம் கொண்டுள்ளாள்:பிரிவால் வாடும் விந்தை
மனம் கொண்ட தலைவியின் துயரை எப்படி மாற்றுவது?இறைவன் தார்மாலை மட்டுமே
மாற்றும்,எனப் புலம்புகிறாள் செவிலி.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக