புதன், 25 மே, 2016

ஆசிரியத் தாழிசை

             ஒரு பொருள் மூன்றடுக்கி வந்த
                      ஆசிரியத் தாழிசை

குளக்கரைக்  குழந்தை கூவழுகைக்  குவிமுகம்
மலர்ந்திட மாணிக்க வல்லி மறைமுலைப்பால்
கலசக் கருணை பொழிந்திடச் செய்தவா!
கடுத்த முகமுடன் கையோலை காட்டியே
எடுத்த மங்களநாண் இனிக்கா உளம்பெறத்
தடுத்தாட் கொண்ட தத்துவம் செய்தவா!
மாற்றிட வயிற்றுநோய் மாசற மாற்றியும்,
போற்றிட நரிகளைப் பரிகளாய் ஆக்கியும்,
ஏற்றிட இருவரை,நல்லாடல் செய்தவா.

                         பொருள்
 சீர்காழிக் குளக்கரையில் குளிக்க முழுகிய தந்தையைக் காணாது,அழுதுகொண்டு
நிற்கும் ஆளுடைய பிள்ளை மீது,கருணை கொண்ட,சிவனார்,அன்னையைப் பார்க்க,
அன்னையோ அழும் குழந்தைக்கு,முலைப்பால் நல்கி,ஞானக் குழந்தை ஆக்குகிறாள்;
அப்படி அருள் புரிந்த கன்னியாகுடியானே!
    திருமணப் பொழுது,அவையில் சினத்துடன் நுழைந்து,"இவன்,என்னடிமை,இதோ ஓலை'
எனக்காட்டிச் சுந்தரரைத் தடுத்தாட்கொண்ட கன்னியாகுடியானே!
    சமண சமயத்திலிருந்து மாற்ற,சூலைநோய்,தந்து,அவ்வயிற்று நோயை மாற்றப்பேரருள்
புரிந்தும்,மருள்நீக்கியாரை அப்பரடிகளாக மாற்றியும்,
   அமைச்சரான வாதவூரரை நன்னெறி மாற்ற மதுரையில் நரிகளைப் பரிகளாக
மாற்றியும்,அவரை மாணிக்க வாசகராக ஆக்கியும்,
    இருவரை ஏற்கப் பெரும் திரு விளையாடல் புரிந்த கன்னியாகுடியானே .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக