செவ்வாய், 12 ஏப்ரல், 2016

வலைச்சியார்

                                          வலைச்சியார்

                         ஆசிரிய விருத்தம் (பன்னிரு சீர்)


     வெல்லும் வில்லான்  வியன்மனம் வாட்டும்
          விரைகழல் மன்மதன்
     வியக்கும் விரிகலைச் சான்றாம் கயல்விழி,
          விளக்கும் காதல்,
  நல்ல வாளை நறுமீன் மென்னுடல்,
          நாற்றப் புலாலின்
 நவமேனி, நடையில் மயங்கும் கடலலை,
          நலுங்கும் வலைச்சியீர்!
கல்விக் கன்னி வந்தீர்!நடந்தீர்!
            கண்ணைப் பறித்தீர்!
கலவிக் காம எண்ணம் வளர்த்தீர்!
            காலடி விழுந்தேன்:
சொல்லுக அமுதம்:சுகமெனப் பருகுவன்:
          சுந்தரம் பழகின்
செல்லலாம் சுவர்க்கம்:வெல்லலாம் மன்மதன்
          செவ்விதழ் குவிப்பீர்!

                                பொருள்
 நெய்தல் நிலப் பெண்களின் மீது மோகம் கொண்டு,அவரைப் புகழ்ந்து
தனது காதல் எண்ணத்தை வெளிப்படுத்தல் வலைச்சியார் ஆகும்.
    உலக உயிர்களைத் தனது ஐம்மலர் வில்லால் வெல்லும் மன்மதன் மனத்தை வாட்டுவான்:
அவனே வியக்கும் அளவு காதல் எண்ணத்தை வெளிப்படுத்தும் கயல் போன்ற கண்களும்,
பருத்த வாழை மீனின் உடல் போல் குளுமையும்,வழவழப்பும் கொண்ட  நல்லுடலும்,
மீன் நாற்றம் கொண்ட யாரோடும் உறவாடாத மேனியும்,நடை கண்டு கடலலைகள் கலங்கும்
நிலையம் கொண்ட வலைச்சியீர்!
       கல்வியாளர்கள் மிகுந்த கன்னியாகுடிக்கு வந்தீர்!அன்ன நடை நடந்தீர்!எம் கண்ணைப்
பறிக்கும் அழகு காட்டினீர்!உம்மோடு உறவு கொள்ளும் காம எண்ணத்தை வளர்த்தீர்!எனது
குளம்,கல்விப்பெருமை,சான்றாண்மை எல்லாம் மறந்து காதல் வயப்பட்டு உம் காலில்
பணிந்து விழுந்தேன்.
    உம் வாய் திறந்து சம்மதம் சொல்லுக:சொல்லிய செவ்விதழ் பருகிக் மன்மதனையும் வெல்லலாம்:காதலில் புணர்ந்து காம சுவர்க்கம் புகலாம்:செவ்விதழ் குவித்துச் செங்கண்
பார்வை காட்டுக.


         
           

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக