சனி, 16 ஏப்ரல், 2016

போற்றுவோம் புண்ணியனை

        போற்றுவோம் புண்ணியனை

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

நெஞ்சச் சிறையுள் நடமிடும் நித்திலனை,
      நினைவும் செயலும் சுற்றிடும் நிமலனைத்,
தஞ்சம் அடியின் தண்ணடி நிழலில்
      தடுத்து ஆட்கொள்ளும் தத்துவ மேலோனை,
அஞ்சொல் அம்மை அகமளி அற்புதனை,
     அல்லோர் அழிவை அருளொடு அளிப்பவனைக்
கஞ்சமலர்க் கவினுடைக் கன்னியின் காவலனைக்
    காணாத போற்றாத நாளெலாம் வீண்நாளே. 
                                 பொருள்
 சிக்கெனப் பிடித்து மனச்சிறையுள் அமர்த்தினால்,அங்கும் ஆனந்த நடனமாடும்
தூய்மையானவனை,நினைவு,செயல் ஆகியவற்றுள் ஒளிந்திருக்கும் செயலியை,
தஞ்சம் எனத் தன்னடி பணிவோருக்குக் காலடியில் இடம் கொடுத்துப் பாவ வினைகள் நீக்கி
ஆட்கொள்ளும் உயர்ந்தோனை,அருள்பொழியும் சொல் கொண்ட அன்னை கல்யாணி
அம்மைக்குச் சரிபாதி உடல் அளித்தவனை,தீயவர்களைத் தண்டித்தும்,அவர்கள் மாறி நல்வழி காண
அருள் பொழிந்தேற்கும் அருளாளனை, தாமரைமலர்கள் நிறைந்து விளங்கும் பெருங்கழனிகள்
கொண்ட,கன்னியாகுடிக் காவலனை,நாள் தோறும் காணவேண்டும்;போற்றவேண்டும்;அப்படிக்
காணாத போற்றாத நாளெல்லாம் வீண் நாளாகும்;ஆதலின் போற்றி அருள் பெறுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக