புதன், 17 பிப்ரவரி, 2016

சிறுதேர்ப் பருவம்--9

நதியும் மதியும் விதியும் அணிந்தோன்
            நிதியெனச் சிறந்த நிமலா!
கதியாய்ப் பதியாய்த் துதிப்போர்க் கருளும்
            கலியுகக் கடவுள் குமரா !

 கொதிநீர் மனத்தின் குதிநீர் அருவி                                                      
           குளிர்தாள் கருணைக் குகனே!
பொதியாய் சுமக்கும் அதிபா வமதைப்
         புதிராய்ப் பிழைக்கும் புனிதா!

துதிக்கும் துயரோர் தயவின் தலைவா!
           துதியா  நெறியோர்க் கருள்வாய்;
விதிக்கும் விதியாய் வினயப் பதுமன்
      வினையை அணிந்த  விமலா!

பதியே!பரனே!பழனிக் குழந்தை!
         பழந்தேர் உருட்டி அருள்வாய்.
பதி யாம் பழனக் கனியூர்ச்செல்வா!                                                
         பழந்தேர் உருட்டி அருள்வாய்.

                                           பொருள்
கங்கை,பிறைநிலவு,உலகோர் நடப்பு முறை ஆகியவற்றைத் தலையிலே தாங்கும் சிவபிரான்
மைந்தனே!தூய்மை ஆனவனே!நீயே கதி எனவும்,நீயே தலைவன் எனவும் போற்றும்
அடியவர்களுக்கு அருள் பொழியும் கலியுகக் கடவுளே!
         கொதிக்கும் நீர்போல் உழலும்அடியவர்  மனத்தை அருவி நீர் போல குளிர்ச்சியான பாத
கமலங்களால் தீண்டிக் கருணை காட்டும் கந்தனே!சுமையாய்ச் சுமக்கும் பாவ மூட்டையை
மாற்றியும்,ஏற்றும்,அதிகரித்தும்,குறித்தும் புரியாத புதிராகச் செயல் பட்டு அடியவரைக் காக்கும்
புனிதனே!
         போற்றும் அடியவர்களின் கருணைக்கடலே!போற்றாத புல்லர்களுக்கும் அருள் காட்டும்
ஐயனே!அழிவான்''என ஆக்கப்பட்ட விதியையும் மாற்றி,மனம் மாறிய சூரபன்மனின் பாவ
உடலை,மயிலாய்,சேவலாய் ஏற்று மகிழ வைத்த நன்மனம் கொண்டவனே!
         தலைவனே!பரம்பொருளே!பழனி மலையில் வீற்றிருக்கும் குழந்தைக் கடவுளே!
பழமை அழகு வாய்ந்த சிறு விளையாட்டுத் தேரை உருட்டி ஆடுவாய்.
வயல்கள் நிறைந்த கன்னியாகுடி எனும் ஊரின் பதியாய் விளங்கும் செல்வா!சிறு தேர் உருட்டி
அருள்வாய்.

         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக