புதன், 17 பிப்ரவரி, 2016

சிறு தேர்ப்பருவம் --10

அரஅர  சிவசிவ  சரவண  பவவெனும்
              அருமறைத் திருநடைக் குருபர!
அரையினில் அணிகலன் அழகுடன் அணிபவ!
             அனையவள் அணைந்திடு அமலனே!

மறமற  பிறமதம்  மறுமறு  அதன்மதம்
                மணமதில் சுரமகள் புனைந்தவ!
திறதிற  மனமதை ;திரண்டிடும் தருமமே;
                தினைப்புனக் குறமகள் நினைபவ!

இருஇரு அமைதியாய்;இடரெலாம் பறந்திடும்;
                  இருமலர் இருதயம்  உறைபவ!
இடுஇடு  கரங்களில் ;இளைத்தவர்  உயர்வரே ;
                  இமையவர் புரந்திடு இனியவேல்;

தரு தரு அருளுடைப் பெருநகர்க் குழவியே!
                  தக தக சிறுதேர் உருட்டிடு.
சிறு சிறு செயலதும்  பெருந்திரு  நகர்க்குக !
                   சிறுரதம்  மகிழ்வுடன் உருட்டிடு.

                                      பொருள்
ஹர ஹர ''சிவசிவ' சரவணபவ'என்னும் தாரக மந்திரங்களின் அடிப்படையில் ஐந்தொழில்
நடத்தும் சுவாமி நாதா!இடுப்பில்,காலில்,கைகளில்,தோளில் அழகிய அணிகலன்கள் அணிந்து
அழகுறக் காட்சி தரும் அழகா!அன்னை பார்வதி தேவி அணைத்து மகிழும் அழகுடைக் குழந்தையே !
          பிற மதக் கருத்துக்களை மறந்தும்,தேவையானால் மறுத்தும் செயல் படுக அடியவர்கள்.
இந்திரன் மகளாம் தேவயானையை மணம் புனைந்தவனே!மனதைத் திறக்கவும்;தர்மம்
திரண்டு வரும்;தினைப்புன வள்ளியை எப்பொழுதும் நினைப்பவனே!
          அமைதியாய் இருந்தால் துன்பம் பறந்தோடும்;இருமலர்களாம் வள்ளி ,தேவயானை நெஞ்சத்தில்
உறைபவனே! வேண்டும் கைகளில் வேண்டுவன வழங்கு;அதனால் துயருற்றோர் துயர் நீங்கும்;
இமையவரைக் காத்தது முருகனின் இனிய வேலன்றோ !
            எங்கும்,எப்பொழுதும் யாவர்க்கும் இல்லை என்னாது வழங்கும் குணம் கொண்ட பெருமக்கள்
வாழும் கன்னியாகுடிக் குழந்தையே!சிறு தேர் உருட்டி அருள்வாய்.
சிறிய நற்செயல் கூடப் பெரிய செல்வமாகும்''என்ற கன்னியாகுடி மக்களின் எண்ணத்தில் உயர்ந்த
குகனே!சிறு தேர் உருட்டி அரு;வாய்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக