செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

சிறுபறைப்பருவம்--6

குலைகுலைகனி கொழுமடல்மரம் குவிமுகைமணம் குருவிகளடை
                   குளிர்தருநிழல் குகையிருளெனக்
குகனவனருள் குடிப்புகழ்பெறும் குணச்சிறுபதி
                  குலச்சிறுமியின் நலத்தலைவனே!

மலைமலைஇடி மனம்மனம்துடி மதம்பொழிகஜன் உரைதனைத்தொட
                 மழுஉடைத்தவன்   மனம்தனில்நினை
தலைதலைசுழல் தனதனதன நடைஎடுபுயல் நடுங்கிடுஉடல்
                 தவிமனமணை சுகம்பெறுகுகா!

இலைஇலைஇடை எனுமழகுடை இந்திரன்மகள் எதிர்த்துவந்திடும்
               இருளரக்கரின் இயலழிகளம்
நிலைபெறுஜய  நினைபரிசெனத் தருசுரபதி
               நிலவினைமணந்  தழகனேகுகா!

சிலைமகள்மனை நலத்தலக்குலச் சிவனவன்பணி தலைகுருகுகா!
                      சிறுபறை கொட்டி அருள்வாய்.
சிலைசிவச்சரம் செயமதைத்தரும் கனிசிவப்பதிச் செல்வா!
                    சிறுபறை கொட்டி அருள்வாய்.

                                              பொருள்
குகையிருள்போல் குளிர்ந்த நிழலைக்கொண்ட மரங்களிலே கனிகள் குலை குலையாய்த் தொங்கும்;பசுமையான இலைகள் விரிந்து இருக்கும்;குருவிகள் கூடு கட்டி வாழும் ;மணமுடைய
மொட்டுகள்  மலர்ந்திருக்கும்;முருகன் அருள் பெற்ற வேடர் குலத்தவர் வாழ்கின்ற சிற்றூரில்
தோன்றிய வள்ளியம்மையின் நலம் காத்த தலைவனே!
      மலையிலே இடிஒலி கேட்டு,மனம் துடிக்கும் மதம்பொழிகின்ற யானையின் உருவத்தைக் கொண்டவன் பாரதத்தினை வியாசர் சொல்ல,அதை எழுத முற்பட்டு,எழுத்தாணி உடைந்ததால்
தனது மழு போன்ற தந்தத்தை உடைத்து எழுதிய தன் அண்ணனாம் விநாயகப் பெருமானை
நினைக்க,தம்பிக்காக யானை உருவம் தாங்கி,தலையைச் சுழற்றிக் கொண்டு,காண்போர் அஞ்சும்படி
ஓடிவர,அதுகண்டு,அஞ்சி நடுங்கிய வள்ளியம்மை அருகில் இருந்த வேடனாம் முருகனை
அணைத்த பொழுது அம்மையின் ஆலிங்கன சுகத்தை அனுபவித்த ஆறுமுகா!
     இல்லையோ எனும்படி இடைகொண்டு அழகுற விளங்கும் இந்திரன் மகளாம் தெய்வயானையை.
எதிர்த்து வரும் அரக்கர் கூட்டத்தை அழித்து,வெற்றிபெற்றுத் தங்களைக் காத்த முருகனுக்காக
இந்திரன் பரிசாக நன்றியோடு கொடுத்த பொழுது,அந்த நிலவாம் தெய்வயானையை மணந்த குகனே!
      மலைமகளாம் பார்வதியை மனையாளாய்ப் பெற்றதினால் நலமும்,குலமும் உயர்ந்த சிவபிரான்
பிரணவப் பொருள் அறிய,பணிந்து,வணங்கித் தனது முதல் குருவாய்க் கொண்டான்;குருவுக்குக்
குருவான முருகா! சிறு பறை  முழக்கி அருள்க.
அம்பிலே பூட்டிய சிவப்படை வெற்றியைத் தரும்;அவ்வெற்றியை உணர்ந்து,அவன் வாழ்கின்ற
ஊராகவே மாறிவிட்ட ,கன்னியாகுடிச் செல்வா!சிறுபறை முழக்கி அருள்வாய்.

                                                       விளக்கம்
மழு உடைத்தவன்=இங்கு ''மழு'' என்பது கூர்மையான விநாயகரின் தந்தத்தைக் குறிக்கிறது. 
தனதனதன ===யானை வேகமாக ஓடிவரும் நடைக்கான சந்தம்
நிலவினை  மணந்து ==இங்கு நிலவு போன்ற முகம் கொண்ட தெய்வயானை ...ஆகுபெயர்   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக