திங்கள், 15 பிப்ரவரி, 2016

சிறுதேர்ப்பருவம்--4

பதித்த  வைரங்கள் பகலவன் போலவே
            பதித்த முத்துடன் ஒளிவீசப்
பதித்த ஒன்பான் கற்களின் எழுநிறம்
           பதியுந்தன் பதம்தொடு தேரே.

மதிக்குடை மாசென மலர்க்குடை மாண்புடன்
         மகரந்தப் பதாகை மிளிரவே ,
உதித்திடு தாரகைகள் உலர்த்திய துணிபோல்
        உலவிடு உயர்கொடி பறக்க,

விதியுணர் வேதம் நான்கும் கதியுடை
       விரைவின் சக்கரம் ஆகவும்,
நதிபோல் நாணது நெளிவுடன் கிடக்கும்
        நவில்சொல் இல்லா நனிதேர்

நிதிபதி நித்தமும் நினைநகர்ச் செல்வா!
             நுண்தேர் நகற்றி அருளே.
துதிபதி துணையருள்தொழுமூர்ச் செல்வா!
            தேர்தனை உருட்டி அருளே.

                              பொருள்
தேரிலே வைரங்களும்,முத்துக்களும் பதிக்கப்பட்டுள்ளன.அவைகள் ஆதவன் போல்
பிரகாசிக்கின்றன;மேலும் பதிக்கப் பட்டுள்ள நவ ரத்தினங்களும் வானவில்போல் ஏழு நிறங்களை
ஆங்காங்கு வெளிப்படுத்துகின்றன.ஐயனே!உன் சேவடி தீண்டும் அழகிய தேர் காணுங்கள்;ஆவலோடு இழுத்து விளையாடுங்கள்.
      மதியாகிய குடைக்கும் மாசு உண்டு,ஆனால் இத்தேரின் குடையோ மலர்களால் ஆனது;
இன்னும் நறுமணமிக்க திரைச்சீலைகள் தொங்கும்;விண்மீன்கள் பதித்த  துணிபோல் தேர்க்கொடி
பறக்கும்.
       நான்கு மறைகளே இத் தேரின் சக்கரங்கள் ஆகும்;ஆறுபோல வளைந்த கயிறும் இழுப்பதற்கு
கட்டப்பட்டுள்ளது.தேரின் அழகை வருணிக்கச் சொற்களே இல்லை எனலாம்.
         குபேரன் நாள்தோறும் நினைக்கும் செல்வமிக்க கன்னியாகுடிச் செல்வா!அழகு வேலைப்பாடுகள்
கொண்ட சிறு தேரை இழுத்து ஆடி அருள்வாய்.
கல்யாணியம்மை கைலாசநாதர் ஆகிய அருள் பொழியும் கடவுளரைத் தொழும் கன்னியாகுடிச்
செல்வா!சிறு தேர் உருட்டி அருள்வாய்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக