வியாழன், 11 பிப்ரவரி, 2016

சிறுபறைப்பருவம்--10

தக்கன் தனித்து தர்மம் தவிர்த்து
          தருக்கு வேள்வி முரசு
தக்கன் தலையை வீழ்த்திய  சிவபிரான்
        தனிப்போர் வெற்றி முரசு

துக்கம் துயர்கள் தொடர்ந்தளி மகிஷன்
            துணித்த துர்க்கை முரசம்;
 திக்கெலாம்  வென்ற கஜமுக அசுரனை
             வென்ற,வி   நாயக முரசு

கக்கும் தீச்சுடர் காரிருள்  மாயக்
             கிரௌஞ்சம்அழித்த முரசு
முக்கணை முருக!முதலும் முடிவும்
            முன்னறிநீ அறியா முரசமோ?

சிக்கல் தீர்க்கும் சிங்கார வேலனே!
             சிறுபறை முழக்கி அருள்வாய்.
சிந்தனை,சிவமாம் சிற்றூர் செல்வா!
               சிறுபறை முழக்கி அருள்வாய்.

                                   பொருள்
தக்கன் தருக்குடன் சிவபிரானைத் தவிர்த்துத் தனியே வேள்வி செய்ய முனைந்தபொழுது
உலகோர்க்கு முரசடித்து அறிவித்தான்;தருக்குற்ற தக்கனைத் தண்டிக்க அவன் தலையைக்
கொய்ய எடுத்த போர் முரசு.
      விண்ணவர்க்கும்,மண்ணவர்க்கும் துயர் தந்த மகிஷாசுரனை அழிக்க.அம்மை துர்கா தேவி
போருக்கு அழைத்த முரசு;எட்டு திசைகளையும்,மூவேழ் உலகையும் வென்று கொடுமைப்
படுத்திய கஜமுகாசுரனை வென்ற விநாயகப் பெருமானின் வெற்றி முரசு.
       தீயாய் இருளாய் மாறி மாயம் செய்த கிரௌஞ்ச மலையை அழித்ததும் முழங்கிய வெற்றி
முரசு ;சூலாயுதம் கொண்ட முருகா!முதலும் ;முடிவும் முன்னரே அறியும் நீ பறை பற்றி அறியாதவனா?
       சிக்கலைப் போக்கும் சிங்கார வேலனே!சிறுபறை முழக்கி அருள்வாய்.
நினைவெல்லாம் சிவமாய் வாழுமூராம் கன்னியாகுடிச் செல்வா!சிறுபறை முழக்கி அருள்க.
         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக