செவ்வாய், 26 ஜனவரி, 2016

சிற்றில் பருவம்--1

                       சிற்றில் பருவம் ......சிறுமியர்கள் மணல் வீடு கட்டி விளையாடுவர்;அதனைக் கலைக்க
முனையும் பாட்டுடைத் தலைவனை ,வணங்கி எம் இல்லத்தைக் கலைக்காதே!எனச் சிறுமியர்
வேண்டுவது;பதினேழாம் திங்களில் நடப்பது.

பற்றற்ற முனிவர்போல் வெண்மணலில்
      பரமனருள்போல்சுரக்கும் நீரூற்றிப்
பண்ணெடுத்துப் பக்குவமாய்ப் பிசைந்து
     பவளக்கால் சுவர்வைத்துப் படைத்தோமே

உற்றவரோ   டிணைந்துவாழ ஒருவீடு
       உருவாக்கி இருக்கின்றோம்;உன்னருளால்.
கற்றவர் போற்றிடும்நீ கால்களினால்
        கலைக்கலாமோ கந்தபிரானே!

நற்றவத்தார் கண்டிடவே நாளாகும்
       நற்பாதம் கொண்டோனே!
நலவள்ளி மலைக்காட்டில் அலைந்திட்ட
      செம்மையுறு சேவடியோய்!

சிற்றம்பலம் செவிபோற்றும் கன்யாகுடிச்
     செல்வா!  சிற்றில் சிதையேலே!
சுற்றமெலாம் சிவமெனும் கன்யாகுடிச்
      செல்வா!சிற்றில் சிதையேலே.

                                   பொருள்
 வெண்மை மனமும்,வெண்ணிற முடியும்,கொண்ட முனிவரின் தோற்றம் ஒத்த வெண்மணல்
எடுத்து,அதில் இறைவன் அருள்போல் ஈரநீரூற்றி,முருகன் புகழாம் பாடல்களைப் பாடிக்கொண்டே
நன்கு பிசைந்து,பவளங்களையும்,முத்துக்களையும் சேர்த்துச் சுவர் வைத்து,நாங்களும்
எம் உறவினர்களும் வாழ்வதற்கு ஒரு வீடு கட்டியுள்ளோம்;சான்றோர் போற்றிடும் வள்ளலே!
கண்மணியே!கந்தக்கடவுளே!
       உனது பாதங்களைக் காண நற்றவம் செய்தவர்களுக்கே ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகும்;
(புனிதப் பாதம் தீங்கு செய்யாது என்பது உட்பொருள்) வள்ளியம்மை மீது கொண்ட காதலுக்காக
மலை,காடெல்லாம் அலைந்து மணந்த திருவடி தங்கள் சேவடி.(கருணை கொண்ட கால்கள்
என்பது உட்பொருள்)
   சிற்றம்பலம் சிற்றம்பலம் எனச் செவி,வாய் போற்றும் கன்னியாகுடிச் செல்வனே! !எம் வீட்டைக் காலால் சிதைக்காதீர்கள்.

உறவும்,சுற்றமும் சிவமே''என வாழும்  கன்னியாகுடியில் வீற்றிருக்கும் செவ்வேளே!எமது சிறிய இல்லத்தைத்
தங்கள் காலால் சிதைக்காதீர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக