வெள்ளி, 11 டிசம்பர், 2015

முத்தப்பருவம்--7

 இரந்து அழுது புரண்டு விழுந்து
       இனியான் இயங்க இலையோ கருணை
இறைவா!இறைவா!இறைஞ்சும்  அடியார்
     இனிமை  பெறவே அருளும் விழிகள்;

இரப்போர்  அபயம் இலங்கு குலிசம்,
    எழில்வேல்   கதைவில் அம்புசக்தி தாமரை
எதிர்ப்போர் அழிசூலம் கொடியும் மணியும்
    இந்திரம் ஏந்திய ஈராறு கரங்கள்

இளங்காதல் புரிந்திட, இளங்கா ஆடிட,
     ஏத்துவோர் காத்திட, ஈசனுடன் பேசிட
எதிரரக்கர் அழித்திட, இன்பமலை நின்றிட,
     என்றுபணி மன்றலணி  மலராறு முகங்கள்

புரக்கும் புனிதக் கொடையின் புரவல!
      புண்ணியா!கன்னிகுக!முத்தம் தருகவே.
புதுநீர்ச்  சடையன் பெண்ணொரு பாகத்தன்
      புத்திர!கன்னி குக!முத்தம் தருகவே,

                                  பொருள்
    உன் சன்னதி வந்தும்வணங்கி,வேண்டி,அழுது புலம்பி,காப்பாய்!கந்தா!என விழுந்து
வணங்கி,எங்கள் துன்பம் போக்குவாய்!இறைவா!என போற்றும் அடியவர் துயர் களைந்து
கருணை காட்டும் விழிகள்;
       அபயக்கரங்கள்,குலிசம்,வேல்,கதை,வில்,அம்பு,சக்தி,தாமரை,சூலம்,கொடி  மணி,
வஜ்ராயுதம்,ஆகியவற்றை ஏந்தித் திகழும் பன்னிரண்டு கரங்கள்;
      வள்ளியோடும் தெய்வயானையோடும் காதல் புரிய ஒருமுகம்;சோலையெல்லாம்
விளையாடும் ஒருமுகம்;அடியவர்களைக் காக்கும் ஒருமுகம்;ஈசனுக்கு உபதேசித்து,
வேதாந்த இரகசியங்களைப்  பேசும் ஒருமுகம்;சூரனாதி அரக்கர்களை அழிக்கும் ஒருமுகம்;
குன்று தோறும் நின்றுலாவும் ஒரு முகம்; என்று பணியாற்றும் மாலை அணிந்த ஆறுமுகங்கள்'
        தன்னை நாடிவரும் பக்தர்களைக் காக்கும் புனிதமான கொடை கொண்ட வள்ளலே!
புண்ணியனே!கன்னியாகுடியின் குக மூர்த்தியே!உனது செவ்வாய்  சிரிப்பில் செவ்விதழ்
கூட்டி முத்தம் அருள்வாய்!
கங்கைதங்கிய சடையை உடையவனும்,கல்யாணி அம்மையை ஒருபாகம் கொண்டவனும்
ஆன கைலாசநாதரின் மைந்தனே!கன்னிநகர் முருகனே!உனது செவ்வாய்ச் சிரிப்பில்
செவ்விதழ் கூட்டி முத்தம் அருள்வாய்.
                                         விளக்கம்
இலையோ......இல்லையோ என்பதன் குறுக்கல் விகாரம்
இந்திரம் ==வஜ்ராயுதம் (இந்திரனுக்கு முனிவர் அரக்கர்களை வெல்வதற்குக் கொடுத்த முதுகெலும்பு )        
     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக