சனி, 19 டிசம்பர், 2015

வாரானைப்பருவம்---5

விரும்பி வியந்து விரைந்து விசாகா!
    வியன்பால் விரிமுலைப் பருகிட வருகவே!
வியன்கா ஆடிட வருகவே!பணிந்தே
    விநயமாய்  மகளிர் அழைத்திட வந்தவனே!

அருமைச் செல்வா!அகத்தில் மகிழ்ச்சி;
    அடைந்தோம் அருகே வருவாய்!அழைத்த
அருந்தாய் அகம்குளிர் அழைப்பை ஏற்றவனே!
    அறுமுகம் ஒருமுகம் அன்பணைப் பண்பனே!

திருமறைப் பொருளினை உரைத்திட வருகவே!
    திண்தோள் அமர்ந்து திருவருள் புரிகவே!
திகம்பரன் பணிந்தேன் திவ்யகுரு வருகவே!
    திரிபுரன் திருச்செவி அருளிட வந்தவனே!

திரும்பும் நிலையெலாம் திருமுருகப் பெருமையே,
    திகழ் குடிக் கந்தனே!வருக!வருகவே.
கரும்பொடு கருணையும் கரமதில் கொண்ட
    கல்யாணி மைந்தனே!வருக!வருகவே.

                                 பொருள்
  ஐயனே!ஒடி வா!வயிறு குழையும் ;முலைப்பால் அருந்திச் செல்!சோலை சென்று
விளையாடலாம் வருவாய்!என்று பணிவுடன் கார்த்திகைப் பெண்கள் அழைத்த காலை
ஓடிச் சென்றவனே!
   ஆறுமுகா!உன் ஆடல்களைப் பார்த்து அகத்தில் மகிழ்ச்சி அடைந்தோம்;அருகில் வா!
என்றழைத்த தாயாம் கல்யாணி அம்மையின் அழைப்பை ஏற்றவனே!அழைத்து அணைத்ததால்
ஆறுமுகங்களும் ஒருமுகமாய் ஆனவனே!
   ஓம் ''எனும் பிரணவப் பொருளை உபதேசிக்க வருவாய்!வலிமைமிக்க எனது தோளிலே
அமர்ந்து உபதேசிப்பாய் !தந்தையான நான் பணிந்தேன் எனது ஆசானே!வருவாய்!எனது செவியில் அருள் உபதேசம் செய்ய வருவாய்!என்று தந்தை வேண்டியதும் எழுந்தருளியவனே!
      எங்கெங்கு நோக்கினாலும் முருகன் பெருமையைப் பறைசாற்றும் கன்னியாகுடியில்
திகழ்கின்ற கந்தனே!வருக;வருகவே.
கரும்பும் கருணையும் கரத்தில் ஏந்தி அருள்புரியும் கல்யாணி அம்மை மைந்தனே!
வருக!வருகவே.
                                                             விளக்கம்


    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக